வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 124


பாகம் 124

ஜனுவரி 19, 1841ல் இலினாயிலுள்ள நாவூவில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். அரசு அதிகாரிகளால் அவர்களுக்கு எதிராக துன்புறுத்தல்கள் மற்றும் சட்டத்துக்கு விரோதமான நடைமுறைகளால் மிசௌரியை விட்டுப்போக பரிசுத்தவான்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அக்டோபர் 27, 1838 தேதியிட்டு, மிசௌரியின் ஆளுநர் லில்பர்ன் டபுள்யு. போக்ஸால் வழங்கப்பட்ட வெளியேற்றப்படும் கட்டளையால் அவர்களுக்கு மாற்று வழியில்லாமல் போனது. 1841ல் இந்த வெளிப்படுத்தல் கொடுக்கப்பட்டபோது, இலினாயின் முந்தைய காமர்ஸ் கிராமத்தின் இடத்தில் குடியேறி நாவூ பட்டணம் பரிசுத்தவான்களால் கட்டப்பட்டது, இங்கே சபையின் தலைமையகம் அமைக்கப்பட்டது.

1–14, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஜனாதிபதிக்கும், ஆளுநர்களுக்கும், சகல தேசங்களின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு சுவிசேஷத்தின் ஆணித்தரமான அறிக்கையைக் கொடுக்குமாறு ஜோசப் ஸ்மித்துக்கு கட்டளை கொடுக்கப்பட்டது; 15–21, ஹைரம் ஸ்மித், டேவிட் டபுள்யு. பாட்டன், ஜோசப் ஸ்மித் மூத்தவர் மற்றும் ஜீவிப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் மத்தியிலுள்ள மற்றவர்களும் அவர்களுடைய உத்தமத்துக்காகவும் நற்குணங்களுக்குமாக ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்; 22–28, அந்நியர்களின் கேளிக்கைக்காக ஒரு அரங்கத்தையும், நாவூவில் ஒரு ஆலயத்தையும் கட்ட பரிசுத்தவான்கள் கட்டளையிடப்பட்டார்கள்; 29–36, மரித்தவர்களுக்கான ஞானஸ்நானங்கள் ஆலயங்களில் நடத்தப்படவேண்டும்; 37–44, பரிசுத்த நியமங்களை நடத்துவதற்காக கர்த்தரின் ஜனங்கள் எப்போதுமே ஆலயங்களைக் கட்டுகிறார்கள்; 45–55, அவர்கள் சத்துருக்களால் ஒடுக்கப்படுவதினால் ஜாக்ஸன் மாகாணத்தில் ஆலயத்தைக் கட்டுவதிலிருந்து பரிசுத்தவான்கள் விலக்களிக்கப்படுகிறார்கள்; 56–83, நாவூ வீட்டைக் கட்டுவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்படுகிறது; 84–96, திறவுகோல்களைப் பெற்றுக்கொள்ளவும் ஆலிவர் கௌட்ரியின் இடத்தில் இருக்கவும் ஒரு கோத்திரத்தலைவனாக ஹைரம் ஸ்மித் அழைக்கப்படுகிறார்; 97–122, வில்லியம் லாவும் மற்றவர்களும் அவர்களுடைய பிரயாசங்களில் ஆலோசனை கூறப்பட்டார்கள்; 123–145, அவர்களுடைய கடமைகளுடனும் குழுமச்சார்புகளுடனும் பொது மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அறிவிக்கப்படுகிறார்கள்.

1 மெய்யாகவே, உனக்கு இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித், உன்னுடைய காணிக்கைகளாலும், நீ அறிக்கை செய்ததினிமித்தமும் நான் மிகத் திருப்தியாயிருக்கிறேன்; ஏனெனில் பூமியின் பெலவீனமான காரியங்களின் மூலம் என்னுடைய ஞானத்தைக்காட்டும்படியான இந்த நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தியிருக்கிறேன்.

2 உன்னுடைய ஜெபங்கள் எனக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளத்தக்கவை; என்னுடைய சுவிசேஷத்தினுடைய திடமான அறிக்கையைச் செய்யவும், அரண்மனையைப் போலிருக்கும் நேர்த்தியுடன் பளபளப்பாக்கப்படவிருக்கிற சீயோனின் மூலைக்கல்லாக நான் நாட்டியுள்ள இந்த பிணையம் இருக்கவும், நீ இப்பொழுது உடனடியாக அழைக்கப்பட்டிருக்கிறாய் என்றும், அவைகளுக்கான பதிலாக நான் உனக்குச் சொல்லுகிறேன்.

3 உலகத்தின் சகல ராஜாக்களுக்கும், அதன் நான்கு மூலைகளுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட கனம்பொருந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும், நீ வாழ்கிற தேசத்தின் கனம் பொருந்திய ஆளுநர்களுக்கும் பூமியெங்கும் பரவியிருக்கிற சகல தேசங்களுக்கும் இந்த பிரகடனம் செய்யப்படவேண்டும்.

4 இதை நீ எழுதும் சமயத்தில் உன்னோடிருக்கும் தாழ்மையின் ஆவியோடும் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும் அது எழுதப்படுவதாக;

5 ஏனெனில் அந்த ராஜாக்கள் மற்றும் அதிகாரிகளைக் குறித்த என்னுடைய சித்தத்தையும், வரப்போகிற நேரத்தில் அவர்களுக்கு எது நடக்கப்போகிறதென்றும் அறிந்துகொள்ள அது பரிசுத்த ஆவியால் உனக்குக் கொடுக்கப்படும்.

6 ஏனெனில், சீயோனின் அனுகூலமான குறித்த காலம் வந்திருப்பதால், இதோ, அவளுடைய ஒளிக்கும் மகிமைக்கும் செவிகொடுக்க நான் அவர்களை அழைக்கப் போகிறேன்.

7 ஏனெனில் அவர்கள் போக்குச் சொல்ல வழியில்லாமல் விடப்படும்படியாக, அவர்கள் புல்லைப் போலவும், சீக்கிரத்திலேயே உதிர்ந்துபோகிற பூவைப் போலவும், அவர்களின் சகல மகிமையுமிருப்பதால், ஆகவே, உரத்த பிரகடனத்தோடும் உன்னுடைய சாட்சியுடனும், அவர்களுக்குப் பயப்படாமல்,

8 என்னுடைய ஊழியக்காரர்களையும் அவர்களுக்கு நான் வெளிப்படுத்திய என்னுடைய சாட்சியையும் அவர்கள் தள்ளினால் பற்கடிப்பு இருக்கிற மற்றும் மாயக்காரர்களுக்கு மத்தியிலே ஒடுக்குகிறவர்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும்படியாக, மூடியிருக்கிற என்னுடைய முகத்தை நான் திறக்கும்போது, விசாரிப்பின் நாளில் அவர்களை நான் விசாரிக்கும்படியாகவும், அவர்களை நீ அழை.

9 மீண்டும், அவர்களின் கண்களில் நீ இரக்கம் காணும்படியாகவும், அவர்கள் சத்தியத்தின் வெளிச்சத்துக்கும், புறஜாதியார் மேன்மையடைதலுக்கு அல்லது சீயோனை உயர்த்தும்படிக்கு, அவர்களை நான் விசாரித்து, உங்களுடைய நன்மைக்காக, அவர்களில் அநேகரின் இருதயங்களை மிருதுவாக்குவேன்.

10 ஏனெனில் நீங்கள் நினைத்திராத வேளையில் என்னுடைய விசாரிப்பின் நாள் சீக்கிரத்திலேயே வருகிறது; என்னுடைய ஜனங்களின் பாதுகாப்பும், விடுபட்டுப் போனவர்களுக்கான அடைக்கலமும் எங்கேயிருக்கும்?

11 பூமியின் ராஜாக்களே விழித்தெழுங்கள்! என்னுடைய ஜனங்களின் உதவிக்காகவும் சீயோனின் குமாரத்திகளின் வீட்டிற்கும், உங்களுடைய பொன்னோடும் வெள்ளியோடும், நீங்கள் வாருங்கள், நீங்கள் வாருங்கள்.

12 மீண்டும், மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், இந்த பிரகடனத்தை எழுத என்னுடைய ஊழியக்காரனாகிய ராபர்ட் பி. தாம்சன் உனக்கு உதவுவானாக, ஏனெனில் அவன் உன்னோடு இருக்கும்படிக்கு அவனில் நான் பிரியமாயிருக்கிறேன்,

13 ஆகவே அவன் உன்னுடைய ஆலோசனைக்கு செவிகொடுப்பானாக, பலவிதமான ஆசீர்வாதங்களுடன் நான் அவனை ஆசீர்வதிப்பேன்; இப்போதிலிருந்து சகல காரியங்களிலும் அவன் உண்மையும் சத்தியமுமுள்ளவனாக இருப்பானாக, அவன் என்னுடைய கண்களில் பெரியவனாயிருப்பான்;

14 ஆனால் அவனுடைய கைகளில் அவனுடைய உக்கிராணத்துவத்தை நான் எதிர்பார்க்கிறேன் என்பதை அவன் நினைவுகூர்வானாக.

15 மீண்டும், மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரம் ஸ்மித் பாக்கியவான்; ஏனெனில் கர்த்தராகிய நான், அவனுடைய இருதயத்தின் உத்தமத்தாலும், எனக்கு முன்பாக சரியானதை அவன் நேசிப்பதாலும், அவனை நேசிக்கிறேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

16 மீண்டும், ராஜாக்களுக்கும் பூமியிலுள்ள ஜனங்களுக்கும் என்னுடைய வார்த்தையை அனுப்புவதில் உன்னுடைய பிரயாசத்தில், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித்தே, உபத்திரவத்தின் நேரத்தில் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் சி. பெனட் உன்னருகில் அவன் நின்று உனக்கு உதவுவானாக; ஆலோசனையை அவன் ஏற்றுக்கொண்டால், அவனுடைய பிரதிபலன் இல்லாமல் போவதில்லை.

17 அவனுடைய அன்பினிமித்தம் அவன் பெரியவனாயிருப்பான், ஏனெனில் இதை அவன் செய்தால் அவன் என்னுடையவனாயிருப்பான் என கர்த்தர் சொல்லுகிறார். அவன் செய்த வேலையை நான் பார்த்திருக்கிறேன், நான் ஏற்றுக்கொள்கிற அதை அவன் தொடர்ந்து செய்தால், ஆசீர்வாதங்களுடனும் பெரிய மகிமையுடனும், அவனுக்கு கிரீடம் சூட்டுவேன்.

18 மீண்டும் தாழ்மையின் ஆவியுடன், உலகத்திற்கு முன்பாக என்னை அறிக்கையிட்டு, என்னுடைய ஊழியக்காரனாகிய லைமன் விட், சீயோனுக்காக பிரசங்கிப்பதைத் தொடரவேண்டும் என்பது என்னுடைய சித்தமாயிருக்கிறது என மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; கழுகுகளின் செட்டைகளின் மேல் சுமப்பதைப் போல நான் அவனை தாங்குவேன்; அவன், அவனுக்கும் என்னுடைய நாமத்திற்கும் மகிமையும் கனமும் வரப் பண்ணுவான்.

19 அவன் தன்னுடைய வேலையை முடிக்கும்போது, இந்த சமயத்தில் என்னோடிருக்கிற என்னுடைய ஊழியக்காரனாகிய டேவிட் பாட்டனைப் போலவும், என்னுடைய ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜைப் போலவும், அவன் என்னுடையவனாயிருப்பதால் ஆசீர்வதிக்கப்பட்டு ஆபிரகாமின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிற, பரிசுத்தவானாயிருக்கிற, என்னுடைய வயதான ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் மூத்தவனைப் போலவும் என்னுடனே அவனை நான் ஏற்றுக்கொள்வேன்.

20 மீண்டும் மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜார்ஜ் மில்லர் கபடமில்லாதவன்; அவனுடைய இருதயத்தின் உத்தமத்தினிமித்தம் அவன் நம்பத்தக்கவன்; என்னுடைய சாட்சியின் மீது அவனுக்கிருக்கிற அன்பினால் கர்த்தராகிய நான், அவனை நேசிக்கிறேன்.

21 ஆகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், என்னுடைய வீட்டின் நன்கொடைகளைப் பெறும்படியாக, என்னுடைய ஏழை ஜனங்களின் தலைகளின்மீது ஆசீர்வாதங்களை அவன் நிர்வகிக்கும்படியாக, என்னுடைய ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜைப் போல ஒரு ஆயத்துவத்தின் அலுவலை அவன் தலைமீது நான் பரிசுத்தப்படுத்துவேன் எனக் கர்த்தர் சொல்லுகிறார். என்னுடைய ஊழியக்காரனாகிய ஜார்ஜை எந்த மனுஷனும் இகழாதிருப்பானாக, ஏனெனில் என்னை அவன் கனம் பண்ணுவான்.

22 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜார்ஜும், என்னுடைய ஊழியக்காரனாகிய லைமனும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் ஸ்னைடரும் மற்றவர்களும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் அவர்களுக்கு காட்டுகிறதைப் போலவும், அவர்களுக்கு அவன் காட்டப் போகிற இடத்திலும்கூட என்னுடைய நாமத்தில் ஒரு வீட்டைக் கட்டுவானாக.

23 உண்பதற்கான ஒரு வீடாகவும், தொலைவிலிருந்து வருகிற அந்நியர் அங்கே தங்குவதற்கான ஒரு வீடாகவும் அது இருக்கும்; ஆகவே கர்த்தரின் வார்த்தையையும் களைப்படைந்த பிரயாணி தியானிக்கும்போது அவன் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் காணும்படியாக எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியான ஒரு நல்ல வீடாக அது இருப்பதாக, சீயோனுக்காக நான் நியமித்த மூலைக்கல்லாகவும் இருக்கும்.

24 என்னுடைய நாமத்தில் அது கட்டப்பட்டிருந்தால் இந்த வீடு ஒரு ஆரோக்கியமான குடியிருப்பாயிருக்கும், அதற்கு நியமிக்கப்படப்போகிற பராமரிப்பவன், அதற்குள் எந்த அசுத்தத்தையும் வரவிடாதிருப்பான். அது பரிசுத்தமாயிருக்கும் அல்லது உன்னுடைய தேவனாகிய கர்த்தர் அங்கு தரித்திருக்கமாட்டார்.

25 மீண்டும். மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், தொலைவிலிருந்து என்னுடைய பரிசுத்தவான்கள் யாவரும் வருவார்களாக.

26 தெரிந்தெடுக்கப்பட்ட தூதர்களை, வேகமான தூதர்களை அனுப்புங்கள், ஆம், அவர்களுக்குச் சொல்லுங்கள். உங்களுடைய சகல பொன்னோடும், உங்களுடைய வெள்ளியோடும், உங்களுடைய இரத்தினங்களோடும், உங்களுடைய சகல புராதனக் கலைப்பொருட்களுடனும் வாருங்கள். புராதனக் கலைப்பொருட்களைப்பற்றிய அறிவுள்ள அனைவரும் வாருங்கள். புன்னை மரத்தையும், தேவதாரு மரத்தையும், பாய்மர மரத்தையும், பூமியிலுள்ள சகல விலையேறப்பெற்ற மரங்களையும் ஒன்று சேர்த்து வாருங்கள்;

27 இரும்புடனும், தாமிரத்துடனும், பித்தளையுடனும், துத்தநாகத்துடனும், பூமியிலுள்ள உங்களுடைய சகல விலையேறப்பெற்ற பொருட்களுடனும் வாருங்கள்; மிக உன்னதமானவர் அங்கு தரித்திருக்கும்படியாக என்னுடைய நாமத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டுங்கள்.

28 ஏனெனில், அவர் வந்து ஆசாரியத்துவத்தின் முழுமையையும் கூட, உங்களிடமிருந்து காணாமற்போன அல்லது அவர் எடுத்துப்போனதை, மறுஸ்தாபிதம் செய்ய பூமியில் ஒரு இடம் காணப்படவில்லை.

29 ஏனெனில் மரித்தவர்களுக்காக, என்னுடைய பரிசுத்தவான்களான, அவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கு பூமியின்மீது ஒரு ஞானஸ்நானத் தொட்டி இல்லை,

30 ஏனெனில் இந்த நியமம் என்னுடைய ஆலயத்திற்கு சொந்தமானது, மற்றும் உன்னுடைய வறுமையின் நாட்கள் என்பதால் மட்டுமே எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட உன்னால் முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

31 ஆனால் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய பரிசுத்தவான்கள் அனைவருமான உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன்; எனக்கு ஒரு ஆலயத்தைக்கட்ட போதுமான நேரத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; இந்த நேரத்தில் உங்களுடைய ஞானஸ்நானங்கள் எனக்கு ஏற்புடையதாயிருக்கும்.

32 ஆனால் இதோ, முடிவில், மரித்தவர்களுக்கான உங்களுடைய ஞானஸ்நானங்கள் எனக்கு ஏற்புடையதல்ல; இந்த குறிக்கப்பட்ட காலத்தின் முடிவில் இந்த காரியங்களை நீங்கள் செய்யாதிருந்தால், உங்களுடைய மரித்தவர்களுடன், ஒரு சபையாக நீங்கள் மறுதலிக்கப்படுவீர்கள் என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

33 ஏனெனில் மரித்தவர்களுக்கான ஞானஸ்நானத்தின் நியமத்திற்குச் சொந்தமாயும் உலக அஸ்திபாரத்திற்கு முன்பிருந்தே அது அமைக்கப்பட்டிருந்தும் எனக்கு ஒரு ஆலயத்தைக்கட்ட உங்களுக்கு போதுமான நேரமிருந்த பின்பும், உங்களுடைய மரித்தவர்களுக்கான உங்களுடைய ஞானஸ்நானங்கள் எனக்கு ஏற்புடையதல்ல என மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன்;

34 ஏனெனில் நீ கனமும் மகிமையும் பெறும்படியாக, பரிசுத்த ஆசாரியத்துவத்தின் திறவுகோல்கள் அங்கே நியமிக்கப்பட்டிருக்கின்றன.

35 இந்த நேரத்திற்கு பின்னர், வெளியிலே பரவியுள்ளவர்களால் கொடுக்கப்படுகிற, மரித்தவர்களுக்கான உங்களுடைய ஞானஸ்நானங்கள், எனக்கு ஏற்புடையதல்ல என கர்த்தர் சொல்லுகிறார்.

36 ஏனெனில் அடைக்கலத்திற்காக நான் நியமித்த இடங்களான சீயோனிலும், அவளுடைய பிணையங்களிலும், எருசலேமிலும், உங்களுடைய மரித்தவர்களின், உங்களுடைய ஞானஸ்நானங்களுக்கான இடங்களாயிருக்கும் என நியமிக்கப்படுகிறது

37 மீண்டும் என்னுடைய நாமத்தில் நீங்கள் கட்டிய ஒரு ஆலயத்தில் அவைகளை நீங்கள் செய்தாலொழிய உங்களுடைய சுத்திகரிப்பு எப்படி எனக்கு ஏற்புடையதாயிருக்கும் என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்?

38 உலகம் உண்டாகிறதற்கு முன்பிருந்து மறைக்கப்பட்டிருந்த அந்த நியமங்கள் வெளிப்படும்படியான, இந்தக் காரணத்திற்காகவே, வனாந்தரத்தில் தங்களோடு அதை அவர்கள் சுமக்கும்படியாக ஒரு ஆசரிப்புக்கூடாரத்தை அவன் கட்டவேண்டுமென்றும், மற்றும் வாக்குத்தத்தத்தின் தேசத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டும்படியாகவும், மோசேக்குக்கு நான் கட்டளையிட்டேன்.

39 ஆகவே, உங்களுடைய அபிஷேகங்களும், உங்களுடைய சுத்திகரிப்பும், மரித்தவர்களுக்கான உங்களுடைய ஞானஸ்நானங்களும், உங்களுடைய புனிதமான கூட்டங்களும், லேவியின் புத்திரர்களால் உங்களுடைய பலிகளுக்கான உங்களுடைய நினைவுகூருதல்களுக்கும், நீங்கள் உரையாடல்களைப் பெறுகிற உங்களுடைய மிக பரிசுத்தமான இடங்களில் உங்களுடைய வெளிப்படுத்தப்பட்ட வாக்கியங்களுக்காகவும், உங்களுடைய விதிகள் மற்றும் தீர்ப்புகளுக்காகவும், வெளிப்படுத்தல்களின் ஆரம்பங்களுக்காக மற்றும் சீயோனின் அஸ்திபாரத்திற்காகவும் அவளுடைய சகல வாசிகளின் மகிமை, கனம் மற்றும் தரிப்பித்தலுக்காக என்னுடைய பரிசுத்த நாமத்தில் கட்ட என்னுடைய ஜனங்கள் எப்போதுமே கட்டளையிடப்பட்டவர்களாய் என்னுடைய பரிசுத்த ஆலயத்தின் நியமத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

40 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஜனங்களுக்கு, என்னுடைய நியமங்களை நான் அங்கு வெளிப்படுத்தும்படியாக இந்த ஆலயம் என்னுடைய நாமத்தில் கட்டப்படுவதாக;

41 ஏனெனில், உலக அஸ்திபாரத்திற்கு முன்பிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த, காலங்களின் நிறைவேறுதலின் ஊழியக்காலத்தைக் குறித்த காரியங்களான என்னுடைய சபையின் காரியங்களை வெளிப்படுத்த நான் பொருத்தமானவனாகக் கருதினேன்.

42 இந்த ஆலயத்திற்கும், ஆசாரியத்துவத்துக்கும், சம்பந்தப்பட்ட சகல காரியங்களையும் அது கட்டப்பட வேண்டிய இடத்தையும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு நான் காட்டுவேன்.

43 அதைக் கட்டுவதற்கு நீ திட்டமிட்டிருக்கிற இடத்தில் நீ அதைக் கட்டுவாய், ஏனெனில் அதைக் கட்ட உனக்காக நான் தெரிந்தெடுத்த இடம் அதுவே.

44 உன்னுடைய முழு பெலத்தோடும் நீ பிரயாசப்பட்டால் அது பரிசுத்தமாக்கப்பட அந்த இடத்தை நான் பிரதிஷ்டை செய்வேன்.

45 என்னுடைய சத்தத்திற்கும், என்னுடைய ஜனங்களை வழிநடத்த நான் நியமித்த என்னுடைய ஊழியக்காரர்களின் சத்தத்திற்கும், என்னுடைய ஜனங்கள் செவிகொடுத்தால், இதோ, அவர்களுடைய இடங்களைவிட்டு அவர்கள் அகற்றப்படமாட்டார்கள் என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

46 ஆனால் அவர்கள் என் சத்தத்திற்கு, அல்லது நான் நியமித்த இந்த மனுஷர்களின் சத்தத்திற்கு செவிகொடுக்காமல் போனால், அவர்கள் ஆசீர்வதிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் என்னுடைய பரிசுத்த தேசத்தையும், என்னுடைய பரிசுத்த நியமங்களையும், தீர்மானங்களையும், நான் அவர்களுக்குக் கொடுத்த என்னுடைய பரிசுத்த வார்த்தைகளையும் அவர்கள் அசுத்தப்படுத்துகிறார்கள்.

47 மேலும் என்னுடைய நாமத்தில் நீ ஒரு ஆலயத்தைக்கட்டி, நான் சொல்லுகிற காரியங்களை செய்யாதிருந்தால், நான் உன்னோடு செய்த உறுதிமொழியை நான் நிறைவேற்றமாட்டேன், என்னுடைய கைகளிலிருந்து நீ எதிர்பார்க்கிற வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றமாட்டேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

48 ஏனெனில் ஆசீர்வாதங்களுக்குப் பதிலாக, ஆம் உங்களுடைய சொந்தக் கிரியைகளால், உங்களுடைய முட்டாள்தனங்களால், எனக்கு முன்பாக நீங்கள் செய்த உங்களுடைய சகல அருவருப்புகளாலும், சாபங்களையும், கோபத்தையும், ஆக்கினையையும், நியாயத்தீர்ப்புகளையும் உங்களுடைய தலைகளின்மீது கொண்டுவருகிறீர்கள் என கர்த்தர் சொல்லுகிறார்.

49 என்னுடைய நாமத்தில் ஒரு வேலையைச் செய்ய எந்த மனுபுத்திரர்களுக்காவது நான் ஒரு கட்டளையைக் கொடுக்கும்போது, தங்களுடைய முழு பெலத்தோடும், அந்த வேலையைச் செய்ய தங்களுடைய எல்லாவற்றோடும் அந்த மனுபுத்திரர் போய் தங்களுடைய சிரத்தையை நிறுத்தாதிருந்து, அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைத் தாக்கி, அந்த வேலையை செய்யாதபடிக்கு அவர்களைத் தடுக்கும்பொழுது இதோ, அவர்களுடைய காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர, அந்த மனுபுத்திரர் கைகளில் அந்த வேலை இனியும் எனக்கு அவசியமில்லை என்பது என்னுடைய நியதியாயிருக்கிறது என மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்.

50 என்னுடைய பரிசுத்த பிரமாணங்கள் மற்றும் கட்டளைகளின் மீறுதல்கள் மற்றும் அக்கிரமங்களினால் என்னுடைய வேலையை தடுத்த அவர்கள் மனந்திரும்பாமல் என்னை வெறுக்கும்வரை மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறைவரை அவர்களை நான் விசாரிப்பேன் என தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

51 ஆகவே, இந்த காரணத்திற்காக மிசௌரியின் ஜாக்சன் மாகாணத்தில் என்னுடைய நாமத்தில் ஒரு பட்டணத்தையும் ஒரு ஆலயத்தையும் கட்டி எழுப்ப நான் கட்டளையிட்டு தங்களுடைய சத்துருக்களால் தடுக்கப்பட்டவர்களின் காணிக்கைகளை நான் ஏற்றுக்கொண்டேன் என உங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

52 அவர்கள் மனந்திரும்பாமல் என்னை வெறுக்கும்வரை, மூன்றாவது நான்காவது தலைமுறைவரை அவர்களின் தலைகள்மீது நியாயத்தீர்ப்பு, கோபம், ஆக்கினை, அழுகை, வியாகூலம் மற்றும் பற்கடிப்பால் நான் பதில் கொடுப்பேன் என உங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

53 ஒரு வேலையைச் செய்ய கட்டளையிடப்பட்டு, தங்களுடைய சத்துருக்களின் கைகளாலும் ஒடுக்கத்தாலும் தடை செய்யப்பட்ட சகலருக்கும் சம்பந்தப்பட்ட உன்னுடைய ஆறுதலுக்காக இதை நான் உனக்கு ஒரு உதாரணமாக்குகிறேன் என உங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

54 ஏனெனில் நானே உன்னுடைய தேவனாகிய கர்த்தர், இருதயத்தில் சுத்தமுள்ளவர்களும், மிசௌரி தேசத்தில் கொலையுண்டவர்களுமான உன்னுடைய சகோதரர் யாவரையும் இரட்சிப்பேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

55 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களுக்கு கட்டளையிட்ட எல்லா காரியங்களிலும் நீங்கள் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என உங்களை நீங்கள் நிரூபிக்கும்படியாகவும், நான் உங்களை ஆசீர்வதித்து, கனத்துடனும், அழியாமையிலும், நித்திய ஜீவனிலும் உங்களுக்கு கிரீடம் சூட்டும்படியாகவும் இந்த இடத்தில் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படியாக மீண்டும் உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன்.

56 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அந்நியர்கள் தங்குவதற்காக கட்டும்படி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட என்னுடைய தங்கும் வீட்டிற்கு சம்பந்தப்பட்ட வரை, அது என்னுடைய நாமத்தில் கட்டப்படுவதாக, அதன்மேல் என்னுடைய நாமம் சூட்டப்படுவதாக, தலைமுறை தலைமுறையாக என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் அங்கே இடம் இருப்பதாக.

57 ஏனெனில் அவனுக்குப் பின் அவனுடைய சந்ததியரின் தலையின்மேல் அவனுடைய ஆசீர்வாதமும் வைக்கப்படும்படியாக இந்த அபிஷேகத்தை நான் அவனுடைய தலையின்மேல் வைத்தேன்.

58 பூமியின் கோத்திரத்தாரைக் குறித்து நான் ஆபிரகாமுக்குச் சொன்னதைப்போல, அதையே என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கும் நான் சொல்லுகிறேன், உன்னாலும் உன் சந்ததியினாலும் பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

59 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்பும் அவனுக்குப்பின் அவனுடைய சந்ததியும் தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்குமாய் அந்த வீட்டில் இடம் பெறுவார்களாக என கர்த்தர் சொல்லுகிறார்.

60 அந்த வீட்டின் பெயர் நாவூ வீடு என்றழைக்கப்படுவதாக; சீயோனின் மகிமையையும், அதிலுள்ள மூலைக்கல்லின் மகிமையையும் அவன் சிந்திக்கும்படியாகவும்;

61 கீர்த்தி பொருந்திய விருட்சங்களாகவும், அதின் மதில்கள் மேல் காவற்காரர்களாகவுமிருக்க நான் அமைத்தவர்களின் ஆலோசனையையும் அவன் பெறும்படியாகவும், அது மனுஷனுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான வாசஸ்தலமாயும், களைப்படைந்த பயணிக்கு ஒரு இளைப்பாறும் இடமாயுமிருப்பதாக.

62 இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜார்ஜ் மில்லரும், என்னுடைய ஊழியக்காரனாகிய லைமன் விட்டும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் ஸ்னைடரும், என்னுடைய ஊழியக்காரனாகிய பீட்டர் ஹாஸும் அவர்களுக்குள் ஒழுங்குபடுத்தி, அந்த வீட்டைக் கட்டுவதின் நோக்கத்திற்காக தங்களுடைய குழுமத்திற்கு ஒரு தலைவராயிருக்க தங்களில் ஒருவரை நியமிப்பார்களாக.

63 அந்த வீட்டைக் கட்டுவதற்காக பங்குகளை அவர்கள் பெறுவதற்காக அவர்கள் ஒரு அமைப்புச் சாசனத்தை அமைப்பார்களாக.

64 அந்த வீட்டில் ஒரு பங்குக்காக ஐம்பது டாலர்களுக்குக் குறைவாக அவர்கள் வாங்கமாட்டார்கள், அந்த வீட்டில் பங்குக்காக எந்த மனுஷனிடமிருந்தும் பதினைந்தாயிரம் டாலர்கள் பெறுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

65 ஆனால் எந்த மனுஷனிடமிருந்தும் பதினைந்தாயிரம் டாலர்கள் பங்குக்கு அதிகமாக பெற அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

66 அந்த வீட்டில் ஒரு பங்குக்காக எந்த மனுஷனிடமிருந்தும் ஐம்பது டாலர்களுக்குக் குறைவாகப் பெற அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

67 அவன் பங்கைப் பெறுகிற நேரத்தில் அவன் அவர்களுடைய கைகளில் அவனுடைய பங்கை செலுத்துபவனைத் தவிர இந்த வீட்டில் ஒரு பங்குதாரராக எந்த மனுஷனையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்;

68 பங்குத் தொகைக்குத் தக்கவாறு அந்த வீட்டில் அவர்களுடைய கைகளில் அவன் செலுத்தும்போது பங்கை அவன் பெறுகிறான்; ஆனால் அவர்களுடைய கைகளில் அவன் ஒன்றும் செலுத்தாதபோது அந்த வீட்டில் அவன் எந்த பங்கையும் பெறமாட்டான்.

69 அவர்களுடைய கைகளில் யாராவது பங்கை செலுத்தினால் அது பங்குக்காகவும், நீ என்னுடைய சித்தத்தின்படி செய்தால், அந்த பங்கை அவனும் அவனுடைய சந்ததியரும் வைத்திருந்து விற்காதவரை, அல்லது அவர்களுடைய சொந்த விருப்பத்தாலும் செயலாலும் அவர்களுடைய கைகளிலிருந்து பங்கு சென்றுவிடாதவரை அவனுக்காகவும் தலைமுறை தலைமுறையாக அவனுக்குப்பின் அவனுடைய தலைமுறைக்கும் இருக்கும் என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

70 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜார்ஜ் மில்லரும், என்னுடைய ஊழியக்காரனாகிய லைமன் விட்டும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜான் ஸ்னைடரும், என்னுடைய ஊழியக்காரனாகிய பீட்டர் ஹாஸும் எதாவது பங்கை பணமாகவோ, அல்லது பணத்தின் உண்மையான மதிப்பை அவர்கள் பெறுகிற அளவில் சொத்துக்களையோ தங்களுடைய கைகளில் பெற்றால் அந்த பங்கின் எந்த பகுதியையும் அந்த வீட்டுக்குத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் அவர்கள் ஒதுக்கக்கூடாது.

71 அந்த வீட்டில் மட்டும் பங்குதாரரின் சம்மதமில்லாமல் அந்த பங்கின் எந்த பகுதியையாவது அவர்கள் எங்கேயாவது ஒதுக்கினால் வேறெங்கேயாவது அவர்கள் ஒதுக்கிய பங்கிற்காக நான்கு மடங்காக செலுத்தாமலிருந்தால், அந்த வீட்டில் மட்டும் அவர்கள் சபிக்கப்பட்டு அவர்களுடைய இடத்திலிருந்து அகற்றப்படுவார்கள் என தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; ஏனெனில் நானே கர்த்தரும், நானே தேவனுமாயிருக்கிறேன், இந்தக் காரியங்களில் எதிலும் பரியாசம் பண்ணப்பட முடியாது.

72 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அந்த வீட்டைக் கட்டுவதற்காக அவனுக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி அவர்களுடைய கைகளில் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் பங்கை செலுத்துவானாக; ஆனால் அந்த வீட்டில் பதினைந்தாயிரம் டாலர்களுக்கான பங்குக்கு மேலாகவோ அல்லது ஐம்பது டாலர்களுக்குக் குறைவாகவோ என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்போ வேறு எந்த மனுஷனோ செலுத்த முடியாது என கர்த்தர் சொல்லுகிறார்.

73 அவைகளைக்குறித்து என்னுடைய சித்தத்தை அறிய விரும்புகிற மற்றவர்களும்கூட இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அதை என்னிடத்தில் கேட்டார்கள்.

74 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய வின்சென் நைட்டைக் குறித்து நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய சித்தத்தின்படி அவன் செய்தால் அவனுக்காகவும், அவனுக்குப் பின் தலைமுறை தலைமுறையாக அவனுடைய தலைமுறைக்காகவும் அந்த வீட்டிற்குள் பங்கை அவன் போடுவானாக.

75 ஏழைக்கும், தேவையிலிருப்போனுக்கும் பரிந்து பேச ஜனங்களுக்கு மத்தியிலே அவனுடைய சத்தத்தை நீண்டதாயும் சத்தமாயும் அவன் உயர்த்துவானாக; அவன் தவறாதிருப்பானாக, அவனுடைய இருதயம் சோர்ந்து போகாதிருப்பதாக, அவனுடைய காணிக்கைகளை நான் ஏற்றுக் கொள்வேன், ஏனெனில் காயீனின் காணிக்கைகளைப்போல அவைகள் எனக்கிராது, ஏனெனில் அவன் என்னுடையவனாயிருப்பான் என கர்த்தர் சொல்லுகிறார்.

76 அவனுடைய குடும்பம் களிகூர்ந்து தங்களுடைய இருதயங்களை துன்பங்களிலிருந்து விலக்குவார்களாக; ஏனெனில் நான் அவனை தெரிந்துகொண்டு அவனை அபிஷேகம் செய்தேன், அவனுடைய வீட்டாருக்கு மத்தியிலே அவன் கனம் பண்ணப்படுவான், ஏனெனில் அவனுடைய சகல பாவங்களையும் நான் மன்னிப்பேன் என கர்த்தர் சொல்லுகிறார். ஆமென்.

77 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரமுக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி அவனுக்கும் தலைமுறை தலைமுறையாக அவனுக்குப் பின்வரும் அவனுடைய தலைமுறைக்கும் அந்த வீட்டிற்குள் தன் பங்கைப் போடுவானாக.

78 அந்த வீட்டிற்குள் என்னுடைய ஊழியக்காரனாகிய ஐசக் காலன்ட் பங்கைப் போடுவானாக; ஏனெனில் கர்த்தராகிய நான் அவன் செய்த வேலைக்காக அவனை நேசிக்கிறேன், அவனுடைய சகல பாவங்களையும் மன்னிப்பேன்; ஆகவே, தலைமுறை தலைமுறையாக அந்த வீட்டில் ஒரு பங்கு இருப்பதற்காக அவன் நினைவுகூரப்படுவானாக.

79 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் அவர்களுக்கு சுட்டிக்காட்டுகிற பணியை நிறைவேற்ற என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரமுடன் போகும்படியாக உங்களுக்கு மத்தியிலே என்னுடைய ஊழியக்காரனாகிய ஐசக் காலன்ட் நியமிக்கப்பட்டு என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் மார்க்ஸால் நியமனம் செய்யப்பட்டு அவனால் ஆசீர்வதிக்கப்படுவானாக, அவர்கள் பெரிதாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

80 என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் மார்க்ஸுக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி அவனுக்கும் தலைமுறை தலைமுறையாக அவனுடைய தலைமுறைக்கும் அந்த வீட்டிற்கு தன் பங்கை செலுத்துவானாக.

81 என்னுடைய ஊழியக்காரனாகிய ஹென்றி ஜி. ஷெர்வுட்டுக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி அவனுக்கும் தலைமுறை தலைமுறையாக அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததிக்கும் அந்த வீட்டிற்கு தன் பங்கைச் செலுத்துவானாக.

82 என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் லா, அவனுக்கும் தலைமுறை தலைமுறையாக அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததிக்கும் அந்த வீட்டிற்கு தன் பங்கைச் செலுத்துவானாக.

83 அவன் என்னுடைய சித்தத்தின்படி செய்தால் கிழக்கு தேசங்களுக்கு, கர்த்லாந்துக்கும் கூட அவன் தன்னுடைய குடும்பத்தைக் கொண்டுபோகாதிருப்பானாக; ஆயினும் கர்த்தராகிய நான் கர்த்லாந்தைக் கட்டுவேன், ஆனால் கர்த்தராகிய நான், அங்குள்ள குடிமக்களுக்காக ஒரு சவுக்கை ஆயத்தப்படுத்தியிருக்கிறேன்.

84 என்னுடைய ஊழியக்காரனாகிய ஆல்மன் பாபிட்டுடன் நான் பிரியப்படாத அநேக காரியங்கள் உண்டு; இதோ, நான் நியமித்த, என்னுடைய சபையின் தலைமையின் ஆலோசனைக்குப் பதிலாக அவனுடைய ஆலோசனையை ஸ்தாபிக்க அவன் ஆசைப்பட்டான்; என்னுடைய ஜனங்களின் தொழுகைக்காக ஒரு பொன் கன்றுக்குட்டியை அவன் உருவாக்குகிறான்.

85 என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்க இங்கே வந்த எந்த மனுஷனும் இந்த இடத்திலிருந்து போகாதிருப்பானாக.

86 அவர்கள் இங்கே ஜீவித்தால் எனக்காக அவர்கள் ஜீவிப்பார்களாக; அவர்கள் மரித்தால் எனக்காக அவர்கள் மரிப்பார்களாக, ஏனெனில் இங்கே அவர்களுடைய சகல பிரயாசங்களிலிருந்தும் அவர்கள் இளைப்பாறி தங்களுடைய பணியை தொடருவார்கள்.

87 ஆகவே என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் என்னில் அவனுடைய நம்பிக்கையை வைத்து, தேசத்தில் பரவியுள்ள வியாதியால் அவனுடைய குடும்பத்தைக் குறித்து பயப்படுவதை நிறுத்துவானாக. நீ என்னை நேசித்தால்; என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்வாயாக; தேசத்தின் வியாதி உன்னுடைய மகிமைக்கேதுவாகத் திரும்பும்.

88 என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம், வார்சாவின் குடிகளுக்கும், கார்த்தேஜின் குடிகளுக்கும், பர்லிங்டன் குடிகளுக்கும், மாடிசன் குடிகளுக்கும், ஒரு உரத்த சத்தத்துடனும் மிகுந்த சந்தோஷத்துடனும், என்னுடைய ஆவியினால் அசைக்கப்படுகிறபடி என்னுடைய நித்திய சுவிசேஷத்தை அறிவிப்பானாக. கூடுதலான அறிவுரைகளுக்கு என்னுடைய பொது மாநாட்டிற்காக பொறுமையுடனும் சிரத்தையுடனும் காத்திருப்பானாக என கர்த்தர் சொல்லுகிறார்.

89 என்னுடைய சித்தத்தின்படி அவன் செய்தால், இப்போதிலிருந்து என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்பின் ஆலோசனைக்கு செவிகொடுப்பானாக. அவனுடைய வருமானத்தால் சிறுமையானவனை ஆதரித்து, பூமியின் குடிகளுக்கு என்னுடைய பரிசுத்த வார்த்தையின் புதிய மொழிபெயர்ப்பை அறிவிப்பானாக.

90 அவன் இதைச் செய்தால், அவன் கைவிடப்படாதபடிக்கும், அவனுடைய சந்ததி ஒரு அப்பத்துக்கு இரப்பதைக் காணாதபடிக்கும் பலவிதமான ஆசீர்வாதங்களுடன் நான் அவனை ஆசீர்வதிப்பேன்.

91 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆசீர்வாதத்தாலும் உரிமையாலும் அவனுடைய தகப்பனால் அவனுக்கு நியமிக்கப்பட்ட ஆசாரியத்துவ மற்றும் கோத்திரத்தலைவனின் அலுவலை என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரம் எடுத்துக்கொள்ளும்படியாக, என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரமின் இடத்தில்,

92 அதாவது இப்போதிலிருந்து என்னுடைய ஜனங்கள் யாவருடைய தலைகள்மீதும் கோத்திரத்தலைவனின் ஆசீர்வாதங்களுக்கான திறவுகோல்களை அவன் தரித்திருக்கும்படியாக,

93 அதாவது அவன் ஆசீர்வதிக்கிற எவனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்படியாக, அவன் சபிக்கிற எவனும் சபிக்கப்பட்டிருக்கும்படியாக, பூமியில் அவன் கட்டுகிற எதுவும் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்படியாக; பூமியில் அவன் கட்டவிழ்க்கிற எதுவும் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்படிக்கு, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டு, நியமனம் செய்யப்பட்டு, அபிஷேகம் செய்யப்படுவானாக.

94 இந்த நேரத்திலிருந்து என்னுடைய சபைக்கு அவன் ஒரு தீர்க்கதரிசியாய், ஒரு ஞானதிருஷ்டிக்காரனாய், வெளிப்படுத்துபவனாயிருக்க அவனையும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்பையும்;

95 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புடனும் அவன் இணைந்து செயல்படும்படியாக, அவன் கேட்டு பெற்றுக்கொண்ட திறவுகோல்களை அவனுக்குக் காட்டிய என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்பிடமிருந்து அவன் ஆலோசனை பெற்று, அதே ஆசீர்வாதத்துடனும், மகிமை, கனம், ஆசாரியத்துவத்துடனும், மற்றும் ஒருசமயம் என்னுடைய ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரியின்மீது வைக்கப்பட்ட ஆசாரியத்துவத்தின் வரங்களுடனும் கிரீடம் சூட்டப்படும்படியாக;

96 நான் அவனுக்குக் காட்டுகிற காரியங்களைக் குறித்து என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரம் சாட்சி பகரும்படியாக, தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்குமாய் அவனுடைய பெயர் கௌரவமான நினைவுகூருதலில் இருக்கும்படியாக நான் நியமிக்கிறேன்.

97 திறவுகோல்களால் ஆசீர்வாதங்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும்படியாக அவற்றை என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் லா பெற்றுக்கொள்வானாக, அவன் எனக்கு முன்பாக தாழ்மையாயிருந்து கபடற்றவனாயிருப்பானாக, அவன் என்னுடைய ஆவியையும், சகல காரியங்களின் சத்தியத்தையும் அவனுக்கு வெளிப்படுத்தி, அவன் என்ன சொல்ல வேண்டுமென்பதை அந்த மணிநேரத்திலே அவனுக்குக் கொடுக்கிற தேற்றரவாளனைப் பெற்றுக்கொள்வான்.

98 இந்த அடையாளங்கள் அவனைப் பின்தொடரும், அவன் வியாதியஸ்தரை குணமாக்குவான், அவன் பிசாசுகளைத் துரத்துவான், சாவுக்கேதுவான விஷத்தை அவனுக்குக் கொடுக்கிறவர்களிடமிருந்து அவன் விடுவிக்கப்படுவான்;

99 விஷ சர்ப்பம் அவனுடைய பாதத்தைப் பிடித்துக்கொள்ள முடியாத பாதைகளில் அவன் வழி நடத்தப்படுவான். கழுகுகளின் செட்டைகளின் மீது அமர்த்தப்படுவதைப்போல, அவனுடைய நினைவுகளால் எழுப்பப்பட்டு அவன் உயர்த்தப்படுவான்.

100 மரித்தவனை அவன் எழுப்ப வேண்டுமென்பது எனக்கு சித்தமானால், அவன் தன்னுடைய சத்தத்தை தடுக்காதிருப்பானாக.

101 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம், ஆனந்தத்துடனும் களிகூருதலுடனும், சிங்காசனத்தில் என்றென்றைக்கும் அமர்ந்திருக்கிற அவருக்கு ஓசன்னாக்களுடன் சத்தமிட்டுக் கூப்பிடுவானாக, தவற வேண்டாம் என உன்னுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

102 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியமுக்காகவும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஹைரமுக்காகவும் மாத்திரம் ஒரு ஊழியத்தை நான் வைத்திருக்கிறேன்; அவன் தேவைப்படுவதால் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் வீட்டிலேயே தங்கியிருப்பானாக. மீதியானவற்றை இப்போதிலிருந்து நான் உங்களுக்குக் காட்டுவேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

103 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி எனக்கு சேவை செய்து என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு ஆலோசகராக இருந்தால், அவன் எழுந்துவந்து அவனுடைய அழைப்பின் அலுவலில் தரித்திருப்பானாக, எனக்கு முன்பாக தன்னைத் தாழ்த்துவானாக.

104 ஒரு ஏற்றுக்கொள்கிற காணிக்கையையும் நன்றியறிதலையும் எனக்கு அவன் செலுத்தி என்னுடைய ஜனங்களுடன் தங்கியிருந்தால், இதோ, உன்னுடைய தேவனாகிய கர்த்தராகிய நான் அவன் குணமடையும்படியாக அவனைக் குணப்படுத்துவேன், பர்வதங்களின் மீது அவன் மீண்டும் தன்னுடைய சத்தத்தை உயர்த்தி எனக்கு முன்பாக பிரதிவாசகனாயிருப்பான்.

105 அவன் வந்து, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப் வசிக்கிற இடத்தின் அருகில் தன்னுடைய குடும்பத்தை குடியமர்த்துவானாக.

106 அவனுடைய பயணங்கள் முழுவதிலும் ஒரு எக்காளச் சத்தத்தைப்போல அவனுடைய சத்தத்தை அவன் உயர்த்தி வரப்போகிற கோபத்திற்கு விலகியோட பூமியின் குடிகளை எச்சரிப்பானாக.

107 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு அவன் உதவுவானாக, நான் உங்களுக்கு முன்பு சொன்னதைப்போல பூமியின் ராஜாக்களுக்கு ஒரு திடமான அறிவிப்பைச் செய்வதில், என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் லாவும் என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு உதவுவானாக.

108 என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி என்னுடைய சித்தத்தின்படி செய்தால், கிழக்கு தேசங்களுக்கு அவனுடைய குடும்பத்தை அவன் அகற்றாமலிருப்பானாக, ஆனால் நான் சொன்னதைப்போல அவர்களுடைய குடியிருப்பை அவன் மாற்றுவானாக.

109 இதோ, நான் உனக்கு நியமித்த பட்டணமாகிய, நாவூ பட்டணத்திற்கு வெளியேயும் பாதுகாப்பையும் அடைக்கலத்தையும் காண அவன் நாடுவது என்னுடைய சித்தமில்லை.

110 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இப்போதும்கூட என்னுடைய சத்தத்திற்கு அவன் செவிகொடுத்தால், அது அவனுக்கு நலமாயிருக்கும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

111 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச்சொல்லுகிறேன், தங்குவதற்கான ஒரு வீட்டை, நாவூ வீட்டைக் கட்ட நான் நியமித்தவர்களின் கைகளில் என்னுடைய ஊழியக்காரனாகிய ஆமோஸ் டேவிஸ் பங்கை செலுத்துவானாக.

112 அவனுக்கு ஆர்வமிருந்தால் இதை அவன் செய்வானாக, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்பின் ஆலோசனைக்கு அவன் செவிகொடுப்பானாக, மனுஷர்களின் நம்பிக்கையை அவன் பெறும்படியாக அவனுடைய சொந்த கைகளினால் அவன் பிரயாசப்படுவானாக.

113 அவனுடைய பராமரிப்பில் பொறுப்பளிக்கப்பட்ட சகல காரியங்களிலும், ஆம், ஒரு சில காரியங்களிலும்கூட உண்மையுள்ளவனாக அவன் தன்னை நிரூபிக்கும்போது அநேகரின் மேல் - அதிகாரியாக்கப்படுவான்;

114 ஆகவே, அவன் மேன்மையடையும்படியாக அவன் தன்னை தாழ்த்துவானாக, அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

115 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய ராபர்ட் டி. பாஸ்டர் என்னுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்தால், அவ்வப்போது அவனுக்கு வாசல் திறக்கப்படவிருப்பதால், அவனோடு தான் செய்த ஒப்பந்தத்தின்படி, என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கு ஒரு வீட்டைக் கட்டுவானாக.

116 அவனுடைய சகல முட்டாள்தனத்திற்காகவும் அவன் மனந்திரும்பி, தயாளம் என்னும் வஸ்திரம் தரித்து, தீமை செய்வதை நிறுத்தி, அவனுடைய கடினமான பேச்சுக்கள் யாவற்றையும் ஒரு பக்கம் ஒதுக்கி விடுவானாக;

117 அவனுக்கும், தலைமுறை தலைமுறையாக அவனுக்குப் பின்வரும் அவனுடைய தலைமுறைக்கும், நாவூ வீட்டின் குழுமத்தினிடம் பங்கை செலுத்துவானாக;

118 என்னுடைய ஊழியக்காரர்களாகிய ஜோசப், ஹைரம், வில்லியம் லா மற்றும் சீயோனின் அஸ்திபாரத்தைப்போட நான் அழைத்த அதிகாரிகளின் ஆலோசனைக்கும் செவிகொடுப்பானாக; என்றென்றைக்கும் அது அவனுக்கு நலமாயிருக்கும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

119 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச்சொல்லுகிறேன், மார்மன் புஸ்தகத்திலும், நான் உனக்குக் கொடுத்த வெளிப்படுத்தல்களிலும் அவன் நம்பிக்கையுள்ளவனாய் இல்லாதவரை நாவூ வீட்டின் குழுமத்திற்கு எந்த மனுஷனும் பங்கை செலுத்தாதிருப்பானாக, என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்;

120 ஏனெனில் இதைவிட அதிகமானதோ அல்லது குறைவானதோ தீமையிலிருந்து வருகிறது, சாபங்களுடனே அன்றி ஆசீர்வாதங்களுடன் நிலவாது என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

121 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாவூ வீட்டை அவர்கள் கட்டுவதில் அவர்களுடைய பிரயாசங்கள் எல்லாவற்றிற்கும் நாவூ வீட்டின் குழுமம், பலனாக சம்பளம் பெறுவார்களாக; அங்குள்ள விலைவாசிக்கு ஏற்ப அவர்களுக்கு மத்தியிலே சம்பளங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாயிருப்பதாக.

122 அதற்கு தேவையாயிருந்தால், பங்கைச் செலுத்துகிற ஒவ்வொரு மனுஷனும், பங்குக்கேற்ப அவர்களுடைய ஆதரவுக்காக, அவர்களுடைய சம்பளத்தை கொடுப்பார்களாக என கர்த்தர் சொல்லுகிறார்; இல்லையெனில் அந்த வீட்டில் அவர்களுடைய பிரயாசங்கள் பங்குகளாகக் கணக்கிடப்படும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.

123 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், திறவுகோல்களை நீங்கள் தரித்திருக்கும்படியாக என்னுடைய ஒரேபேறான குமாரனின் முறைமையின்படியும், மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரியத்துவமாகிய, என்னுடைய ஆசாரியத்துவத்திற்கு சொந்தமான அலுவலர்களை இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

124 முதலாவதாக, உன்மீது வரப்போகிற சோதனையின் மணிநேரத்தை பொருட்படுத்தாமல் நீ விழாதிருக்கும்படியாக மீட்பின் நாள்வரை, நீ முத்திரிக்கப்பட என்னுடைய சபையின் முத்திரிப்பின், வாக்குத்தத்தத்தின் பரிசுத்த ஆவியின் ஆசீர்வாதங்களைத் தரித்திருக்க உங்களுக்கு ஒரு கோத்திரத்தலைவனாக இருக்க ஹைரம் ஸ்மித்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

125 என்னுடைய ஊழியக்காரனாகிய ஜோசப், என்னுடைய சபை எல்லாவற்றின் பேரிலும் தலைமை மூப்பராயிருக்க, மொழிபெயர்ப்பாளராக, வெளிப்படுத்துபவராக, ஞானதிருஷ்டிக்காரராக மற்றும் தீர்க்கதரிசியாக இருக்குமாறு நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

126 முழு சபைக்கும் வெளிப்படுத்தல்களைப் பெற ஒரு குழுமத்தையும் பிரதான தலைமையையும், இவர்கள் அமைக்க என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டனையும் என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் லாவையும் ஆலோசகர்களாக இருக்க அவனுக்கு நான் கொடுக்கிறேன்.

127 பிரயாணம் செய்யும் பன்னிருவரின்பேரில் ஒரு தலைவராயிருக்க என்னுடைய ஊழியக்காரனாகிய பிரிகாம் யங்கை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்;

128 பூமியின் நான்கு திசைகளிலும் என்னுடைய ராஜ்யத்தின் அதிகாரத்தைத் திறக்கவும், அதன் பின்னர் ஒவ்வொரு சிருஷ்டிக்கும் என்னுடைய வார்த்தையை அனுப்பவும் திறவுகோல்களை அந்த பன்னிருவரே தரித்திருக்கிறார்கள்.

129 அவர்கள், ஹீபர் சி. கிம்பல், பார்லி பி. பிராட், ஆர்சன் பிராட், ஆர்சன் ஹைட், வில்லியம் ஸ்மித், ஜான் டெய்லர், ஜான் இ. பேஜ், வில்பர்ட் உட்ரப், வில்லார்ட் ரிச்சர்ட்ஸ், ஜார்ஜ் எ. ஸ்மித்;

130 டேவிட் பாட்டனை நான் எனக்காக வைத்துக் கொண்டேன் இதோ, அவனுடைய ஆசாரியத்துவத்தை அவனிடமிருந்து எந்த மனுஷனும் எடுத்துக்கொள்வதில்லை; ஆனால் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அதே அழைப்புக்கு மற்றொருவன் நியமிக்கப்படலாம்.

131 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், சீயோனின் தலைக்கல்லுக்காக ஒரு பிரதான ஆலோசனைக் குழுவை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்,

132 சாமுவேல் பென்ட், ஹென்றி ஜி. ஷெர்வுட், ஜார்ஜ் டபுள்யு. ஹாரிஸ், சார்ல்ஸ் சி. ரிச், தாமஸ் குரோவர், நீவல் நைட், டேவிட் டோர்ட், டன்பர் வில்சன் என்பவர்கள், சேமோர் ப்ரன்சென் என்ற பெயருடையவனை நான் எனக்காக வைத்துக்கொண்டேன்; அவனுடைய ஆசாரியத்துவத்தை எந்த மனுஷனும் எடுத்துக்கொள்வதில்லை, ஆனால் அவனுக்குப் பதிலாக அதே ஆசாரியத்துவத்திற்கு மற்றொருவன் நியமிக்கப்படலாம், மேலும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவனுக்குப் பதிலாக இந்த அழைப்பிற்கு என்னுடைய ஊழியக்காரனாகிய ஆரோன் ஜான்சன் நியமனம் செய்யப்படுகிறான்—டேவிட் புல்மர், அல்பியஸ் கட்லர், வில்லியம் ஹன்டிங்டன்.

133 மேலும் பிரதான ஆசாரியர்களின் குழுமத்துக்கு தலைவராக இருக்க டான் சி. ஸ்மித்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்;

134 வெளியில் பரவலாகவுள்ள வெவ்வேறு பிணையங்களின் மேல் நிரந்தர தலைவர்களாக அல்லது ஊழியக்காரர்களாக நியமிக்கப்படுகிறவர்களை தகுதிபடுத்தும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட நியமம்;

135 அவர்கள் முடிவு செய்தால் அவர்கள் பிரயாணப்படலாம், ஆனால் நிரந்தர தலைவர்களாக அவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும், இது அவர்களின் அழைப்பின் அலுவல் என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

136 என்னுடைய சபையின் பிரதான ஆசாரியர்களின் குழுமத்துக்கு அவர்கள் தலைமை தாங்கும்படியாக ஆலோசனைக்காரர்களாக, அமசா லைமனையும் நோவா பாக்கார்டையும் நான் அவனுக்குக் கொடுக்கிறேன் என கர்த்தர் சொல்லுகிறார்.

137 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஜான் எ. ஹிக்ஸ், சாமுவேல் வில்லியம்ஸ் மற்றும் ஜெஸ்ஸி பேக்கரை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; இந்த ஆசாரியத்துவத்தினர் மூப்பர்களின் குழுமத்துக்கு தலைமை தாங்குவார்கள், இந்த குழுமம் நிரந்தர ஊழியக்காரர்களாக அமைக்கப்பட்டுள்ளது, ஆயினும் அவர்கள் பயணம் செய்யலாம், இருந்தும் என்னுடைய சபைக்கு நிரந்தர ஊழியக்காரர்களாயிருக்க அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என கர்த்தர் சொல்லுகிறார்.

138 மீண்டும் எழுபதின்மரின் குழுமத்துக்குத் தலைமை தாங்க ஜோசப் யங், ஜோசியா பட்டர்பீல்ட், டேனியல் மைல்ஸ், ஹென்றி ஹெரிமான், சேரா புல்சிபெர், லேவி ஹான்காக், ஜேம்ஸ் பாஸ்டரை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்;

139 உலகம் முழுவதிலும் பயணம் செய்து என்னுடைய நாமத்தைக் குறித்து சாட்சி கொடுக்க மூப்பர்களுக்காக அமைக்கப்பட்ட குழுமம், பயணம் செய்யும் பிரதான ஆலோசனைக் குழுவும், என்னுடைய அப்போஸ்தலர்களும் என்னுடைய முகத்திற்கு முன்பாக ஒரு வழியை ஆயத்தப்படுத்த அவர்களை அனுப்புவார்கள்.

140 இந்தக் குழுமத்திற்கும் மூப்பர்களின் குழுமத்திற்குமிடையிலான வித்தியாசம், ஒன்று, தொடர்ந்து பிரயாணம் செய்வதுவும், மற்றொன்று, நேரத்திற்கு நேரம் சபைகளைத் தலைமை தாங்குவதுமாகும், அவ்வப்போது தலைமை தாங்குவதற்கான பொறுப்பு ஒன்றிருக்கிறது, மற்றொன்றுக்கு தலைமை தாங்க பொறுப்பில்லை என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

141 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆயத்துவத்தின் பேரில் தலைமை தாங்க, அதை அவன் பெறுவதாயிருந்தால், வின்சென் நைட், சாமுவேல் ஹெச். ஸ்மித், ஷாட்ராக் ரவுன்டியை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்; சொல்லப்பட்ட ஆயத்துவத்தின் ஒரு தகவல் கோட்பாடும் உடன்படிக்கைகளும் புஸ்தகத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

142 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆசாரியர்களுக்காகவும், ஆசிரியர்களின் தலைவர் மற்றும் அவருடைய ஆலோசகர்களுக்காகவும், உதவிக்காரர்களின் தலைவர் மற்றும் அவருடைய ஆலோசகர்களுக்காகவும், பிணையத்தின் தலைவர் மற்றும் அவருடைய ஆலோசகர்களுக்காகவும், சாமுவேல் ரோல்பையும் அவனுடைய ஆலோசகர்களையும்.

143 மேலே குறிப்பிடப்பட்ட அலுவல்களையும் அதிலுள்ள திறவுகோல்களையும், உதவிகளுக்கும், நிர்வாகங்களுக்கும், ஊழியப்பணிக்கும், என்னுடைய பரிசுத்தவான்களை சீர்பொருந்துவதற்கும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.

144 என்னுடைய பொது மாநாட்டில் இந்த அலுவல்கள் அனைத்தையும் நீங்கள் நிரப்பி, நான் குறிப்பிட்ட பெயர்களை அங்கீகரிக்கவேண்டும் அல்லது அவைகளை நிராகரிக்கவேண்டும் என்ற ஒரு கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்;

145 என்னுடைய நாமத்தில் அதை நீங்கள் கட்டும்போது என்னுடைய ஆலயத்தில் இந்த அலுவலகங்கள் அனைத்துக்கும் நீ அறைகளை ஆயத்தப்படுத்தவேண்டும் என உங்களுடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.