வேதங்கள்
ஆல்மா 9


அம்மோனிகா தேசத்திலிருந்த ஜனங்களுக்கு ஆல்மாவும் அமுலேக்கும் அறிவித்த வார்த்தைகள். அவர்கள் சிறையிலே அடைக்கப்படுதலும், ஆல்மாவின் பதிவேட்டின்படியே, அவர்களுக்குள்ளிருந்த தேவனுடைய அற்புதமான வல்லமையினாலே விடுவிக்கப்படுதலும்.

அதிகாரங்கள் 9 முதல் 14 உள்ளிட்டவை.

அதிகாரம் 9

அம்மோனிகாவின் ஜனங்களை மனந்திரும்பும்படி ஆல்மா, கட்டளையிடுதல் – கடைசி காலங்களிலே கர்த்தர் லாமானியருக்கு இரங்குவார் – நேபியர் வெளிச்சத்தைக் கைவிடுவார்களெனில் லாமானியர்களால் அழிக்கப்படுவர் – தேவகுமாரன் சீக்கிரமாய் வருவார் – மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு தம்முடைய நாமத்திலே விசுவாசிக்கிறவர்களை அவர் மீட்டுக்கொள்வார். ஏறக்குறைய கி.மு. 82.

1 பின்னும் ஆல்மாவாகிய நான், அமுலேக்கைக்கூட கூட்டிக்கொண்டு அம்மோனிகா பட்டணத்தாராகிய, இந்த ஜனத்திற்கு மறுபடியும் பிரசங்கிக்க வேண்டுமென்று தேவனாலே கட்டளையிடப்பட்டவனாய், அந்தப்படியே, அவர்களுக்கு நான் பிரசங்கிக்கத் துவங்குகையில், அவர்கள் என்னோடு தர்க்கித்துச் சொன்னதாவது:

2 நீர் யார்? இந்த உலகம் ஒழிந்துபோம் என்று ஒருவன் பிரசங்கித்தால், நாங்கள் அவனுடைய சாட்சியமத்தை விசுவாசிப்போம் என்று எண்ணுகிறீரோ? என்றார்கள்.

3 அவர்கள் பேசிய வார்த்தைகளை அவர்கள் புரிந்துகொள்ளாதிருந்தார்கள்; ஏனெனில் உலகம் ஒழிந்துபோம் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

4 பின்னும் அவர்கள், இந்த மாநகரம் ஒரே நாளில் அதம்பண்ணப்படுமென்று நீர் தீர்க்கதரிசனமாய் உரைத்தாலும், உம்முடைய வார்த்தைகளை விசுவாசிக்கமாட்டோம், என்றும் சொன்னார்கள்.

5 அவர்கள் கடின இருதயமும், வணங்காக்கழுத்துள்ள ஜனமாயும் இருந்ததினிமித்தம், தேவன் அப்படிப்பட்ட அதிசயமுள்ள கிரியைகளைச் செய்ய முடியும், என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

6 அவர்கள், அப்படிப்பட்ட பெரிதும் அற்புதமானவைகளைக் குறித்த சத்தியத்தை இந்த ஜனங்களுக்கு அறிவிக்க, அவர்களுக்குள்ளே அதிகாரம்கொண்ட ஒரு மனுஷனையன்றி வேறு யாரையும் அனுப்பாத அந்த தேவன் யார்? என்றார்கள்.

7 அவர்கள் தங்கள் கைகளை என்மீது போடும்படி முன்னே வந்தார்கள். ஆனால் இதோ, அப்படிச் செய்யவில்லை. நான் அவர்களுக்கு அறிவிக்க, தைரியமாய் நின்று அவர்களுக்கு சாட்சி கொடுத்ததாவது:

8 இதோ, துன்மார்க்கமும், மாறுபாடுமுள்ள தலைமுறையே, உங்களுடைய பிதாக்களுடைய பாரம்பரியங்களை மறந்து போனதென்ன, ஆம், தேவனுடைய கட்டளைகளை எவ்வளவு சீக்கிரமாய் மறந்துபோனீர்கள்?

9 நம்முடைய பிதாவாகிய லேகி எருசலேமைவிட்டு தேவனுடைய கரத்தினால் வழிநடத்தப்பட்டதை நீங்கள் நினைவுகூர்வதில்லையா? அவர்கள் யாவரும் அவராலே வனாந்தரத்திலே நடத்தப்பட்டார்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூர்வதில்லையா?

10 நம்முடைய தகப்பன்மார்களை எவ்வளவு விசை அவர்களுடைய விரோதிகளின் கைகளுக்கு விலக்கிக்காத்தார் என்பதையும், அவர்கள் அழிக்கப்பட்டுப் போவதிலிருந்தும், அவர்களுடைய சொந்த சகோதரரின் கைகளிலிருந்தும் அழிக்கப்பட்டுப் போவதிலிருந்தும் கூட, அவர்களை விலக்கிக் காத்தார் என்பதை இவ்வளவு விரைவில் மறந்து போனீர்களா?

11 அவருடைய இணையற்ற வல்லமையும், நம்பேரிலான அவருடைய இரக்கமும், நீடிய சாந்தமும் இல்லாதே போயிருக்குமானால், இந்தக் காலகட்டத்திற்கு அதிக முன்னமே, பூமியின் பரப்பின் மீதிருந்து, தப்பமுடியாதளவிற்கு அறுப்புண்டு போயிருப்போம். ஒருவேளை முடிவற்ற புலம்பலும் துக்கமுமுள்ள நிலைக்கே ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்போம்.

12 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் உங்களை மனந்திரும்பும்படி கட்டளையிடுகிறார்; நீங்கள் மனந்திரும்பாவிடில் தேவனுடைய ராஜ்யத்தை எந்த வகையிலும் சுதந்தரிக்கமுடியாது, ஆனால் இதோ இதுமட்டுமல்ல, நீங்கள் மனந்திரும்பும்படி கட்டளையிட்டிருக்கிறார், அல்லது உங்களை பூமியின் பரப்பின் மீதிருந்து முழுவதுமாக அழித்துப்போடுவார்; ஆம், அவர் தன் உக்கிரத்தில் உங்களை விசாரிப்பார்; அவர் தம் கோபாக்கினையிலிருந்து உங்களைத் தப்பவொட்டார்.

13 இதோ, நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளும் அளவிற்கு அவ்வளவாய் தேசத்திலே விருத்தியடைவீர்கள், என்று அவர் லேகிக்குச் சொன்ன வார்த்தைகளை நீங்கள் நினைவில் கொள்ளவில்லையா? என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் போகிற அளவிற்கு அவ்வளவாய் கர்த்தருடைய பிரசன்னத்தினின்று அறுப்புண்டு போவீர்கள், என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே.

14 தேவனுடைய கட்டளைகளை லாமானியர்கள் கைக்கொள்ளாததினிமித்தம் அவர்கள் கர்த்தருடைய பிரசன்னத்தினின்று அறுப்புண்டு போனார்கள், என்பதை நீங்கள் நினைவுகூரவேண்டுமென்று விரும்புகிறேன். லாமானியர்கள் தேசத்திலே மீறுதல்களை செய்த மாத்திரத்திலேயே அவருடைய சமுகத்தினின்று அறுப்புண்டு போனார்கள். இதினிமித்தம் கர்த்தருடைய வசனம் மெய்ப்பிக்கப்பட்டதை நாம் காண்கிறோம்.

15 இருப்பினும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள், உங்கள் பாவங்களிலேயே தரித்திருப்பீர்களெனில், நியாயத்தீர்ப்பின் நாளில் உங்களுக்கு நேரிடுவதைப் பார்க்கிலும் அவர்களுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும். நீங்கள் மனந்திரும்பாவிடில் உங்களுக்கு இந்த வாழ்க்கையில் நேரிடுவதைப் பார்க்கிலும் அவர்களுக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்.

16 ஏனெனில் லாமானியர்களுக்கு அநேக வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டன. தங்களுடைய தகப்பன்மார்களின் பாரம்பரியத்தினிமித்தம் அறியாமையின் நிலையில் தரித்திருந்தார்கள். அதினிமித்தம். கர்த்தரும் அவர்களுக்கு இரங்கி அவர்கள் தேசத்திலே நீடித்து வாழும்படிச் செய்வார்.

17 ஒரு காலகட்டத்திலே, அவர்கள் அவருடைய வார்த்தையை விசுவாசித்து, தங்களுடைய தகப்பன்மார்களுடைய பாரம்பரியத்தின் தப்பிதங்களை அறிய வருவார்கள்; அவர்களில் பலர் இரட்சிக்கப்படுவார்கள். ஏனெனில் கர்த்தர் தம் நாமத்தால் அழைக்கும் யாவர்மீதும் இரக்கமாயிருப்பார்.

18 ஆனால், இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் உங்கள் துன்மார்க்கத்தில் நிலைகொண்டிருப்பீர்களெனில், தேசத்திலே உங்கள் ஆயுட்காலம் நீடித்திருக்கக்கூடாதபடிக்கு, லாமானியர்கள் உங்கள்மேல் அனுப்பப்படுவார்கள்; நீங்கள் மனந்திரும்பாவிடில், நீங்கள் அறியாதிருக்கிற சமயம் அவர்கள் வருவார்கள், நீங்கள் பூரண அழிவால் விசாரிக்கப்படுவீர்கள்; கர்த்தருடைய கொடிய கோபத்திற்குத் தக்கதாக இப்படிச் சம்பவிக்கும்.

19 இவருடைய ஜனத்தை அழித்துப்போடும் பொருட்டு, நீங்கள் உங்கள் அக்கிரமங்களில் ஜீவித்திருக்க அவர் உங்களை அனுமதியார். அப்படியல்ல, என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நேபியின் ஜனம் என்று அழைக்கப்படுகிற தம்முடைய ஜனம், தேவனாகிய தங்கள் கர்த்தரிடமிருந்து பெரிய வெளிச்சத்தையும், மிகுந்த ஞானத்தையும் பெற்ற பின்னரும், அவர்கள் பாவங்களிலும், மீறுதல்களிலும் விழுவது சாத்தியமெனில் அவர் லாமானியரைக் கொண்டு அவர்களை நிர்மூலமாக்கும்படிச் செய்வார்.

20 ஆம், கர்த்தருக்கு மிகவும் பிரியமான ஜனமாய் இருந்து, ஆம், மற்ற சகல தேசங்களிலும், இனங்களிலும், பாஷைக்காரர்களிலும், ஜனங்களிலும் பிரியமானவர்களாயும், தங்களுடைய வாஞ்சைகளுக்கும், தங்களுடைய விசுவாசத்திற்கும், ஜெபத்திற்கும் ஏற்ப, இருந்தும் இருக்கிறதும், வரப்போகிறவைகளுமான சகல காரியங்களும், அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு;

21 தேவனுடைய ஆவியால் சந்திக்கப்பட்டு, தூதர்களோடு சம்பாஷித்து, கர்த்தருடைய சத்தத்தால் பேசப்பட்டு, தீர்க்கதரிசன ஆவியையும் வெளிப்படுத்தலின் ஆவியையும், இன்னும் பல வரங்களான அன்னிய பாஷை பேசுகிற வரத்தையும், பிரசங்கிக்கிற வரத்தையும், பரிசுத்த ஆவியானவரின் வரத்தையும், மொழிபெயர்க்கும் வரத்தையும் அவர்கள் பெற்று;

22 அவர்கள் கர்த்தருடைய கரத்தாலும், தேவனாலும் எருசலேம் தேசத்திலிருந்து வெளியே வழிநடத்தப்பட்டு பஞ்சத்திலிருந்தும், நோய்களிலிருந்தும், சகல வியாதிகளிலிருந்தும் காப்பாற்றப்பட்டு, யுத்தங்களிலே அழிக்கப்பட்டுப் போகாதபடி பலவான்களாக்கப்பட்டு, அவ்வப்போது அடிமைத்தனத்திலிருந்து தப்புவிக்கப்பட்டு, இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, சகல காரியங்களிலும் ஐஸ்வர்யவான்களாகும்படி விருத்தியாக்கப்பட்ட பின்னரும்,

23 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்த ஜனங்கள் கர்த்தருடைய கரத்திலிருந்து இப்படிப்பட்ட அநேக ஆசீர்வாதங்களைப் பெற்று, தாங்கள் பெற்றிருக்கிற வெளிச்சத்திற்கும், ஞானத்திற்கும் விரோதமாய் மீறி, அதனுள் விழுவார்களெனில், அவர்களுக்கு நேரிடப் போவதைப் பார்க்கிலும், லாமானியருக்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்.

24 ஏனெனில், இதோ லாமானியருக்கு கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் நீங்கள் அவைகளை மீறுவீர்களெனில், உங்களுக்கு அவை தரப்படமாட்டாது. ஏனெனில் தமக்கு விரோதமாய் கலகம் செய்பவரை பூமியின் பரப்பின் மீதிருந்து நிர்மூலமாக்கிப்போடுவேன், என்று கர்த்தர் திட்டவட்டமான வாக்குத்தத்தத்தையும், உறுதியான தீர்ப்பையும் அளித்தார் அல்லவா?

25 இப்போதும் நீங்கள் அழிந்து போகக் கூடாதென்பதற்காகவே, கர்த்தர் தம் ஜனங்களில் அநேகரை சந்திக்க தன் தூதரை அனுப்பி, அவர்கள் போய் இந்த ஜனங்களிடத்தில், மனந்திரும்புங்கள், ஏனெனில், பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறதென்று, சத்தமாய் கூக்குரலிட்டு அறிவிக்கும்பொருட்டு சொல்கிறார்.

26 இப்போதிலிருந்து கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே தேவ குமாரன் தம் மகிமையில் வருவார்; பிதாவினுடைய ஒரேபேறானவருக்குரிய மகிமையே, பூரண கிருபையும், நேர்மையும், சத்தியமும், பூரண பொறுமையும், இரக்கமும், நீடிய சாந்தமும், அவரில் உண்டாயிருந்து, தமது ஜனத்தின் கூக்குரலுக்கு சீக்கிரமாய் செவிசாய்த்து அவர்களுடைய ஜெபங்களுக்கு பதில் கொடுக்கிற, அவருடைய மகிமையாகும்.

27 இதோ, தம் நாமத்தின்மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் மனந்திரும்புதலுக்கேதுவான ஞானஸ்நானத்தைப் பெறுகிறவர்களை அவர் மீட்டுக்கொள்ளவே வருகிறார்.

28 ஆதலால், தங்கள் கிரியைகளை நடப்பித்ததிற்கேற்ப, சகல மனுஷரும் அவைகளுக்குரிய பலனை அறுக்கிற காலம் சமீபமாயிருப்பதினாலே கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவர்கள் நீதியுள்ளவர்களாய் இருந்திருந்தால், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் வல்லமையினாலும், விடுதலையின்படியேயும், தங்களுடைய ஆத்துமாக்களின் இரட்சிப்பை அறுப்பார்கள்; அவர்கள் பொல்லாதவர்களாய் இருப்பார்களாயின் பிசாசின் வல்லமையினாலும் அடிமைத்தனத்தின்படியேயும் தங்களுடைய ஆத்துமாக்களின் ஆக்கினையை அறுப்பார்கள்.

29 இதோ, ஜனங்களிடம் கூக்குரலிடுகிற தூதனுடைய சத்தம் இதுவே.

30 இப்பொழுது, என் பிரியமான சகோதரரே, நீங்கள் என் சகோதரராயிருப்பதாலே எனக்கு பிரியமானவர்களாயும், இருக்க வேண்டும். நீங்கள் தொலைந்த வீழ்ந்துபோன ஜனமாயிருப்பதினிமித்தமும், உங்களுடைய இருதயங்கள் தேவனுடைய வசனத்திற்கு விரோதமாய், வெகுவாய் கடினப்பட்டிருப்பதாலும், மனந்திரும்புதலுக்கேதுவான கிரியைகளை நீங்கள் நடப்பிக்க வேண்டும்.

31 இப்பொழுது, அந்தப்படியே, ஆல்மாவாகிய நான் இந்த வார்த்தைகளை சொன்னதினிமித்தம், இதோ, இந்த ஜனங்களை, நீங்கள் கடின இருதயமும், வணங்காக் கழுத்துமுள்ள ஜனம் என்று சொன்னதினிமித்தம், அவர்கள் என்மேல் கோபித்தார்கள்.

32 அவர்கள் தொலைந்த மற்றும் வீழ்ந்துபோன ஜனம் என்று நான் அவர்களிடம் சொன்னதினிமித்தம், அவர்கள் என்மீது கோபம் கொண்டு என்னை சிறையிலே போடும்படிக்கு, என்மேல் தங்கள் கைகளைப் போடப்பார்த்தார்கள்.

33 ஆனால், அந்தப்படியே, அச்சமயத்திலே அவர்கள் என்னைப் பிடித்து சிறையில்போட, கர்த்தர் அவர்களை அனுமதிக்கவில்லை.

34 அந்தப்படியே, அமுலேக்கும் போய் அவர்களுக்கு பிரசங்கிக்க ஆரம்பித்தான். அமுலேக்கின் வார்த்தைகள் அனைத்தும் எழுதப்படவில்லையென்றாலும் அவன் வார்த்தைகளில் ஒரு பகுதி இப்புஸ்தக்கத்திலே எழுதப்பட்டிருக்கிறது.