வேதங்கள்
மோசே 4


அதிகாரம் 4

(ஜூன் – அக்டோபர் 1830)

சாத்தான் எவ்வாறு பிசாசானான் – ஏவாளை அவன் சோதிக்கிறான் – ஆதாமும் ஏவாளும் வீழ்கிறார்கள், மரணம் உலகத்திற்குள் பிரவேசிக்கிறது.

1 இதோ, நான் இங்கிருக்கிறேன், என்னை அனுப்பும், நான் உமது குமாரனாயிருப்பேன், ஒரு ஆத்துமாகூட நஷ்டப்பட்டுப் போகாதிருக்கும்படியாக நான் மனுக்குலம் முழுவதையும் மீட்பேன், இதை நான் நிச்சயமாய் செய்வேன், ஆகவே உமது கனத்தை எனக்குத் தாரும் எனச் சொல்லி, என்னுடைய ஒரேபேறானவரின் நாமத்தில் நீர் கட்டளையிட்ட, ஆரம்பத்திலிருந்தே இருந்த அந்த சாத்தானாகிய அவனே என் முன்பாக வந்தான் எனச்சொல்லி, தேவனாகிய கர்த்தராகிய நான் மோசேயிடம் பேசினேன்.

2 ஆனால், இதோ, ஆதியிலிருந்து எனக்குப் பிரியமான, தெரிந்துகொள்ளப்பட்ட என்னுடைய நேசக் குமாரன் என்னிடம் சொன்னார், பிதாவே உமது சித்தம் செய்யப்படும், மகிமை என்றென்றைக்கும் உம்முடையவைகளே.

3 ஆகவே, என்னுடைய சொந்த வல்லமையை நான் அவனுக்குக் கொடுக்கவேண்டுமென அந்த சாத்தான் எனக்கு விரோதமாக கலகம் செய்து, தேவனாகிய கர்த்தராகிய நான் மனுஷனுக்குக் கொடுத்த சுயாதீனத்தை, அழிக்க அவன் வகை தேடினான், மேலும்; என்னுடைய ஒரேபேறானவரின் வல்லமையால் அவன் புறம்பே தள்ளப்படச் செய்தேன்;

4 அவன் சாத்தானாக, ஆம், மனுஷர்களை ஏமாற்றவும், குருடர்களாக்கவும், அநேகர் என்னுடைய சத்தத்தைக் கேட்காத அளவில் அவனுடைய விருப்பத்தின்படி சிறைபிடிக்கப்பட அவர்களை நடத்த, அனைத்துப் பொய்களின் தகப்பனான பிசாசானவனாகவும் மாறினான்.

5 தேவனாகிய கர்த்தராகிய நான் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.

6 அதை சர்ப்பத்தின் இருதயத்திலே சாத்தான் போட்டான், (ஏனெனில் அநேகரை அவன் பக்கம் இழுத்திருந்தான்) ஏவாளையும் அவன் வஞ்சிக்க வகை தேடினான், ஏனெனில் தேவனின் மனதை அவன் அறியாதிருந்தான், ஆகவே உலகத்தை அழிக்க அவன் வகை தேடினான்.

7 அவன் ஸ்திரீயை நோக்கிச் சொன்னான், ஆம், நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ (சர்ப்பத்தின் வாயின் வழியாக அவன் பேசினான்.)

8 ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;

9 ஆனாலும், நீங்கள் காண்கிற தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன் நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.

10 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

11 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும் நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

12 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு, வாஞ்சிக்கத்தக்க விருட்சமுமாய் இருக்கிறதென்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள், அவனும் புசித்தான்.

13 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டன, அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள்.

14 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் அவர்கள் உலாவிக் கொண்டிருந்தபோது, தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள், அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலிருந்து விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளிந்துகொண்டார்கள்.

15 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்?

16 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதை நான் கண்டதினால் பயந்து, ஒளிந்துகொண்டேன்.

17 தேவனாகிய கர்த்தராகிய நான் ஆதாமுக்குச் சொன்னேன்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்றும், புசித்தால் நீ சாகவே சாவாய் எனவும் நான் உனக்கு விலக்கிய விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ?

18 அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி கட்டளையிட்டு தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.

19 அப்பொழுது தேவனாகிய கர்த்தராகிய நான் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றேன்? ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.

20 அப்பொழுது தேவனாகிய கர்த்தராகிய நான் சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும், சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய். நீ உன் வயிற்றினால் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;

21 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவன் உன் தலையை நசுக்குவான், நீ அவன் குதிகாலை நசுக்குவாய் என்றார்.

22 தேவனாகிய கர்த்தராகிய நான் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய், உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றேன்.

23 அப்பொழுது தேவனாகிய கர்த்தராகிய நான் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

24 அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும், வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய்.

25 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; ஆகவே நீ நிச்சயமாய் சாவாய், நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றேன்.

26 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான், ஏனெனில் அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானாள்; அப்படியாக தேவனாகிய கர்த்தராகிய நான் அநேக ஸ்திரீகளுக்குள் யாவரிலும் முதலானவள் என்றழைத்தேன்.

27 தேவனாகிய கர்த்தராகிய நான் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினேன்.

28 தேவனாகிய கர்த்தராகிய நான், என்னுடைய ஒரேபேறானவருக்குச் சொன்னேன்: இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போலானான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும்.

29 ஆகவே, தேவனாகிய கர்த்தராகிய நான், அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்புவேன்;

30 ஏனெனில் தேவனாகிய கர்த்தராகிய நான் ஜீவிக்கிறேன், என்னுடைய வார்த்தைகள் வெறுமையாய் திரும்பாது, ஏனெனில் என் வாயிலிருந்து புறப்படுவதைப்போல அவைகள் நிறைவேற்றப்படும்.

31 ஆகவே நான் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்கு போகும் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்கு கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தேன்.

32 (இந்த வார்த்தைகளையே என்னுடைய ஊழியக்காரனாகிய மோசேக்குக்கு நான் பேசினேன், என்னுடைய சித்தத்தைப்போல அவைகள் மெய்யானதாயிருக்கிறது; அவைகளை நான் உன்னிடம் பேசினேன். நம்புகிறவர்களைத் தவிர நான் கட்டளையிடும்வரைக்கும் அவைகளை எந்த மனுஷனுக்கும் காட்டாதிருக்க பார்த்துக்கொள்வாயாக. ஆமென்.)