வேதங்கள்
ஆபிரகாம் 5


அதிகாரம் 5

சகல காரியங்களையும் சிருஷ்டித்தலின் தங்களுடைய திட்டத்தை தேவர்கள் முடித்தார்கள் – தங்களுடைய திட்டத்தின்படியே சிருஷ்டிப்பை அவர்கள் முடித்தார்கள் – சகல ஜந்துக்களுக்கும் ஆதாம் பேரிட்டான்.

1 இவ்விதமாக வானத்தையும் பூமியையும், அவைகளின் சர்வ சேனையையும் நாங்கள் உண்டாக்கித் தீர்த்தோம்.

2 தேவர்கள் அவர்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள், ஏழாவது முறையாக நாம் ஆலோசித்த நம்முடைய கிரியையை நாம் முடிப்போம்; நாம் ஆலோசித்த நம்முடைய எல்லா கிரியையிலிருந்தும் ஏழாவது முறையாக நாம் ஓய்ந்திருப்போம்.

3 ஏழாவது முறையாக அவர்கள் உண்டாக்கும்படியாக தங்களுக்குள்ளே ஆலோசித்த தங்களுடைய சகல கிரியைகளிலிருந்தும் இளைப்பாறும்படியாகவும் ஏழாவது முறையாக தேவர்கள் ஆலோசித்தார்கள் மற்றும் அதைப் பரிசுத்தம் செய்தார்கள். வானங்களையும் பூமியையும் உண்டாக்க அவர்களுக்குள்ளே அவர்கள் ஆலோசித்த சமயத்தில் இவ்விதமாக அவர்களுடைய தீர்மானங்களிருந்தன.

4 தேவர்கள் பூமியையும் வானங்களையும் உண்டாக்கும்படியாக அவர்கள் உண்டாக்கின நாளின்போது தேவர்கள் இறங்கிவந்து இந்த வானங்கள் மற்றும் பூமியின் தலைமுறைகளை உண்டுபண்ணினார்கள்,

5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளைக் குறித்து அவர்கள் சொன்னதின்படி அது பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவர்கள் பூமியின்மேல் இன்னும் மழையைப் பொழியப்பண்ணவில்லை, அவைகளைச்செய்ய அவர்கள் ஆலோசனை செய்தபோது நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.

6 அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

7 தேவர்கள் மனுஷனைப் பூமியின் மண்ணிலே உருவாக்கி, அவனுடைய ஆவியை எடுத்து (அதாவது மனுஷனுடைய ஆவி) அதை அவனுக்குள் வைத்தார்கள்; ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்கள், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

8 தேவர்கள் கிழக்கிலே ஏதேன் தோட்டத்தை நட்டு, அங்கே அவர்கள் மனுஷனை வைத்தனர், அவர்கள் அவனுடைய ஆவியை தாங்கள் உண்டாக்கிய அந்த சரீரத்திலே வைத்தார்கள்.

9 தேவர்கள் பார்வைக்கு அழகானதும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்கள்.

10 தோட்டத்துக்கு தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது, அது அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.

11 தேவர்கள் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்கள்.

12 தேவர்கள் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்,

13 ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதைப் புசிக்கும் நேரத்தில் நீ சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்கள். இப்பொழுது கோலோப்பின் நேரமான கர்த்தரின் நேரத்தின்படியிருந்ததென ஆபிரகாமாகிய நான் கண்டேன்; ஏனெனில் அவனுடைய கணக்கிடுதலை தேவர்கள் இன்னமும் ஆதாமுக்கு நியமிக்கவில்லை.

14 பின்பு தேவர்கள், மனுஷனுக்கு நாம் ஒரு ஏற்ற துணையை ஏற்படுத்துவோம், ஏனெனில் மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஆகவே ஒரு துணையை ஏற்படுத்துவோம் என்றார்கள்.

15 அப்பொழுது தேவர்கள் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார்கள், அவன் நித்திரையடைந்தான், அவர்கள் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தை சதையினால் அடைத்தார்கள்

16 தேவர்கள், மனுஷனில் எடுத்த விலா எலும்பை அவர்கள் மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

17 அப்பொழுது ஆதாம், இவள் என் எலும்பின் எலும்பும், என் மாம்சத்தின் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

18 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.

19 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும் வெட்கப்படாதிருந்தார்கள்.

20 தேவர்கள் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிடுவானோ அதுவே அதற்குப் பேராயிற்று.

21 அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும் ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஒரு ஏற்ற துணை காணப்பட்டது.