வேதங்கள்
ஜோசப் ஸ்மித்—மத்தேயு 1


ஜோசப் ஸ்மித்—மத்தேயு

1831ல் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கு வெளிப்படுத்தப்பட்டபடி வேதாகமத்தின் மொழிபெயர்ப்பிலிருந்து ஒரு சாராம்சம்: மத்தேயு 23:39 மற்றும் அதிகாரம் 24.

அதிகாரம் 1

எருசலேமின் உடனடியான அழிவைப்பற்றி இயேசு முன்னறிவிக்கிறார் – மனுஷகுமாரனின் இரண்டாம் வருகையையும், துன்மார்க்கரின் அழிவையும்கூட அவர் பிரசங்கிக்கிறார்.

1 ஏனெனில், இப்போதிலிருந்து நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள் என்றும் வானத்தின் மேகங்களிலும் அவரோடு சகல பரிசுத்த தூதர்களோடும் கர்த்தரின் நாமத்தில் வருகிறவர் பாக்கியவான் என நீங்கள் சொல்லுகிறவரை தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட அவர் நானே என அறிந்து கொள்ளும்படியாகவும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பின்னர் பூமியில் அவர் மீண்டும் வரவேண்டுமென்றும் அதன் பின்னர் அவர் மகிமையடைந்து தேவனின் வலது பாரிசத்தில் முடிசூட்டப்படுவார் என்றும் அவருடைய சீஷர்கள் புரிந்துகொண்டார்கள்.

2 இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப் போகையில், போதகரே, அவைகள் இடிக்கப்பட்டு உங்களுக்கு பாழாக்கிவிடப்படும் என நீர் சொன்னதைப்போல ஆலயத்தின் கட்டடங்களைக் குறித்தவற்றை எங்களுக்குக் காண்பியுமென சொல்லி அவர் சொல்வதைக் கேட்க அவரிடத்தில் அவருடைய சீஷர்கள் வந்தார்கள்.

3 இயேசு அவர்களை நோக்கி, இவைகளையெல்லாம் பார்க்கவில்லையா, நீங்கள் அவைகளைப் புரிந்து கொள்ளவில்லையா, இந்த ஆலயத்தின்மீது இவ்விடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

4 இயேசு அவர்களை விட்டுப்போய் ஒலிவ மலையின்மீது ஏறிப்போனார். ஒலிவ மலைமேலே அவர் அமர்ந்தபோது சீஷர்கள் தனிமையில் அவரிடத்தில் வந்து சொன்னார்கள்: ஆலயத்தின் மற்றும் யூதர்களின் அழிவைக் குறித்து நீர் சொன்ன இந்தக் காரியங்கள் எப்போது நடக்குமென எங்களுக்குச் சொல்லும், உமது வருகையின் மற்றும் உலகத்தின் முடிவின், அல்லது உலகத்தின் முடிவாகிய துன்மார்க்கத்தின் அழிவின் அடையாளமென்ன?

5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

6 ஏனெனில் நானே கிறிஸ்து எனச் சொல்லி என்னுடைய நாமத்தில் அநேகர் வந்து அநேகரை ஏமாற்றுவார்கள்;

7 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலை செய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்;

8 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்;

9 அநேக கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்;

10 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்;

11 ஆனால் திடமனதோடு நிலைத்திருப்பவனும், மேற்கொள்ளப்படாதவனுமான அவனே இரட்சிக்கப்படுவான்.

12 ஆகவே, எருசலேமின் அழிவைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிற, பாழாக்குகிற அருவருப்பை நீங்கள் காணும்போது, பின்னர் நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் நின்றுகொண்டிருப்பீர்கள்; வாசிக்கிறவன் புரிந்துகொள்வான்.

13 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்;

14 வீட்டின்மேல் இருக்கிறவன் ஓடிப்போவானாக, தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு திரும்பாதிருக்கக்கடவன்;

15 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்;

16 அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ;

17 ஆகவே நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு கர்த்தரிடம் வேண்டிக்கொள்ளுங்கள்;

18 ஏனெனில் அந்த நாட்களில் அவர்களுடைய ராஜ்யத்தின் தொடக்க முதல், இச்சமயம் வரையிலும், யூதர்கள் மேலும், எருசலேமின் குடிகள் மீதும், தேவனால் எருசலேமின் மீது முன்பு அனுப்பப்படாத மகா உபத்திரவம் வரும். இல்லை, இனிமேல் ஒருபோதும் இஸ்ரவேல் மேல் அனுப்பப்படாது.

19 அவர்களுக்கு நேரிட்ட சகல காரியங்களும் அவர்கள்மேல் வரப்போகிற வேதனைகளின் ஆரம்பமே.

20 அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனுடைய மாம்சமும் தப்பிப்போவதில்லை; உடன்படிக்கையின்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தமே அந்த நாட்கள் குறைக்கப்படும்.

21 இதோ, யூதர்களைக்குறித்து இந்தக் காரியங்களை நான் உங்களிடம் பேசினேன்; அந்த நாட்களில் எருசலேமின்மேல் வரப்போகிற உபத்திரவங்களுக்குப் பின் இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்;

22 ஏனெனில் அந்த நாட்களில் கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை, உடன்படிக்கையின்படி தெரிந்துகொள்ளப்பட்ட, அவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

23 இதோ, தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக இந்தக் காரியங்களை நான் உன்னிடம் பேசினேன்; யுத்தங்களையும் யுத்தங்களின் வதந்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், நான் உனக்குக் கூறிய இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.

24 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்;

25 ஆகையால் அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்பட்டுப் போகாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்;

26 ஏனெனில் மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசித்து முழு பூமியையும் மூடுகிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

27 இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு உவமையைக் காட்டுகிறேன். இதோ, பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்துகூடும்; அவ்விதமாகவே என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் வந்து கூடுவார்கள்.

28 அவர்கள் யுத்தங்களையும் யுத்தங்களின் வதந்திகளையும் கேள்விப்படுவார்கள்.

29 இதோ, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக நான் பேசுகிறேன்; ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.

30 மீண்டும், அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்; ஆனால் மேற்கொள்ளப்படாதவனான அவனே இரட்சிக்கப்படுவான்.

31 மீண்டும் ராஜ்யத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும், சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு அல்லது துன்மார்க்கத்தின் அழிவு வரும்;

32 மீண்டும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறது நிறைவேற்றப்படும்.

33 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.

34 காட்டப்படப்போகிற உங்களுக்கு நான் சொன்ன இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

35 வானமும் பூமியும் ஒழிந்துபோகிற நாட்கள் வந்தாலும்கூட என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை, அவைகளெல்லாம் நிறைவேறும்.

36 நான் முன்பே சொன்னதைப்போல, அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தபின்பு, வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும், அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும், பின்பு சகல கோத்திரத்தாரும் புலம்புவார்கள், மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை அவர்கள் காண்பார்கள்;

37 என் வார்த்தையை பொக்கிஷப்படுத்துகிறவன் வஞ்சிக்கப்படுவதில்லை, ஏனெனில் தேவகுமாரன் வருகிறார், அவருக்கு முன்பாக வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் மீதியானவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள்.

38 இப்பொழுது அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள், அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, கோடைகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்;

39 அப்படியே, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது, வாசற்படியில், அவர் அருகிலிருக்கிறார் என்று அறிந்துகொள்வார்கள்;

40 ஆனால் அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர வேறொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தேவதூதர்களும் அறியார்கள்.

41 ஆனால் நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்;

42 எப்படியெனில் ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே இருந்ததைப்போலவே அவர்களுக்கிருக்கும்; ஏனெனில் நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்;

43 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.

44 அப்பொழுது கடைசி நாட்களில் இரண்டுபேர் வயலில் இருப்பார்கள், ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான் என்று எழுதப்பட்டது நிறைவேறும்;

45 இரண்டு ஸ்த்ரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள், ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்;

46 நான் ஒருவனுக்கு சொல்லுவது சகல மனுஷருக்கும் சொல்லுவதாகும்; உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.

47 ஆனால் இப்பொழுது இது திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால் அவன் விழித்திருந்து தன் வீட்டை கன்னமிடவொட்டான், ஆனால் ஆயத்தமாயிருந்திருப்பானென்று அறிவீர்கள்.

48 ஆகவே நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார், ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.

49 ஏற்ற வேளையிலே தன் வீட்டாருக்குப் போஜனங் கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் எவன்?

50 எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான், தன் ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

51 ஆனால் அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,

52 தன் உடன் வேலைக்காரரை அடிக்கத்தொடங்கி, வெறியரோடே, புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டான்,

53 அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும் அவனுடைய எஜமான் வந்து,

54 அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

55 அவர்கள் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டு போவார்கள், ஆனாலும் பூமியின் முடிவு உடனேயே வராது ஆனால் காலப்போக்கில் எனச் சொல்லி மோசேயின் தீர்க்கதரிசனத்தின்படி துன்மார்க்கத்தின் முடிவு வந்தது.