வேதங்கள்
ஆல்மா 37


அதிகாரம் 37

ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள் கொண்டுவரும்படி பித்தளைத் தகடுகளும், மற்ற வேத புஸ்தகங்களும் காக்கப்படுகின்றன – யாரேதியர்கள், தங்களின் துன்மார்க்கத்தினாலே அழிந்து போனார்கள் – அவர்களுடைய இரகசிய ஆணைகளும், உடன்படிக்கைகளும் ஜனங்களிடத்திலிருந்து மறைக்கப்படவேண்டும் – உன் எல்லா செயல்களிலும் கர்த்தருடன் ஆலோசி – லியஹோனா, நேபியரை வழிநடத்தியதைப்போல, கிறிஸ்துவின் வார்த்தை மனுஷரை நித்திய ஜீவனுக்கேதுவாய் வழிநடத்துதல். ஏறக்குறைய கி.மு. 74.

1 இப்பொழுதும், என் குமாரனாகிய ஏலமனே, என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட பதிவேடுகளை, நீ எடுத்துக் கொள்ளவேண்டுமென உனக்குக் கட்டளையிடுகிறேன்;

2 நான் செய்ததைப் போலவே, நீயும் இந்த ஜனத்தினுடைய பதிவேட்டை நேபியின் தகடுகளில் எழுதவேண்டுமெனவும், உனக்குக் கட்டளையிடுகிறேன். நான் வைத்திருக்கிற இவற்றை நான் வைத்திருந்ததைப்போலவே நீயும் பரிசுத்தமாக வைத்திரு; ஏனெனில் இவைகள் ஒரு ஞானமான நோக்கத்திற்காகவே பாதுகாக்கப்படுகின்றன.

3 இந்தப் பித்தளைத் தகடுகளும் இந்த எழுத்துக்களும், பரிசுத்த வேத பதிவுகளையும், ஆதியிலிருந்து நம்முடைய முற்பிதாக்களின் வம்சவரலாற்றையும் கொண்டிருக்கின்றன.

4 இதோ, அவை பாதுகாக்கப்பட்டு, ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றுக்கு கையளிக்கப்படவேண்டுமென்றும், அவை சகல தேசத்திற்கும், இனத்திற்கும் பாஷைக்கும், ஜனத்திற்கும் போய், அவர்கள் அதில் அடங்கியிருக்கிற இரகசியங்களை அறியும்வரைக்கும் கர்த்தருடைய கரங்களால் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படுமென்று நமது பிதாக்களால் தீர்க்கதரிசனமுரைக்கப்பட்டிருக்கிறது.

5 இப்பொழுது இதோ, அவை பாதுகாக்கப்படவேண்டுமெனில் அவை தங்கள் பிரகாசத்தை தக்க வைக்கவேண்டும்; ஆம், அவை பிரகாசத்தை தக்கவைக்கும்; ஆம், பரிசுத்த எழுத்துக்களைக் கொண்டிருக்கிற சகல தகடுகளும் அப்படியே பிரகாசமாகவே இருக்கும்.

6 இப்பொழுதும், இது என் மதியீனம் என்று நீ எண்ணலாம்; ஆனால் இதோ நான் உனக்குச் சொல்லுகிறேன், அற்பமும் சொற்பமுமானவைகளைக் கொண்டுதான் பெரிய காரியங்கள் செய்யப்படுகின்றன; அற்பமானவைகளே அநேக சமயங்களில் ஞானவான்களைத் தாழ்மைப்படுத்தும்.

7 தேவனாகிய கர்த்தர், தம்முடைய பெரிதும் நித்தியமுமான நோக்கங்களை நிறைவேற்ற அற்பமானவைகளைக் கையாளுகிறார்; மிக அற்பமானவைகளால் கர்த்தர் ஞானவான்களைத் தாறுமாறாக்கி, அநேக ஆத்துமாக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருகிறார்.

8 இப்பொழுது, இக்காரியங்கள் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது தேவ ஞானமாயிருக்கிறது; ஏனெனில் இதோ, அவை இந்த ஜனத்தினுடைய நினைவை விசாலமாக்கி, அவர்களுடைய வழிகளின் தப்பிதத்தை அநேகருக்கு உணர்த்தி, அவர்களுடைய ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கேதுவாக, தங்கள் தேவனின் ஞானத்திற்கு அவர்களைக் கொண்டு வந்திருக்கிறது.

9 ஆம், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்தத் தகடுகளின் மேலிருக்கிற அந்த பதிவேடுகளில் அடங்கியுள்ள இவைகள் இல்லையெனில், அம்மோனும் அவன் சகோதரரும், அநேக ஆயிரக்கணக்கான லாமானியருக்கு, அவர்களுடைய பிதாக்களுடைய தவறான பாரம்பரியத்தைக் குறித்து உணர்த்தியிருக்கமுடியாது; ஆம், இந்தப் பதிவேடுகளும், அவர்களுடைய வார்த்தைகளும், அவர்களை மனந்திரும்புதலுக்குள்ளாகக் கொண்டுவந்தன; அதாவது அவைகள் அவர்களைக் கர்த்தராகிய அவர்களின் தேவ ஞானத்திற்கும், அவர்களின் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவிலே களிகூரவும் கொண்டுவந்தன.

10 அவை அவர்களில் அநேக ஆயிரக்கணக்கானோரையும், பாவத்திலும் அக்கிரமத்திலும் தங்கள் இருதயங்களைக் கடினமாக்கிக் கொண்டிருக்கிற, நம்முடைய வணங்காக்கழுத்துள்ள சகோதரராகிய நேபியரிலும், அநேக ஆயிரக்கணக்கானோரையும், அவர்களுடைய மீட்பரின் ஞானத்திற்குக் கொண்டுவர கருவியாய் அமையும், என்று யார் அறிவார்?

11 இப்போது இந்த இரகசியங்கள் எனக்குப் பரிபூரணமாக தெரிவிக்கப்படவில்லை; ஆகையால் நான் நிறுத்திக் கொள்ளுகிறேன்.

12 அவை ஒரு ஞானமான நோக்கத்திற்காக பாதுகாக்கப்பட்டிருக்கின்றன, என்று நான் சொன்னாலே போதுமானதாயிருக்கிறது. அந்த நோக்கத்தை தேவன் அறிவார்; அவர் தம் கிரியைகள் யாவையும் ஞானமாய் ஆலோசிக்கிறார். அவருடைய பாதைகள் நேராயும், அவருடைய மார்க்கம் ஒரு நித்தியச் சுற்றாயுமிருக்கிறது.

13 என் குமாரனாகிய ஏலமனே நினைவுகூர். தேவனுடைய கட்டளைகள் எவ்வளவு கண்டிப்பானவை என்று நினைவுகூர். அவர் சொன்னதாவது: நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டால், தேசத்தில் விருத்தியடைவீர்கள். ஆனால் அவருடைய கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளாமற் போனால், நீங்கள் அவருடைய சமுகத்தினின்று அறுப்புண்டு போவீர்கள்.

14 இப்பொழுதும் என் குமாரனே, பரிசுத்தமான இவைகளைத் தேவன் உன்னிடத்தில் ஒப்படைத்தார் என்று நினைவில்கொள். அவர் அவைகளை பரிசுத்தமாய் பாதுகாத்திருந்தார். அவர் தம்முடைய வல்லமையை வருங்காலத் தலைமுறையினருக்கு காண்பிக்க வேண்டுமென்ற, அவரில் இருக்கிற ஞானமான நோக்கத்திற்காக, இனிமேலும் அவைகளை வைத்துப் பாதுகாப்பார்.

15 இப்பொழுதும் இதோ, நீங்கள் தேவனுடைய கட்டளைகளை மீறினால், இதோ, பரிசுத்தமான இவைகள் உங்களிடத்திலிருந்து தேவ வல்லமையினால் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், நீங்கள் சாத்தானால், காற்றுக்கு முன் பதரைப் புடைப்பதைப்போல புடைக்கப்படுவதற்கு, அவனிடத்தில் ஒப்படைக்கப்படுவீர்கள் என்றும், உங்களுக்கு தீர்க்கதரிசன ஆவியினால் சொல்லுகிறேன்.

16 நீங்கள் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிடுகிறவைகளுக்குக்கேற்ப பரிசுத்தமான இவைகளினால் காரியங்களை நடப்பிப்பீர்களெனில், (அவைகளினால் நீங்கள் செய்கிற எக்காரியத்திற்கும், கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய்யவேண்டும்) இதோ, பூமியிலோ அல்லது பாதாளத்திலோ உள்ள எந்த ஒரு வல்லமையும் அவைகளை உங்களிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் தேவன் தமது வார்த்தைகள் அனைத்தையும் நிறைவேற்ற வல்லமையுள்ளவராயிருக்கிறார்.

17 ஏனெனில் அவர் நம்முடைய பிதாக்களிடம் செய்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றியதால், அவர் உங்களிடத்தில் செய்யும் வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுவார்.

18 ஏனெனில் அவர் தம்முடைய வல்லமையை வருங்காலத் தலைமுறையினருக்குக் காண்பிக்க வேண்டுமென்ற அவரிலுள்ள ஞானமான நோக்கத்தினிமித்தம், அவர் இவைகளைப் பாதுகாப்பார், என்று அவரே அவர்களிடம் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்.

19 இப்பொழுதும் இதோ, லாமானியரில் அநேக ஆயிரமானோரைச் சத்திய ஞானத்திற்குத் திரும்பச் சேர்க்கவேண்டுமென்ற நோக்கத்தை அவர் நிறைவேற்றியிருக்கிறார். அவர் அவற்றில் தமது வல்லமையைக் காண்பித்திருக்கிறார். அவர் இனிமேலும் வருங்காலத் தலைமுறையினருக்கு அவற்றிலுள்ள தமது வல்லமையைக் காண்பிப்பார். ஆதலால் அவை பாதுகாக்கப்படும்.

20 ஆகவே என் குமாரனாகிய ஏலமனே, நீ என் வார்த்தைகள் அனைத்தையும் நிறைவேற்றக் கருத்துள்ளவனாயும், எழுதப்பட்டிருக்கிறபடியே தேவ கட்டளைகளைக் கைக்கொள்ள கருத்துள்ளவனாயும் இருக்க வேண்டுமென, உனக்குக் கட்டளையிடுகிறேன்.

21 இப்பொழுதும் அழிந்துபோன அந்த ஜனங்களுடைய இரகசியங்களும், அந்தகாரக் கிரியைகளும், அவர்களுடைய இரகசியக் கிரியைகளும், இந்த ஜனத்திற்கு வெளியரங்கமாக்கப்படும்படிக்கு, ஆம், அவர்களுடைய சகல கொலைகளும், கொள்ளைகளும், சூறையாடுதல்களும், அவர்களுடைய சகல துன்மார்க்கமும், அருவருப்புகளும் இந்த ஜனத்திற்கு வெளியரங்கமாக்கப்படும்: ஆம், அதற்காக இந்த மொழிபெயர்க்கும் சாதனங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படிக்கும், நீங்கள் பாதுகாத்த, அந்த இருபத்தி நான்கு தகடுகளைக் குறித்து உங்களுக்குச் சொல்லுவேன்.

22 ஏனெனில் இதோ, கர்த்தர் தம்முடைய ஜனம் அந்தகாரத்திலே கிரியை செய்வதையும், ஆம், இரகசியமாக கொலைகளையும், அருவருப்புகளையும் புரிவதையும் கண்டார்: ஆதலால், அவர்கள் மனந்திரும்பாவிடில், பூமியின் பரப்பின் மீதிருந்து நிர்மூலமாக்கப்படுவார்களென்று, கர்த்தர் சொன்னார்.

23 கர்த்தர் சொன்னதாவது: என்னை சேவிக்கிற என் ஜனத்திற்கு அவர்களுடைய சகோதரரின் கிரியைகளான, ஆம், அவர்களின் இரகசியக் கிரியைகளையும், அவர்களின் அந்தகாரக் கிரியைகளையும். அவர்களின் துன்மார்க்கத்தையும், அருவருப்புகளையும், நான் வெளியரங்கமாக்கும்படி, இருளிலிருந்து வெளிச்சமாக்க, பிரகாசிக்கும் ஒரு கல்லை என் தாசனாகிய காசலேமிற்காக ஆயத்தம் பண்ணுவேன்.

24 இப்பொழுதும் என் குமாரனே, தேவனுடைய வார்த்தை நிறைவேறும்படியாகவே, இந்த மொழிபெயர்ப்புச் சாதனங்கள் ஆயத்தம் பண்ணப்பட்டன. அவர் சொன்னதாவது:

25 நான் அவர்களுடைய சகல இரகசியக் கிரியைகளையும், அவர்களுடைய அருவருப்புகளையும், அந்தகாரத்தினின்று வெளிச்சத்திற்குக் கொண்டுவருவேன்; அவர்கள் மனந்திரும்பாவிடில், நான் அவர்களை பூமியின் பரப்பின் மீதிருந்து சங்கரிப்பேன்; அவர்களுடைய சகல இரகசியங்களையும், அருவருப்புகளையும், இந்த நிலத்தை இனி சுதந்தரிக்கும் எல்லா தேசத்தாரும் அறியும்படியாக, வெளிச்சத்திற்குக் கொண்டு வருவேன்.

26 இப்பொழுது என் குமாரனே, அவர்கள் மனந்திரும்பவில்லை என்று பார்க்கிறோம்; ஆதலால் அவர்கள் அழிக்கப்பட்டார்கள். இதுவரைக்கும் தேவ வார்த்தை இவ்வாறாக நிறைவேறியிருக்கிறது; ஆம், அவர்களுடைய இரகசிய அருவருப்புகள் அந்தகாரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு, நமக்கு தெரிவிக்கப்பட்டன.

27 இப்பொழுது என் குமாரனே, நீ அவர்களுடைய இரகசிய அருவருப்புகளில், அவர்களின் ஆணைகளையும், அவர்களின் உடன்படிக்கைகளையும், அவர்களின் ஒப்பந்தங்களையும் வைத்திருக்கவேண்டுமென்று, உனக்குக் கட்டளையிடுகிறேன்; ஆம், ஒருவேளை இவர்களும் அந்தகாரத்தினுள் விழுந்து அழிந்து விடாதபடிக்கு, நீ அவர்களுடைய சகல அறிகுறிகளையும், தந்திரங்களையும் இந்த ஜனங்கள் அறியாத வண்ணம் அவைகளை இவர்களிடமிருந்து நீங்கலாக்கி வை.

28 ஏனெனில் இதோ, அந்தகாரத்தில் கிரியை செய்வோர் அக்கிரமத்தில் பழுக்கும்போது, தேவ வல்லமையின்படியே அவர்கள் மீது அழிவு வரும்படிக்கு, சாபம் இந்த தேசத்தின் மீதுண்டு; ஆகவே இந்த ஜனம் அழியக்கூடாதென்று விரும்புகிறேன்.

29 அவர்களுடைய ஆணைகளின், இரகசிய திட்டங்களையும், அவர்களின் உடன்படிக்கைகளையும், இந்த ஜனங்களிடமிருந்து நீ மறைத்து, அவர்களின் துன்மார்க்கத்தையும், அவர்களின் கொலைகளையும், அவர்களின் அருவருப்புகளையும், மாத்திரம் அவர்களுக்குத் தெரிவிப்பாயாக; அப்படிப்பட்ட துன்மார்க்கத்தையும், அருவருப்புகளையும் கொலைகளையும் அவர்கள் வெறுத்தொதுக்கவேண்டுமென்று போதிப்பாயாக; இந்த ஜனங்கள் தங்களின் துன்மார்க்கம், அருவருப்புகள், தங்களின் கொலைகள் ஆகியவைகளினிமித்தமாக அழிக்கப்பட்டார்களென்றும் அவர்களுக்குப் போதிப்பாயாக.

30 இதோ, அவர்களின் அக்கிரமங்களைக் குறித்து அறிவிக்க, அவர்களுக்குள் வந்த கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் யாவரையும் அவர்கள் கொலை செய்தார்கள்; அவர்களைக் கொலை செய்தவர்களினுடைய இரத்தம், தங்களைக் கொலை செய்தவர்கள் மீது பழிதீர்க்கவேண்டுமென்று, கர்த்தராகிய தங்கள் தேவனிடத்தில் கூக்குரலிட்டது; இப்படியாக தேவனுடைய நியாயத்தீர்ப்பு, இந்த அந்தகாரக் கிரியைக்காரர்கள்மீதும், இரகசியச் சங்கங்களின்மீதும் வந்தது.

31 ஆம், அந்தகாரம் மற்றும் இரகசிய சங்கங்களின் கிரியைக்காரார்கள் அக்கிரமத்தில் பழுக்குமுன்னே மனந்திரும்பாவிடில், இந்த தேசம் என்றென்றுமாய் சபிக்கப்பட்டதாய், அழிவிற்குள்ளாகும்.

32 இப்பொழுதும் என் குமாரனே, நான் உன்னிடத்தில் பேசிய வார்த்தைகளை நினைவில் கொள். இந்த ஜனங்களுக்கு அந்த இரகசியத் திட்டங்களைத் தெரிவிக்காதே. ஆனால் பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் விரோதமான என்றுமுள்ள ஒரு வெறுப்பை அவர்களுக்குப் போதிப்பாயாக.

33 அவர்களுக்கு மனந்திரும்புதலையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தையும் பிரசங்கி; அவர்கள் தாழ்மையாயும், சாந்தகுணமுள்ளவர்களாயும், மனத்தாழ்மையுள்ளவர்களாயும் இருக்கும்படி போதி. அவர்கள் பிசாசின் சகல சோதனைகளையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள அவர்களின் விசுவாசத்தைக் கொண்டு எதிர்த்து நிற்கும்படி போதி.

34 அவர்கள் நற்கிரியைகள் செய்வதில் சோம்பலாயிராமல், சாந்த குணமுள்ளவர்களாயும், மனத்தாழ்மையுள்ளவர்களாயும் இருக்கவேண்டுமென போதி; ஏனெனில் அவர்களே தங்களின் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் கண்டடைவார்கள்.

35 என் குமாரனே, உன் வாலிபப்பிராயத்தில் ஞானத்தைக் கற்றுக்கொள்ள நினைவுகொள்; ஆம், உன் வாலிபப்பிராயத்தில் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளக் கற்றுக்கொள்.

36 ஆம், உன் எல்லா ஆதரவிற்காகவும் தேவனிடத்தில் கூக்குரலிடு; ஆம், உன் எல்லா செயல்களும் கர்த்தருக்காகவே இருப்பதாக. நீ எங்கு போனாலும் அது கர்த்தருக்காகவே இருப்பதாக. ஆம், உன் சகல சிந்தைகளும் கர்த்தருக்கு நேராய் வழிநடத்தப்படுவதாக. ஆம், உன் இருதயத்தின் பற்றுதல் என்றென்றும் கர்த்தர் மீதே வைக்கப்படுவதாக.

37 உன் எல்லா செயல்களிலும் கர்த்தரிடத்தில் ஆலோசி. அவர் உன்னை நன்மையாக நடத்துவார். ஆம், நீ இரவு படுக்கும்போது, கர்த்தர் உன்னை உன் உறக்கத்திலே காத்துக்கொள்ளும்படியாக, கர்த்தரிடத்தில் ஜெபித்துறங்கு; நீ காலையில் எழும்போது, தேவனுக்கென்று உன் உள்ளம் நன்றிகளால் நிறைந்திருக்குமாக, இவைகளை நீ செய்தால், கடைசி நாளின்போது, உயர்த்தப்படுவாய்.

38 இப்பொழுதும் என் குமாரனே, நம்முடைய பிதாக்கள் பந்து அல்லது திசைகாட்டி என்றழைத்த, அந்தப் பொருளைக் குறித்து நான் சிறிது சொல்ல வேண்டியுள்ளது, அல்லது நம்முடைய பிதாக்கள் அதை லியஹோனா என்று அழைத்தார்கள், அதற்கு திசைமானி என்று அர்த்தமாம்; கர்த்தர் அதை ஆயத்தம் பண்ணினார்.

39 இதோ, அதைப்போல வேலைப்பாடுள்ள எதையும் மனுஷன் செய்யக்கூடாததாயிருந்தது. இதோ நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் எந்த மார்க்கத்தில் பயணம் செய்யவேண்டுமென்று காண்பிப்பதற்காக அது ஆயத்தம் பண்ணப்பட்டது.

40 தேவனில் அவர்கள் வைத்த விசுவாசத்தின்படியே அது அவர்களுக்கு வேலை செய்தது; ஆதலால் தாங்கள் செல்லவேண்டிய வழியை அந்த முட்கள் குறிக்கும்படியாகச் செய்ய தேவனால் கூடுமென்று நம்ப, அவர்கள் விசுவாசித்தால் அது அப்படியே நடைபெற்றது; ஆதலால் இந்த அற்புதமும், மற்ற அநேக அற்புதங்களும், நாளுக்கு நாள் தேவ வல்லமையினால் செய்யப்பட்டன.

41 ஆயினும் அந்த அற்புதங்கள் எளிய வகையில் செய்யப்பட்டதாயினும், அது அவர்களுக்கு மகத்துவமான கிரியைகளைக் காண்பித்தது. அவர்கள் சோம்பலாகி தங்கள் விசுவாசத்தையும், கருத்தாய் இருப்பதையும் பிரயோகிக்காமல் மறந்து போன போதோ, அந்த மகத்துவ கிரியைகள் ஓய்ந்தன; அவர்கள் தங்கள் பிரயாணங்களில் முன்னேறவில்லை.

42 ஆதலால், அவர்கள் வனாந்தரத்திலேயே தங்கினார்கள். அல்லது நேரானதோர் மார்க்கத்திலே பிரயாணம் பண்ணவில்லை. அவர்களுடைய மீறுதல்களினிமித்தம் அவர்கள் பசியாலும், தாகத்தினாலும் உபத்திரவப்பட்டார்கள்.

43 இப்பொழுதும், என் குமாரனே, இந்தக் காரியங்களுக்கு நிழலாட்டம் இல்லாமல் இல்லை, என்பதை நீ அறிய வேண்டுமென விரும்புகிறேன்; நம்முடைய பிதாக்கள் இந்தத் திசைமானி காட்டியபடி செல்லாததினிமித்தம் (இக்காரியங்கள் இப்போது உலகப்பிரகாரமானவை) அவர்கள் விருத்தியடையவில்லை. ஆவிக்குரிய காரியங்களுக்கும் அப்படியே நடக்கும்.

44 ஏனெனில் இதோ, நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கான நேரான மார்க்கத்தைக் காட்டுகிற, இந்தத் திசைமானிக்குக் கீழ்ப்படிவது எப்படி சுலபமாயிருந்ததோ, அப்படியே உங்களுக்கு நித்திய சந்தோஷத்திற்கான நேரான மார்க்கத்தைக் காட்டுகிற, கிறிஸ்துவின் வார்த்தைக்குச் செவிகொடுப்பது சுலபமாயிருக்கும்.

45 இப்போது இக்காரியத்தில் ஒரு மாதிரி இல்லையா, என்று கேட்கிறேன். நம்முடைய பிதாக்கள் இந்த திசைகாட்டியின் மார்க்கத்தைப் பின்பற்றியபோது, அது அவர்களை வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குக் கொண்டு வந்தது போலவே, அப்படியே கிறிஸ்துவின் வார்த்தைகளின் மார்க்கத்தை நாம் பின்பற்றினால், அவை நம்மை இந்த சோகத்தின் பள்ளத்தாக்கிற்கும் அப்பாற்பட்ட, ஒரு மேன்மையான வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குக் கொண்டு செல்லும் என்பது, அதிக நிச்சயமே.

46 என் குமாரனே, இந்த வழியினுடைய இலகுவினிமித்தம், நாம் சோம்பல் அற்றவர்களாயிருப்போமாக; அவர்கள் பார்த்தால், ஜீவிக்கும்படியாக அது அவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருந்ததால், நம்முடைய பிதாக்களுக்கும் இப்படியேதான் சம்பவித்தது. நமக்கும் அப்படியேதான். வழி ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறது. நாமும் பார்த்தால் நாம் என்றென்றுமாய் ஜீவிப்போம்.

47 இப்பொழுதும் என் குமாரனே, இந்தப் பரிசுத்தக் காரியங்களைப் பராமரிக்கும்படி பார்த்துக்கொள். ஆம், நீ தேவனைப் பார்த்துப் பிழைத்திருக்கப் பார்த்துக்கொள். இந்த ஜனங்களிடத்தில் போய் வார்த்தையை அறிவித்து, தெளிந்த மனமுள்ளவனாயிரு. என் குமாரனே, போய் வா.