வேதங்கள்
ஆல்மா 7


தன்னுடைய சொந்த பதிவேட்டின் பிரகாரமாய் கிதியோனிலிருக்கும் ஜனங்களுக்கு ஆல்மா பேசிய வார்த்தைகள்.

அதிகாரம் 7 உட்பட

அதிகாரம் 7

கிறிஸ்து மரியாளிடத்திலே பிறப்பார் – அவர் மரணக்கட்டுக்களை அவிழ்த்து, தன் ஜனத்தினுடைய பாவங்களைச் சுமப்பார் – மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று, கட்டளைகளைக் கைக்கொள்பவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள் – அசுத்தமானவைகள் தேவ ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளமுடியாது – தாழ்மையும், விசுவாசமும், நம்பிக்கையும், தயாளத்துவமும் தேவை. ஏறக்குறைய கி.மு. 83.

1 இதோ என் பிரிமான சகோதரரே, நான் உங்களிடம் வர அனுமதிக்கப்பட்டதால், என் பாஷையிலும் என் சொந்த வாயினாலும், என் வாயின் வார்த்தைகளால் முதல் முறையாக பேசியிருக்கிறேன் என்பதாலும், உங்களிடத்தில் பேச முயற்சிக்கிறேன். நான் முழுவதுமாய் நியாயாசனத்தில் இருந்ததால், அதிக வேலையினிமித்தம் உங்களிடம் வரக்கூடாமல் போனது.

2 எனக்குப் பதிலாய், ஆளுகை செய்ய மற்றொருவனிடத்தில் நியாயாசனம் கொடுக்கப்படாமலிருந்திருந்தால் இச்சமயமும் நான் உங்களிடத்தில் வரக்கூடாமற்போயிருக்கும். நான் உங்களிடத்திலே வரும்படி கர்த்தர் மிகுந்த இரக்கத்தினாலே அருளச் செய்தார்.

3 இதோ, நீங்கள் தேவனுக்கு முன்பாக தாழ்ந்திருந்து அவருடைய கிருபையை இடைவிடாமல் வேண்டிக்கொள்பவர்களாக நான் உங்களைக் காண்பேன் என்றும், அவருக்கு முன்பாக குற்றமற்றவர்களாக நீங்கள் இருப்பதைக் காண்பேன் என்றும், சாரகெம்லாவிலே, கொடுமையான சூழ்நிலையிலிருந்த நமது சகோதரர்களைப் போலல்லாதவர்களாக உங்களைக் காண்பேன் என்றும், பெரும் நம்பிக்கையோடும் மிகுந்த வாஞ்சையோடும் வந்திருக்கிறேன்.

4 தம்முடைய நீதியான வழிகளிலே அவர்கள் மறுபடியும் ஸ்திரப்படுத்தப்பட்டிருக்கிறார்களென்று எனக்குத் தெரியப்பண்ணிய, மிகுந்த சந்தோஷத்தை எனக்கு தந்தருளிய, தேவனுடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக.

5 உங்களைக் குறித்து, நான் மகிழ்ச்சியடைவேன் என்று எனக்குள் இருக்கிற தேவ ஆவியின்படியே நம்புகிறேன்; அன்றியும் உங்களைக்குறித்த என் மகிழ்ச்சி சாரகெம்லாவிலே இருக்கிற சகோதரர் குறித்து நான் பட்ட அதிக உபத்திரவங்கள் மற்றும் வேதனை வாயிலாக வருகிறதை நான் வாஞ்சிக்கிறதில்லை. ஏனெனில் இதோ, அவர்களைக் குறித்த என் மகிழ்ச்சி மிகுந்த உபத்திரவத்தையும், வேதனையையும் அனுபவித்த பிறகு உண்டாயிருக்கிறது.

6 ஆனால் இதோ, உங்களுடைய நிலை உங்களின் சகோதரர் இருந்த மிகுந்த அவிசுவாசமான நிலையைப் போன்றதன்று, என நம்புகிறேன்; உங்களுடைய இருதயங்களிலே பெருமை கொள்ளாதிருக்கிறீர்களென்றும் நம்புகிறேன்; ஐஸ்வரியங்களிலும், உலகத்தினுடைய வீணான காரியங்களிலும் உங்களுடைய இருதயத்தை வைக்காமலிருக்கிறீர்கள், என்றும் நம்புகிறேன்; நீங்கள் விக்கிரகங்களை வணங்காமல், உண்மையானவரும் ஜீவிக்கிறவருமான தேவனைத் தொழுதுகொண்டு, வரவிருக்கிற உங்களுடைய பாவமன்னிப்பை மாறாத விசுவாசத்தோடு எதிர்நோக்கியிருக்கிறீர்கள், என்றும் நம்புகிறேன்.

7 இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், வரப்போகிறவைகள் பல உண்டு; இதோ, அவை அனைத்திற்கும் முக்கியமான காரியம் ஒன்று உண்டு, ஏனெனில் இதோ மீட்பர் தம் ஜனத்தின் மத்தியிலே வந்து ஜீவிக்கிற காலம் தூரமாயில்லை.

8 இதோ, அவர் தம் அநித்திய வாசஸ்தலத்திலே குடியிருக்கும் சமயத்தில் நம் மத்தியிலே வருவார் என்று நான் சொல்லவில்லை; ஏனெனில் இதோ, அப்படியிருக்குமென்று ஆவியானவர் என்னிடத்தில் சொல்லவில்லை. இந்தக் காரியத்தைக்குறித்து நான் அறியேன்; ஆனால் தம் வார்த்தையின்படியே எல்லா காரியங்களையும் செய்ய தேவனாகிய கர்த்தருக்கு வல்லமையுண்டு என்பதை மட்டும் அறிந்திருக்கிறேன்.

9 ஆனால் இதோ, ஆவியானவர் என்னை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: நீ இந்த ஜனங்களிடம் கூக்குரலிட்டு சொல்லவேண்டியதாவது, நீங்கள் மனந்திரும்பி, கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்தி, அவருடைய நேரான பாதைகளிலே நடவுங்கள்; ஏனெனில் இதோ, பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது. தேவ குமாரன் பூமியின் மீது வருகிறார்.

10 இதோ, அவர் நம்முடைய முற்பிதாக்களின் தேசமாகிய எருசலேமில் மரியாள் என்பவளிடத்தில் பிறப்பார். கன்னிகையும், அருமையானவளும், தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமுமான, அவள் பரிசுத்த ஆவியானவரின் பலத்தால் நிழலிடப்பட்டு, கர்ப்பவதியாகி குமாரனை, ஆம், தேவகுமாரனைப் பெறுவாள்.

11 அவர் ஜனங்களுடைய வேதனைகளையும், நோய்களையும் தம் மேல் ஏற்றுக்கொள்வார் என்ற வார்த்தை நிறைவேறும்படியாய் அவர் போய் சகலவித துன்பங்களையும், உபத்திரவங்களையும், சோதனைகளையும் அனுபவிப்பார்.

12 தம்முடைய ஜனத்தைக் கட்டியிருக்கிற மரணக்கட்டுக்களை அவிழ்க்கும்பொருட்டு அவர் மரணத்தை தம்மீது ஏற்றுக்கொள்வார்; தம் ஜனத்தினுடைய பெலவீனங்களுக்குத் தக்கதாய், அவர்களுக்கு மாம்சத்தின் பிரகாரமாய், ஒத்தாசை புரிவதெப்படி என்று தாம் அறிந்துகொள்ளும்படிக்கும் மாம்சத்தின்படி தாம் உருக்கமான இரக்கத்தினால் நிறைக்கப்படும்படிக்கும், அவர்களுடைய பெலவீனங்களைத் தம்மேல் ஏற்றுக்கொள்வார்.

13 ஆவியானவர் சகலவற்றையும் அறிகிறார், இருப்பினும் தேவ குமாரன் தம் ஜனத்தினுடைய பாவங்களை தம்மேல் ஏற்றுக்கொள்ளும்படிக்கும், தமது விடுதலையாக்கும் வல்லமையால் அவர்களுடைய மீறுதல்களை நீக்கும்படிக்கும், மாம்சத்தின் பிரகாரமாய் பாடனுபவிக்கிறார், இதோ, இதுவே எனக்குள்ளிருக்கிற சாட்சியம்.

14 நீங்கள் மனந்திரும்பி, மறுபடியும் பிறக்கவேண்டுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் நீங்கள் மறுபடியும் பிறவாவிட்டால், பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது என்று ஆவியானவர் சொல்கிறார். ஆதலால் உங்களுடைய பாவங்களிலிருந்து நீங்கள் கழுவப்படவும், உலகத்தினுடைய பாவங்களை எடுத்துப் போடுகிறவரும், சகல அநீதியிலிருந்து இரட்சிக்கவும், சுத்திகரிக்கவும், வல்லமையுடையவராகிய தேவாட்டுக்குட்டியானவர் மேல் விசுவாசத்தை வைக்கவும், மனந்திரும்புதலுக்கேதுவான ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளவும் வாருங்கள்.

15 ஆம், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், வந்து பயப்படாதிருங்கள், எளிதாய் உங்களை மேற்கொண்டு அழிவுக்கேதுவாக உங்களைக் கட்டிப்போடுகிற சகல பாவத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள். ஆம், வந்து செல்லுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பவும், தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும், அவருடனேகூட ஒரு உடன்படிக்கை செய்யவும், அதற்கு சாட்சியாய் ஞானஸ்நான தண்ணீருக்குள்ளே போக மனதாயிருக்கிறீர்களென்று, உங்கள் தேவனுக்கு காண்பியுங்கள்.

16 இதைச் செய்து, அது முதற்கொண்டு தேவ கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன், நான் ஏற்கனவே சொன்னதும், சொல்லுகிறதுமான, எனக்கு சாட்சி கொடுத்த பரிசுத்த ஆவியின் சாட்சியமத்தின்படியே, நித்திய ஜீவனைப் பெறுவான், என்பதை நினைவுகூருவான்.

17 இப்பொழுதும் எனக்கு பிரியமான சகோதரரே, இவைகளை விசுவாசிக்கிறீர்களா? இதோ, அவைகளை நீங்கள் விசுவாசிக்கிறதை நான் அறிந்திருக்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவைகளை நீங்கள் விசுவாசிக்கிறீர்களென்று, எனக்குள் இருக்கிற ஆவியானவரின் வெளிப்படுத்துதலின் வாயிலாக அறிந்திருக்கிறேன். நான் பேசிய காரியங்களான இவைகளைக்குறித்து, உங்களுடைய பலத்த விசுவாசத்தினிமித்தம் எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கிறது.

18 ஏனெனில் உங்கள் சகோதரரைப்போல நீங்கள் பதட்ட நிலையில் இருக்கக்கூடாது என்று வாஞ்சித்திருக்கிறேன் என்பதை தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொன்னேன். அந்தப்படியே என் வாஞ்சைகள் நிறைவேறின.

19 நீங்கள் நீதியின் பாதைகளிலே இருப்பதை உணருகிறேன்; நீங்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கு நடத்திச் செல்கிற பாதையிலிருக்கிறீர்கள் என்று உணருகிறேன்; ஆம், அவருடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துகிறீர்களென்பதையும் உணருகிறேன்.

20 அவர் மாறுபாடான பாதைகளில் நடப்பதுமில்லை, தாம் சொன்னவைகளிலிருந்து மாறிப்போவதுமில்லை; வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கத்துக்கும், சரியானதிலிருந்து தவறுக்கும் திரும்புவது சிறிதேனும் அவரில் இல்லை, என்பவைகளை அவருடைய வார்த்தையால் உண்டான சாட்சியமத்தின் மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதென்று உணருகிறேன்; ஆகவே அவருடைய மார்க்கம் ஒரு நித்திய சுற்று.

21 அவர் அசுத்த ஆலயங்களில் வாசம் பண்ணுவதுமில்லை; அசுசியானதும், சுத்தமற்றதுமான எதுவும் தேவனுடைய ராஜ்யத்தினுள் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை; ஆதலால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், காலம் வரும், ஆம், அந்தக் கடைசி நாளின்போது அசுசியானவன் தன் அசுசியிலேயே தரித்திருப்பான்.

22 இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் நடக்கவும், நீங்கள் பெற்றுக்கொண்ட அந்த தேவ பரிசுத்த முறைமையின்படியே நடக்கவும், தேவனுக்கு செய்யவேண்டிய கடமைகளின் நினைவுக்கு உங்களை விழித்தெழுப்பவே இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.

23 இப்பொழுதும், நீங்கள் தாழ்மையாயும், கீழ்ப்படிதலுள்ளவர்களாயும், மென்மையானவர்களாயும், போதிக்கப்படக்கூடியவர்களாயும், பூரண பொறுமையும், நீடிய சாந்தமும், சகலத்திலும் இச்சையடக்கமாயுமிருந்து, தேவ கட்டளைகளைக் கைக்கொள்வதில் சதாகாலங்களிலும் கருத்துள்ளவர்களாயும், தங்களுக்குத் தேவையாயிருக்கிற ஆவிக்குரியதும், இம்மைக்குரியதுமான சகல காரியங்களுக்கும் விண்ணப்பம் செய்து, நீங்கள் பெற்றுக்கொண்டவைகள் எதுவாகிலும், அதற்காய் எப்போதும் தேவனுக்கு நன்றியை ஏறெடுப்பவர்களாயும், இருக்கவேண்டுமென மனதாயிருக்கிறேன்.

24 உங்களிடத்தில் விசுவாசமும், நம்பிக்கையும், தயாளத்துவமும் உண்டாயிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள், அப்பொழுது நற்கிரியைகளிலே நீங்கள் பெருகுகிறவர்களாயிருப்பீர்கள்.

25 முடிவாய் நீங்கள் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும், யாக்கோபோடும், உலகம் துவங்கினது முதலிருந்த பரிசுத்த தீர்க்கதரிசிகளோடும் உட்கார அழைத்து வரப்படும் பொருட்டு, அவர்களுடைய கறையற்ற வஸ்திரங்கள் போல் உங்கள் வஸ்திரங்களும் கறையற்றதாக இருக்கப் பெற்று, நீங்கள் இனி ஒருபோதும், பரலோக ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்படாதவர்களாய் இருக்கும்படிக்கும், கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

26 இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, எனக்குள் சாட்சி கொடுக்கிற ஆவிக்கேற்றபடியே நான் இவ்வார்த்தைகளை பேசினேன்; இவ்வார்த்தைகளுக்கு நீங்கள் மிகுந்த கருத்தோடு செவிகொடுத்ததினிமித்தம் என் ஆத்துமா களிகூர்கிறது.

27 இப்பொழுதும் உங்களுடைய விசுவாசத்திற்கும், நற்கிரியைகளுக்கும் தக்கதாக தேவ சமாதானம் உங்கள் மேலும் உங்கள் வீடுகள் மேலும், நிலங்கள் மேலும், உங்கள் ஆடு மாடுகள் மேலும், நீங்கள் சுதந்தரித்திருக்கிற யாவின் மேலும், உங்கள் ஸ்திரீகள் மேலும், உங்கள் பிள்ளைகள் மேலும், இச்சமயம் முதற்கொண்டு என்றென்றும் நிலைத்திருப்பதாக. நான் சொன்னது இதுவே. ஆமென்.