வேதங்கள்
ஆபிரகாம் 1


ஆபிரகாமின் புஸ்தகம்

பாப்பிரஸிலிருந்து ஜோசப் ஸ்மித்தால் மொழிபெயர்க்கப்பட்டவை

எகிப்தின் சமாதிகளிலிருந்து நம் கைகளில் கிடைத்த சில பூர்வகால பதிவேடுகளின் மொழிபெயர்ப்பு. ஆபிரகாம் எகிப்திலிருந்தபோது பழங்கால சுவடுகளில் அவனுடைய கைகளால் எழுதப்பட்ட அவனுடைய எழுத்துக்கள் ஆபிரகாமின் புஸ்தகம் என்றழைக்கப்பட்டது.

அதிகாரம் 1

கோத்திரத்தலைவனின் முறைமையின் ஆசீர்வாதங்களை ஆபிரகாம் நாடுகிறான் – கல்தேயரில் கள்ள ஆசாரியர்களால் அவன் துன்புறுத்தப்படுகிறான் – யேகோவா அவனைக் காப்பாற்றுகிறார் – எகிப்தின் துவக்கங்களும் அரசாங்கங்களும் பரிசீலிக்கப்படுகின்றன.

1 என்னுடைய பிதாக்கள் வசிக்குமிடமான கல்தேயா தேசத்தில், மற்றொரு இடத்தைப் பெறுவது அவசியமென்பதை ஆபிரகாமாகிய நான் கண்டேன்;

2 அங்கே எனக்கு மிகுந்த சந்தோஷமும், சமாதானமும், இளைப்பாறுதலும் இருப்பதைக்கண்டு பிதாக்களின் ஆசீர்வாதங்களுக்காகவும்; அவற்றை நிர்வகிக்கும் பாத்தியத்திற்காக நான் நியமிக்கப்படவும் நாடினேன், நானே நீதியைப் பின்பற்றுகிறவனாயிருந்து, அதிக ஞானத்தைக் கொண்டிருக்க வாஞ்சையுள்ளவனாய் இருக்கவும், நீதியை அதிகமாக பின்பற்றுகிறவனாகவும், நீதியின் மிகுதியான ஞானத்தைச் சுதந்தரிக்கவும், திரளான ஜாதிகளுக்கு ஒரு தகப்பனாயிருக்கவும், ஒரு சமாதானப் பிரபுவாயிருக்கவும், அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளவும், தேவனின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் வாஞ்சைகொண்டிருந்து, தகப்பன்களுக்குச் சொந்தமான உரிமையைத் தரித்திருக்க ஒரு பாத்தியப்பட்ட சுதந்தரவாளியாகவும், ஒரு பிரதான ஆசாரியனுமாகவும் ஆகினேன்.

3 தகப்பன்களிடமிருந்து இது என்மேல் அருளப்பட்டது; காலத்தின் ஆரம்பத்திலிருந்து, ஆம், ஆரம்பத்திலிருந்தே, தகப்பன்களிடமிருந்து, தற்சமயம் வரைக்கும், ஆதாமாகிய மூத்தவன் அல்லது முதல் மனுஷன் அல்லது முதல் தகப்பனிலிருந்து என் வரையிலான தகப்பன்கள்வரை அல்லது பூமியின் அஸ்திபாரத்திற்கு முன்பிருந்து, இது வந்தது.

4 சந்ததியைக் குறித்து தகப்பன்களுக்கு தேவன் நியமித்தபடி ஆசாரியத்துவத்திற்கு என்னுடைய நியமிப்பை நான் நாடினேன்.

5 என்னுடைய தகப்பன்கள், தங்களுடைய நீதியிலிருந்தும், கர்த்தராகிய அவர்களுடைய தேவன் அவர்களுக்குக் கொடுத்த பரிசுத்த கட்டளைகளிலிருந்தும் விலகி புறஜாதிகளின் தேவர்களை பணிந்துகொண்டு என்னுடைய சத்தத்திற்கு முழுவதுமாக செவிகொடுக்க மறுத்தார்கள்;

6 ஏனெனில் அவர்களுடைய இருதயங்கள் பொல்லாப்பைச் செய்ய துணிந்து, எல்கெனாவின் கடவுளிடத்திலும், லிப்னாவின் கடவுளிடத்திலும், மஹ்மேக்ராவின் கடவுளிடத்திலும், கோராஷ் கடவுளிடத்திலும், எகிப்தின் ராஜாவான பார்வோனின் கடவுளிடத்திலும் முழுவதுமாக திரும்பியிருந்தார்கள்;

7 ஆகவே, இந்த ஊமையான விக்கிரகங்களுக்கு தங்களுடைய பிள்ளைகளை காணிக்கையாகச் செலுத்துகிற அஞ்ஞானிகளின் பலிசெலுத்துதலுக்கு தங்களுடைய இருதயங்களை அவர்கள் திருப்பி, என்னுடைய சத்தத்திற்கு செவிசாய்க்காமல் போனார்கள், ஆனால் எல்கெனாவின் ஆசாரியனின் கையால் என்னுடைய ஜீவனை எடுத்துப்போட பிரயத்தனம் செய்தார்கள். எல்கெனாவின் ஆசாரியன் பார்வோனின் ஆசாரியனுமாயிருந்தான்.

8 இப்பொழுது, இந்த அந்நிய தேவர்களுக்கு, புருஷர்களையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும் காணிக்கை செலுத்துவதற்காக கல்தேயா தேசத்தில் கட்டப்பட்ட பலிபீடத்தில் பலிகொடுப்பது அந்த நேரத்தில் எகிப்தின் ராஜாவான பார்வோனின் ஆசாரியனின் வழக்கமாயிருந்தது.

9 எகிப்தியர்களின் முறைமையின்படி பார்வோனின் தேவனுக்கும், ஷக்ரீலின் தேவனுக்கும் ஆசாரியன் ஒரு காணிக்கையைச் செலுத்தினான். இப்பொழுது ஷக்ரீலின் தேவன் சூரியனாயிருந்தான்.

10 ஒரு பிள்ளையின் ஸ்தோத்திரப்பலியைக்கூட பார்வோனின் ஆசாரியன், ஒலிஷம் சமபூமியின் தொடக்கத்தில் போத்திபார் குன்றென அழைக்கப்பட்ட குன்றின்மேல் நின்றுகொண்டிருந்த பலிபீடத்தின்மேல் செலுத்தினான்.

11 இப்பொழுது, காமின் கர்ப்பப் பிறப்பிலிருந்து நேரடியாக வந்த ராஜ வம்சத்தின் ஒருவனான ஒனிடாவின் குமாரத்திகளாயிருந்த மூன்று கன்னிகைகளை ஒரே நேரத்தில் இந்த ஆசாரியன் இந்த பலிபீடத்தில் பலிசெலுத்தினான். அவர்களின் நற்குணத்தினிமித்தம் இந்த கன்னிகைகள் பலிசெலுத்தப்பட்டார்கள்; மரத்தால் அல்லது கல்லால் உண்டாக்கப்பட்ட தேவர்களுக்கு அவர்கள் தலைவணங்காதிருந்தார்கள், ஆகவே அவர்கள் இந்த பலிபீடத்தின்மேல் கொன்றுபோடப்பட்டார்கள், எகிப்தியரின் முறைமையின்படி இது செய்யப்பட்டது.

12 இந்த பலிபீடத்தின்மேல் அவர்கள் அந்த கன்னிகைகளுக்கு செய்ததைப்போல, என்னையும் கொன்றுபோடும்படியாக ஆசாரியர்கள் என்னை பலாத்காரம் செய்தார்கள்; இந்த பலிபீடத்தைப்பற்றி நீங்களும் அறிந்திருக்கும்படியாக இந்த பதிவேட்டின் துவக்கத்தில் மாதிரியாக நான் உங்களுக்குக் குறிப்பிடுகிறேன்.

13 கல்தேயர்களுக்கு மத்தியிலே இருந்ததைப்போன்ற ஒரு கட்டிலின் வடிவத்தில் அது செய்யப்பட்டிருந்தது, அது எல்கெனா, லிப்னா, மஹ்மேக்ரா, கோராஷின் கடவுள்களுக்கும், மற்றும் எகிப்தின் ராஜாவான பார்வோனைப்போன்ற ஒரு கடவுளுக்கு முன்பாகவும் அது நின்றுகொண்டிருந்தது.

14 இந்த கடவுள்களைப்பற்றி உங்களுக்கு ஒரு புரிந்துகொள்ளுதலிருக்கும்படியாக, ஆரம்பத்திலேயே இந்த உருவங்களின் மாதிரியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன், இந்த உருவங்களின் மாதிரி கல்தேயரால் ரஹ்லீனோஸ் என்றழைக்கப்படுகிறது, அது பழங்காலத்து எழுத்துக்களைக் குறிக்கிறது

15 அவர்கள் என்னைப் பலிகொடுக்கவும், என்னுடைய ஜீவனை எடுக்கவும் அவர்கள் என்மேல் தங்களுடைய கைகளை உயர்த்தியபோது, இதோ, என்னுடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் நான் என் சத்தத்தை உயர்த்தினேன், கர்த்தர் செவிகொடுத்து கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தால் என்னை நிரப்பினார், அவருடைய பிரசன்னத்திலுள்ள தூதன் என் பக்கம் நின்றுகொண்டிருந்து உடனடியாக என்னுடைய கட்டுக்களை கட்டவிழ்த்தான்;

16 அவருடைய சத்தம் என்னிடத்தில் சொல்லியது, ஆபிரகாமே, ஆபிரகாமே, இதோ, யேகோவா என்னுடைய நாமம், உன்னுடைய சத்தத்தை நான் கேட்டேன், உன்னை விடுவிக்கும்படியாகவும், உன்னுடைய தகப்பனின் வீட்டிலிருந்தும், உன்னுடைய சகல இனத்தாரிடமிருந்தும் நீ அறிந்திராத ஒரு அந்நிய தேசத்திற்கு உன்னைக் கொண்டுபோகவும் நான் கீழிறங்கிவந்தேன்;

17 எல்கெனாவின் கடவுளையும், லிப்னாவின் கடவுளையும், மஹ்மேக்ராவின் கடவுளையும், கோராஷின் கடவுளையும், எகிப்தின் ராஜாவான பார்வோனின் கடவுளையும் பணிந்துகொள்ள அவர்கள் தங்களுடைய இருதயங்களை என்னிடமிருந்து விலக்கியதின் நிமித்தமே இது நடக்கிறது; ஆகவே அவர்களை சந்திக்கவும், ஆபிரகாம் என் மகனே, உன்னுடைய ஜீவனை எடுக்க உனக்கெதிராக அவனுடைய கையை உயர்த்திய அவனை அழிக்கவும் நான் இறங்கிவந்தேன்.

18 இதோ, என்னுடைய கரத்தால் நான் உன்னை வழிநடத்துவேன், உன்னுடைய தகப்பனின் ஆசாரியத்துவத்தையும் என்னுடைய நாமத்தையும் உன்மீது அருள நான் உன்னைக் கொண்டுபோவேன். என்னுடைய வல்லமை உன்மேலிருக்கும்.

19 அது நோவாவிடம் இருந்ததைப்போலவே அது உன்னோடுமிருக்கும்; ஆனால் உன்னுடைய ஊழியத்தின் மூலமாக பூமியில் என்னுடைய நாமம் என்றென்றைக்கும் அறியப்படும், ஏனெனில் நானே உன்னுடைய தேவன்.

20 இதோ, போத்திபாரின் குன்று கல்தேயாவின் ஊர் தேசத்திலிருந்தது. எல்கெனாவின் பலிபீடத்தை கர்த்தர் உடைத்துப்போட்டு, தேசத்தின் கடவுள்களை, முற்றிலுமாக அழித்துப்போட்டார், ஆசாரியனை அடித்து அவன் செத்தான்; கல்தேயாவிலும் பார்வோனின் அரண்மனையிலும் மகாதுக்கம் உண்டாயிருந்தது. பார்வோன் என்பது, ராஜ இரத்தத்தின் நிமித்தம் ராஜா என்பதைக் குறிக்கிறது

21 இப்பொழுது இந்த எகிப்தின் ராஜா காமின் கர்ப்பப் பிறப்பிலிருந்து வந்த ஒரு சந்ததியாயும் பிறப்பால் கானானியர்களின் இரத்தத்தின் பங்காகவுமிருந்தான்.

22 இந்த சந்ததியிலிருந்து எல்லா எகிப்தியர்களும் வந்தார்கள், கானானியர்களின் இரத்தம் இவ்வாறாக தேசத்தில் பாதுகாக்கப்பட்டிருந்தது.

23 காமின் குமாரத்தியும், விலக்கப்பட்டதைக் குறிப்பிடுகிற, கல்தேயாவில் எகிப்து என குறிப்பிடப்படுகிற ஈஜிப்டஸின் குமாரத்தியுமான ஒரு ஸ்திரீயால் எகிப்து தேசம் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டு;

24 பின்னர் தன் குமாரர்களை அதனுள் தங்க வைத்த இந்த ஸ்திரீ தேசத்தைக் கண்டுபிடித்தபோது அது தண்ணீருக்குள்ளிருந்தது; இவ்விதமாக, தேசத்தில் சாபத்தைக் காத்துக்கொண்ட அந்த இனம் காமிடமிருந்து பரவியது.

25 இப்பொழுது எகிப்தின் முதல் அரசாங்கம் ஈஜிப்டஸின் முதல் குமாரனான பார்வோனாலும் காமின் குமாரத்தியாலும் ஸ்தாபிக்கப்பட்டது, கோத்திரத்தலைவனான காமின் அரசாங்கத்தின் முறைமையின்படி அது இருந்தது.

26 பார்வோன் நீதிமானாயிருந்ததால் தனது ராஜ்யத்தை ஸ்தாபித்து, முதல் தலைமுறைகளிலும், கோத்திரத்தலைவனின் ஆளுகையின் நாட்களிலும், ஆதாமின் மற்றும் பூமியின் ஆசீர்வாதங்களோடும், ஞானத்தின் ஆசீர்வாதங்களோடும் அவனை ஆசீர்வதித்த, ஆனால் ஆசாரியத்துவத்திற்கு சம்பந்தப்பட்டவிதமாக அவனை சபித்தவனுமான அவனுடைய தகப்பனாகிய நோவாவின் ஆளுகையிலும் அவனுடைய பிதாக்களால் ஸ்தாபிக்கப்பட்ட முறைமையை முன்மாதிரியாக்க கருத்தாய் நாடி, அவனுடைய ஆயுட்காலமெல்லாம் அவனுடைய ஜனங்களை ஞானத்திலும் நீதியிலும் நியாயந்தீர்த்தான்.

27 இப்பொழுது, காமின் மூலமாக நோவாவிடமிருந்து அதை உரிமைகோர பார்வோன்கள் ஆசைப்பட்ட போதிலும் ஆசாரியத்துவத்தின் உரிமையை அவனால் கொண்டிருக்க முடியாத அந்த வம்சாவளியில் பார்வோனிருந்ததால், என்னுடைய தகப்பன் அவர்களுடைய விக்கிரகாராதனையினிமித்தம் கொண்டுபோகப்பட்டான்.

28 ஆனால் என்னிலிருந்து சிருஷ்டிப்பின் ஆரம்பம்வரையில் நடந்துகொண்டிருக்கிற காலஅட்டவணையை சித்தரித்துக்காட்ட நான் இப்போதிலிருந்து முற்படுவேன், ஏனெனில் பதிவேடுகள் என் கைகளில் வந்தன, அதை இப்போதுவரை நான் வைத்திருக்கிறேன்.

29 இப்பொழுது, எல்கெனாவின் ஆசாரியன் அடிக்கப்பட்டு அவன் மரித்தபின்பு, தேசத்தில் பஞ்சம் வருமென கல்தேயாவின் தேசத்தைக்குறித்து எனக்குச் சொல்லப்பட்ட அந்தக் காரியங்களின் நிறைவேறுதல் வந்தது.

30 கல்தேயாவின் தேசம் முழுவதிலும் ஒரு பஞ்சம் மேலிட்டபடியால், பஞ்சத்தினிமித்தம் என்னுடைய தகப்பன் மிகுதியாய் வேதனைப்பட்டார், என்னுடைய ஜீவனை எடுக்க எனக்கு விரோதமாக அவர் தீர்மானித்த பொல்லாங்கிற்காக அவர் மனஸ்தாபப்பட்டார்.

31 ஆனால் ஆசாரியத்துவத்தின் உரிமையைக் குறித்து பிதாக்களின், கோத்திரத்தலைவர்களின் பதிவேடுகளையும்கூட என்னுடைய கைகளினால் என்னுடைய தேவனாகிய கர்த்தர் காத்துக்கொண்டார்; ஆகவே அவைகள் தகப்பன்களுக்கு அறியப்படுத்தியதைப்போலவே சிருஷ்டிப்பின் ஆரம்பத்தைப்பற்றியும், கிரகங்களைப்பற்றியும், நட்சத்திரங்களைப்பற்றியும், ஒரு அறிவை இந்த நாள்வரை நான் காத்துவருகிறேன், மேலும் எனக்குப் பின்வரும் என்னுடைய சந்ததியின் பலனுக்காக இந்த பதிவேட்டின்மேல் இந்தக் காரியங்களில் சிலவற்றை நான் எழுத முற்படுவேன்.