வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14


பாகம் 14

ஜூன் 1829ல் நியூயார்க்கிலுள்ள பயெட்டியில் டேவிட் விட்மருக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பில் விட்மரின் குடும்பம் மிகுந்த ஆர்வமடைந்தனர். மொழிபெயர்ப்பின் வேலை பூர்த்தியாகும் வரைக்கும், வரப்போகிற புஸ்தகத்தின் பதிப்புரிமை பாதுகாக்கப்படும் வரைக்கும், அவர் தங்கியிருந்த பீட்டர் விட்மர் மூத்தவர் வீட்டை தனது வசிக்குமிடமாக தீர்க்கதரிசி ஏற்படுத்திக் கொண்டார். அப்பணியின் உண்மை நிலையைப்பற்றிய சாட்சியை பெற்றிருந்த விட்மரின் மூன்று மகன்கள் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட கடமையைக் குறித்த காரியத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்களானார்கள். ஒரு விண்ணப்பத்துக்குப் பதிலாக, இந்த வெளிப்படுத்தலும் பின்வருகிற இரண்டு பாகங்களும் (பாகங்கள் 15 மற்றும் 16) ஊரீம் மற்றும் தும்மீம் மூலமாகக் கொடுக்கப்பட்டன. பின்னர் மார்மன் புஸ்தகத்திற்கான மூன்று சாட்சிகளில் டேவிட் விட்மர் ஒருவரானார்.

1–6, திராட்சைத் தோட்டத்தில் பிரயாசப்படுவோர் இரட்சிப்பைப் பெறுவார்கள்; 7–8, தேவனுடைய வரங்கள் எல்லாவற்றிற்கும் மேலானது நித்திய ஜீவன்; 9–11, வானங்களையும் பூமியையும் கிறிஸ்து சிருஷ்டித்தார்.

1 மனுபுத்திரர்களுக்குள் ஒரு பெரிதும் அற்புதமுமான கிரியையைச் செய்யும் காலம் வரப்போகிறது.

2 இதோ, நானே தேவன், எனது வார்த்தைக்குச் செவிகொடுங்கள், அவை ஜீவனும் வல்லமையுமுள்ள, கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்க, இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைவிட கூர்மையானவை; ஆகவே எனது வார்த்தைக்குச் செவிகொடுங்கள்.

3 இதோ, வயல் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது; ஆகவே, அறுவடைக்கு வாஞ்சிக்கிறவன் தனது முழு பலத்துடன் அரிவாளை நீட்டி, தேவனுடைய ராஜ்யத்தில் தனது ஆத்துமாவுக்கான நித்திய இரட்சிப்புக்காக பாதுகாத்து வைக்கும்படியாக பகல் இருக்கும்வரை அறுவடை செய்யக்கடவன்.

4 ஆம், தனது அரிவாளை நீட்டி அறுவடை செய்கிறவன் தேவனால் அழைக்கப்பட்டவன்.

5 ஆகவே, என்னிடம் கேட்டால் நீ பெற்றுக்கொள்வாய்; நீ தட்டினால் அது உனக்குத் திறக்கப்படும்.

6 சீயோனைக் கொண்டுவந்து ஸ்தாபிக்க வகைதேடு. எல்லாவற்றிலும் எனது கட்டளைகளைக் கைக்கொள்,

7 எனது கட்டளைகளை நீ கைக்கொண்டு, முடிவுபரியந்தம் நிலைத்திருந்தால், தேவனுடைய வரங்கள் எல்லாவற்றிலும் மேலான வரமான நித்திய ஜீவனை நீ பெறுவாய்.

8 மேலும், அவ்வாறே, நம்பி விசுவாசத்தில் எனது நாமத்தில் நீ பிதாவைக் கேட்டால், நீங்கள் இருவரும் கேட்டவற்றிற்கும் பார்த்தவற்றிற்கும் ஒரு சாட்சியாயிருக்கும்படி கூறுகிற பரிசுத்த ஆவியை நீ பெறுவாய் மற்றும் இந்த சந்ததிக்கு நீ மனந்திரும்புதலை பிரகடனம் செய்வாய்.

9 இதோ, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரும், இருளில் மறைத்து வைக்கமுடியாத ஒரு ஒளியுமான, ஜீவிக்கிற தேவகுமாரனாகிய நானே இயேசு கிறிஸ்து.

10 ஆகவே, எனது சுவிசேஷத்தின் பரிபூரணத்தை, புறஜாதியாரிடமிருந்து இஸ்ரவேல் வீட்டாருக்கு நான் கொண்டுவரவேண்டும்.

11 இதோ, டேவிட், உதவிசெய்ய நீ அழைக்கப்பட்டிருக்கிறாய், நீ இதைச் செய்து அதில் விசுவாசமாயிருந்தால், ஆவிக்குரியவற்றிலும் உலகப்பிரகாரமானவற்றிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், உனது பலன் மிகுதியாயிருக்கும். ஆமென்.