வேதங்கள்
யாக்கோபு 2


அதிகாரம் 2

யாக்கோபு, ஐஸ்வரியத்தின் மீது ஆசை, பெருமை மற்றும் கற்பின்மையை இடித்துரைத்தல் – தங்கள் சக மனுஷருக்கு உதவ மனுஷர் ஐஸ்வர்யத்தைத் தேடலாம் – நேபியர்களுக்கு மத்தியிலே எந்த மனுஷனும் ஒரு மனைவிக்கு மேலாக வைத்திருக்கக்கூடாதென கர்த்தர் கட்டளையிடுகிறார் – பெண்களின் கற்பொழுக்கத்தில் கர்த்தர் களிகூருதல். ஏறக்குறைய கி.மு. 544–421.

1 நேபியின் மரணத்திற்குப் பின்பு, நேபியின் ஜனங்களுக்கு, நேபியின் சகோதரனாகிய யாக்கோபு பேசிய வார்த்தைகளாவன:

2 இப்பொழுதும், என் அன்பான சகோதரரே, யாக்கோபாகிய நான், தேவனுக்காக எனக்குள்ள பொறுப்பின்படியே, தெளிந்த புத்தியுடன் என் பணியை நிறைவேற்றவும், உங்கள் பாவங்களை என் வஸ்திரத்திலிருந்து உதறிப்போடவும், இந்நாளில் நான் உங்களிடத்தில் தேவனுடைய வார்த்தையை அறிவிக்கவுமே, ஆலயத்திற்குள் வருகிறேன்.

3 நான் இது காலம்வரைக்கும் என் அழைப்பின் பணியிலே, கருத்துள்ளவனாய் இருந்திருக்கிறேன், என்பதை நீங்களே அறிவீர்கள். ஆனால் நான் இதுகாலம் இருந்ததைவிட, உங்கள் ஆத்துமாக்களின் நல்வாழ்வுக்காக, அதிக ஆவலோடும், அக்கறையோடும், இந்நாளிலே பாரப்படுகிறேன்.

4 ஏனெனில் இதோ, இதுவரைக்கும், நான் உங்களுக்குக் கொடுத்த, கர்த்தருடைய வார்த்தைக்கு நீங்கள் கீழ்ப்படிந்திருக்கிறீர்கள்.

5 ஆனால் இதோ, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள். வானம் மற்றும் பூமியின் சர்வவல்ல சிருஷ்டிகரின் உதவியினால் உங்களின் சிந்தனைகளைக் குறித்தும், ஆம், தேவனுக்கும், எனக்கும் அருவருப்பாய் தென்படுகிற பாவத்தில், நீங்கள் எவ்விதமாய் பிரயாசப்படத் தொடங்குகிறீர்கள், என்பதைக் குறித்தும் நான் உங்களுக்குச் சொல்ல முடியும், என்பதை அறியுங்கள்.

6 உங்களின் இருதயங்களின் துன்மார்க்கத்தைக் குறித்து, உங்களுக்கு நான் சாட்சி பகரவேண்டியதிருப்பதால், ஆம், அது என் ஆத்துமாவை சஞ்சலப்படுத்தி, என்னை உண்டாக்கினவரின் சமுகத்தின் முன்பாக என்னை அவமானத்தால் ஒடுங்கச் செய்கிறது.

7 உங்கள் மனைவிகள் மற்றும் பிள்ளைகளுக்கு முன்பாக உங்களைக் குறித்துச் சொல்வதில் அதிக தைரியத்தை உபயோகிப்பது அவசியமானதால், அது என்னை சஞ்சலப்படுத்துகிறது. அவர்களின் அநேகரின் உணர்ச்சிகள் மிகவும் இளகியதும், கற்புள்ளதும் தேவனுக்கு முன்பாக மிருதுவானதுமாயுமிருக்கிறது. இந்தக் காரியம் தேவனுக்கு பிரியமானதாயிருக்கிறது.

8 காயப்பட்ட ஆத்துமாவை சுகப்படுத்துகிற வார்த்தையான, ஆம், பிரியமான தேவனுடைய வார்த்தையைக் கேட்க, அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள், என நான் எண்ணுகிறேன்.

9 ஆதலால் அவர்களின் காயங்களை ஆற்றாமலும், சுகப்படுத்தாமலும், ஏற்கனவே காயப்பட்டவர்களின் காயங்களைப் பெரிதுபடுத்துகிற, உங்களின் குற்றங்களின்படியே உங்களுக்குப் புத்தி சொல்லும்படியாய், தேவனிடத்திலிருந்து நான் பெற்ற கண்டிப்பான கட்டளையினிமித்தம் நெருக்கி ஏவப்பட வேண்டும் என்பதாலும், காயப்படாதவர்கள், தேவனுடைய பிரியமான வார்த்தைகளை ருசிப்பதற்குப் பதிலாக பட்டயங்கள் அவர்களின் ஆத்துமாக்களை ஊடுருவவும், அவர்களின் மிருதுவான மனங்களை காயப்படுத்தவும் வைக்கப்பட்டிருக்கிறது என்பதினாலும், என் ஆத்துமாவைப் பாரப்படுத்துகிறது.

10 ஆனாலும், இந்த வேலை பெரிதானதாயிருப்பினும், நான் தேவனுடைய கண்டிப்பான கட்டளையின்படியே செய்யவேண்டியதிருப்பதாலும், நொறுங்குண்ட இருதயத்தாருக்கும், இருதயத்தில் சுத்தமுள்ளவர்களுக்கும் முன்பாக, சர்வவல்ல தேவனுடைய ஊடுருவுகிற கண்ணின் பார்வையிலும், உங்களின் துன்மார்க்கம் மற்றும் அருவருப்புகளைக் குறித்து உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11 ஆகையால், உங்களுக்கு நான் தேவனுடைய வார்த்தையின் தெளிவின்படி சத்தியத்தைச் சொல்லவேண்டும். ஏனெனில் இதோ, நான் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, இவ்வாறாக வார்த்தை என்னிடத்தில் வந்து, யாக்கோபே, நாளை நீ ஆலயத்தினுள் சென்று, நான் உனக்குக் கொடுக்கிற வார்த்தைகளை இந்த ஜனங்களுக்கு அறிவிப்பாயாக, என்றது.

12 இப்பொழுது இதோ, என் சகோதரரே, நான் உங்களிடம் அறிவிக்கிற வார்த்தை என்னவெனில், தங்களுக்கும் தங்கள் சந்ததியாருக்கும் வாக்குத்தத்தத்தின் தேசமாயிருக்கிற இந்த தேசத்திலே மிகுதியாய் இருக்கிற பொன்னையும், வெள்ளியையும் மற்றும் சகலவித விலை உயர்ந்த தாதுக்களையும் தேட, உங்களில் அநேகர் ஆரம்பித்திருக்கிறீர்கள்.

13 நீங்கள் அநேக ஐஸ்வரியங்களைப் பெறும்படிக்கு பராமரிப்பின் புயங்கள் மிகவும் பிரியமாய் உங்கள்மீது புன்னகைத்தது, உங்களில் சிலர் தங்கள் சகோதரர்களைப் பார்க்கிலும் மிகுதியாய்ப் பெற்றதின் நிமித்தம் இருதயங்களில் பெருமைகொண்டும், உங்களின் விலையேறப்பெற்ற வஸ்திரங்களினிமித்தம், வணங்காக்கழுத்தையும், மேட்டிமையான சிரசையும் கொண்டு, உங்கள் சகோதரரைப் பார்க்கிலும் சிறப்பாயிருக்கிறீர்கள், என்று நீங்கள் நினைப்பதாலும், அவர்களைத் துன்பப்படுத்துகிறீர்கள்.

14 இப்பொழுது, என் சகோதரரே இந்தக் காரியத்தில் தேவன் உங்களை நீதிமான்களாக்குகிறார், என்று எண்ணுகிறீர்களா? இதோ, அப்படியல்ல என உங்களிடம் நான் சொல்லுகிறேன். ஆனால் அவரோ, உங்களைக் குற்றவாளிகளெனத் தீர்க்கிறார். இதிலே நிலைத்திருப்பீர்களெனில் அவரின் நியாயத்தீர்ப்புகள் சீக்கிரமாய் உங்கள் மேல் வரும்.

15 உங்களை ஊடுருவி, தன் கண்ணினுடைய ஒரு பார்வையால், நீங்கள் புழுதியாகும்படிக்கு அடிக்க இயலுமென்று அவர் உங்களுக்குக் காண்பிப்பாராக.

16 உங்களை இந்த அக்கிரமத்திலிருந்தும் அருவருப்புகளிலிருந்தும் அவர் தப்புவிப்பாராக. மேலும் உங்களின் இருதயத்தின் பெருமை, உங்கள் ஆத்துமாக்களை அழிக்காதபடிக்கு அவரது கட்டளைகளின் வார்த்தைக்கு நீங்கள் செவிகொடுப்பீர்களாக!

17 உங்களைப்போலவே உங்கள் சகோதரர்களையும் நினைவுகூருங்கள். அனைவரோடும் ஒப்புரவாகி, உங்களைப்போலவே அவர்களும் ஐஸ்வரியவான்களாகும்படிக்கு உங்கள் பொருட்களை தாராளமாகக் கொடுங்கள்.

18 ஆனால் ஐஸ்வரியத்தைத் தேடுவதற்கு முன்பாக, தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்.

19 கிறிஸ்துவிலே நம்பிக்கை பெற்ற பின்பு ஐஸ்வரியங்களைத் தேடுவீர்களானால், அவைகளை நீங்கள் பெறுவீர்கள். வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் உடுத்தவும், பசியாயிருப்பவனுக்கு போஜனமளிக்கவும், சிறைப்பட்டவனை விடுதலையாக்கவும், வியாதியஸ்தருக்கும் துன்பப்பட்டவர்களுக்கும், ஒத்தாசை புரியும் எண்ணத்துடனே, நன்மை செய்ய அவைகளை நீங்கள் தேடுவீர்கள்.

20 இப்பொழுது, என் சகோதரரே பெருமையைக்குறித்து நான் உங்களிடத்தில் பேசினேன். தேவன் தங்களுக்குக் கொடுத்த பொருட்களைக்கொண்டு, தங்கள் இருதயங்களில் அகந்தையாயிருந்து அயலானை உபத்திரவப்படுத்தி, துன்பப்படுத்தினோரே, அதைக்குறித்து என்ன சொல்கிறீர்கள்?

21 அந்தக் காரியங்கள், சகல மாம்சத்தையும் சிருஷ்டித்தவருக்கு அருவருப்பானவை என நீங்கள் எண்ணவில்லையா? அவர் பார்வையில் ஒரு ஜீவன் மற்றொன்றைப்போலவே விலையேறப்பெற்றதாயுள்ளது. சகல மாம்சமும் மண்ணினாலானதே, தன் கட்டளைகளைக் கைக்கொண்டு, தன்னை என்றென்றைக்கும் மகிமைப்படுத்தவேண்டுமென்ற, அந்த ஒரே நோக்கத்திற்காகவே அவர்களைச் சிருஷ்டித்தார்.

22 இப்பொழுது இந்தப் பெருமையைக் குறித்து உங்களிடம் பேசுவதை முடிக்கிறேன். பெரும் குற்றத்தைக் குறித்து உங்களிடம் நான் பேசவேண்டியதிராவிட்டால், உங்களின் நிமித்தம் என் இருதயம் மிகவும் மகிழ்ந்திருக்கும்.

23 ஆனால் உங்களின் பெருங்குற்றங்களின் நிமித்தம் தேவனுடைய வார்த்தை என்னைப் பாரப்படுத்துகிறது. ஏனெனில் இதோ, கர்த்தர் உரைப்பதாவது: இந்த ஜனங்கள் அக்கிரமத்திலே பெருக ஆரம்பிக்கிறார்கள். தாவீது மற்றும் அவனுடைய குமாரன் சாலொமோனைக் குறித்து எழுதப்பட்டிருக்கிற, காரியங்களினிமித்தம் வேசித்தனங்களைச் செய்வதில் தங்களையே மன்னிக்க வகைதேடி, வேத வாக்கியங்களைப் புரியாமலிருக்கிறார்கள்.

24 இதோ, தாவீதும் சாலொமோனும் மெய்யாகவே அநேக மனையாட்டிகளையும், மறுமனையாட்டிகளையும் வைத்திருந்தார்கள். அந்தக் காரியம் எனக்கு முன்பாக அருவருப்பானதாய் இருந்தது, என்று கர்த்தர் சொல்லுகிறார்.

25 ஆதலால், யோசேப்பின் சந்ததிகளிலிருந்து எனக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழுப்பும்பொருட்டு, என் புயத்தின் வல்லமையினால், எருசலேம் தேசத்திலிருந்து வெளியே இந்த ஜனத்தை நடத்தி வந்திருக்கிறேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்.

26 ஆதலால், நான், கர்த்தராகிய தேவன், பழங்காலத்தினரைப்போலவே, இந்த ஜனமும் செய்ய அனுமதியேன்.

27 ஆகையால், என் சகோதரரே, எனக்குச் செவிகொடுத்து, கர்த்தரின் வார்த்தையைக் கேளுங்கள், ஏனெனில் உங்களில் எந்த ஒரு மனுஷனும் ஒரு மனையாட்டியைத் தவிர அதிகம் வைத்திருக்கக் கூடாது, அவன் மறுமனையாட்டிகள் ஒருவரையும் வைத்திருக்கக் கூடாது.

28 ஏனெனில் நான் கர்த்தராகிய தேவன், பெண்களின் கற்பொழுக்கத்திலே களிகூருகிறேன். வேசித்தனங்கள் என் முன் அருவருப்பானவை, என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

29 ஆகையால், இந்த ஜனங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள். இல்லாவிடில் அவர்கள் நிமித்தமாக இத்தேசம் சபிக்கப்படும், என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

30 ஏனெனில், எனக்கு ஒரு சந்ததியை நான் எழும்பப்பண்ணினால், என் ஜனத்தைக் கட்டளையிடுவேன். இல்லாவிடில் இந்தக் காரியங்களுக்கு அவர்கள் செவிசாய்க்கவேண்டும், என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

31 ஏனெனில் இதோ, கர்த்தராகிய நான், என் ஜனங்களின் சகல தேசங்களிலும், ஆம், எருசலேம் தேசத்திலும் தங்களின் புருஷர்களின் துன்மார்க்கத்தாலும் அருவருப்புகளின் நிமித்தமும், என் ஜனங்களின் குமாரத்திகளின் துக்கத்தைக் கண்டும், புலம்பலைக் கேட்டுமிருக்கிறேன்.

32 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், எருசலேம் தேசத்திலிருந்து நான் வெளியே நடத்திவந்த, இந்த ஜனங்களின் அழகான குமாரத்திகளின் கூக்குரல், என் ஜனங்களின் புருஷர்களுக்கு விரோதமாய், என்னிடம் வர நான் அனுமதிக்கமாட்டேன், என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

33 அவர்கள் அழியும்பொருட்டு ஒரு கொடிய சாபத்தால் நான் தண்டித்தாலொழிய, என் ஜனங்களின் குமாரத்திகளின் மென்மையினிமித்தம் சிறைபிடித்து நடத்திச் செல்லமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பழங்காலத்தவர்களைப்போல விபச்சாரம் பண்ணாமல் இருப்பார்களாக, என சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

34 இப்பொழுது என் சகோதரரே, இந்தக் கட்டளைகள் நம் தந்தையாகிய லேகிக்குக் கொடுக்கப்பட்டவை என்பதை நீங்கள் அறிவீர்கள்; ஆகையால் நீங்கள் முன்னமே இவைகளை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் செய்யக்கூடாதவைகளை செய்ததினிமித்தம், பெரிய ஆக்கினைக்குள்ளாக வந்திருக்கிறீர்கள்.

35 இதோ, நம் சகோதரர்களாகிய லாமானியர்களைவிட நீங்கள் பெரிய அக்கிரமங்களை செய்திருக்கிறீர்கள். உங்கள் மென்மையான மனையாட்டிகளின் இருதயங்களை நீங்கள் உடைத்தீர்கள், அவர்களுக்கு முன் உங்கள் கெட்ட உதாரணங்களினிமித்தம், உங்கள் பிள்ளைகளின் நம்பிக்கையை இழந்தீர்கள். ஏனென்றால், உங்களுக்கு விரோதமாய் அவர்களின் இருதயங்களின் அழுகை தேவனிடம் செல்கிறது. தேவனுடைய வார்த்தையின் கண்டிப்பின் நிமித்தம், ஆழமான காயங்களால் ஊடுருவிக்குத்தப்பட்டு அநேக இருதயங்கள் இறந்துபோயின.