வேதங்கள்
மோசே 2


அதிகாரம் 2

(ஜூன் – அக்டோபர் 1830)

வானங்களையும் பூமியையும் தேவன் சிருஷ்டிக்கிறார் – ஜீவனின் சகல வடிவங்களும் சிருஷ்டிக்கப்பட்டன – தேவன் மனுஷனை உண்டாக்கி சகல இடத்தின் மேலும் அவனுக்கு ஆளுகையைக் கொடுத்தார்.

1 இதோ, இந்த வானத்தையும் இந்த பூமியையும் குறித்து நான் உனக்கு வெளிப்படுத்துகிறேன்; நான் பேசுகிற வார்த்தைகளை எழுது. நானே ஆதியும் அந்தமுமான சர்வவல்லமையுள்ள தேவன்; என்னுடைய ஒரேபேறானவரால் நான் இந்தக் காரியங்களை சிருஷ்டித்தேன்; ஆம், வானத்தையும் நீ நின்றுகொண்டிருக்கிற பூமியையும் ஆரம்பத்தில் நான் சிருஷ்டித்தேன் எனச் சொல்லி, மோசேயிடம் கர்த்தர் பேசினார்.

2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் நான் இருளைக் கொண்டுவந்தேன்; என்னுடைய ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்; ஏனெனில் நான் தேவனாயிருக்கிறேன்.

3 தேவனாகிய நான் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றேன்; வெளிச்சம் உண்டாயிற்று.

4 தேவனாகிய நான் வெளிச்சத்தைக் கண்டேன், அந்த வெளிச்சம் நல்லதாயிருந்தது. தேவனாகிய நான் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தேன்.

5 தேவனாகிய நான் வெளிச்சத்துக்கு பகல் என்று பேரிட்டேன்; இருளுக்கு இரவு என்று பேரிட்டேன்; என்னுடைய வார்த்தையின் வல்லமையினால் இதை நான் செய்தேன், நான் பேசியபோது அது அப்படியே ஆயிற்று; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

6 மீண்டும் தேவனாகிய நான்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்று சொன்னேன், நான் பேசியபோது அது அப்படியே ஆயிற்று; மேலும் நான்: அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்று சொன்னேன்; அது அப்படியே ஆயிற்று;

7 தேவனாகிய நான், ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவு உண்டாக்கினேன், நான் பேசியபோது அது அப்படியே ஆயிற்று.

8 தேவனாகிய நான் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டேன்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

9 தேவனாகிய நான்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரக்கடவது என்று சொன்னேன், அது அப்படியே ஆயிற்று; தேவனாகிய நான்: வெட்டாந்தரை காணப்படக் கடவது என்று சொன்னேன்; அது அப்படியே ஆயிற்று.

10 தேவனாகிய நான் வெட்டாந்தரைக்குப் பூமி என்று பேரிட்டேன்; சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்று பேரிட்டேன்; நான் உண்டாக்கின சகல காரியங்களும் நல்லதென தேவனாகிய நான் கண்டேன்.

11 தேவனாகிய நான்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்களுடைய விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்று சொன்னேன், நான் பேசியபோது அது அப்படியே ஆயிற்று.

12 பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே, தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; நான் உண்டாக்கின சகல காரியங்களும் நல்லதென தேவனாகிய நான் கண்டேன்;

13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

14 தேவனாகிய நான்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும், நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது;

15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்று சொன்னேன்; அது அப்படியே ஆயிற்று.

16 தேவனாகிய நான், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் உண்டாக்கினேன்; பெரிய சுடர் சூரியனாயும் சிறிய சுடர் சந்திரனாயுமிருந்தது. என்னுடைய வார்த்தையின்படி நட்சத்திரங்களும் உண்டாக்கப்பட்டன.

17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

18 பகலை சூரியன் ஆளவும், இரவை சந்திரன் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவனாகிய நான், அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தேன்; நான் உண்டாக்கின சகல காரியங்களும் நல்லதென தேவனாகிய நான் கண்டேன்;

19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.

20 தேவனாகிய நான்: நீந்தும் ஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும் ஜலமானது திரளாய் ஜெனிப்பிக்கக்கடவது என்று சொன்னேன்.

21 தேவனாகிய நான், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜெனிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தேன்; நான் உண்டாக்கின சகல காரியங்களும் நல்லதென தேவனாகிய நான் கண்டேன்.

22 நீங்கள் பலுகிப் பெருகி சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும் பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொல்லி தேவனாகிய நான் அவைகளை ஆசீர்வதித்தேன்;

23 சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.

24 தேவனாகிய நான்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்று சொன்னேன், அது அப்படியே ஆயிற்று;

25 தேவனாகிய நான், பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினேன்; சகல காரியங்களும் நல்லதென தேவனாகிய நான் கண்டேன்.

26 தேவனாகிய நான், ஆரம்பத்திலிருந்து என்னுடனிருந்த என்னுடைய ஒரேபேறானவரிடம் சொன்னேன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அது அப்படியே ஆயிற்று. தேவனாகிய நான் சொன்னேன்: அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும் பூமியனைத்தையும், பூமியின்மீது ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்.

27 தேவனாகிய நான், என்னுடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தேன், என்னுடைய ஒரே பேறானவரின் சாயலாகவே சிருஷ்டித்தேன்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தேன்.

28 தேவனாகிய நான், அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்குச் சொன்னேன்: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப்பறவைகளையும் பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.

29 தேவனாகிய நான் மனுஷனுக்குச் சொன்னேன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதை தரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன்; அவைகள் உங்களுக்கு ஆகாரமாய் இருக்கக்கடவது.

30 நான் ஜீவன் கொடுத்த பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்; நான் பேசியபோது அது அப்படியே ஆயிற்று.

31 நான் உண்டாக்கின எல்லாவற்றையும் தேவனாகிய நான் பார்த்தேன், இதோ, நான் உண்டாக்கின சகல காரியங்களும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.