வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11


பாகம் 11

மே 1829ல் பென்சில்வேனியாவின் ஹார்மனியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக அவரது சகோதரர் ஹைரம் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஜோசப்பின் விண்ணப்பத்துக்கும் வேண்டுகோளுக்கும் பதிலாக, ஊரீம் மற்றும் தும்மீம் மூலமாக இந்த வெளிப்படுத்தல் பெறப்பட்டது. ஆரோனிய ஆசாரியத்துவம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட பின்பு இந்த வெளிப்படுத்தல் பெறப்பட்டதென ஜோசப் ஸ்மித்தின் வரலாறு தெரிவிக்கிறது.

1–6, திராட்சைத் தோட்டத்தில் பிரயாசப்படுவோர் இரட்சிப்பைப் பெறுவார்கள்; 7–14, ஞானத்தை நாடுங்கள், மனந்திரும்புதலுக்காக கூக்குரலிடுங்கள், ஆவியில் நம்பிக்கை வையுங்கள்; 15–22, கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள், கர்த்தரின் வார்த்தையை ஆராயுங்கள்; 23–27, வெளிப்படுத்துதலின் ஆவியையும் தீர்க்கதரிசனத்தையும் மறுக்காதிருங்கள்; 28–30, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவர்கள் தேவகுமாரர்களாகிறார்கள்.

1 மனுபுத்திரர்களுக்குள் ஒரு பெரிதும் அற்புதமுமான கிரியை செய்யும் காலம் வரப்போகிறது.

2 இதோ, நானே தேவன்; எனது வார்த்தைக்குச் செவிகொடுங்கள், அவை ஜீவனும் வல்லமையுமுள்ள, கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்க இருபுறமும் கருக்குள்ள, பட்டயத்தை விட கூர்மையானவை. ஆகவே எனது வார்த்தைக்குச் செவிகொடுங்கள்.

3 இதோ, வயல் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது; ஆகவே, அறுவடைக்கு வாஞ்சிக்கிறவன் தனது முழு பலத்துடன் அரிவாளை நீட்டி, தேவனுடைய ராஜ்யத்தில் தனது ஆத்துமாவுக்கான நித்திய இரட்சிப்புக்காக பொக்கிஷப்படுத்தி வைக்கும்படியாக பகலிருக்கும்வரை அறுவடை செய்யக்கடவன்.

4 ஆம், தனது அரிவாளை நீட்டி அறுவடை செய்கிற எவனும் தேவனால் அழைக்கப்பட்டவன்.

5 ஆகவே, என்னிடம் நீ கேட்டால் நீ பெற்றுக்கொள்வாய்; நீ தட்டினால் அது உனக்குத் திறக்கப்படும்.

6 இப்பொழுது, நீ கேட்டதினால், இதோ, எனது கட்டளைகளைக் கைக்கொண்டு, சீயோனைக் கொண்டுவந்து, அதை ஸ்தாபிக்க வகைதேடு என நான் உனக்குச் சொல்லுகிறேன்;

7 ஞானத்தையேயன்றி ஐஸ்வரியத்தை நாடாதிரு, இதோ, தேவனுடைய இரகசியங்கள் உனக்கு வெளிப்படுத்தப்படும், பின்னர் நீ ஐஸ்வரியனாக்கப்படுவாய். இதோ, நித்திய ஜீவனை உடையவனே ஐஸ்வரியவான்.

8 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னிடத்தில் வாஞ்சிக்கிறதைப்போலவே அது உங்களுக்கு செய்யப்படும்; நீ வாஞ்சித்தால், இந்த சந்ததியில் நீயே அநேக நற்கிரியைகளைச் செய்கிற கருவியாயிருப்பாய்.

9 இந்த சந்ததிக்கு மனந்திரும்புதலையேயன்றி எதையும் சொல்லாதே; எனது கட்டளைகளைக் கைக்கொள், எனது கட்டளைகளின்படி எனது பணியை நடப்பிக்க உதவி செய், நீ ஆசீர்வதிக்கப்படுவாய்.

10 இதோ, நீ ஒரு வரத்தைப் பெற்றிருக்கிறாய், அல்லது நீ உண்மையான மனதுடன், இயேசு கிறிஸ்துவின் வல்லமையில் நம்பிக்கைவைத்து, உன்னிடம் பேசுகிற எனது வல்லமையில் விசுவாசம் வைத்து என்னிடத்தில் வாஞ்சித்தால் நீ ஒரு வரம் பெறுவாய்.

11 ஏனெனில், இதோ, பேசுவது நானே; இதோ, நான் இருளில் பிரகாசிக்கிற ஒளியாயிருக்கிறேன், எனது வல்லமையால் இந்த வார்த்தைகளை உனக்கு நான் கொடுக்கிறேன்.

12 இப்பொழுது, மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், நன்மை செய்ய, ஆம், நீதியைச் செய்யவும், தாழ்மையாய் நடக்கவும், நீதியின்படி தீர்ப்பு சொல்லவும் உன்னை வழி நடத்துகிற அந்த ஆவியின் மேல் உனது நம்பிக்கையை வை; இதுவே எனது ஆவி.

13 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், உன் மனதை தெளிவுபடுத்தும், உனது ஆத்துமாவை சந்தோஷத்தால் நிரப்பும் எனது ஆவியை நான் உனக்குக் கொடுப்பேன்;

14 பின்னர், நீ அறிந்துகொள்வாய், அல்லது நீ பெற்றுக்கொள்வாயென விசுவாசத்தில் என்மீது நம்பிக்கை வைத்து, நீ என்னிடத்தில் வாஞ்சித்த நீதிக்கு சம்பந்தப்பட்ட காரியங்களான, சகல காரியங்களையும் இதனால் நீ அறிந்துகொள்வாய்.

15 இதோ, நீ அழைக்கப்படும் வரை, பிரசங்கிக்க நீ அழைக்கப்பட்டாயென நீ நினைக்கத் தேவையில்லை என நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

16 எனது கோட்பாட்டைப்பற்றிய ஒரு நிச்சயத்தை அறிந்துகொள்ளும்படி, எனது வார்த்தையை, எனது கன்மலையை, எனது சபையை, மற்றும் எனது சுவிசேஷத்தை நீ பெற்றுக்கொள்ளும் வரை, இன்னும் கொஞ்ச காலம் காத்திரு,

17 பின்னர், இதோ, உனது வாஞ்சையின்படி, ஆம், உனது விசுவாசத்தின்படி உனக்கு அது செய்யப்படும்.

18 எனது கட்டளைகளைக் கைக்கொள்; சமாதானமாயிரு; எனது ஆவியிடம் விண்ணப்பமிடு;

19 ஆம், பேசப்பட்ட அந்தக் காரியங்களை தெளிவாக்க நீ உதவி செய்யும் பொருட்டு உன் முழு இருதயத்தோடு என்னைப் பற்றிக்கொண்டிரு, ஆம், எனது பணியான மொழிபெயர்ப்பில் அதை நிறைவேற்றும்வரை பொறுமையாயிரு.

20 இதோ, உன் முழு ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் எனது கட்டளைகளைக் கைக்கொள், ஆம், இதுவே உனது பணி.

21 எனது வார்த்தையை அறிவிக்க நாடாதே, ஆனால் எனது வார்த்தையைப் பெற முதலாவதாக நாடு, பின்னர் உனது நாவின் கட்டுக்கள் அவிழ்க்கப்படும். பின்னர் நீ வாஞ்சித்தால், ஆம், மனுஷர்களை நம்பச்செய்ய தேவனின் வல்லமையான எனது ஆவியையும் எனது வார்த்தையையும் நீ பெறுவாய்.

22 ஆனால் இப்பொழுது சமாதானமாயிரு; மனுபுத்திரருக்குள்ளே போயிருக்கிற எனது வார்த்தையை ஆராய்ந்து பார், மற்றும் மனுபுத்திரருக்குள்ளே வரப்போகிற எனது வார்த்தையையும், அல்லது இப்பொழுது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பவற்றை, ஆம், இந்த சந்ததியில் மனுபுத்திரருக்கு நான் அருளப்போகிற சகலத்தையும் நீ பெற்றுக்கொள்ளும்வரை ஆராய்ந்து பார், பின்னர் சகல காரியங்களும் அதனுடன் கூடக் கொடுக்கப்படும்.

23 இதோ, எனது மகன் ஹைரம், நீ தேவனுடைய ராஜ்யத்தைத் தேடு, நீதியின்படி சகல காரியங்களும் கூடக்கொடுக்கப்படும்.

24 எனது சுவிசேஷமான எனது கன்மலையின்மேல் கட்டு;

25 வெளிப்படுத்துதலின் ஆவியையோ தீர்க்கதரிசன ஆவியையோ மறுக்காதே, ஏனெனில் இந்தக் காரியங்களை மறுக்கிறவர்களுக்கு ஐயோ;

26 ஆகவே, என் ஞானத்தின்படி, நீ போகிற காலம் வரும்வரை உனது இருதயத்தில் பொக்கிஷப்படுத்து.

27 இதோ, நல்ல வாஞ்சையுடைய, அறுவடைக்கு தங்கள் அரிவாளை நீட்டுகிற அனைவருடனும் நான் பேசுகிறேன்.

28 இதோ, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து நானே. நானே உலகத்திற்கு ஜீவனும், ஒளியாகவுமிருக்கிறேன்.

29 என் சொந்தமானவர்களிடத்தில் வந்தது நானே, எனக்கு சொந்தமானவர்களோ என்னை ஏற்றுக்கொள்ளவில்லை

30 ஆனால் என்னுடைய நாமத்தில் நம்பிக்கை வைத்து, என்னை ஏற்றுக்கொண்ட அனைவரும், தேவனுடைய குமாரராகும்படி அவர்களுக்கு நான் அதிகாரத்தைக் கொடுப்பேனென மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், ஆமென்