வேதங்கள்
ஆல்மா 13


அதிகாரம் 13

மனுஷர் தங்களின் மிகுந்த விசுவாசத்தினிமித்தமும், நற்கிரியைகளினிமித்தமும் பிரதான ஆசாரியர்களாக அழைக்கப்படுகிறார்கள் – அவர்கள் கட்டளைகளை போதிக்கவேண்டும் – அவர்கள் நீதியினிமித்தம், சுத்திகரிக்கப்பட்டு, கர்த்தருடைய இளைப்பாறுதலினுள்ளே பிரவேசிக்கிறார்கள் – இப்படிப்பட்டவர்களில் மெல்கிசேதேக்கு ஒருவன் – தேசமெங்கிலும் தூதர்கள் நற்செய்தியை அறிவிக்கிறார்கள் – கிறிஸ்துவின் மெய்யான வருகையை அவர்கள் அறிவிப்பார்கள். ஏறக்குறைய கி.மு. 82.

1 பின்னும் என் சகோதரரே, கர்த்தர் தம் பிள்ளைகளுக்கு இந்த கட்டளைகளைக் கொடுத்த காலத்தை உங்களுக்கு நினைவூட்ட வாஞ்சிக்கிறேன். இக்காரியங்களை ஜனங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று, தேவனாகிய கர்த்தர் தம்முடைய குமாரனின் முறைமையாகிய, தமது பரிசுத்த முறைமையின்படி, ஆசாரியர்களை நியமித்ததை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன்.

2 ஜனங்கள் மீட்படைவதற்காக அவருடைய குமாரனை எவ்விதமாய் எதிர் நோக்குவது என்று, அவர்கள் அறியும்பொருட்டாக, அந்த ஆசாரியர்கள் அவருடைய குமாரனின் முறைமையின்படியே நியமனம் செய்யப்பட்டார்கள்.

3 அவர்கள் நியமனம் செய்யப்பட்ட விதமாவது, அவர்களின் மிகுந்த விசுவாசம் மற்றும், நற்கிரியைகளினிமித்தம், உலக அஸ்திபாரம் முதற்கொண்டு, தேவனுடைய முன்னறிவிற்குத்தக்கதாக அழைக்கப்பட்டு ஆயத்தப்படுத்தப்பட்டார்கள்; அவர்கள் முதலாவதாய் நன்மையையோ, தீமையையோ தெரிந்துகொள்ளும்படி விடப்பட்டபோது, அவர்கள் நன்மையைத் தெரிந்துகொண்டு மிகுந்த விசுவாசத்தைப் பிரயோகப்படுத்தினதினிமித்தம், அப்படிப்பட்டோருக்கான ஆயத்த மீட்பின்படியேயும், பரிசுத்த அழைப்பினாலும் ஆம், ஆயத்தப்படுத்தப்பட்ட பரிசுத்த அழைப்பினாலும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

4 இப்படியாக, மற்றவர்களோ தங்களுடைய இருதயக் கடினத்தினிமித்தமும், தங்களுடைய மனதின் குருட்டுத் தன்மையினிமித்தமும், தேவ ஆவியை நிராகரித்தபோது, இப்படி அவர்கள் செய்யாதிருந்தார்களெனில் தங்களுடைய சகோதரரைப்போலவே அவர்களும் மிகுந்த சிலாக்கியத்தைப் பெற்றிருக்கலாம் என்றாலும், அவர்களுடைய விசுவாசத்தினிமித்தம் இந்த பரிசுத்த அழைப்பிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

5 அல்லது இறுதியாக, அவர்கள் முதற்கண் தங்கள் சகோதரர்கள் போலவே இருந்தார்கள்; ஆயத்தம்பண்ணப்பட்டவராகிய ஒரேபேறான குமாரனின் பாவநிவர்த்தியின் மூலமும், மாத்திரமுமே, அந்த பரிசுத்த அழைப்பு தங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதவர்களுக்கென்று, இவ்விதமாக உலக அஸ்திபார முதல் ஆயத்தம்பண்ணப்பட்டது.

6 இவ்விதமாய், இந்த பரிசுத்த முறைமையினால் அழைக்கப்பட்டு, அவர்கள் அவருடைய இளைப்பாறுதலினுள் பிரவேசிக்கும்படி, மனுபுத்திரருக்கு தேவ கட்டளைகளைப் போதிக்க அவருடைய பரிசுத்த முறைமையான, பிரதான ஆசாரியத்துவத்துக்கு நியமிக்கப்பட்டார்கள்.

7 இந்தப் பிரதான ஆசாரியத்துவம் உலக அஸ்திபாரம் முதலிலிருந்த முறைமையாகிய, அவருடைய குமாரனின் முறைமையிலானது; வேறு வார்த்தைகளிலெனில், இந்த முறைமை சகலத்தையும்பற்றிய அவருடைய முன்னறிவின்படியே, நாட்களின் தொடக்கமும், வருஷங்களின் முடிவுமில்லாமல், சதாகாலங்களுக்குமாக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது.

8 அவர்கள் ஏற்படுத்தப்பட்ட முறையாவது, அவர்கள் பரிசுத்த அழைப்பினாலே அழைக்கப்பட்டு, பரிசுத்த நியமத்தால் நியமிக்கப்பட்டு, தங்கள் மீது பரிசுத்த முறையிலான பிரதான ஆசாரியத்துவத்தை எடுத்துக்கொண்ட, அந்த அழைப்பும், நியமமும், பிரதான ஆசாரியத்துவமும் ஆதியும் அந்தமுமற்றவை.

9 இப்படியாக கிருபையிலும், நீதியிலும், சத்தியத்திலும், சம்பூரணமானவரும், நாட்களின் தொடக்கமும், வருஷங்களின் முடிவும் இல்லாதவருமான, பிதாவினுடைய ஒரேபேறானவராகிய, குமாரனின் முறைமையின்படியே, என்றென்றைக்குமாய் பிரதான ஆசாரியர்களானார்கள். இது இப்படியாக இருக்கிறது. ஆமென்.

10 நான் இந்த பரிசுத்த முறைமையைக் குறித்தும் பிரதான ஆசாரியத்துவத்தைக் குறித்தும் சொன்னதுபோல, அநேகர் நியமிக்கப்பட்டு, தேவனுடைய பிரதான ஆசாரியர்களானார்கள்; அது அவர்களுடைய மிகுந்த விசுவாசத்தினாலும், மனந்திரும்புதலினாலும், கெட்டுப்போகாமல் நீதியானவைகளை கிரியை செய்வதையும், மனந்திரும்புதலையும் தெரிந்துகொண்டு, தேவனுக்கு முன்பாக நீதிமான்களாய் இருந்ததாலுமேயாகும்.

11 ஆகவே அவர்கள் இந்த பரிசுத்த முறைமையின்படி அழைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டார்கள். அவர்களுடைய வஸ்திரங்கள் தேவாட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் வெண்மையாய் கழுவப்பட்டன.

12 அவர்கள் பரிசுத்தாவியானவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவர்களுடைய வஸ்திரங்கள் வெண்மையாக்கப்பட்டு, தேவனுக்கு முன்பாய் சுத்தமுள்ளவர்களாயும், கறையற்றவர்களுமாய் ஆன பின்பு, வெறுப்போடேயன்றி பாவத்தைப்பார்க்க முடியாது; இப்படியாய் அநேகர், மிகவும் அநேகமானோர் சுத்திகரிக்கப்பட்டு, தேவனாகிய தங்கள் கர்த்தருடைய இளைப்பாறுதலினுள் பிரவேசித்தார்கள்.

13 இப்பொழுதும், என் சகோதரரே, நீங்களும் அந்த இளைப்பாறுதலினுள் பிரவேசிக்கும்படி, தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தி, மனந்திரும்புதலுக்கேதுவான கனியைக் கொண்டுவர வேண்டுமென, நான் மனதாயிருக்கிறேன்.

14 ஆம், நான் எதைக் குறித்து பேசினேனோ, அதே முறைமையின்படியே பிரதான ஆசாரியனாயும், தன்மீது என்றென்றுமாய் பிரதான ஆசாரியத்துவத்தை ஏற்றுக்கொண்டவனுமாகிய, மெல்கிசேதேக்குவின் காலத்தில் இருந்த ஜனங்களைப்போல நீங்கள் உங்களைத் தாழ்த்துங்கள்.

15 இந்த மெல்கிசேதேக்கிற்கே ஆபிரகாம் தசம பாகங்களை செலுத்தினான்; ஆம் நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாமும் தான் வைத்திருந்த எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு தசமபாகங்களைச் செலுத்தினான்.

16 தேவகுமாரனை ஜனங்கள் எதிர்நோக்கியிருக்கவே அவருடைய முறைமையின் மாதிரியாகவும், அல்லது அவருடைய முறைமையாகவும், இந்த நியமங்கள் கொடுக்கப்பட்டன. இது அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்று, கர்த்தருடைய இளைப்பாறுதலிலே பிரவேசிக்க அவரை எதிர்நோக்கியிருக்கவே ஆகும்.

17 இந்த மெல்கிசேதேக்கு, சாலேம் தேசத்தின் ராஜாவாயிருந்தான்; அவனுடைய ஜனங்கள் அக்கிரமத்திலும், அருவருப்பிலும் தளைத்திருந்து, ஆம், அவர்கள் யாவரும் வழிதப்பிப்போனார்கள்; அவர்கள் எல்லாவிதமான துன்மார்க்கங்களும் நிறைந்திருந்தார்கள்.

18 ஆனால் மெல்கிசேதேக்கு மிகுந்த விசுவாசத்தை பிரயோகித்து, தேவனுடைய பரிசுத்த முறைமைக்கேற்றபடி பிரதான ஆசாரியத்துவத்தின் ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்டு, தன் ஜனங்களுக்கு மனந்திரும்புதலை பிரசங்கித்தான். அவர்களும் மனந்திரும்பினார்கள்; மெல்கிசேதேக்கு தன் நாட்களில் சமாதானத்தை நிலைவரப்பண்ணினபடியாலும், அவன் சாலேமுக்கு ராஜாவானபடியாலும், சமாதானப்பிரபு, என்று அழைக்கப்பட்டான்; அவன் தன் தகப்பனுக்கு கீழ்ப்பட்டவனாயிருந்து ராஜரீகம் பண்ணினான்.

19 அவனுக்கு முன்பும் அநேகர் இருந்தனர், பின்பும் அநேகர் இருந்தனர், ஆனால் அவனிலும் பெரியவன் யாருமில்லை; அதனால்தான் அவனைக்குறித்து அதிகமாய் குறிப்பிட்டார்கள்.

20 நான் சொன்னது போதுமானதாதலால், நான் அதைத் திரும்பச்சொல்வது அவசியமற்றதாயிருக்கிறது. இதோ, வேதங்கள் உங்களுக்கு முன்னே இருக்கின்றன; அவற்றுக்கு எதிராக போரிட்டால், அது உங்களின் அழிவுக்கேதுவாய் அமையும்.

21 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மா இவ்வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னபோது, தன் கரத்தை நீட்டி, உரத்த சத்தமாய் கதறியதாவது: இரட்சிப்பின் நாள் சமீபமாய் வருவதாலே மனந்திரும்பும் காலமிதுவே.

22 ஆம், சகல தேசங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்திகளை அறிவிக்கும்படி, அவைகளை தூதர்களின் வாயினால், அவர்களுக்கு கர்த்தருடைய சத்தம் அறிவித்தது: ஆம், அவர் தம்முடைய சகல ஜனங்களுக்கும், பூமியின் பரப்பின் மீதெங்கும் சிதறிப்போனவர்களுக்கும், இந்த நற்செய்திகளை தொனிக்கப்பண்ணுகிறார்; ஆகவே அவை நம்மிடத்தில் வந்திருக்கின்றன.

23 நாம் அறிந்துகொள்ளும்படிக்கும், நாம் தவறு செய்யாதபடிக்கும், அவைகள் நமக்கு தெளிவாய் அறியப்படுத்தப்பட்டிருக்கின்றன; இது நாம் அந்நிய தேசத்திலே பரதேசிகளாய் இருப்பதினிமித்தமே, ஆகிலும் நம்முடைய திராட்சைத் தோட்டமெங்கிலும் நமக்காய் இந்த நற்செய்திகள் அறிவிக்கப்பட்டிருப்பதாலே, நாம் மிகவும் தயை பெற்றிருக்கிறோம்.

24 ஏனெனில், இதோ, நம் தேசத்தில் இக்காலத்திலும் அநேகருக்கு தூதர்கள் அவைகளை அறிவிக்கிறார்கள்; அவர் தமது மகிமையிலே வரும்போது, அவருடைய வசனத்தை மனுபுத்திரர் பெறவேண்டுமென்று, இருதயங்கள் ஆயத்தம்பண்ணப்பட வேண்டுமென்ற நோக்கத்திற்காகவே ஆகும்.

25 இப்பொழுது, அவருடைய வருகையைப்பற்றி தூதர்களின் வாயால் சந்தோஷ செய்தி எங்களுக்கு அறிவிக்கப்படவே காத்திருக்கிறோம். காலம் சமீபத்திலிருக்கிறது. அது எவ்வளவு சீக்கிரத்தில் என்று அறியோம். என் நாட்களிலே அது சம்பவிக்கவேண்டுமென்று தேவனிடத்தில் வேண்டுகிறேன்; அது சீக்கிரமாயோ, தாமதமாயோ, சம்பவித்தாலும் அதிலே நான் களிகூருவேன்.

26 தங்களுக்குள்ளே இருந்த தீர்க்கதரிசன ஆவியின்படியே அவரைக்குறித்து பேசினவற்றின்படி, நம்முடைய பிதாக்களின் வார்த்தைகள் நிறைவேறும் பொருட்டு, அவருடைய வருகையின்போது, தூதர்களுடைய வாயால் நியாயவான்களுக்கும், பரிசுத்தவான்களுக்கும் அறிவிக்கப்படும்.

27 ஆகவே என் சகோதரரே, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, வேதனைக்குள்ளாகும் அளவுக்கு வியாகுலத்தோடும், நீங்கள் என் வார்த்தைகளுக்கு செவிகொடுத்து, உங்கள் பாவங்களை விட்டு உங்களுடைய மனந்திரும்புதலின் நாளை தள்ளிப்போடக்கூடாது, என விரும்புகிறேன்;

28 ஆனால் கர்த்தருடைய சமுகத்தில் உங்களையே தாழ்த்தும்படிக்கும், அவருடைய பரிசுத்த நாமத்தை தொழுது, உங்கள் திராணிக்கு அதிகமாய் நீங்கள் சோதிக்கப்படக்கூடாதபடிக்கு, விழித்திருந்து இடைவிடாமல் ஜெபித்து பரிசுத்த ஆவியாலே வழிநடத்தப்பட்டு, இப்படியாய் தாழ்மையாயும், சாந்தமாயும், கீழ்ப்படிதலாயும், பொறுமையாயும், அன்பிலே நிறைந்து, நீடிய சாந்தமாயிருங்கள்;

29 கர்த்தர்மேல் விசுவாசம் வைத்து, நித்திய ஜீவனைப் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையைக்கொண்டு, கடைசி காலத்தில் உயர்த்தப்பட்டு, அவருடைய இளைப்பாறுதலினுள்ளே பிரவேசிக்கும்படிக்கு, உங்கள் இருதயங்களில் தேவ அன்பு நித்தமும் நிலைத்திருக்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

30 நீங்கள் அவருடைய உக்கிரத்தை உங்கள்மேல் வரப்பண்ணாமலும், நீங்கள் இரண்டாம் மரணத்தை அனுபவிக்காதபடி, நீங்கள் பாதாளத்தின் சங்கிலிகளாலே கட்டப்படாதபடிக்கும் உங்களுக்கு மனந்திரும்புதலை கர்த்தர் தாமே அருளுவாராக.

31 இந்த புஸ்தகத்திலே எழுதப்படாத இன்னும் அநேக வார்த்தைகளை ஆல்மா ஜனங்களிடத்தில் பேசினான்.