வேதங்கள்
மோசியா 5


அதிகாரம் 5

பரிசுத்தவான்கள் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவினுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாகுதல் – அதன்பின்பு அவர்கள் கிறிஸ்துவினுடைய நாமத்தினாலே அழைக்கப்படுதல் – அவர்கள் நற்கிரியைகளிலே உறுதியாகவும், அசைக்கப்பட முடியாதவர்களாகவும் இருக்கும்படி பென்யமீன் ராஜா புத்திசொல்லுதல். ஏறக்குறைய கி.மு. 124.

1 இப்பொழுதும், அந்தப்படியே, தன் ஜனத்திடம் இவ்வாறு பேசின பின்பு, பென்யமீன் ராஜா, தான் பேசின வார்த்தைகளை தன் ஜனத்தார் விசுவாசித்தார்களா என்றறிய விரும்பி, அவர்களுக்கு மத்தியிலே ஆள் அனுப்பினான்.

2 அவர்கள் எல்லோரும் ஏகமாய்ச் சத்தமிட்டு சொன்னதாவது: ஆம், நீர் எங்களுக்குப் பேசிய சகல வார்த்தைகளையும் விசுவாசிக்கிறோம்; பொல்லாப்பை இனிச் செய்ய மனமில்லாதவர்களாய், நன்மையையே தொடர்ந்து செய்யும்படிக்கு, எங்கள் இருதயங்களிலேயும், எங்களுக்குள்ளேயும், பலத்த மாற்றத்தைச் செய்வித்த சர்வவல்ல கர்த்தருடைய ஆவியானவரினிமித்தம், அவைகளின் உண்மையையும் சத்தியத்தையும் அறிவோம்.

3 நாங்களே, தேவனுடைய எல்லையற்ற நன்மையினாலும், அவருடைய ஆவியானவருடைய வெளிப்படுத்தல்களாலும், வரவிருக்கிற மகத்தான அறிவைப் பெற்றிருக்கிறோம்; அவசியமானதாய் இருக்குமேயானால், எல்லாவற்றையும் குறித்து நாங்கள் தீர்க்கதரிசனமுரைக்க முடியும்.

4 எங்கள் ராஜா எங்களிடத்திலே பேசியவைகளிலே நாங்கள் வைத்த விசுவாசமே, இந்த மகா ஞானத்திற்கு எங்களைக்கொண்டு வந்திருக்கிறது. அதினிமித்தம் மிகுந்த சந்தோஷத்தினால் களிகூருகிறோம்.

5 தேவனுடைய கோபாக்கினையின் பாத்திரத்திலிருந்து நாங்கள் பானம் பண்ணக்கூடாதென தூதன் பேசினதின்படியே, ஒருக்காலும் முடியாத வேதனையை எங்களின் மீது நாங்களே வரவழைக்கக் கூடாதபடி, எங்களுடைய மீதி நாட்கள் யாவிலும், தேவன் எங்களுக்கு எல்லாவற்றிலும் கட்டளையிட்டுக் கொடுக்கும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய சித்தத்திற்கேற்ப நடக்கவும், அவரோடு ஒரு உடன்படிக்கையினுள் பிரவேசிக்க மனமுள்ளவர்களாயிருக்கிறோம்.

6 இப்பொழுதும் பென்யமீன் ராஜா அவர்களிடத்திலிருந்து விரும்பிய வார்த்தைகள் இவைகளே; ஆதலால் அவன் அவர்களை நோக்கி, நான் வாஞ்சித்த வார்த்தைகளை பேசியுள்ளீர்கள்; நீங்கள் செய்த உடன்படிக்கை, ஒரு நீதியான உடன்படிக்கை.

7 இப்பொழுதும் நீங்கள் செய்திருக்கும் உடன்படிக்கையினிமித்தம் கிறிஸ்துவின் புத்திரரும் புத்திரிகளுமான, அவரது பிள்ளைகள் என அழைக்கப்படுவீர்கள்; ஏனெனில் இதோ, அவருடைய நாமத்தின் மீதான விசுவாசத்தினால் உங்களின் இருதயங்கள் மாற்றப்பட்டன, என்று நீங்கள் சொன்னதிற்கேற்ப இந்நாளிலே உங்களை அவர் ஆவிக்குரிய பிரகாரமாக ஜென்மித்தார்; ஆதலால் அவராலே நீங்கள் ஜென்மித்து, அவருடைய புத்திரரும் புத்திரிகளுமானீர்கள்.

8 நீங்கள் இந்த நாமத்தின் அடிப்படையில் விடுதலையாக்கப்பட்டீர்கள், வேறு எந்த நாமத்தினாலும் நீங்கள் விடுதலையாக்கப்பட முடியாது; இரட்சிப்பு வரும்படி வேறெந்த நாமமும் கொடுக்கப்படவில்லை; ஆதலால் உங்கள் வாழ்வின் முடிவுபரியந்தமும் கீழ்ப்படிந்திருப்பீர்கள், என்று தேவனுடனே கூட உடன்படிக்கையினுள் பிரவேசித்த நீங்கள் யாவரும், கிறிஸ்துவினுடைய நாமத்தை உங்கள் மீது எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

9 இதைச் செய்கிற எவனும் தேவனுடைய வலது பாரிசத்திலே காணப்படுவான். ஏனெனில் தான் எந்த நாமத்தினாலே அழைக்கப்படுவான் என்று அவன் அறிவான். ஏனெனில் அவன் கிறிஸ்துவினுடைய நாமத்தினாலே அழைக்கப்படுவான்.

10 இப்பொழுதும் கிறிஸ்துவினுடைய நாமத்தை தன்மீது எடுத்துக்கொள்ளாத எவனும் வேறெதாவது நாமத்தினால் அழைக்கப்படவேண்டும்; ஆதலால் அவன், தன்னை தேவனின் இடது பாரிசத்திலே காண்பான்.

11 மீறுதலினாலேயல்லாமல் ஒருக்காலும் அழிக்கப்பட்டுப்போகாத நாமத்தை உங்களுக்குத் தருவேன், என்று நான் சொன்ன நாமம் இதுவே, என்று நீங்கள் நினைவு கூரவேண்டும், என விரும்புகிறேன்; ஆதலால் உங்கள் இருதயங்களிலிருந்து அந்த நாமம் அழிக்கப்பட்டு போகாதபடிக்கு, மீறுதல் செய்யாமலிருக்கும்படிக்கு, கவனமாயிருங்கள்.

12 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் தேவனுடைய இடது பாரிசத்திலே காணப்படாதபடிக்கு, உங்கள் இருதயங்களிலே எப்பொழுதும் எழுதப்பட்டிருக்கிற நாமத்தைத் தரித்துக்கொள்ள, நினைவில் வைக்கவேண்டுமென விரும்புகிறேன். ஆனால் நீங்கள் அழைக்கப்படுகிற சத்தத்தையும், அவர் உங்களை அழைக்கிற நாமத்தையும் செவிமடுத்து, அறிந்துகொள்ளுங்கள்.

13 ஏனெனில் தான் சேவித்திராத, தனக்கு அன்னியனும் தன் உள்ளத்தின் எண்ணங்களிலும், நோக்கங்களிலிருந்தும், தூரமாயிருக்கிற எஜமானை ஒரு மனுஷன் எப்படி அறிவான்?

14 மறுபடியும் ஒரு மனுஷன் தன் அயலானுக்கு சொந்தமான கழுதையை பிடித்து வைத்துக்கொள்வானோ? இல்லை என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் மந்தையுடன் அதை புசிக்கவிடாமல், வெளியே துரத்தி, புறம்பே துரத்துவான். நீங்கள் அழைக்கப்படுகிற நாமத்தை அறியாமல் போவீர்களானால், அவ்வண்ணமே உங்களுக்கும் சம்பவிக்கும்.

15 ஆகிலும் சர்வவல்லமையுடைய தேவனும் கர்த்தருமாகிய கிறிஸ்து உங்களைத் தம்முடையவர்கள் என்று முத்திரை பதித்து, நீங்கள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, வானத்திலும் பூமியிலும் எல்லாவற்றையும் சிருஷ்டித்தவரும் சகலமானோருக்கும் மேன்மையான அந்த தேவனுடைய ஞானம், வல்லமை, நீதி மற்றும் இரக்கத்தினாலே நித்திய ஜீவனையும், முடிவில்லா இரட்சிப்பையும் என்றென்றைக்குமாய் பெற்றுக்கொள்ளும்படிக்கு, நீங்கள் எப்பொழுதும் நற்கிரியைகளை மிகுதியாய்ச் செய்து, உறுதியுள்ளவர்களாயும், அசைக்கமுடியாதவர்களாயும் இருக்கவேண்டுமென விரும்புகிறேன். ஆமென்.