2010–2019
கர்த்தரில் நம்பிக்கையாயிரு, சாயாதே
ஏப்ரல் 2017


கர்த்தரில் நம்பிக்கையாயிரு, சாயாதே

அவரை அறிவதால் நாம் இரட்சகர் மீது நமது வாழ்க்கையை மையப்படுத்தலாம், அவர் நமது வழிகளை நடத்துவார்.

நான் ஆசியாவில் பிரயாணம் பண்ணிக்கொண்டிருந்தபோது, ஒரு அன்பு சகோதரி என்னிடம் வந்தார். அவர் என்னைக் கட்டிப்பிடித்து, கேட்டார், “இந்த சுவிசேஷம் சத்தியமானது என உண்மையாகவே நம்புகிறீர்களா.” அன்பு சகோதரி, இது சத்தியம் என நான் அறிகிறேன். நான் கர்த்தரை நம்புகிறேன்.

நீதிமொழிகள் 3:5–6 ல் நாம் வாசிக்கிறோம்:

“உன் சுய புத்தியை சாராமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.

“உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”

இரு புத்திமதிகளுடனும், ஒரு எச்சரிக்கையுடனும், ஒரு மகிமைமிக்க வாக்குத்தத்தத்துடனும் இந்த வசனம் வருகிறது. இரு புத்திமதிகள்: “உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள்.” எச்சரிக்கை: “உன் சுய புத்தியை சாராமலிரு.” மகிமைமிக்க வாக்குத்தத்தம்: “அவர் உன் பாதைகளைச் செவ்வைப் படுத்துவார்.”

முதலாவது நாம் எச்சரிக்கை குறித்து கலந்துரையாடுவோம். அக்காட்சிப் பிம்பம் சிந்திக்க நிறைய வழிவகுக்கிறது. எச்சரிக்கை, “சாயாதே,”—“உன் சுய புத்தியின் மேல் சாயாதே.” சாய்தல் என்ற ஆங்கில வார்த்தை, சரீரமாக ஒரு பக்கம் சேருதல் அல்லது போகுதல் என்ற கருத்தைக் கொண்டது. நாம் சரீரமாக ஒரு பக்கம் அல்லது மற்றொரு பக்கம் சாய்ந்தால் நாம் மையத்தை விட்டு நகர்கிறோம், சமநிலையை இழக்கிறோம், வழுக்குகிறோம். ஆவிக்குரிய பிரகாரமாக நாம் நமது சுய புத்தியை சார்ந்திடும்போது, நாம் நமது இரட்சகரிடமிருந்து விலகுகிறோம். நாம் சாய்ந்தால் நாம் மையத்திலில்லை. நாம் சமநிலையிலில்லை. நாம் கிறிஸ்துவில் கவனம் செலுத்தவில்லை.

சகோதரிகளே, நினைவுகொள்ளுங்கள், நமது அநித்தியத்துக்கு முந்தய ஜீவியத்தில், நாம் இரட்சகரோடு நின்றோம். நாம் அவரை நம்பினோம். பரலோக பிதாவால் வகுக்கப்பட்ட மகிழச்சியின் திட்டத்துக்கு, நமது ஆதரவையும், ஆர்வத்தையும் ஆனந்தத்தையும் தெரிவித்தோம். நாம் சாயவில்லை. “தேவ சேனைகளுடன் நம்மை இணைத்துக்கொண்டு நமது சாட்சிகளைக் கொண்டு போராடினோம், அந்த சேனைகள் ஜெயித்தன.”1 நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம் பூமிக்கு நகர்ந்தது. சாட்சியாக நிற்கவும், கரத்தர் மீது நமது நம்பிக்கையை வைக்கவும், மீண்டும் நமக்கு பொறுப்பு, பரிசுத்த பொறுப்பு இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும்: எவ்வாறு நான் நடுநிலையில் நிற்கிறேன், என் சுய புத்தியில் சாயாமல் இருக்கிறேன். உலகத்தின் குரல்கள் கட்டாயப்படுத்தும்போது, நான் எப்படி இரட்சகரின் குரலை அடையாளம் கண்டு பின்பற்றுகிறேன். நான் எப்படி இரட்சகரில் நமபிக்கையை விருத்தி செய்கிறேன்?

இரட்சகரில் நமது அறிவையும் நம்பிக்கையையும் அதிகரிக்க மூன்று வழிகளைச் சொல்லட்டுமா. இந்த கொள்கைகள் புதிதல்ல, ஆனால் அடிப்படையானவை என நீங்கள் காண்பீர்கள். அவை ஆரம்ப வகுப்பில் பாடப்படுகின்றன. இளம் பெண்கள் வகுப்பில் எதிரொலிக்கின்றன, ஒத்தாசைச் சங்க அநேக கேள்விகளுக்கு பதிலாக இருக்கின்றன. அவை மையமான கருத்துக்கள், சாயவில்லை.

முதலாவது, நாம் கர்த்தரை அறிந்து அவரை நம்பும்போது. “கிறிஸ்துவின் வார்த்தைகளை உண்டுகளியுங்கள், ஏனெனில் நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும் கிறிஸ்துவின் வார்த்தைகள் உங்களுக்குத் தெரிவிக்கும்.”2

பல மாதங்களுக்கு முன்பு நாங்கள் குடும்ப வேதப்படிப்பு நடத்தினோம். நாங்கள் வாசிக்கும்போது எனது இரண்டு வயது பேரன் என் மடியில் உட்கார்ந்திருந்தான். எனது மகன் குடும்ப வருகையை இரசித்து, நான் முழுமையான பாட்டி நிலையிலிருந்தேன்.

எனது வேதப் படிப்பு முடியவே, நான் என் புத்தகத்தை மூடினேன். தூங்கும் நேரம் வரப்போகிறது என என் பேரன் அறிந்தான். அவனது ஆர்வமிக்க நீலக்கண்களால் பார்த்து, நித்திய சத்தியத்தை பேசினான்: “அதிக வேதம் பாட்டி.”

படம்
சகோதரி கார்டனின் பேரன்

ஒரு நிலையான நல்ல பெற்றோரான என் மகன் என்னை எச்சரித்தான், “அம்மா, பலவீனமாக இருக்காதீர்கள். அவன் படுக்கைக்குப் போகாமலிருக்க முயற்சி செய்கிறான்.”

என் பேரன் வேதம் அதிகமாக படிக்க கேட்டபோது, நாங்கள் வேதம் அதிகமாக வாசித்தோம்! அதிக வேத வாசிப்பு நமது மனங்களை தெளிவாக்கி, நமது ஆத்துமாக்களைப் போஷித்து, கேள்விகளுக்குப் பதிலளித்து, கர்த்தரில் நமது நம்பிக்கையை அதிகரிக்கிறது, அவரில் நமது வாழ்க்கையை மையப்படுத்த உதவுகிறது. “அவைகளைக் கருத்தாய் தேடி வருவதினால் நீங்கள் பிரயோசனப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்.”3

இரண்டாவதாக, நாம் தேவனை அறிந்து ஜெபத்தின் மூலம் அவரை நம்புவோம். நமது தேவனிடம் ஜெபிக்க முடிவது எவ்வளவு ஆசீர்வாதம்! “பிதாவிடத்தில் இருதயத்தின் முழு ஊக்கத்தோடும் ஜெபியுங்கள்.”4

நான் பொக்கிஷிப்படுத்துகிற ஜெபம் பற்றிய இனிமையான நினைவு எனக்கிருக்கிறது. கல்லூரியில் கோடை விடுமுறையின்போது, நான் டெக்ஸாஸில் ஒரு வேலையை ஒப்புக்கொண்டேன். ஐடஹோவிலிருந்து டெக்ஸாஸுக்கு நான் ஆசையுடன் வெர்ன் எனப்பெயரிட்ட பழைய காரில் நூற்றுக்கணக்கான மைல்கள் காரோட்ட வேண்டியிருந்தது. வெர்ன் கூரை மட்டும் நிரப்பப்பட்டு, நான் ஒரு புதிய சாகசத்துக்கு தயாரானேன்.

நான் வாசலுக்கு வருவதற்கு முன், என் அம்மாவை அணைத்தேன், அவர் சொன்னார், “நீ கிளம்புவதற்கு முன்னர் நாம் ஜெபம் செய்வோம்.”

நாங்கள் முழங்கால் படியிட்டோம், என் அம்மா ஜெபிக்கத் தொடங்கினார். அவர் எனது பாதுகாப்புக்காக பரலோக பிதாவிடம் கெஞ்சினார். எனக்குத் தேவைப்படுகிறபடி கார் வேலை செய்ய வேண்டும் என குளிர் சாதன வசதி இல்லாத காருக்காக ஜெபித்தார். கோடை முழுவதிலும் என்னோடு தூதர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டார். அவர் நீண்ட நேரம் ஜெபித்தார்.

அந்த ஜெபத்திலிருந்து வந்த சமாதானம், கர்த்தரை நம்பவும், என் சொந்த புத்தி மீது சாயாதிருக்கவும் எனக்கு தைரியம் கொடுத்தது. அக்கோடையில் நான் செய்த அநேக தீர்மானங்களுக்கு கர்த்தர் பாதை காட்டினார்.

பரலோக பிதாவை ஜெபத்திலே அணுகுவதை நாம் பழக்கப்படுத்திக் கொண்டால், நாம் இரட்சகரை அறியலாம். நாம் அவரை நம்புவோம். நமது வாஞ்சைகள் அதிகமாக அவரைப்போலாகும். நாம் விசுவாசத்தோடு கேட்டால், நமக்குக் கொடுக்க பரம பிதா ஆயத்தமாயிருக்கிற, பிற ஆசீர்வாதங்களையும் நாம் பெற முடியும்.5

மூன்றாவதாக, நாம் பிறருக்கு சேவை செய்யும்போது, கர்த்தரை அறிந்து அவரை நம்ப முடியும். அமி ரைட் அனுமதியுடன் பயங்கரமான உயிரை பயமுறுத்தும் சுகவீனத்தின் மத்தியிலும், சேவையின் கொள்கைகளை அறிந்து கொண்ட பின்வரும் கதையைப் பகிர்ந்துகொள்கிறேன். அமி எழுதினார்:

“அக்டோபர் 29, 2015ல் எனக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடித்தேன். என் புற்று நோய்க்கு 17 சதவிகிதம் பிழைக்கும் சந்தர்ப்பம் உண்டு. கஷ்டங்கள் நன்றாக இல்லை. என் உயிருக்காகப் போராடப் போகிறேன் என அறிந்தேன். எனக்காக மட்டுமல்ல, முக்கியமாக என் குடும்பத்துக்காகவும் எல்லாவற்றையும் செய்ய தீர்மானித்தேன். டிசம்பரில் கீமோ தொடங்கினேன். அநேக புற்றுநோய் மருந்துகளின் பக்க விளைவுகள் எனக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு நோயுற்றிருந்தும், உயிரோடிருக்க முடியும் என நான் அறியவில்லை.

“ஒரு கட்டத்தில் கீமோதெரப்பி மனித உரிமை மீறல் என அறிவித்தேன். நான் முடித்துக் கொண்டேன் என எனது கணவரிடம் சொன்னேன். நான் விட்டு விட்டேன். நான் மருத்துவ மனைக்கு போகப்போபோவதில்லை. அவரது ஞானப்படி எனது அன்புக் கணவர் பொறுமையாக கேட்டு பதிலளித்தார், ‘நல்லது, அப்படியானால் சேவை செய்ய நாம் வேறொருவரைக் கண்டு பிடிக்க வேண்டும்.’”

என்ன? அவரது மனைவிக்கு புற்றுநோய் இருக்கிறது, இன்னொருமுறை வாந்தி எடுக்க அல்லது வதைக்கிற வேதனையை சகிக்க முடியாது, என்ற உண்மையை அவர் அறியவில்லையா?

அமி தொடர்ந்து விளக்குகிறார் “என் அறிகுறிகள் மோசமாயின, மனுஷர் போல சுவாசித்து, உயிரோடிருப்பவர் போல செயல்பட பொதுவாக மாதத்தில் ஒன்று அல்லது இரணடு நாட்கள் இருந்தன. அந்த நாட்களில் எனது குடும்பத்தினர் சேவை செய்யும் வழிகளைக் கண்டு பிடித்தனர்.”

அவற்றில் ஒரு நாள், அமியின் குடும்பம் மருத்துவமனையில் உற்சாகப்படுத்தும் பொருட்களும், வலியிலிருந்து நிவாரணத்துக்கு உதவக்கூடிய பொருட்களும் நிரப்பப்பட்ட கீமோ ஆறுதல் பைகளை பிற நோயாளிகளுக்கு வழங்கினர். அமியால் தூங்க முடியாதபோதும், மற்றொருவரின் நாளைப் பிரகாசப்படுத்த, வழிகளை அவர் சிந்தித்தார். சில வழிகள் பெரியவை, ஆனால் பல சிறிய குறிப்புகள் அல்லது ஊக்குவிக்கவும் அன்புகாட்டவும் சிறு செய்திகள். தூங்க முடியாதபடி வேதனையிருந்த இரவுகளில் தன் ஐபாடுடன் படுக்கையில் படுத்துக் கொண்டு, தன் மரித்த முன்னோருக்கு முடிக்கப்பட வேண்டிய நியமங்களைத் தேடினார். அற்புதமாக வேதனை குறைந்தது, அவர் தாங்க முடிந்தது.

அமி சாட்சியளிக்கிறார், “சேவை என் வாழ்க்கையைக் காப்பாற்றியது. கடைசியாக முன்னேற நான் எங்கு பெலன் கண்டேனோ, அது என்னைச் சுற்றிலுமுள்ளோரின் பாடுகளை நீக்க நான் கண்டுபிடித்த மகிழ்ச்சிதான். மிக மகிழச்சியுடனும் எதிர்பார்ப்புடனும் எங்கள் சேவைத் திட்டங்களை எதிர் நோக்குகிறேன். இன்றுவரை அது மிகவும் வியப்பாகவே தோன்றுகிறுது. வழுக்கையான, விஷம் கொடுக்கப்பட்ட, உயிருக்குப் போராடுகிற ஒருவர் என, இப்போது எல்லாம் என்னைப் பற்றி நினைப்பது நியாயமா. எனினும் என்னை, என் சூழ்நிலையை, என் வலிமிக்க வேதனையைப்பற்றி நான் நினைத்தபோது, உலகம் இருளாகவும், விரக்தியாகவும் தெரிந்தது. என் கவனம் பிறர் மீது திரும்பியதும், ஒளியும், நம்பிக்கையும், பெலனும், தைரியமும், சந்தோஷமும் வந்தது. இயேசு கிறிஸ்துவின் தாங்குகிற, குணமாக்குகிற, சாத்தியமாக்கும் வல்லமையினிமித்தம் இது சாத்தியமானது என நான் அறிகிறேன்.”

அவரை அறிந்தபோது, அமி கரத்தரை நம்பினார். அவர் தனது புத்தி மீது சிறிது சாய்ந்திருந்தாலும், அவர் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மறுத்திருக்கலாம். அவரது வேதனைகளையும் வியாகுலங்களையும் தாங்கவும், இந்த வசனப்படி வாழவும் சேவை அவருக்கு சாத்தியப்படுத்தியது: “உங்கள் உடனுற்றார்களுக்கு நீங்கள் சேவை செய்யும்போது, தேவனுக்கே சேவை செய்கிறீர்கள்.”6

இயேசு கிறிஸ்து உலகத்தை ஜெயித்தார். அவராலும், அவரது இணையிலா பாவநிவர்த்தியாலும், கடைசியாக எல்லாம் நலமாகும் என அறிந்து நம்ப நமக்கு பெரும் காரணமுண்டு.

சகோதரிகளே, நாம் ஒவ்வொருவரும் சாயாமல் கர்த்தரில் நம்பலாம். அவரை அறிவதால், நமது வாழ்க்கையை அவர் மீது மையப்படுத்தலாம். அவர் நமது வழியை செம்மைப்படுத்துவார்.

“இதோ நான் இருக்கிறேன், என்னை அனுப்பும்,”7 என அறிவித்த இயேசு கிறிஸ்துவுடன் நம்மை நிற்க அனுமதித்த அவர் மீது நமது நம்பிக்கையை காட்டவே நாம் பூமி மீது இருக்கிறோம்.

படம்
கிறிஸ்துவும் சிருஷ்டிப்பும்

எனது அன்பு சகோதரிகளே, தலைவர் தாமஸ்  எஸ். மான்சன் சாட்சியளித்தார், “நமக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஆசீர்வாதங்கள் அளவிட முடியாதவை. மழை மேகங்கள் கூடினாலும், நம்மீது மழை பொழிந்தாலும், சுவிசேஷம் பற்றிய நமது அறிவும், பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்து மீது நமது அன்பும் நம்மைத் தேற்றி தாங்கும். ...நாம் நிமிர்ந்து நடக்கும்போது, நம்மை தோற்கடிக்கிற எதுவும் இந்த உலகத்திலிருக்காது.”8

நமது அன்புக்குரிய தீர்க்கதரிசி கூறியது பற்றி நான் சாட்சியளிக்கிறேன். நாம் நமது பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் நம்பி, நமது சுய புத்தி மேல் சாயாதிருந்தால், அவர்கள் நமது வழிகளை செம்மையாக்குவார்கள் மற்றும் இரக்கத்தின் புயத்தை நம்மை நோக்கி நீட்டுவார்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென்.

குறிப்பு: ஏப்ரல் 1, 2017ல் சகோதரி கார்டன் ஆரம்ப வகுப்பு பொதுத்தலைமையில் இரண்டாம் ஆலோசகராக விடுவிக்கப்பட்டு, முதலாம் ஆலோசகராக அழைக்கப்பட்டார்.