வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1


கோட்பாடும்
உடன்படிக்கைகளும்

பாகம் 1

நவம்பர் 1, 1831ல் ஒஹாயோவின் ஹைரமில் நடைபெற்ற சபை மூப்பர்களின் ஒரு விசேஷித்த மாநாட்டின்போது தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இதற்கு முன் கர்த்தரிடமிருந்து அநேக வெளிப்படுத்தல்கள் பெறப்பட்டிருந்தன, இவற்றின் தொகுப்பை புஸ்தக வடிவில் வெளியிடுவது மாநாட்டில் முக்கியமாய் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று. இந்த ஊழியக்காலத்தில் கொடுக்கப்பட்ட கோட்பாடுகள், உடன்படிக்கைகள் மற்றும் கட்டளைகளுக்கான கர்த்தரின் முன்னுரை இந்த பாகத்தில் அடங்கியிருக்கிறது.

1–7, சகல மனுஷருக்கும் எச்சரிக்கையின் குரல்; 8–16, இரண்டாவது வருகைக்கு முன்பாக மதமாறுபாடும் துன்மார்க்கமும்; 17–23, கர்த்தரின் சத்தியங்களையும் வல்லமைகளையும் பூமியின்மேல் மறுஸ்தாபிதம் செய்ய ஜோசப் ஸ்மித் அழைக்கப்படுதல்; 24–33, மார்மன் புஸ்தகம் வெளிக்கொண்டுவரப்பட்டு மெய்யான சபை ஸ்தாபிக்கப்படுதல்; 34–36, பூமியிலிருந்து சமாதானம் எடுத்துக் கொள்ளப்படும்; 37–39, இந்தக் கட்டளைகளை ஆராயுங்கள்.

1 உன்னதத்தில் வாசம்பண்ணுகிற, மனுஷர் எல்லார் மேலும் கண்ணோக்கமாயிருக்கிற அவரின் சத்தம் சொல்லுகிறதாவது, எனது சபையின் ஜனங்களே கேளுங்கள், ஆம், மெய்யாகவே நான் சொல்லுகிறேன், தூரத்திலிருக்கிற ஜனங்களே கேளுங்கள், சமுத்திரத்தின் தீவுகளிலிருக்கிறவர்களே, ஒன்றுகூடி கேளுங்கள்.

2 மெய்யாகவே கர்த்தரின் சத்தம் சகல மனுஷர்களுக்குமாயிருப்பதால், ஒருவரும் தப்பிப்பதில்லை, காணாத கண்ணும் இல்லை, கேளாத காதும் இல்லை, ஊடுருவிச் செல்லாத இருதயமுமில்லை.

3 கலகக்காரர்கள் மிகுந்த வேதனையினாலே குத்தப்படுவார்கள், அவர்களின் அக்கிரமங்கள் வீடுகளின் கூரைகளின் மேல் பேசப்படுவதால், அவர்களின் இரகசியமான நடத்தைகள் வெளியரங்கமாக்கப்படும்.

4 இந்தக் கடைசி நாட்களில் நான் தெரிந்துகொண்ட, எனது சீஷர்களின் வாய்களால், சகல ஜனங்களுக்கும் எச்சரிக்கையின் குரல் கொடுக்கப்படும்.

5 கர்த்தராகிய நான் அவர்களுக்கு கட்டளையிட்டதால் அவர்கள் புறப்பட்டுப் போவார்கள், யாருமே அவர்களைத் தடுக்கமாட்டார்கள்.

6 பூமியின் குடிகளே, இதோ, இது என்னுடைய அதிகாரமாயும், எனது ஊழியக்காரர்களின் அதிகாரமாயும், மற்றும் உங்களுக்காக வெளியிடப்பட்ட, அவர்களுக்கு நான் கொடுத்த எனது கட்டளைகளின் புஸ்தகத்தின் முன்னுரையாகவும் இருக்கிறது.

7 ஆகவே பயந்து நடுங்குங்கள், ஏனெனில் ஜனங்களே, கர்த்தராகிய நான் அவர்களுக்குக் கட்டளையிட்டவைகள் நிறைவேற்றப்படும்.

8 அவிசுவாசிகளும், கலகம் பண்ணுகிறவர்களுமான பூமியின் குடிகளுக்குள் இந்த செய்தியைக் கொண்டுபோகிறவர்களுக்கு, பூமியிலும் பரலோகத்திலும் முத்திரிக்கும் வல்லமை கொடுக்கப்படுமெனவும்,

9 தேவனின் கோபம் அளவில்லாமல் துன்மார்க்கர் மேல் கொட்டப்படும்போது, ஆம், மெய்யாகவே அவர்களை முத்திரிக்கும் நாள்வரைக்கும்,

10 கர்த்தர் வரும் நாள் வரைக்கும், அவனது கிரியைக்குத்தக்கதாய், ஒவ்வொரு மனுஷனுக்கும் ஈடுசெய்யவும், அவனது சகமனுஷனுக்கு அவன் அளந்த அளவின்படி, ஒவ்வொரு மனுஷனுக்கும் அளந்து கொடுக்கப்படும் என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11 ஆகவே காதுள்ள அனைவரும் கேட்கும்படியாக, பூமியின் கடையாந்தரம் மட்டும் கர்த்தரின் சத்தம் கேட்கும்.

12 ஆயத்தமாயிருங்கள், வரப்போகிறதற்காக ஆயத்தமாயிருங்கள், ஏனெனில் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

13 கர்த்தரின் கோபம் மூட்டப்பட்டுள்ளது, பரலோகத்தில் அவரது பட்டயம் பதப்படுத்தப்பட்டுள்ளது, பூமியின் குடிகள்மீது அது விழும்.

14 கர்த்தரின் கரம் வெளிப்படும், கர்த்தரின் சத்தத்தையும், அவரது ஊழியக்காரர்களின் சத்தத்தையும் கேளாதவர்களும், தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் சத்தத்துக்கு செவிகொடாதவர்களும் ஜனங்களின் மத்தியிலிருந்து அறுப்புண்டு போகும் நாள்வரும்;

15 ஏனெனில் அவர்கள் எனது நியமங்களிலிருந்து விலகிப்போய், எனது நித்திய உடன்படிக்கையை உடைத்துப் போட்டார்கள்.

16 கர்த்தரின் நீதியை நிலைநாட்ட அவர்கள் அவரை நாடவில்லை, ஆனால் ஒவ்வொரு மனுஷனும் அவனது சொந்த வழியிலும், அவனது சொந்த தேவனின் சாயலிலும் நடக்கிறான். அதன் சாயலானது உலகத்தின் சாயலைப் போலிருக்கிறது, அது ஒரு விக்கிரகத்துக்குரிய பொருளால் ஆனதாயிருக்கிறது, அது பழையதாகி, பாபிலோனிலே பாழாய்ப் போகும், மாபெரும் பாபிலோனும் வீழ்ந்து போகும்.

17 ஆகவே, பூமியின் குடிகள் மேல் வரப்போகிற அழிவை அறிந்திருந்து, கர்த்தராகிய நான் எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனை அழைத்து, பரலோகத்திலிருந்து அவனோடு பேசி, கட்டளைகளை அவனுக்குக் கொடுத்தேன்.

18 இந்தக் காரியங்களை அவர்கள் உலகத்திற்கு பிரகடனப்படுத்தவும், தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்படவும் மற்றவர்களுக்கும் கட்டளைகளைக் கொடுத்தேன்.

19 மனுஷன் அவனது சகமனுஷனுக்கு ஆலோசனையளிக்கக் கூடாதபடிக்கும், மாம்ச புயத்தின் மேல் நம்பிக்கை வைக்காதபடிக்கும், உலகத்தின் பலவீனமானவைகள் வந்து, திராணியும் பலமும் உடையவற்றைத் தகர்க்கும்

20 ஆனால் சகல மனுஷரும், உலகத்தின் இரட்சகரான கர்த்தராகிய தேவனின் நாமத்தில் பேசும்படிக்கும்,

21 விசுவாசமும் பூமியின்மீது அதிகரிக்கும்படிக்கும்,

22 எனது நித்திய உடன்படிக்கை நிலைவரப்படும்படிக்கும்,

23 எனது பூரண சுவிசேஷம் பலவீனராலும் பேதையராலும் பூமியின் கடையாந்தரம் மட்டுமாகவும், ராஜாக்களுக்கும் தேசாதிபதிகளுக்கும் முன்பாக பிரகடனப்படுத்தப்படும்படிக்கும்,

24 இதோ, தேவனாகிய நானே இதை உரைத்தேன். இந்த கட்டளைகள் என்னுடையவை, எனது ஊழியக்காரர்களின் பலவீனத்திலும், அவர்களின் பாஷையின்படியே அவர்கள் புரிந்துகொள்ளத்தக்கதாக, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.

25 மேலும் எவ்வளவாய் அவர்கள் அதை தவறாக்குகிறார்களோ அவ்வளவாய் அது தெரியப்படுத்தப்படும்.

26 எவ்வளவாய் அவர்கள் ஞானத்தைத் தேடுகிறார்களோ அவ்வளவாய் அவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

27 எவ்வளவாய் அவர்கள் பாவஞ் செய்கிறார்களோ அவர்கள் மனந்திரும்பும்படி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

28 எவ்வளவாய் அவர்கள் தங்களைத் தாழ்த்துகிறார்களோ அவ்வளவாய் அவர்கள் பெலப்படுத்தப்படுவார்கள், உன்னதத்திலிருந்து ஆசீர்வதிக்கப்படுவார்கள், அவ்வப்போது ஞானத்தைப் பெறுவார்கள்.

29 நேபியர்களின் பதிவேட்டைப் பெற்றபின், ஆம், எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவன் தேவனின் இரக்கத்தின் மூலமாகவும், தேவனின் வல்லமையாலும் மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்க்க அதிகாரம் பெறுவான்.

30 மேலும், இந்த கட்டளைகள் கொடுக்கப்பட்டவர்களுக்கு, இந்த சபையின் அஸ்திபாரத்தை அமைக்கவும், இருளிலிருந்தும் அந்தகாரத்திலிருந்தும் அதை வெளியே கொண்டுவரவும் அதிகாரமிருக்கும், பூமியின் முழு பரப்பின் மேலும் மெய்யானதும் ஜீவிக்கிறதுமான ஒரே சபையின்மேல் கர்த்தராகிய நான் பிரியமாயிருக்கிறேன் என்று தனிப்பட்டவருக்கல்லாமல் மொத்த சபைக்கும் பேசுகிறேன்.

31 ஏனெனில் கர்த்தராகிய நான் பாவத்தை ஒரு துளியாகிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

32 ஆனாலும், மனந்திரும்பி கர்த்தருடைய கட்டளைகளின்படி நடக்கிறவன் மன்னிக்கப்படுவான்.

33 மனந்திரும்பாதவனிடத்திலிருந்து அவன் பெற்றுக்கொண்ட ஒளியும் கூட எடுத்துக்கொள்ளப்படும், ஏனெனில் என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடு போராடுவதில்லை என சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

34 பூமியின் குடிகளே, மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மாம்சமான யாவரும் இந்தக் காரியங்களை அறியப்பண்ணும்படியாக கர்த்தராகிய நான் மனதாயிருக்கிறேன்.

35 ஏனெனில் நான் பட்சபாதமில்லாதவர், அந்த நாள் சீக்கிரமாய் வருகிறதென மனுஷர் யாவரும் அறிந்துகொள்வார்கள் என வாஞ்சிக்கிறேன். நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் சமீபமாயிருக்கிறது. அப்போது பூமியிலிருந்து சமாதானம் எடுத்துக்கொள்ளப்பட்டு பிசாசானவன் தன் சொந்த ஆளுகையின் மீது வல்லமை பெறுவான்.

36 மேலும், கர்த்தர் அவரது பரிசுத்தவான்கள்மேல் அதிகாரம் கொண்டு, அவர்களுக்கு மத்தியில் ஆளுகை செய்வார், ஏதோம் அல்லது உலகத்தை நியாயந்தீர்க்க இறங்கிவருவார்.

37 இந்தக் கட்டளைகள் மெய்யானவைகளாயும் உண்மையானவைகளாயும், அவைகளிலுள்ள தீர்க்கதரிசனங்களும் வாக்குத்தத்தங்களும் நிறைவேறப்போவதாலும் அவைகளை ஆராயுங்கள்.

38 கர்த்தராகிய நான் பேசியவற்றை நானே பேசினேன், நான் என்னை நியாயப்படுத்துவதில்லை, வானங்களும் பூமியும் கடந்துபோனாலும், எனது வார்த்தை கடந்துபோவதில்லை, ஆனால் நிறைவேற்றப்படும், எனது சொந்தக் குரலிலானாலும், எனது ஊழியக்காரர்களின் குரலிலானாலும் அவை நிறைவேற்றப்படும். அது ஒன்றாயிருக்கும்.

39 இதோ, கர்த்தரே தேவனும், ஆவியானவருமாய் சாட்சியளிக்கிறார், சாட்சி சத்தியமாயிருக்கிறது, சத்தியம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். ஆமென்.