வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 63


பாகம் 63

ஆகஸ்டு 30, 1831ல் ஒஹாயோவிலுள்ள கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல் தீர்க்கதரிசியும், சிட்னி ரிக்டனும், ஆலிவர் கௌட்ரியும் தங்களின் மிசௌரி பயணத்திலிருந்து ஆகஸ்டு 27ல் கர்த்லாந்திற்கு வந்தடைந்தார்கள். இந்த வெளிப்படுத்தலை ஜோசப் ஸ்மித்தின் வரலாறு விவரிக்கிறது, “சபையின் இந்த ஆரம்ப காலத்தில் நம்முடைய இரட்சிப்பைக் குறித்த எந்த வழியிலும் சகல காரியங்களிலும் கர்த்தரின் வார்த்தையைப் பெற அங்கே மிகுந்த ஆர்வமிருந்தது; இப்பொழுது சீயோன் தேசம் பார்வையில் மிக முக்கியமான உலகப்பிரகாரமான காரியமாயிருந்ததால் பரிசுத்தவான்களின் கூடுகை குறித்தும், நிலம் வாங்குவதைக் குறித்தும், பிற காரியங்களைக் குறித்தும் கூடுதலான தகவலுக்காக நான் கர்த்தரிடம் விசாரித்தேன்.”

1–6, துன்மார்க்கர் மேல் கோபத்தின் நாள் வரும்; 7–12, விசுவாசத்தால் அடையாளங்கள் வருகின்றன; 13–19, இருதயத்திலே விபச்சாரமுடையோர் விசுவாசத்தை மறுதலிப்பார்கள், அக்கினிக்கடலிலே தள்ளப்படுவார்கள்; 20, மறுரூபமாக்கப்பட்ட பூமியின்மீது விசுவாசிகள் சுதந்தரத்தைப் பெறுவார்கள்; 21, மறுரூப மலையில் நடந்தவைகளின் ஒரு முழுக்குறிப்பு இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை; 22–23, ராஜ்யத்தின் இரகசியங்களை, கீழ்ப்படிபவர்கள் பெறுகிறார்கள்; 24–31, சீயோனின் சுதந்தரங்கள் வாங்கப்படவேண்டும்; 32–35, கர்த்தர் யுத்தங்களை கட்டளையிடுகிறார், துன்மார்க்கர் துன்மார்க்கரை கொன்று போடுகிறார்கள்; 36–48, பரிசுத்தவான்கள் சீயோனில் கூடிவந்து, அதைக் கட்ட பணம் கொடுக்கவேண்டும்; 49–54, இரண்டாவது வருகையிலும், உயிர்த்தெழுதலிலும் மற்றும் ஆயிரம் வருஷத்தின்போதும் விசுவாசிகளுக்கு ஆசீர்வாதங்கள் உறுதியளிக்கப்படுகிறது; 55–58, இது எச்சரிக்கையின் நாள்; 59–66, அதிகாரமில்லாமல் கர்த்தரின் நாமத்தைப் பயன்படுத்துகிறவர்களால் அது வீணிலே வழங்கப்படுகிறது.

1 ஜனங்களே கேளுங்கள், உங்கள் இருதயங்களைத் திறவுங்கள், தூரத்திலிருந்து செவிகொடுங்கள்; கர்த்தருடைய ஜனமென்று உங்களை அழைத்துக் கொள்ளுகிறவர்களே கேளுங்கள், கர்த்தரின் வார்த்தையையும் உங்களைக் குறித்த அவரது சித்தத்தையும் கேளுங்கள்.

2 ஆம், மெய்யாகவே, நான் சொல்லுகிறேன், துன்மார்க்கருக்கும் கலகக்காரர்களுக்கும் விரோதமாக கோபம் மூட்டப்பட்ட அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்;

3 அவர் யாரை எடுத்துக்கொள்வாரோ அவர்களை எடுத்துக்கொண்டு, அவர் யாரை பாதுகாப்பாரோ அவர்களை ஜீவியத்தில் பாதுகாப்பார்.

4 தமது சொந்த சித்தம் மற்றும் விருப்பத்திற்கேற்ப அவர் கட்டுகிறார், அவர் விரும்பும்போது அழிக்கிறார், ஆத்துமாவை நரகத்தில் தள்ள வல்லவராயிருக்கிறார்.

5 இதோ, கர்த்தராகிய நான் என்னுடைய குரலில் பேசுகிறேன், அதற்கு கீழ்ப்படியவேண்டும்.

6 ஆகவே, மெய்யாகவே நான் சொல்லுகிறேன், துன்மார்க்கர் எச்சரிக்கையாய் இருப்பார்களாக, கலகக்காரர்கள் பயந்து நடுங்குவார்களாக; அவிசுவாசிகள் தங்கள் நாவுகளை அடக்குவார்களாக, ஏனெனில் சூறாவளியைப்போல அவர்கள்மேல் கோபத்தின் நாள் வருகிறது, நானே தேவன் என்று சகல மாம்சங்களும் அறிந்துகொள்ளும்.

7 அடையாளங்களை நாடுகிறவன் அடையாளங்களை காண்பான், ஆனால் இரட்சிப்புக்காக அல்ல.

8 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அடையாளங்களை நாடுகிறவர்கள் உங்களுக்கு மத்தியிலிருக்கிறார்கள், அத்தகையவர்கள் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறார்கள்;

9 ஆனால் இதோ, விசுவாசம் அடையாளங்களால் வருவதில்லை, ஆனால் விசுவாசிக்கிறவர்களை அடையாளங்கள் பின்தொடரும்.

10 ஆம், விசுவாசத்தால் அடையாளங்கள் வருகின்றன, மனுஷர்களின் விருப்பத்தாலோ அல்லது அவர்கள் விரும்புகிறபடியோ அல்ல, ஆனால் தேவனின் சித்தப்படியே.

11 ஆம், விசுவாசத்தால் பராக்கிரம கிரியைகளுக்காக அடையாளங்கள் வருகின்றன, ஏனெனில் விசுவாசமில்லாமல் எந்த மனுஷனும் தேவனைப் பிரியப்படுத்துவதில்லை, தேவன் எவனிடத்தில் கோபமாயிருக்கிறாரோ அவனிடத்தில் பிரியமாயிருப்பதில்லை; ஆகவே, அத்தகையவனுக்கு அவர் அடையாளங்களைக் காண்பிப்பதில்லை, கோபத்தில் மட்டுமே அவர்களை ஆக்கினைக்குள்ளாக்குவார்.

12 ஆகவே, மனுஷரின் நன்மைக்காக அல்லாமல், என்னுடைய மகிமைக்காகவே உங்களுக்கு மத்தியிலே விசுவாசத்திற்காக அடையாளங்களையும் அற்புதங்களையும் நாடுகிறவர்களிடத்தில் கர்த்தராகிய நான் பிரியமாயிருப்பதில்லை.

13 ஆயினும், நான் கட்டளைகளைக் கொடுக்கிறேன், என்னுடைய கட்டளைகளிலிருந்து அநேகர் விலகினார்கள், அவைகளைக் கைக்கொள்ளவில்லை.

14 உங்களுக்கு மத்தியிலே விபச்சாரக்காரர்களும், விபச்சாரிகளுமிருந்தார்கள், அவர்களில் சிலர் உங்களிடமிருந்து விலகிப்போனார்கள், இதன் பின் வெளியரங்கப்பட, மற்றவர்கள் உங்களோடிருக்கிறார்கள்,

15 அத்தகையவர்கள் எச்சரிக்கையாயிருந்து வேகமாக மனந்திரும்புவார்களாக, இல்லையேல் ஒரு கண்ணியைப்போல நியாயத்தீர்ப்பு அவர்கள்மேல் வரும், அவர்களுடைய மதிகேடு வெளியரங்கமாகும், ஜனங்களின் கண்களின் முன்பு அவர்களுடைய கிரியைகள் அவர்களைப் பின்தொடரும்.

16 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், முன்பு நான் உங்களுக்குச் சொன்னதைப்போல, ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அல்லது தங்கள் இருதயங்களில் எவனாவது விபசாரஞ் செய்தால், அவர்கள் ஆவியைக் கொண்டிருக்கமாட்டார்கள், ஆனால் விசுவாசத்தை மறுதலித்து பயப்படுவார்கள்.

17 ஆகவே, கர்த்தராகிய நான் சொன்னேன், பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், பொய்யர் அனைவரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும், விபச்சாரக்காரரும், சூனியக்காரரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.

18 மெய்யாகவே நான் சொல்லுகிறேன், முதல் உயிர்த்தெழுதலில் அவர்களுக்கு பங்கிருக்காது.

19 இப்பொழுது, இதோ, கர்த்தராகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்தக் காரியங்கள் உங்களுக்கு மத்தியிலிருப்பதால் நீங்கள் நீதிமான்களாக்கப்படுவதில்லை.

20 ஆயினும், மறுரூபமாக்கப்படும் நாள் வரும்போது விசுவாசத்தில் நிலைத்திருப்பவனும் என்னுடைய சித்தத்தை செய்கிறவனுமானவன் ஜெயங்கொண்டு, பூமியின்மீது சுதந்தரத்தைப் பெறுவான்;

21 மலையின்மீது என்னுடைய அப்போஸ்தலர்களுக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி, பூமி மறுரூபமாக்கப்படும், அந்த முழுமையான விவரத்தை நீங்கள் இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை.

22 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய சித்தத்தை உங்களுக்கு நான் அறிவிப்பேன் என்று நான் உங்களுக்குச் சொன்னதைப்போல, இதோ, நான் உங்களுக்கு அதை அறியப்படுத்துவேன், கட்டளையின் வாயிலாக அல்ல, ஏனெனில் என்னுடைய கட்டளைகளை கைக்கொள்ளாதவர்கள் அநேகர் இருக்கிறார்கள்.

23 ஆனால் என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு என்னுடைய ராஜ்யத்தின் இரகசியங்களைக் கொடுப்பேன், நித்திய ஜீவனுக்கு ஜீவதண்ணீரின் துரவாய் ஊற்றெடுக்கிற அது அவனிலிருக்கும்.

24 இப்பொழுது, இதோ, அங்கே குழப்பமுண்டாகி, கொள்ளைநோயைக் கொண்டுவராதபடிக்கு, விரைவாக அல்லாமல், சீயோனின் தேசத்தில் அவர்கள் ஒன்றுகூடிவரவேண்டும் என்பதே அவருடைய பரிசுத்தவான்களைக் குறித்த உங்கள் தேவனாகிய கர்த்தரின் சித்தமாகும்.

25 இதோ, சீயோன் தேசத்தைப் பார், கர்த்தராகிய நான் அதை என்னுடைய கைகளில் ஏந்துகிறேன்;

26 ஆயினும், கர்த்தராகிய நான், இராயனுடையதை இராயனுக்கு செலுத்துகிறேன்.

27 ஆகவே, நீங்கள் உலகத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவும், உலகத்தில் உங்களுக்கு உரிமையிருக்கவும், அவர்கள் கோபமூட்டப்படாதபடி, நிலங்களை வாங்கவேண்டுமென கர்த்தராகிய நான் சித்தமாயிருக்கிறேன்.

28 ஏனெனில் உங்களுக்கெதிராக கோபத்தையும், இரத்தம் சிந்துதலையும் அவர்களுடைய இருதயங்களிலே சாத்தான் ஏவுகிறான்.

29 ஆகவே, சீயோன் தேசம், வாங்குவதால் அல்லது இரத்தத்தால் அல்லாமல், பெறப்படலாகாது. இல்லையென்றால் உங்களுக்கு எவ்வித சுதந்தரமும் இருக்காது.

30 வாங்குவதனால், இதோ நீங்கள் பாக்கியவான்கள்;

31 இரத்தத்தால் வாங்கினால், இரத்தம் சிந்துதலுக்கு நீங்கள் விலக்கப்பட்டிருப்பதால், ஐயோ, உங்கள் சத்துருக்கள் உங்கள் மேல் விழுவார்கள், ஊர் ஊராய், ஜெப ஆலயத்திலிருந்து ஜெப ஆலயத்துக்கு, வாரினால் நீங்கள் அடிக்கப்பட்டு விரட்டப்படுவீர்கள், ஆனால் ஒரு சுதந்தரத்தைப் பெற சிலரே நிற்பார்கள்.

32 கர்த்தராகிய நான், பாவியின்மேல் சினங்கொள்ளுகிறேன்; பூமியின் குடிகளிலிருந்து என்னுடைய ஆவியை தடுத்து வைத்திருக்கிறேன்.

33 என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன், பூமியின் மேல் எங்கும் யுத்தங்களுக்கு உத்தரவிட்டேன், துன்மார்க்கர் துன்மார்க்கரைக் கொல்வார்கள், ஒவ்வொரு மனுஷன் மேலும் பயம் வரும்;

34 பரிசுத்தவான்களும்கூட தப்பிப்பதில்லை; ஆயினும், கர்த்தராகிய நான் அவர்களோடிருப்பேன், என்னுடைய பிதாவின் பிரசன்னத்திலிருந்து வானத்துக்கு இறங்கி துன்மார்க்கரை அவியாத அக்கினியால் அழித்துப்போடுவேன்.

35 இதோ, அது இன்னமும் வரவில்லை, ஆனால் அவ்வப்போது வரும்.

36 ஆகவே, அதைப்பார்த்து கர்த்தராகிய நான் பூமியின்மேல் எங்கும் இந்த சகல காரியங்களையும் கட்டளையிட்டேன், சீயோன் தேசத்தின்மேல் என்னுடைய பரிசுத்தவான்களைக் கூடப்பண்ணுவேன்.

37 ஒவ்வொரு மனுஷனும் நீதியை அவனுடைய கைகளில் எடுத்துக் கொண்டு, விசுவாசத்தை அவனுடைய அரைக்கச்சையில் கட்டிக்கொண்டு, பூமியின் குடிகளுக்கு ஒரு எச்சரிக்கைக் குரலை எழுப்பவேண்டும்; துன்மார்க்கர் மேல் அழிவு வருமென வார்த்தையாலும் ஓடிப்போயும் அறிக்கையிட வேண்டும்.

38 ஆகவே, இந்த பண்ணையில் வசிக்கும் கர்த்லாந்திலுள்ள என்னுடைய சீஷர்கள் தங்களுடைய உலகப்பிரகாரமான காரியங்களை ஏற்பாடு செய்து கொள்வார்களாக.

39 அங்கே பராமரித்துக் கொண்டிருக்கிற என்னுடைய ஊழியக்காரனாகிய டைட்டஸ் பில்லிங்க்ஸ், நிலத்தை விற்று, வரப்போகும் வசந்த காலத்தில் சீயோன் தேசத்திற்கு, நான் கட்டளையிடும்வரையில் போகாமலிருக்கக்கூடிய, நானே எனக்காகப் பாதுகாத்து வைத்திருக்கிறவர்களைத் தவிர அவனது பயணத்தை அந்த தேசத்தில் வாசம் பண்ணுகிறவர்களுடன் மேற்கொள்வானாக.

40 அது சிறிதோ அதிகமோ எனக்குப் பொருட்டல்ல, கொடுக்க முடிந்த, மிஞ்சின பணம் அனைத்தையும் பெற நான் நியமித்தவர்களுக்கு, சீயோன் தேசத்திற்கு அனுப்புவானாக.

41 இதோ, சீயோன் தேசத்திற்கு யார் போக வேண்டுமென்றும் என்னுடைய சீஷர்களாகிய யார் தங்கியிருக்க வேண்டுமென்றும் ஆவியால் அவனால் பகுத்தறிய முடிகிற வல்லமையை கர்த்தராகிய நான் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித், இளையவனுக்குக் கொடுப்பேன்.

42 என்னுடைய ஊழியக்காரனாகிய நீவல் கே. விட்னி, அவனுடைய பண்டசாலையை, வேறு வார்த்தைகளில் எனில் பண்டசாலையை இன்னும் கொஞ்ச காலத்திற்கு வைத்திருப்பானாக.

43 ஆயினும், சீயோன் தேசத்திற்கு அனுப்பப்பட அவன் கொடுக்கமுடிகிற பணம் அனைத்தையும் அவன் கொடுப்பானாக.

44 இதோ, இந்தக் காரியங்கள் அவன் கைகளிலிருக்கிறது, ஞானத்தின்படி அவன் செய்வானாக.

45 மெய்யாகவே நான் சொல்லுகிறேன், தங்கியிருக்கிற சீஷர்களுக்கு அவன் ஒரு பிரதிநிதியாக நியமனம் செய்யப்படுவானாக, இந்த அதிகாரத்திற்கு அவன் நியமனம் செய்யப்படுவானாக;

46 இப்பொழுது இந்தக் காரியங்களை விவரித்துச் சொல்லி, என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரியுடன் சபைகளை வேகமாக சந்தியுங்கள். இதோ, நான் வழிகாட்டியதைப்போல பணத்தைப் பெறுவது என்னுடைய சித்தமாயிருக்கிறது.

47 உண்மையுள்ளவனும் நிலைத்திருப்பவனுமே உலகத்தை மேற்கொள்ளுவான்.

48 சீயோன் தேசத்திற்கு பொக்கிஷங்களை அனுப்புகிறவன் இந்த உலகத்தில் ஒரு சுதந்தரத்தைப் பெறுவான், அவனுடைய கிரியைகள் அவனைப் பின்தொடர்ந்து, வரவிருக்கிற உலகத்திலும் ஒரு பலனைப் பெறுவான்.

49 ஆம், கர்த்தருக்குள் மரிக்கிற, மரித்தவர்கள் பாக்கியவான்கள், இப்போதிலிருந்து கர்த்தர் வரும்வரை பழையன யாவும் கடந்துபோய் சகல காரியங்களும் புதியனவாகும், அவர்கள் மரித்தோரிலிருந்து எழும்பி பின்பு மரிக்கமாட்டார்கள், பரிசுத்த பட்டணத்திலே கர்த்தருக்கு முன்பாக ஒரு சுதந்தரத்தைப் பெறுவார்கள்.

50 கர்த்தர் வரும்போது ஜீவித்திருப்பவன் மற்றும் விசுவாசத்தைக் கைக்கொண்டவன், பாக்கியவானாயிருக்கிறான்; ஆயினும், மனுஷனின் ஆயுட்காலத்தில் மரிக்க அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.

51 ஆகவே, அவர்கள் முதிர்வயதடையும் வரை பிள்ளைகள் வளருவார்கள், முதிர்வயதான மனுஷர்கள் மரிப்பார்கள், ஆனால் அவர்கள் புழுதியிலே தூங்கமாட்டார்கள், ஆனால் அவர்கள் இமைப்பொழுதிலே மாற்றப்படுவார்கள்.

52 ஆகவே, இந்தக் காரணத்திற்காகவே, மரித்தவர்களின் உயிர்த்தெழுதலை அப்போஸ்தலர்கள் உலகத்திற்கு பிரசங்கித்தார்கள்.

53 கர்த்தரின் வழிகளில் பேசிக்கொண்டு, நீங்கள் எதிர்பார்க்கவேண்டிய காரியங்கள் இந்தக் காரியங்களே, மனுஷ குமாரனின் வருகையின் நாளில் வரப்போகிற நேரத்தில் அவைகள் சமீபமாயிருக்கின்றன.

54 அந்த மணி நேரம்வரை ஞானிகளுக்கு மத்தியிலே புத்தியில்லாத கன்னிகைகளிருப்பார்கள், அந்த மணி நேரத்திலே நீதிமான்களுக்கும் துன்மார்க்கருக்குமிடையே ஒரு முழுமையான பிரிவினை வரும். அந்த நாளிலே, துன்மார்க்கரை பிடுங்கி எறிந்து, அவியாத அக்கினியிலே அவர்களைப் போட நான் என்னுடைய தூதர்களை அனுப்புவேன்

55 இப்பொழுது, இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கர்த்தராகிய நான் என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டனுடன் பிரியமாயில்லை; அவன் தன்னுடைய இருதயத்திலே தன்னை மேன்மைப்படுத்துகிறான், ஆலோசனையைப் பெறவில்லை, ஆனால் ஆவியைத் துக்கப்படுத்தினான்;

56 ஆகவே, அவன் எழுதியவைகள் கர்த்தருக்கு ஏற்புடையதாயில்லை, அவன் மற்றொன்றை எழுதவேண்டும்; கர்த்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், இதோ, நான் அவனை நியமித்த அலுவலில் அவன் இனியும் இருக்கமாட்டான்.

57 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மனந்திரும்பும்படி பாவிகளை எச்சரிக்க, தாழ்மையாய் தங்கள் இருதயங்களிலே வாஞ்சிக்கிறவர்கள், இந்த அதிகாரத்திற்கு நியமிக்கப்படுவார்களாக.

58 ஏனெனில், இதுவே எச்சரிக்கையின் நாள், அநேக வார்த்தைகளின் நாள் அல்ல. ஏனெனில், கர்த்தராகிய நான் கடைசி நாட்களில் பரிகசிக்கப்படாதிருக்க வேண்டும்.

59 இதோ, நான் உன்னதத்திலிருக்கிறேன், என்னுடைய வல்லமை கீழே இருக்கிறது. சகலத்திலும் மேலாகவும், சகலமுமாகவும், சகலத்தின் மூலமாகவும், சகல காரியங்களையும் தேடுகிறேன், சகல காரியங்களும் எனக்குக் கீழ்ப்படுகிற நாள் வருகிறது.

60 இதோ, நானே அல்பாவும் ஓமெகாவும், இயேசு கிறிஸ்துவாயுமிருக்கிறேன்.

61 ஆகவே, என்னுடைய நாமத்தை தங்கள் உதடுகளால் அவர்கள் எப்படி உச்சரிக்கிறார்கள் என்பதில் சகல மனுஷர்களும் எச்சரிக்கையாய் இருப்பார்களாக,

62 ஏனெனில், இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அதிகாரமில்லாமல் கர்த்தரின் நாமத்தை வழங்கி, அதை வீணிலே வழங்குகிற இந்த ஆக்கினைக்குள் இருப்பவர்கள் அநேகர் இருக்கிறார்கள்.

63 ஆகவே, தங்களின் பாவங்களுக்காக சபை மனந்திரும்புவதாக, கர்த்தராகிய நான் அவர்களை சொந்தமாக்குகிறேன், இல்லையெனில் அவர்கள் அறுப்புண்டு போவார்கள்.

64 மேலேயிருந்து வருகிற அது பரிசுத்தமானதென்பதை நினைவு கூருங்கள், கவனத்துடனும் ஆவியில் அடக்கமாகவும் பேசப்படவேண்டும், இதில் இங்கே ஆக்கினைத்தீர்ப்பில்லை, நீங்கள் ஜெபத்தின் மூலமாக ஆவியைப் பெறுகிறீர்கள். ஆகவே இது இல்லாமல் அங்கே ஆக்கினைத் தீர்ப்பிருக்கிறது.

65 என்னுடைய ஊழியக்காரர்களாகிய ஜோசப் ஸ்மித் இளையவனும், சிட்னி ரிக்டனும், ஆவியால் ஜெபத்தின் மூலமாக அவர்களுக்கு போதிக்கப்பட்டபடி, அவர்களுக்கு ஒரு வீட்டைத் தேடுவார்களாக.

66 அத்தகையவர்கள் பின்னும் ஒரு அதிகமான, நித்திய கனமகிமையைப் பெறும்படியாக, பொறுமையின் மூலமாக மேற்கொள்ளும்படியாக இந்தக் காரியங்களிருக்கின்றன, இல்லையென்றால் பெரிய ஒரு ஆக்கினைத்தீர்ப்பு வரும். ஆமென்.