வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18


பாகம் 18

ஜூன் 1829ல் நியூயார்க்கிலுள்ள பயெட்டியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும், ஆலிவர் கௌட்ரிக்கும், டேவிட் விட்மருக்கும், கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். தீர்க்கதரிசியின் கருத்தின்படி இந்த வெளிப்படுத்தல் “இந்த கடைசி நாட்களில் பன்னிரு அப்போஸ்தலரின் அழைப்பு என்றும் சபை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அறிவுரைகளென்றும்” அறியப்பட்டது.

1–5, சபையை எவ்வாறு கட்டுவதென்பதை வேதங்கள் காட்டுகின்றன; 6–8, உலகம் அக்கிரமத்தில் பழுத்துக் கொண்டிருக்கிறது; 9–16, ஆத்துமாக்களின் மதிப்பு பெரிதாயிருக்கிறது; 17–25, இரட்சிப்பைப் பெற, கிறிஸ்துவின் நாமத்தை மனுஷர்கள் தரித்துக் கொள்ளவேண்டும்; 26–36, பன்னிருவரின் அழைப்புகளும் ஊழியமும் வெளிப்படுத்தப்பட்டன; 37–39, ஆலிவர் கௌட்ரியும், டேவிட் விட்மரும் பன்னிருவரைத் தேடவேண்டும்; 40–47, இரட்சிப்பைப்பெற, மனுஷர்கள் மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று, கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும்.

1 இப்பொழுது, இதோ, எனது ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரி, என்னைப்பற்றி நீ அறிந்துகொள்ள வாஞ்சித்த காரியத்தால், இந்த வார்த்தைகளை நான் உனக்குக் கொடுக்கிறேன்:

2 இதோ, நீ எழுதிய காரியங்கள் மெய்யானவையென அநேக சந்தர்ப்பங்களில் எனது ஆவியால் நான் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன்; ஆகவே அவைகள் மெய்யானவையென நீ அறிந்திருக்கிறாய்.

3 அவைகள் மெய்யானதென நீ அறிந்தால், இதோ, எழுதப்பட்ட காரியங்களை நீ சார்ந்திருக்கவேண்டுமென ஒரு கட்டளையை நான் உனக்குக் கொடுக்கிறேன்;

4 ஏனெனில் எனது சபை, எனது சுவிசேஷம், எனது கன்மலையின் அஸ்திவாரத்தைப்பற்றி எழுதப்பட்ட அனைத்துக் காரியங்களும் அவைகளிலிருக்கின்றன.

5 ஆகவே, எனது சுவிசேஷத்தின், எனது கன்மலையின் அஸ்திவாரத்தின்மேல் நீ எனது சபையைக் கட்டினால் பாதாளத்தின் வாசல்கள் உன்னை மேற்கொள்ளாது.

6 இதோ, உலகம் அக்கிரமத்தில் பழுத்துக் கொண்டிருக்கிறது; புறஜாதியார், இஸ்ரவேல் வீட்டார் இருவருமான மனுபுத்திரர்கள் மனந்திரும்புதலுக்கு ஏவப்படவேண்டும்.

7 ஆகவே, நான் அவனுக்குக் கட்டளையிட்டதின்படி எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனின் கைகளால் நீ ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டாய், நான் அவனுக்குக் கட்டளையிட்ட காரியத்தை அவன் நிறைவேற்றினான்.

8 இப்பொழுது, நான் அறிந்த நோக்கமான எனது சொந்த நோக்கத்திற்காக நான் அவனை அழைத்ததற்காக ஆச்சரியப்படவேண்டாம். ஆகவே, எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுவதில் அவன் கருத்தாயிருந்தால் நித்திய ஜீவனுக்கு அவன் பாக்கியவானாயிருப்பான், அவனது பெயர் ஜோசப்.

9 இப்பொழுது, கட்டளையின் வாயிலாக, ஆலிவர் கௌட்ரி, உன்னிடமும் டேவிட் விட்மருடனும் நான் பேசுகிறேன்; ஏனெனில், இதோ, எல்லா இடங்களிலுமுள்ள மனுஷர்கள் யாவரும் மனந்திரும்ப நான் கட்டளையிடுகிறேன், எனது அப்போஸ்தலனாகிய பவுலிடம் பேசியது போல் உன்னிடமும் பேசுகிறேன், ஏனெனில் அவன் அழைக்கப்பட்ட அதே அழைப்புடன் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

10 ஆத்துமாக்களின் மதிப்பு தேவனின் பார்வையில் பெரிதாயிருக்கிறதென்பதை நினைவுகூருங்கள்;

11 ஏனெனில், இதோ, உனது மீட்பரான கர்த்தர் மாம்சத்திலே பாடுபட்டு மரணமடைந்தார்; ஆகவே, சகல மனுஷரும் மனந்திரும்பி அவரிடத்தில் வரும்படிக்கு, அவர் சகல மனுஷர்களின் வேதனையை அனுபவித்தார்.

12 மனந்திரும்புதலின் நிபந்தனைகளின்படி சகல மனுஷரும் அவரிடத்தில் வரும்படியாக அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார்.

13 மனந்திரும்பிய ஆத்துமாவினிமித்தம் அவரது சந்தோஷம் எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

14 ஆகவே, இந்த ஜனத்தின் மனந்திரும்புதலுக்காக கூக்குரலிட நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

15 இந்த ஜனத்தின் மனந்திரும்புதலுக்காக உங்களின் வாழ்நாள் முழுவதும் நீங்கள் பிரயாசப்பட்டு ஒரு ஆத்துமாவை மட்டுமே என்னிடம் கொண்டுவந்தாலும், எனது பிதாவின் ராஜ்யத்தில் அவரோடு உங்களின் சந்தோஷம் எவ்வளவு பெரிதாயிருக்கும்!

16 இப்பொழுது, எனது பிதாவின் ராஜ்யத்துக்கு, என்னிடத்தில் நீங்கள் கொண்டுவந்த ஒரு ஆத்துமாவுக்காக உங்களின் சந்தோஷம் பெரிதாயிருந்தால், அநேக ஆத்துமாக்களை என்னிடத்தில் நீங்கள் கொண்டு வருவீர்களானால் உங்களின் சந்தோஷம் எவ்வளவு பெரிதாயிருக்கும்!

17 இதோ, நீங்கள் உங்களுக்கு முன்பாக எனது சுவிசேஷத்தையும், எனது கன்மலையையும் எனது இரட்சிப்பையும் வைத்திருக்கிறீர்கள்.

18 விசுவாசத்தில் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களென்று நம்பி, எனது நாமத்தினால் பிதாவினிடத்தில் கேளுங்கள், மனுபுத்திரருக்கு அவசியமாயிருக்கிற சகல காரியங்களையும் வெளிப்படுத்துகிற பரிசுத்த ஆவியை நீங்கள் பெறுவீர்கள்.

19 விசுவாசமும், நம்பிக்கையும் தயாளமும் உங்களுக்கில்லாவிட்டால் உங்களால் எதையும் செய்யமுடியாது.

20 பிசாசானவனின் சபையைத் தவிர எந்த சபைக்கும் எதிராக பிணக்கு கொள்ளாதீர்கள்.

21 கிறிஸ்துவின் நாமத்தை உங்கள்மேல் தரித்துக்கொண்டு, தெளிந்த புத்தியோடு சத்தியத்தைப் பேசுங்கள்.

22 எவ்வளவு பேர் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவாகிய எனது நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறார்களோ, அவர்களே இரட்சிக்கப்படுவார்கள்.

23 இதோ, பிதாவால் கொடுக்கப்பட்ட நாமமே இயேசு கிறிஸ்து, மனுஷன் இரட்சிக்கப்படுவதற்கு வேறு எந்த நாமமும் கொடுக்கப்படவில்லை;

24 ஆகவே, சகல மனுஷரும் பிதாவால் கொடுக்கப்பட்ட நாமத்தை தங்கள்மேல் தரித்துக்கொள்ள வேண்டும், ஏனெனில், கடைசி நாளில் அவர்கள் அந்த நாமத்தால் அழைக்கப்படுவார்கள்;

25 ஆகவே, அவர்கள் அழைக்கப்படும் நாமத்தை அவர்கள் அறியாதிருந்தால், பிதாவின் ராஜ்யத்தில் அவர்கள் இடம் பெற முடியாது.

26 இப்பொழுது, இதோ, புறஜாதியார், யூதர் இருவருக்கும் எனது சுவிசேஷத்தை பிரகடனம் செய்ய மற்றவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்;

27 ஆம், பன்னிருவரும்கூட; அந்த பன்னிருவர் எனது சீஷர்களாயிருப்பார்கள், அவர்கள் தங்கள்மேல் என் நாமத்தை தரித்துக்கொள்வார்கள்; இருதயத்தின் முழுநோக்கத்தோடு எனது நாமத்தை தங்கள் மேல் தரித்துக்கொள்ள வாஞ்சிக்கிறவர்களே அந்த பன்னிருவர்.

28 இருதயத்தின் முழுநோக்கத்தோடு எனது நாமத்தை தங்கள் மேல் தரித்துக்கொள்ள அவர்கள் வாஞ்சித்தால் உலகமுழுவதிலும் போய் சகல சிருஷ்டிகளுக்கும் எனது சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அழைக்கப்படுகிறார்கள்.

29 எழுதப்பட்டவைகளின்படி எனது நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க நியமிக்கப்பட்டவர்களே அவர்கள்;

30 உங்களுக்கு முன் எழுதப்பட்டவைகள் உங்களிடமிருக்கிறது, ஆகவே, எழுதப்பட்ட வார்த்தைகளின்படி நீங்கள் அதை நடப்பிக்கவேண்டும்.

31 இப்பொழுது, நான் பன்னிருவரான உங்களுடனே பேசுகிறேன், இதோ, எனது கிருபை உங்களுக்குப் போதும்; எனக்கு முன்பாக நீங்கள் நிமிர்ந்து நடவுங்கள், பாவஞ்செய்யாதிருங்கள்.

32 இதோ, உங்களிலிருக்கிற பரிசுத்த ஆவியின் வல்லமையின்படி எனது சுவிசேஷத்தை பிரகடனம் செய்யவும்; மனுஷர்களுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அழைப்புகள் மற்றும் வரங்களின்படி, ஆசாரியர்களையும் ஆசிரியர்களையும் நியமிக்கவும் நீங்கள் என்னால் நியமிக்கப்பட்டவர்கள்;

33 உங்கள் கர்த்தரும் தேவனுமான இயேசு கிறிஸ்துவாகிய நானே இதைப் பேசினேன்.

34 இந்த வார்த்தைகள் மனுஷர் அல்லது மனுஷனுடையவைகளல்ல, ஆனால் என்னுடையவை, ஆகவே, அவைகள் என்னுடையவை, மனுஷனுடையவை அல்ல என நீங்கள் சாட்சியளிப்பீர்கள்;

35 ஏனெனில் உங்களிடம் பேசுவது எனது குரலே; ஏனெனில் அவை எனது ஆவியால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டவை, எனது வல்லமையால் நீங்கள் ஒருவருக்கொருவர் அவற்றைப் படித்துக்காட்டலாம்; எனது வல்லமையாலன்றி நீங்கள் அவற்றைப்பெற முடியாது;

36 ஆகவே, நீங்கள் எனது குரலைக் கேட்டதாகவும், எனது வார்த்தைகளை அறிந்ததாகவும் நீங்கள் சாட்சியளிக்கலாம்.

37 இப்பொழுது, இதோ, நான் பேசியவைகளைப்பற்றி வாஞ்சையுள்ள பன்னிருவரை நீங்கள் தேடும்படிக்கு ஆலிவர் கௌட்ரி, டேவிட் விட்மர் உங்களுக்கு நான் சொல்லுகிறேன்;

38 அவர்களின் வாஞ்சைகளாலும் அவர்களின் கிரியைகளாலும் அவர்களை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

39 அவர்களை நீங்கள் கண்டுபிடிக்கும்போது அவர்களுக்கு இந்த காரியங்களை நீங்கள் காட்டுங்கள்.

40 நீ கீழே விழுந்து எனது நாமத்தில் பிதாவை பணிந்துகொள்வாய்.

41 நீங்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம்பெற வேண்டுமென சொல்லி உலகத்திற்கு நீங்கள் பிரசங்கிக்க வேண்டும்;

42 ஏனெனில் சகல மனுஷரும், ஆனால் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும், பொறுப்பேற்கும் வயதை அடைந்த பிள்ளைகளும் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டும்.

43 இப்பொழுது, இதை நீங்கள் பெற்றபின்பு, நீங்கள் சகல காரியங்களிலும் எனது கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும்;

44 மனந்திரும்புதலுக்குள் வந்து, எனது பிதாவின் ராஜ்யத்திற்குள் வரும்படியாக அவர்களின் அநேக பாவங்களை உணர்த்துவதில் மனுபுத்திரர்களுக்குள்ளே ஒரு அற்புதமான கிரியையை உனது கைகளால் நான் செய்வேன்.

45 ஆகவே, நான் உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்கள், எல்லாவற்றிற்கும் மேலானவை.

46 இதை நீங்கள் பெற்றபின்பு, எனது கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளவில்லை என்றால், எனது பிதாவின் ராஜ்யத்தில் நீங்கள் இரட்சிக்கப்படமாட்டீர்கள்.

47 இதோ, உங்கள் கர்த்தரும், உங்கள் தேவனும், உங்கள் மீட்பருமான இயேசு கிறிஸ்துவாகிய நான் எனது ஆவியின் வல்லமையால் இதைப் பேசினேன். ஆமென்.