2010–2019
உங்களில் பெரியவன்
ஏப்ரல் 2017


உங்களில் பெரியவன்

பிரதிபலனை எதிர்பாராமல் சேவை செய்பவர்களுக்கு தேவனின் மாபெரும் பிரதிபலன் கிடைக்கும்.

என் அன்பு சகோதரர்களே, அன்பு நண்பர்களே, உணர்த்துதல் மிக்க இந்த உலகளாவிய ஆசாரியத்துவக் கூட்டத்தில் உங்களோடு இருப்பதற்காக நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். உங்களுடைய செய்திக்காகவும் ஆசீர்வாதத்துக்காகவும், தலைவர் மான்சன் உங்களுக்கு நன்றி. நாங்கள் எப்பொழுதும் உங்கள் வழிகாட்டும் வார்த்தைகளையும், ஆலோசனையையும், ஞானத்தையும் எங்கள் இருதயங்களில் வைக்கிறோம். நாங்கள் உங்களை நேசித்து ஆதரிக்கிறோம், உங்களுக்காக எப்போதும் ஜெபிக்கிறோம். நீங்கள் உண்மையாகவே கர்த்தரின் தீர்க்கதரிசி. நீங்கள் எங்கள் தலைவர். நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்.

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாட்ரிட் ஸ்பெயின் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கர்த்தரின் பரிசுத்த ஆலயமாக அதன் சேவையைத் தொடங்கியது . அந்த நேரத்தில் ஐரோப்பாவின் பகுதி தலைமையில் நான் ஊழியம் செய்துகொண்டிருந்ததால் ஹாரியட்டும் நானும் அதை நன்றாக நினைவில் வைத்திருக்கிறோம். பிரதிஷ்டைவரை நடத்திய திட்டமிடுதல், மற்றும் ஒழுங்குபடுத்தும் விவரங்களை கவனிப்பதில் அநேகருடன் எண்ணிலடங்கா மணிநேரங்களை நாங்கள் செலவழித்தோம்.

பிரதிஷ்டையின் நாள் நெருங்கிவந்தபோது, பங்கேற்க ஒரு அழைப்பை நான் இன்னமும் பெறவில்லை என்பதை நான் கவனித்தேன். இது சிறிது எதிர்பாராதது. ஒரு பகுதி தலைவராக என்னுடைய பொறுப்பில் இந்த ஆலய நிகழ்ச்சியில் நான் மிகவும் ஈடுபட்டு அதன் மீது ஒரு சிறிய அளவுக்கு சொந்தம் பாராட்டினேன்.

அவள் ஒரு அழைப்பை பார்த்தாளா என நான் ஹாரியட்டைக் கேட்டேன். அவள் பார்க்கவில்லை.

நாட்கள் கடந்தன, என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. எங்களுடைய அழைப்பு காணாமற் போய்விட்டதா, ஒருவேளை எங்கள் சோபாவின் மெத்தைக்குள் மாட்டிக் கொண்டதா என நான் வியப்புற்றேன். ஒருவேளை வேண்டாத தபால்களுடன் சேர்ந்து வீசி எறியப்பட்டதா. எங்கள் பக்கத்து வீட்டுக்காரரிடம் குறும்புத்தனமான பூனை ஒன்றிருக்கிறது, அதை சந்தேகத்துடன் நான் பார்க்க ஆரம்பித்தேன்.

இறுதியாக உண்மையை ஏற்றுக்கொள்ள நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். நான் அழைக்கப்படவில்லை.

ஆனால் இது எப்படி சாத்தியமாகும்? அவமதிப்பாக எதையாவது நான் செய்தேனா? பயணம் செய்ய நாங்கள் அதிக தூரத்தைக் கடக்க வேண்டியதிருக்கும் என யாராவது நினைத்தார்களா? நான் மறக்கப்பட்டு விட்டேனா?

இறுதியாக, இந்த வழியில் சிந்திப்பது நான் போக வேண்டாதிருக்கிற இடத்திற்கு என்னைக் கொண்டுபோகும் என்பதை நான் உணர்ந்தேன்.

ஆலய பிரதிஷ்டை எங்களுக்காகவல்ல என ஹரியட்டும் நானும் எங்களுக்குள் நினைத்துக்கொண்டோம். இது, யார் அழைக்கப்படவேண்டும், அழைக்கப்படக் கூடாதென்பதைப் பற்றியதல்ல. இது எங்களுடைய உணர்வுகளைப் பற்றியதல்ல அல்லது எங்கள் உரிமையின் உணர்வைப் பற்றியதல்ல.

இது ஒரு பரிசுத்த மாளிகையின், மிக உன்னத தேவனின் ஆலயத்தின் பிரதிஷ்டையைப் பற்றியது. இது, ஸ்பெயினிலுள்ள சபை அங்கத்தினர்களின் களிகூருதலின் நாள்.

நான் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தால், சந்தோஷமாக நான் பங்கேற்றிருப்பேன். ஆனால் நான் அழைக்கப்படாதிருந்தால் என்னுடைய சந்தோஷத்தின் அளவு சிறிதும் குறைந்திருக்காது. எங்கள் நண்பர்களுடனும், தொலைவிலிருந்து எங்கள் அன்பான சகோதரர சகோதரிகளுடன் ஹாரியட்டும் நானும் கொண்டாடியிருப்போம். மேட்ரிட்டில் செய்வதுபோல, நாங்கள் பிராங்பர்ட்டிலுள்ள எங்கள் வீட்டிலிருந்து மிக ஆர்வமாக இந்த அற்புதமான ஆசீர்வாதத்திற்காக நாங்கள் தேவனைத் துதித்திருப்போம்.

இடிமுழக்க மக்கள்

இயேசு கிறிஸ்து அழைத்து நியமித்த பன்னிருவருக்கு மத்தியில் யாக்கோபு, யோவான் என்ற இரண்டு சகோதரர்களிருந்தனர். அவர்களுக்கு அவர் கொடுத்த பட்டப்பெயர் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இடிமுழக்க மக்கள் (பொவனெர்கஸ்) 1

குறிப்பிடத்தக்க ஒரு பின்கதையில்லாமல் உங்களுக்கு ஒரு பட்டப்பெயர் கிடைக்காது. துரதிருஷ்டவசமாக இந்த பட்டபெயர்களின் தோற்றம் பற்றி அதிக விளக்கத்தை வேதங்கள் கொடுக்கவில்லை. ஆயினும் யாக்கோபு மற்றும் யோவானின் தன்மைகளுக்கு ஒரு சுருக்கமான சிறிய கண்ணோட்டம் நமக்குக் கிடைக்கிறது. சமாரியாவிலுள்ள ஒரு கிராமத்திற்குள் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால் வானத்திலிருந்து அக்கினி இறங்கும்படி அழைக்க ஆலோசனையளித்த இவர்களே அந்த சகோதரர்கள். 2

யாக்கோபுவும் யோவானும் ஒருவேளை மிகவும் விறைப்பான மீன் பிடிக்கிறவர்களாயிருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இயற்கையைப்பற்றி நிறைய அறிந்திருந்தார்கள் என நான் யூகிக்கிறேன். நிச்சயமாக அவர்கள் செயலாற்றுபர்களாயிருந்தார்கள்.

ஒரு சமயம், எருசலேமிற்கு தனது இறுதிப்பயணத்திற்கு இரட்சகர் ஆயத்தப்படும்போது, ஒரு விசேஷமான, ஒருவேளை தங்களுடைய பட்டப்பெயருக்கு தகுதியாயிருந்த வேண்டுகோளுடன் அவரை அவர்கள் அணுகினார்கள்.

“நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம்” என அவர்கள் கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து புன்னகையுடன் “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள்?” என கேட்டதாக நான் கற்பனை செய்ய முடிகிறது.

“உமது மகிமையிலே எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள் செய்யவேண்டும்”.

அவர்கள் எதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி இன்னும் ஆழமாக சிந்திக்கும்படி இரட்சகர் அவர்களுக்கு இப்போது சவால் விட்டு சொன்னார், “என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி  எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல.” 3

வேறு வார்த்தைகளிலெனில், அதைக் கேட்டு பரலோக ராஜ்யத்தில் நீங்கள் மரியாதையைப் பெற முடியாது. அல்லது நித்திய மகிமைக்கு உங்கள் வழியை முட்டித் தள்ளிப் போகமுடியாது.

இடிமுழக்க மக்களிடமிருந்து இந்த வேண்டுகோளைக் கேட்ட மற்ற பத்து அப்போஸ்தலர்கள், அதிகமாக சந்தோஷமடையவில்லை. தனது நேரம் குறைவாயிருப்பதை இயேசு அறிந்தார், அவருடைய பணியை செய்யப்போகிறவர்களுக்கு மத்தியில் வாக்குவாதத்தைக் காண்பது அவரைக் கவலைக்குள்ளாக்கியிருக்கலாம்.

வல்லமையின் தன்மையைப்பற்றியும், அதைத் தேடுபவர்களையும், தரித்திருப்பவர்களையும் அது எவ்வளவு பாதிக்கிறதென்பதைப்பற்றியும் பன்னிருவருக்கு  அவர் கூறினார். அவர் சொன்னார், “புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள்.”

அந்த உண்மையுள்ள மற்றும் நம்பிக்கையுள்ள சீஷர்கள் முகங்களை அளவில்லா அன்புடன் இரட்சகர் பார்ப்பதை ஏறக்குறைய என்னால் பார்க்கமுடிகிறது. “உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது. உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” 4 என்ற அவருடைய கெஞ்சுகிற குரலை என்னால் அநேகமாக கேட்கமுடிகிறது.

தேவனுடைய ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பதும், தலைமைதாங்குவதும், தங்களை தேவன் பார்ப்பதைப்போல மற்றவர்களை தங்களைப்போலவே பார்ப்பதுவும், பின்னர் அவர்களை அணுகி அவர்களுக்கு பணிவிடை செய்வதுமேயாகும். அப்படியென்றால் சந்தோஷமாயிருப்பவர்களோடு சந்தோஷமாயிருத்தலும், அழுகுகிறவர்களோடு அழுவதுவும், ஆபத்திலிருப்போரைத் தூக்கிவிடுவதுவும், கிறிஸ்து நம்மை நேசித்ததைப்போல நமது அண்டைவீட்டாரை நேசிப்பதுவுமே. அவர்களுடைய சமூக பொருளாதார சூழ்நிலைகளை, இனத்தை, மொழியை, அரசியல் அமைப்பை, அல்லது நாட்டை வேறு எந்த குழுவையும் பொருட்படுத்தாமல் தேவனுடைய எல்லா பிள்ளைகளையும் இரட்சகர் நேசிக்கிறார். நாமும் அப்படியே செய்யவேண்டும்.

பலனை எதிர்பார்க்காமல் சேவை செய்கிறவர்களுக்கு தேவனுடைய மகத்தான பிரதிபலன் கிடைக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாமல் சேவை செய்கிறவர்களுக்கு, மற்றவர்களுக்கு உதவ அமைதியாக வழியைத் தேடிப்போகிறவர்களுக்கு, தேவனுடைய பிள்ளைகளையும் தேவனையும் அவர்கள் நேசிப்பதால், மற்றவர்களுக்கு எளிதாக பணிவிடைசெய்கிறவர்களுக்கு அது கிடைக்கிறது. 5

உள் இழுக்காதே

ஒரு புதிய பொது அதிகாரியாக நான் அழைக்கப்பட்ட பின்பு சிறிது காலத்தில் ஒரு பிணைய மறுசீரமைப்பிற்காக தலைவர் ஜேம்ஸ்  இ. பாஸ்ட்டுடன் செல்லும் சிலாக்கியம் எனக்கிருந்தது. அழகான தென் யூட்டாவிற்கு எங்கள் பணிக்கு நான் வண்டியோட்டி சென்றபோது, எனக்கு அறிவுறுத்தவும் போதிக்கவும் தலைவர் பாஸ்ட் நேரத்தை அன்பாய் பயன்படுத்தினார். ஒரு பாடத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவர் சொன்னார் “சபையின் அங்கத்தினர்கள் பொது அதிகாரிகளுடன் அன்புள்ளவர்களாயிருப்பார்கள். உங்களை நன்றாக நடத்தி உங்களைப்பற்றி நல்ல காரியங்களைச் சொல்வார்கள்,” பின்னர் அவர் சிறிது நிறுத்தி சொன்னார், “டியட்டர், எப்போதுமே இதற்காக நன்றியுள்ளவராயிருங்கள், ஆனால் ஒருபோதும் அதை நீங்கள் உள் வாங்காதீர்கள்.”

சபை சேவையைப் பற்றிய இந்த முக்கியமான பாடம், சபையின் ஒவ்வொரு குழுமத்திலும் ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் பொருந்துகிறது. இந்த சபையில் நம் அனைவருக்கும் இது பொருந்தும்.

சபையில் அதிகார ஸ்தானங்களுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு தலைவர் ஜெ. ரூபன் கிளார்க் ஜூனியர் ஆலோசனையளிக்கும்போது, விதி எண் ஆறை மறக்கவேண்டாம் என்று அவர்களுக்கு அவர் கூறுவார்.

தவிர்க்கமுடியாமல் அந்த நபர் கேட்பார், “விதி எண் ஆறு என்ன?”

“மிக கடுமையாக உங்களைக் கருதாதிருங்கள்,” என அவர் சொல்வார்.

இது ஒரு பின்தொடருகிற கேள்விக்கு வழி நடத்தி, “பிற ஐந்து விதிகள் எவை?” என கேட்பார்கள்.

அவருடைய கண்களில் ஒரு சிமிட்டுடன், தலைவர் கிளார்க் சொல்வார், “அப்படி எதுவுமில்லை.” 6

ஆற்றலுள்ள சபைத்தலைவர்களாயிருக்க இந்த முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். சபையில் தலைமைத்துவம் மற்றவர்களுக்கு உதவ தேவனால் வழிகாட்டப்படவேண்டும் என்ற நமது விருப்பத்தைப்போல, மற்றவர்களுக்கு அதிகமாக வழிகாட்டுவது இல்லை.

சேவைக்கான சந்தர்ப்பங்களாக அழைப்புகள்

மிக உன்னத தேவனின் பரிசுத்தவான்களாக, “எளியோரையும், திக்கற்றோரையும், வியாதியஸ்தரையும், உபத்திரவப்படுவோரையும், சகல காரியங்களிலும் நினைவுகூருங்கள், ஏனெனில் இந்தக் காரியங்களைச் செய்யாதவன் எனது சீஷன் அல்ல” 7 என்பதை நாம் நினைவுகூரவேண்டும். மற்றவர்களுக்கு சேவை செய்யவும், நன்மை செய்யவும் சந்தர்ப்பங்கள் அளவற்றது. நமது சமுதாயங்களில், நமது தொகுதிகளிலும், கிளைகளிலும் கண்டிப்பாக நமது வீடுகளிலும் இவர்களை நாம் காணலாம்.

கூடுதலாக, சபையின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் சேவை செய்ய குறிப்பிட்ட முறையான சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. அழைப்புகள் என்று இந்த சந்தர்ப்பங்களை நாம் குறிப்பிடுகிறோம். இந்த பதம் சேவை செய்ய யார் அழைக்கிறார்கள் என்பதை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கவேண்டும். தேவனுக்கு சேவை செய்யவும், விசுவாசத்துடனும் தாழ்மையுடனும் மற்றவர்களுக்கு பணிவிடைசெய்யவும் சந்தர்ப்பங்களாக நமது அழைப்புகளை நாம் அணுகினால் ஒவ்வொரு செயலும் சீஷத்துவத்தின் பாதையில் சேவையின் ஒரு படியாயிருக்கும். இந்த வழியில், அவரது சபையை தேவன் கட்டியெழுப்புவது மட்டுமல்ல, ஆனால் அவருடைய ஊழியக்காரர்களையும் கட்டுகிறார். கிறிஸ்துவின் உண்மையான விசுவாசமுள்ள சீஷர்களாகவும், தேவனின் நல்ல, உத்தம குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் மாற, நமக்குதவ சபை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கூட்டங்களுக்கு நாம் போவதாலும் உரைகளைக் கேட்பதாலும் மட்டும் இது நடைபெறுவதில்லை, ஆனால் நாம் நம்மைவிட்டு வெளியே வந்து சேவை செய்யும்போதும் நடைபெறுகிறது. இப்படித்தான் தேவனின் ராஜ்யத்தில் நாம் பெரியவர்களாகிறோம்

இசைவுடனும், தாழ்மையுடனும், நன்றியுடனும் நாம் அழைப்புகளை ஏற்றுக்கொள்கிறோம். இந்த அழைப்புகளிலிருந்து நாம் விடுவிக்கப்படும்போது அதே இசைவுடனும், தாழ்மையுடனும், நன்றியுடனும் அந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

தேவனின் கண்களில், ராஜ்யத்தில் எந்த அழைப்பும் மற்றதை விட மிகமுக்கியமானதல்ல. சிறியதோ பெரியதோ நமது சேவை நமது உற்சாகங்களைப் புதுப்பித்து, வானத்து ஜன்னல்களைத் திறந்து, நாம் சேவிக்கிறவர்கள் மீது மட்டுமல்ல, நம் மீதும் ஆசீர்வாதங்களைப் பொழிகிறது.மற்றவர்களை நாம் அணுகும்போது, நமது சேவையை தேவன் ஏற்றுக்கொள்ளுதலுடனும், மேன்மையுடனும் அங்கீகரிக்கிறார் என தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் நாம் அறிந்துகொள்கிறோம். இரக்கமுள்ள உள்ளத்தைத் தொடுகிற செயல்களை, குறிப்பாக மற்றவர்களால் பார்க்க முடியாத, கவனிக்கப்பட முடியாத செயல்களை நாம் செய்யும்போது அவர் நம்மைப் பார்த்து புன்னகைக்கிறார். 8

நம்மை மற்றவர்களுக்காகக் கொடுக்கிற  ஒவ்வொரு முறையும், அவரிடமுள்ள எல்லாவற்றையும் நமக்காகக் கொடுத்தவரான, நமது இரட்சகருக்கு நல்ல, உண்மையுள்ள சீஷர்களாக மாறுவதற்கு ஒரு அடி நெருக்கமாக வைக்கிறோம்.

தலைமை தாங்குவதிலிருந்து அணிவகுப்புக்கு

முன்னோடிகள் சால்ட் லேக் பள்ளத்தாக்கிற்கு வந்து சேர்ந்த 150வது ஆண்டுவிழாவின் போது, சகோதரர் மைரன் ரிச்சின்ஸ், ஹெனபெர், யூட்டாவில் ஒரு பிணையத் தலைவராக ஊழியம் செய்துகொண்டிருந்தார். கொண்டாட்டத்தில் அவருடைய பட்டணத்தின் வழியாக முன்னோடிகளின் பாதையில் மீண்டும் செல்வது அடங்கியிருந்தது.

கொண்டாட்டத்திற்கான திட்டங்களில் தலைவர் ரிச்சின்ஸ் அதிகமாய் ஈடுபட்டிருந்தார். நிகழ்ச்சிகளைப்பற்றி விவாதிக்க பொது அதிகாரிகளுடனும் மற்றவர்களுடனும் அநேக கூட்டங்களில் அவர் பங்கேற்றார்.

உண்மையான கொண்டாட்டத்திற்கு சற்று முன்பு தலைவர் ரிச்சின்ஸின் பிணையம் மறுசீரமைக்கப்பட்டு அவர் தலைவராக இருப்பதிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், கொண்டாட்டத்திற்கு உதவ தன்னார்வமுள்ளவர்களை தலைவர்கள் அழைத்தபோது அவருடைய தொகுதி ஆசாரியத்துவக்கூட்டத்தில் அவர் பங்கேற்றுக்கொண்டிருந்தார். மற்றவர்களுடன் தலைவர் ரிச்சின்ஸ் தனது கைகளை உயர்த்தி, வேலைக்கான உடைகளை அணியவும், அவருடைய வாகனத்தையும், மண்வெட்டியையும் எடுத்துவரவும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இறுதியாக, பெரிய நிகழ்ச்சியின் காலைநேரம் வந்தது, தன்னார்வலர் வேலைக்கு தலைவர் ரிச்சின்ஸ் பதிவுசெய்தார்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர்தான், இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கான திட்டமிடுதலுக்கும், மேற்பார்வைக்கும் அவர் ஒரு செல்வாக்குடைய பங்காளராயிருந்தார். ஆயினும் அந்த நாளில் அணிவகுப்பின் குதிரைகளைப் பின்தொடர்வதுவும் அவற்றிற்குப் பின் சென்று சுத்தப்படுத்துவதுமே அவரது வேலை.

தலைவர் ரிச்சின்ஸ் அதை சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் செய்தார்.

ஒருவகை சேவை மற்றொன்றைவிட மேலானதல்ல என்பதை அவர் அறிந்திருந்தார்.

“உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” 9 என்ற இரட்சகரின் வார்த்தைகளை அவர் அறிந்திருந்து அதை நடைமுறைப்படுத்தினார்.

சீஷத்துவத்தை சரியாகச் செய்தல்

சிலநேரங்களில், இடிமுழக்க மக்களைப்போல, பிரசித்தத்தின் ஸ்தானங்களை நாம் விரும்புகிறோம். நாம் பாராட்டப்பட முயற்சிக்கிறோம். தலைமை தாங்கவும், நினைவுகூரப்படவும் பங்குவகிக்கவும் நாம் நாடுகிறோம்.

கர்த்தருக்கு சேவை செய்ய விரும்புவதில் எந்த தவறுமில்லை, ஆனால் மனுஷர்களின் துதியையும் பாராட்டுதலையும் பெறும்படியாக நம்முடைய சொந்த நலனுக்காக சபையில் செல்வாக்கை நாம் நாடும்போது நமக்குப் பலன் கிடைக்கும். மற்றவர்களின் புகழ்ச்சியை உள்வாங்கும்போது அந்த புகழ்ச்சி நமது ஈடாயிருக்கும்.

சபையில் மிகமுக்கியமான அழைப்பு எது? அது தற்போது உங்களிடமிருப்பதுவே. அது எவ்வளவு தாழ்மையானது அல்லது முக்கியத்துவமுடனிருப்பதாகத் தோன்றினாலும், இப்போது உங்களுக்கிருக்கிற அழைப்பு மற்றவர்களை உயர்த்திவிடவும், ஆனால் நீங்கள் எதற்காக சிருஷ்டிக்கப்பட்டீர்களோ அந்த தேவ மனிதராக இருக்கவும் உங்களை அனுமதிக்கிறது.

ஆசாரியத்துவத்திலுள்ள என்னுடைய நண்பர்களே, சகோதரரே, நீங்கள் நின்றுகொண்டிருக்கிற இடத்தில் உயருங்கள்.

“ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” 10 என பவுல் பிலிப்பியருக்குப் போதித்தான்.

மரியாதையுடன் சேவை செய்தல்

மற்றவர்களுக்கு உண்மையான, தாழ்மையான சேவை செய்வதில் சபையில் மரியாதையையும் அந்தஸ்தையும் நாடுதல் ஏசாவின் வியாபாரம். 11  நமக்கு உலக பலன் கிடைக்கலாம், ஆனால், பரலோகத்தின் அனுமதியை இழக்கும் பெரும் விலையுடன் அது வருகிறது.

சாந்தத்துடனும் தாழ்மையுடனுமிருந்து, மனுஷர்களின் துதியை நாடாமல் அவருடைய பிதாவின் சித்தத்தின்படி செய்ய நாடிய நமது இரட்சகரின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்றுவோமாக. 12

ஆற்றலுடன், நன்றியுடன், மரியாதையுடன் மற்றவர்களுக்கு நாம் சேவை செய்வோமாக. நமது சேவையின் செயல்கள் தாழ்மையானதாகவும், பணிவாகவும் தோன்றினாலும், அல்லது மதிப்பு குறைந்ததாக இருந்தாலும், மற்றவர்களை இரக்கத்துடனும் மனதுருக்கத்துடனும் அணுகுகிறவர்கள், சர்வ வல்லமையுள்ள தேவனின் நித்திய மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட கிருபையின் மதிப்பை ஒருநாள் அறிவார்கள். 13

என் அன்பு சகோதரரே, அன்பு நண்பர்களே, ஆசாரியத்துவ ஆளுகையின் இந்த மிகப்பெரிய பாடத்தைப் புரிந்துகொள்ளவும், கடைபிடிக்கவும் நாம் தியானிப்போமாக. “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்”. நமது போதகரும், நமது மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இது எனது ஜெபமும் ஆசீர்வாதமுமாகும், ஆமென்.