வேதங்கள்
ஆல்மா 33


அதிகாரம் 33

மனுஷர் எல்லா இடங்களிலும் ஜெபிக்க வேண்டும், தொழுது கொள்ளவேண்டுமென்றும், குமாரனினிமித்தம் நியாயத்தீர்ப்புகள் திருப்பப்பட்டன என்றும், சீனஸ் போதித்தான் – குமாரனினிமித்தம் இரக்கம் அருளப்படுகிறதென்று சீனாக் போதித்தான் – மோசே வனாந்தரத்தில் தேவ குமாரனின் மாதிரியை உயர்த்தினான். ஏறக்குறைய கி.மு. 74.

1 இப்போது ஆல்மா இவ்வார்த்தைகளைப் பேசிய பின்னர், தங்கள் இருதயங்களில் விதைக்கப்பட வேண்டுமென அவன் சொன்ன, கனியைப் பெறுவதற்கு தாங்கள் ஒரே தேவனில் விசுவாசிக்கவேண்டுமா என்றும், அல்லது சொல்லப்பட்ட விதையை அல்லது வார்த்தையை தங்கள் இருதயங்களில் எப்படி விதைப்பது என்றும், அல்லது விசுவாசத்தை தாங்கள் பிரயோகிக்கத் துவங்குவதெப்படி, என்றும் அறிய வாஞ்சித்தவர்களாய், அவனிடம் செய்தி அனுப்பினார்கள்.

2 ஆல்மா அவர்களை நோக்கி: இதோ, நீங்கள் உங்களுடைய ஜெப ஆலயங்களிலிருந்து தள்ளப்பட்டுப் போனதினிமித்தம், உங்கள் தேவனைத் தொழுதுகொள்ளமுடியவில்லை என்றீர்கள். இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் தேவனைத் தொழுது கொள்ள முடியவில்லையாதலால், நீங்கள் பெரும் தவறு செய்கிறீர்கள் என்று எண்ணுவீர்களாகில், நீங்கள் வேத வாக்கியங்களைத் தேடவேண்டும். அவை உங்களுக்கு இதையே போதித்தன என்று எண்ணுவீர்களாகில், அவைகளை நீங்கள் அறிந்திருக்கவில்லை.

3 பழங்காலத்து தீர்க்கதரிசியான சீனஸ், ஜெபத்தைக் குறித்தோ, அல்லது தொழுதுகொள்வதைக் குறித்தோ, சொன்னவைகளை வாசித்ததாக உங்களுக்கு நினைவிருக்கிறதா?

4 அவன் சொன்னதாவது: தேவனே நீர் இரக்கமுள்ளவராயிருக்கிறீர். ஏனெனில் நான் வனாந்தரத்தில் இருந்தபோதும், நீர் என் ஜெபத்தைக் கேட்டீர்; ஆம், நான் என் சத்துருக்களாய் இருந்தவர்களைக் குறித்து ஜெபித்தபோதும், நீர் இரக்கமுள்ளவராய் இருந்து, அவர்களை என் பட்சமாக்கினீர்.

5 ஆம், தேவனே, நான் என் வயலிலிருந்து உமக்குக் கூக்குரலிட்டபோதும் நீர் எனக்கு இரக்கமாயிருந்தீர்; நான் என் ஜெபத்தில் உம்மிடம் கூக்குரலிட்டபோதும் நீர் எனக்குச் செவிகொடுத்தீர்.

6 மறுபடியும், தேவனே, நான் என் வீட்டுக்குத் திரும்பின போதும் நீர் என் ஜெபத்தைக் கேட்டீர்.

7 கர்த்தாவே, நான் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உம்மிடத்தில் ஜெபித்தபோதும், நீர் எனக்குச் செவிகொடுத்தீர்.

8 ஆம், மனுஷர் கேட்கும்படியாய் அல்ல, நீர் கேட்கும்படியாக உம்மை நோக்கி கூக்குரலிடுகிற உம்முடைய பிள்ளைகளுக்கு, நீர் இரக்கமாயிருந்து, அவர்களுக்குச் செவிகொடுப்பீர்.

9 ஆம், தேவனே, நீர் எனக்கு இரக்கமுள்ளவராயிருந்து, உம்முடைய ஜனக்கூட்டங்களுக்கு நடுவேயும், என் கூக்குரல்களைக் கேட்டீர்.

10 ஆம், நான் தள்ளப்பட்டு, என் பகைவரால் தூஷிக்கப்பட்டபோதும், நீர் எனக்குச் செவிகொடுத்தீர்; ஆம், நீர் என் கூக்குரல்களைக் கேட்டு என் பகைவரிடம் கோபம் கொண்டு, துரிதமான அழிவோடுகூட உம்முடைய உக்கிரத்தினால் அவர்களை விசாரித்தீர்.

11 என் உபத்திரவங்களினிமித்தமும், என் நேர்மையினிமித்தமும், நீர் எனக்குச் செவிகொடுத்தீர்; உம்முடைய குமாரனினிமித்தம் இப்படியாய் நீர் என்னிடம் இரக்கமாயிருந்தீர்; ஆகையால் என் எல்லா உபத்திரவங்களிலேயும் உம்மை நோக்கி கூக்குரலிடுவேன். ஏனெனில் என் சந்தோஷம் உம்மிலிருக்கிறது; உம்முடைய குமாரனினிமித்தம் நீர் உமது தீர்ப்பை என்னிடத்திலிருந்து மாற்றினீர்.

12 இப்பொழுது ஆல்மா அவர்களை நோக்கி சொன்னான்: பூர்வகாலத்தோரால் எழுதப்பட்ட அந்த வேதங்களை விசுவாசிக்கிறீர்களா?

13 இதோ, அப்படியானால் சீனஸ் சொன்னவற்றில் நீங்கள் விசுவாசிக்கவேண்டும்; ஏனெனில், இதோ அவன் சொன்னதாவது: உம்முடைய குமாரனினிமித்தம் நீர் உமது தீர்ப்புகளை மாற்றினீர், என்றான்.

14 இப்பொழுதும் இதோ, என் சகோதரரே, நீங்கள் வேதங்களை வாசித்தீர்களா? என்று கேட்பேன். வாசித்ததுண்டானால், நீங்கள் தேவ குமாரனில் அவநம்பிக்கை கொண்டிருக்கலாமா?

15 ஏனெனில் இவைகளைக் குறித்து சீனஸ் மாத்திரம் பேசியிருக்கிறான், என்று எழுதப்படவில்லை. ஆனால் இவைகளைக் குறித்து சீனாக்கும் பேசியிருக்கிறான்.

16 ஏனெனில் இதோ, அவன் சொன்னதாவது: கர்த்தாவே, நீர் உம்முடைய குமாரனினிமித்தம் இந்த ஜனங்கள் மீது, நீர் அருளிய உமது இரக்கங்களை இவர்கள் அறியாததினிமித்தம், இவர்கள் மேல் கோபமாயிருக்கிறீர்.

17 இப்பொழுதும் என் சகோதரரே பூர்வகாலத்தானான, இரண்டாவது தீர்க்கதரிசி ஒருவனும் தேவகுமாரனைப்பற்றி சாட்சி கொடுத்திருக்கிறான், என்று நீங்கள் பார்க்கிறீர்கள். அவனுடைய வார்த்தையை ஜனங்கள் அறியாததினிமித்தம், அவர்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

18 ஆனால் இதோ, இது மாத்திரமல்ல; தேவ குமாரனைப்பற்றிப் பேசியவர்கள் இவர்கள் மாத்திரமல்ல.

19 இதோ, அவர் மோசேயினாலும் பேசப்பட்டிருக்கிறார்; ஆம், இதோ, காண்கிற யாவரும் பிழைக்கும்படியாக வனாந்தரத்தில் ஒரு மாதிரி உயர்த்தப்பட்டது. அநேகர் பார்த்துப் பிழைத்தார்கள்.

20 ஆனால் சிலரே அக்காரியங்களின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டார்கள். இது அவர்களுடைய கடின இருதயத்தினிமித்தமே. அங்கே அநேகர் பார்க்காதபடி, கடினப்பட்டவர்களாய் இருந்ததினிமித்தமே, அவர்கள் அழிந்து போனார்கள். அவர்கள் பார்க்காததின் காரணமென்னவெனில், அது அவர்களைச் சுகமாக்கும் என்று அவர்கள் விசுவாசிக்காததே.

21 என் சகோதரரே, நீங்கள் உங்கள் கண்களை ஏறெடுப்பதினாலேயே சுகப்படலாமெனில், சுகப்படும்படியாக நீங்கள் துரிதமாய் ஏறெடுக்க மாட்டீர்களா, அல்லது, அவிசுவாசத்திலே உங்கள் இருதயங்களை கடினமாக்கி, அழிந்து போகும்படியாய் உங்கள் கண்களை ஏறெடுப்பதற்கும் சோம்பலாயிருப்பீர்களோ?

22 அப்படியிருந்தால், உங்களுக்கு துக்கம் ஏற்படும், அப்படியில்லையானால், உங்கள் கண்களை ஏறெடுத்து, தம் ஜனத்தை மீட்க தேவகுமாரன் வருவாரென்றும், அவர்களுடைய பாவங்களை நிவர்த்தியாக்க அவர் பாடுபட்டு மரிப்பாரென்றும், அவர் மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுவாரென்றும், அதினிமித்தம் அவர்களுடைய கிரியைகளின்படி கடைசியும், நியாயத்தீர்ப்புமான நாளிலே நியாயந்தீர்க்கப்படும்படி, அவருக்கு முன்பு சகல மனுஷரும் நிற்கும்பொருட்டு, உயிர்த்தெழுதல் சம்பவிக்கும், என்றும் விசுவாசியுங்கள்.

23 இப்பொழுதும் என் சகோதரரே, இந்த வார்த்தையை உங்கள் இருதயங்களில் வைக்க வேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். அது விரிவடையத் துவங்கும்போது, உங்கள் விசுவாசத்தால் அதைப் போஷியுங்கள். இதோ, அது நித்திய ஜீவனாய் வளருகின்ற விருட்சமாகும். தேவன் தம்முடைய குமாரனால் உண்டான சந்தோஷத்தின் மூலம் உங்கள் சுமைகள் இலகுவாகும்படி அருளுவாராக. நீங்கள் முயன்றால், இதை எல்லாம் நீங்கள் செய்ய முடியும். ஆமென்.