வேதங்கள்
மரோனி 10


அதிகாரம் 10

மார்மன் புஸ்தகத்தைப்பற்றிய சாட்சியம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் வருகிறது – ஆவியின் வரங்கள் விசுவாசமுள்ளவர்களுக்குக் கொடுக்கப்படுதல் – ஆவிக்குரிய வரங்கள் எப்பொழுதும் விசுவாசத்தோடு சேர்ந்திருத்தல் – மரோனியின் வார்த்தைகள் மண்ணிலிருந்து பேசுதல் – கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள். அவரிலே பூரணப்பட்டிருங்கள். உங்கள் ஆத்துமாக்களை பரிசுத்தப்படுத்துங்கள். ஏறக்குறைய கி.பி. 421.

1 இப்பொழுதும், மரோனியாகிய நான் எனக்கு நன்மையாய்ப் படுகிற சிலவற்றை எழுதுகிறேன்; நான் லாமானியராகிய என் சகோதரருக்கு எழுதுகிறேன். கிறிஸ்து வருகையின் அறிகுறி கொடுக்கப்பட்ட பின்பு, நானூற்றி இருபதுக்கும் அதிகமான வருஷங்கள் கடந்து போயிற்று என்று, அவர்கள் அறியவேண்டுமென விரும்புகிறேன்.

2 நான் உங்களுக்குப் புத்தி சொல்லும்படியாகப் பேசிய சில வார்த்தைகளுக்குப் பின்பு, இந்தப் பதிவேடுகளை முத்திரையிடுகிறேன்.

3 இதோ, நீங்கள் இவைகளை வாசித்து, அதினிமித்தம் கர்த்தர் மனுபுத்திரருக்கு ஆதாமின் சிருஷ்டிப்பு தொடங்கி, நீங்கள் இவைகளைப் பெறும் சமயம் வரைக்குமாய், கர்த்தர் எவ்வளவு இரக்கமுள்ளவராயிருந்திருக்கிறார் என்று மனுபுத்திரர் வாசிக்க வேண்டுமென்பது தேவ சித்தமாயிருந்தால், அதை நீங்கள் வாசித்து உங்கள் இருதயங்களில் தியானிக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.

4 இக்காரியங்களை நீங்கள் பெறும்போது, நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தில் நித்திய பிதாவாகிய தேவனிடத்தில், இக்காரியங்கள் சத்தியமற்றவையா என்று கேட்கவேண்டுமென்று உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்; நீங்கள் அக்கறையுள்ள இருதயத்தோடும், உண்மையான நோக்கத்தோடும், கிறிஸ்துவில் விசுவாசம் வைத்துக் கேட்பீர்களானால், அவர் அதன் சத்தியத்தை உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையிலே வெளிப்படுத்துவார்.

5 பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே, நீங்கள் சகலத்தையும்பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள்.

6 நன்மையான எக்காரியமும், நியாயமாயும், சத்தியமாயும் இருக்கிறது; ஆதலால் நன்மையாயிருக்கிற எதுவும் கிறிஸ்துவை மறுதலிக்காது, ஆனால் அவர் இருக்கிறார் என்றே ஊர்ஜிதப்படுத்தும்.

7 பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே, அவர் ஜீவிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்; ஆதலால் நீங்கள் தேவ வல்லமையை மறுதலிக்க வேண்டாமென்று உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்; அவர் இன்றும் நாளைக்கும் என்றென்றும் மாறாதவராயிருந்து, மனுபுத்திரரின் விசுவாசத்திற்குத் தக்கதாக வல்லமையால் கிரியை செய்கிறார்.

8 என் சகோதரரே, நீங்கள் தேவ வரங்களை மறுதலிக்க வேண்டாமென்று உங்களுக்கு மறுபடியும் புத்தி சொல்லுகிறேன்; ஏனெனில் அவைகள் அநேகமுண்டு; அவைகள் ஒரே தேவனிடத்திலிருந்து வருகின்றன. இந்த வரங்கள் பலவகைகளில் அருளப்படுகின்றன; ஆனால் அதே தேவன் இவையனைத்தின் மூலமாகவும் கிரியை செய்கிறார். அவைகளால் பிரயோஜனப்படத்தக்கதாக தேவ ஆவியின் வெளியரங்கப்படுத்துதலினாலே அவைகள் மனுஷர்களுக்குக் கொடுக்கப்படும்.

9 ஏனெனில் ஒருவனுக்கு தேவ ஆவியால் இதோ, ஞானவார்த்தையைப் போதிக்கும்படியாகவும் அருளப்படுகிறது.

10 வேறொருவனுக்கு அதே ஆவியானவரால், அறிவுப்பூர்வமான வார்த்தையைப் போதிக்கும்படியாகவும்.

11 வேறொருவனுக்கு மிகப்பெரும் விசுவாசமும் அருளப்படுகிறது; மற்றொருவனுக்கு அதே ஆவியானவரால் சுகப்படுத்தும் வரங்களும்;

12 மறுபடியும் வேறொருவனுக்கு பலத்த அற்புதங்களைச் செய்யத்தக்கதாகவும்;

13 மறுபடியும், வேறொருவனுக்கு சகலத்தையும் குறித்து தீர்க்கதரிசனமுரைக்கும்படியாகவும்;

14 மறுபடியும், வேறொருவனுக்கு, தூதர்களையும், பணிவிடை செய்யும் ஆவிகளையும் காணும்படியும்;

15 மறுபடியும், வேறொருவனுக்கு, எல்லா வகையான பாஷைகளும்;

16 மறுபடியும், வேறொருவனுக்கு, மொழிகளையும், எல்லா விதமான பாஷைகளையும் மொழிபெயர்க்கவும் அருளப்படுகின்றன.

17 இந்த வரங்கள் யாவும் கிறிஸ்துவின் ஆவியால் வருகின்றன; அவருடைய சித்தத்தின்படியே அவை வெவ்வேறுவிதமாய் ஒவ்வொரு மனுஷனுக்கும் வருகிறது.

18 எனக்குப் பிரியமான சகோதரரே, ஒவ்வொரு நல்ல வரமும் கிறிஸ்துவினிடத்திலிருந்து வருகிறதென்று நீங்கள் நினைவுகூரவேண்டுமென்று புத்தி சொல்கிறேன்.

19 என் பிரியமான சகோதரரே, அவர் நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதையும், நான் பேசின ஆவிக்குரிய வரங்களாகிய இவைகள் யாவும் மனுபுத்திரரின் அவிசுவாசத்தினால் மாத்திரமே ஒழிய, வேறொன்றாலும் உலகம் இருக்கும் காலம் வரைக்குமாய் எடுத்துப்போடப்படாது, என நான் உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.

20 ஆதலால், அங்கே விசுவாசம் இருக்கவேண்டும்; ஆகவே விசுவாசமிருக்க வேண்டுமெனில் அங்கே நம்பிக்கையும் இருக்கவேண்டும்; அங்கே நம்பிக்கை இருக்கவேண்டுமெனில் அங்கே தயாளத்துவமும் இருக்கவேண்டும்.

21 நீங்கள் தயாளத்துவத்தைப் பெற்றிராவிட்டால், நீங்கள் ஒருக்காலும் தேவ ராஜ்யத்தினுள் இரட்சிக்கப்பட முடியாது; உங்களுக்கு விசுவாசம் இல்லாவிட்டால், நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் இரட்சிக்கப்பட முடியாது. நீங்கள் நம்பிக்கையைப் பெற்றிராவிட்டாலும் இரட்சிக்கப்பட முடியாது.

22 நீங்கள் நம்பிக்கையைப் பெற்றிராவிட்டால், நீங்கள் விரக்தியிலே தரித்திருக்க வேண்டும்; விரக்தி அக்கிரமத்தினிமித்தம் வருகிறது.

23 கிறிஸ்து உண்மையாகவே நம்முடைய பிதாக்களிடத்தில்: நீங்கள் விசுவாசத்தைப் பெற்றிருந்தால், என்னால் முடியும் எல்லாக் காரியங்களையும் நீங்களும் செய்யக்கூடும், என்றார்.

24 இப்பொழுதும் நான் பூமியின் கடையாந்திரங்கள் எல்லாவற்றிற்கும் பேசுகிறேன், உங்களுக்குள்ளே தேவ வல்லமையும், வரங்களும் ஓய்ந்துபோகும் நாள் வருமேயானால், அது அவிசுவாசத்தின் நிமித்தமாகவே இருக்கும்.

25 அப்படியானால் மனுபுத்திரருக்கு ஐயோ; உங்களுக்குள்ளே நல்லது செய்ய எவரும் இல்லை, ஒருவன் கூட இல்லை. உங்களுக்குள்ளே நன்மை செய்கிறவன் ஒருவன் இருந்தானேயாகில், அவன் தேவ வல்லமையாலும் வரங்களாலும் கிரியை செய்வான்.

26 இவைகளைச் செய்து மரித்துப்போகிறவனுக்கு ஐயோ, ஏனெனில் அவர்கள் தங்கள் பாவங்களில் மரிக்கிறார்கள். அவர்கள் தேவ ராஜ்யத்தில் இரட்சிக்கப்பட முடியாது; நான் இதை கிறிஸ்துவின் வார்த்தைகளின்படியே பேசுகிறேன்; நான் பொய் சொல்வதில்லை.

27 இக்காரியங்களை நினைவுகூரும்படியாய் உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்; நான் பொய் சொல்வதில்லை என்று நீங்கள் அறியத்தக்கதான காலம் சீக்கிரத்தில் வருகிறது. ஏனெனில் நீங்கள் என்னை தேவனின் நியாயவிசாரணைக் கூண்டிலே காண்பீர்கள்; தேவனாகிய கர்த்தர் உங்களை நோக்கி: மரித்தோரிலிருந்து கூக்குரலிடுகிறவன் போலவும், ஆம், புழுதியிலிருந்து பேசுகிறவனைப்போலவும், எழுதப்பட்ட இம்மனுஷனின் வார்த்தைகளை உங்களுக்கு நான் அறிவிக்கவில்லையா? என்பார்.

28 நான் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறத்தக்கதாக இவைகளை அறிவிக்கிறேன். இதோ, அவைகள் நித்திய தேவனின் நாவிலிருந்து புறப்பட்டுவரும். அவருடைய வார்த்தை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றுக்கு பயில்காட்டும்.

29 நான் எழுதியவை உண்மையென்று தேவன் உங்களுக்குக் காண்பிப்பார்.

30 மறுபடியும் நீங்கள் கிறிஸ்துவிடம் வந்து, ஒவ்வொரு நல்ல வரத்தையும் பெற்றுக்கொண்டு, பொல்லாத வரத்தையும், அசுத்தமானதையும் தொடாதிருக்க வேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.

31 எருசலேமே புழுதியிலிருந்து விழித்தெழு; ஆம், சீயோனின் குமாரத்தியே, நீ உன் அழகான வஸ்திரங்களைத் தரித்துக்கொள்; இஸ்ரவேலின் வீட்டாரே, நீங்கள் ஒருபோதும் தாறுமாறாக போகாதபடிக்கும், நித்திய பிதா உங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேற்றும்படிக்கும், உங்களது முளைகளைப் பெலப்படுத்தி, உங்களது எல்லைகளை என்றென்றுமாய் விஸ்தாரப்படுத்துங்கள்.

32 ஆம், கிறிஸ்துவினிடத்தில் வந்து அவரில் பூரணப்பட்டிருங்கள். எல்லா அசுத்தங்களிலிருந்தும் உங்களை விலக்கிக் காத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும் உங்களை விலக்கிக் காத்து, தேவனில் உங்கள் முழுஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் அன்புகூருவீர்களானால் அவருடைய கிருபை உங்களுக்குப் போதுமானதாயிருக்கும், அவருடைய கிருபையினிமித்தம் நீங்கள் கிறிஸ்துவில் பூரணப்படுவீர்கள்; தேவ கிருபையினால் நீங்கள் கிறிஸ்துவில் பூரணப்படுவீர்களானால், நீங்கள் தேவ வல்லமையை ஒருக்காலும் மறுக்கமுடியாது.

33 மறுபடியும் நீங்கள் தேவ கிருபையினால் கிறிஸ்துவில் பூரணப்பட்டு, அவருடைய வல்லமையை மறுதலிக்காமல் இருப்பீர்களானால், தேவ கிருபையினால் கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதலின்மூலம் நீங்கள் கிறிஸ்துவில் பரிசுத்தப்பட்டிருப்பீர்கள். அது நீங்கள் கறையற்றவர்களாக, பரிசுத்தமாக மாறத்தக்கதாக உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறும்படியான பிதாவின் உடன்படிக்கையிலுள்ளது.

34 இப்பொழுது நான் உங்கள் யாவரிடத்திலிருந்தும் விடை பெற்றுக்கொள்கிறேன். என் ஆவியும், சரீரமும் மறுபடியும் இணையும் வரைக்குமாயும், தேவ பரதீசில் இளைப்பாற சீக்கிரம் போகவிருக்கிறேன்; ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் நித்திய நியாயாதிபதியாகிய மகா யேகோவாவின் இன்பமான நியாயவிசாரணைக் கூண்டுக்கு முன்பாக உங்களைக் காணும்படியாக காற்றினூடே ஜெயத்தோடு கொண்டுவரப்படுகிறேன். ஆமென்.

நிறைவுற்றது