வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 25


பாகம் 25

ஜூலை 1830ல் பென்சில்வேனியாவின் ஹார்மனியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல் (பாகம் 24க்கான தலைப்பைப் பார்க்கவும்). இந்த வெளிப்படுத்தல் தீர்க்கதரிசியின் மனைவி எம்மா ஸ்மித்துக்கு கர்த்தருடைய சித்தத்தை தெரிவிக்கிறது.

1–6, தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண்ணான எம்மா ஸ்மித் தனது கணவனுக்கு உதவிசெய்யவும், ஆறுதலளிக்கவும், அழைக்கப்பட்டிருக்கிறார்; 7–11, எழுதவும், வேதங்களை வியாக்கியானம் செய்யவும், பாடல்களை தேர்ந்தெடுக்கவும் அவர் அழைக்கப்பட்டார்; 12–14, நீதிமான்களின் பாடல் கர்த்தருக்கு ஒரு ஜெபமாயிருக்கும்; 15–16, இந்த வெளிப்படுத்தலில் உள்ள கீழ்ப்படிதலின் கொள்கைகள் சகலருக்கும் பொருத்தமாயிருக்கின்றன.

1 எனது குமாரத்தியான எம்மா ஸ்மித், நான் உன்னுடன் பேசும்போது, உனது தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்கு செவிகொடு; ஏனெனில் எனது சுவிசேஷத்தைப் பெறுகிற சகலரும் எனது ராஜ்யத்தில் குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருப்பார்கள் என நான் மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

2 எனது சித்தத்தைப்பற்றிய ஒரு வெளிப்படுத்தலை நான் உனக்குக் கொடுக்கிறேன்; நீ விசுவாசமாயிருந்து, எனக்கு முன்பாக நற்குணத்தின் பாதைகளில் நடந்தால், உனது ஜீவனை நான் பாதுகாப்பேன், நீ சீயோனின் சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்வாய்.

3 இதோ, உனது பாவங்கள் உனக்கு மன்னிக்கப்படுகின்றன, நான் அழைத்த நீ, ஒரு தெரிந்துகொள்ளப்பட்ட பெண்.

4 நீ பார்க்காத காரியங்கள் குறித்து முறுமுறுக்காதே, ஏனெனில் அவைகள் உன்னிடமிருந்தும் உலகத்திலிருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, இது வரப்போகிற ஒரு நேரத்திற்காக எனது ஞானமாய் இருக்கிறது.

5 எனது ஊழியக்காரனும், உனது கணவனுமான ஜோசப் ஸ்மித் இளையவனுக்கு, அவனது துன்பங்களில் சாந்தகுணமுள்ள ஆவியுடன், ஆறுதலான வார்த்தைகளுடன், ஆறுதலாய் இருப்பது, உனது அழைப்பின் அலுவலாகும்.

6 அவனுக்கு ஒரு எழுத்தர் இல்லாமலிருக்கும்போது, அவன் போகும்போது அவனுடன் போய் ஒரு எழுத்தராக அவனுடனிரு, எனது ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரியை நான் எங்காவது அனுப்பும்படிக்கு இதைச்செய்.

7 எனது ஆவியால் அது உனக்குக் கொடுக்கப்படுவதன்படி, வேதங்களை வியாக்கியானம் செய்யவும், சபைக்கு புத்திசொல்லவும் அவனது கையால் நீ நியமிக்கப்படுவாய்.

8 ஏனெனில் அவன் தனது கைகளை உன்மீது வைப்பான், நீ பரிசுத்த ஆவியைப் பெறுவாய், எழுதவும் அதிகமாகக் கற்றுக்கொள்ளவும் உனது நேரம் செலவிடப்படுவதாக.

9 நீ பயப்படத் தேவையில்லை, ஏனெனில் சபையில் உனது கணவன் உன்னை ஆதரிப்பான்; ஏனெனில் அவர்களின் விசுவாசத்தின்படியும், எனது சித்தத்தின்படியும், சகல காரியங்களும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படும்படியாக அவர்களுக்கு அவனது அழைப்பிருக்கும்.

10 உலகத்தின் காரியங்களை நீ ஒதுக்கிவிட்டு சிறப்பானவற்றை நாட வேண்டுமென மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்.

11 பரிசுத்த துதிப்பாடல்களைத் தேர்ந்தெடுப்பது உன்னிடம் கொடுக்கப்படவிருப்பதால், எனது சபையில் வைத்திருக்கப்பட, எனக்கு பிரியமாயிருக்கிற அது, உன்னிடத்தில் கொடுக்கப்படும்.

12 ஏனெனில் இருதயத்தின் பாடலில் என் ஆத்துமா களிகூருகிறது; ஆம், நீதிமான்களின் பாடல் எனக்கு ஒரு ஜெபமாக இருக்கிறது, அவர்கள் தலைகளின்மேல் ஒரு ஆசீர்வாதத்தோடு அது பதிலளிக்கப்படும்.

13 ஆகவே உனது இருதயத்தை உயர்த்தி களிகூரு, நீ செய்த உடன்படிக்கைகளுக்கு இசைந்திரு.

14 சாந்தகுணமுள்ள ஆவியில் தொடர்ந்திரு, பெருமையைக் குறித்து எச்சரிக்கையாயிரு. உனது கணவனிலும், அவனுக்கு வரும் மகிமையிலும் உனது ஆத்துமா களிகூருவதாக.

15 தொடர்ந்து எனது கட்டளைகளைக் கைக்கொள், நீதியின் கிரீடத்தை நீ பெறுவாய். இதை நீ செய்யாதவரை நானிருக்கிற இடத்திற்கு உன்னால் வரமுடியாது.

16 யாவருக்கும் இதுவே எனது குரல் என மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், ஆமென்.