வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 27


பாகம் 27

ஆகஸ்டு 1830ல் பென்சில்வேனியாவின் ஹார்மனியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். திருவிருந்தின் அப்பமும் திராட்சை ரசமும் நிர்வகிக்கப்படவிருக்கிற ஒரு ஆராதனைக்கான ஆயத்தமாக திராட்சை ரசத்தை வாங்க ஜோசப் புறப்பட்டார். ஒரு பரலோகத் தூதனால் அவர் சந்திக்கப்பட்டு இந்த வெளிப்படுத்தலைப் பெற்றார். அதன் ஒரு பகுதி அப்போது எழுதப்பட்டு, மீதி பின்வந்த செப்டம்பரில் எழுதப்பட்டது. இப்போது, சபையின் திருவிருந்து கூட்டங்களில் திராட்சைரசத்திற்குப் பதிலாக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

1–4, திருவிருந்தில் பங்கேற்பதற்காக பயன்படுத்தப்படுவதற்கு அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டன; 5–14, கிறிஸ்துவும், எல்லா ஊழியக்காலங்களிலுமுள்ள அவரது ஊழியக்காரர்களும் திருவிருந்தில் பங்கேற்பர்; 15–18, தேவனின் சர்வாயுதவர்க்கத்தை தரித்திரு.

1 உனது கர்த்தரும், உனது தேவனும், உனது மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் குரலுக்குச் செவிகொடு. அவரது வார்த்தை ஜீவனும் வல்லமையும் உடையது.

2 ஏனெனில், இதோ, உனக்காக மரித்த எனது சரீரத்திற்காகவும், உனது பாவங்களின் மன்னிப்புக்காக சிந்தப்பட்ட எனது இரத்தத்திற்காகவும், பிதாவினிடத்தில் நினைவுகூர்ந்து, எனது மகிமைக்கென்ற ஒரே நோக்கத்திற்காக இதை நீ செய்கிறதாயிருந்தால் திருவிருந்தில் நீ பங்கேற்கும்போது, நீ எதை உண்பாய் எதைக்குடிப்பாய் என்பது பொருட்டல்ல என நான் உனக்குச் சொல்லுகிறேன்.

3 ஆகவே, நீ திராட்சை ரசத்தையோ அல்லது உனது எதிரிகளின் மதுபானத்தையோ வாங்கக்கூடாது என நான் உனக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்;

4 ஆகவே, உங்களாலே புதிதாக செய்யப்பட்டதைத்தவிர வேறு எதிலும் நீங்கள் பங்கேற்கக் கூடாது; ஆம் பூமியின்மேல் கட்டப்படும் எனது பிதாவின் ராஜ்யம் இதிலிருக்கிறது.

5 இதோ, இதுவே எனது ஞானமாயிருக்கிறது; ஆகவே, ஆச்சரியப்படாதே, ஏனெனில் பூமியில் உன்னோடும், எனது நித்திய சுவிசேஷத்தின் பரிபூரணம் அடங்கியிருக்கிற மார்மன் புஸ்தகத்தை வெளிப்படுத்த உன்னிடம் நான் அனுப்பிய, எப்பிராயீமின் கோலின் பதிவேடுகளின் திறவுகோல்களை நான் பொறுப்பளித்தவனான மரோனியுடனும்;

6 மேலும், கடைசி நாட்களைக் குறித்து உலகத் தோற்றத்திலிருந்து பரிசுத்த தீர்க்கதரிசிகள் யாவரின் வாயாலும் பேசப்பட்ட சகல காரியங்களின் மறுஸ்தாபிதத்தைக் கொண்டுவரும் திறவுகோல்களை நான் பொறுப்பளித்தவனான எலியாஸுடனும்;

7 சகரியாவுக்கு அவன் (எலியாஸ்) தரிசனமாகி, அவன் ஒரு குமாரனைப் பெறுவானென்றும், அவனது பெயர் யோவான் என இருக்கவேண்டுமென்றும், அவன் எலியாஸின் ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பானென்றும் வாக்களித்த, அந்த சகரியாவின் குமாரனான யோவானுடனும்;

8 ஜோசப் ஸ்மித் இளையவர் மற்றும் ஆலிவர் கௌட்ரியான எனது ஊழியக்காரர்களே, நீங்கள் ஆரோனைப்போல அழைக்கப்பட்டு, நியமிக்கப்பட நீங்கள் பெற்றுக்கொண்ட முதல் ஆசாரியத்துவத்தில் நீங்கள் நியமிக்கப்படுவதற்காக, நான் உங்களிடத்தில் அனுப்பிய யோவானுடனும்;

9 பூமி முழுவதும் ஒரு சாபத்தால் அடிக்கப்படாதிருக்க, தகப்பனின் இருதயங்களை பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளின் இருதயங்களை தகப்பனிடத்திலும் திருப்புகிற அதிகாரத்தின் திறவுகோல்களை நான் பொறுப்பளித்திருக்கிற எலியாவுடனும்;

10 அவர்களால் வாக்குத்தத்தங்கள் நிலைத்திருக்கிற உங்கள் பிதாக்களாகிய யோசேப்புடனும், யாக்கோபுடனும், ஈசாக்குடனும் மற்றும் ஆபிரகாமுடனும்;

11 பூர்வகாலத்தில் யாவருக்கும் தகப்பனான, யாவருக்கும் அதிபதியான மிகாவேல் அல்லது ஆதாமுடனும்;

12 உங்களை அப்போஸ்தலர்களாகவும், எனது நாமத்தின் விசேஷித்த சாட்சிகளாகவும், நியமிக்கவும் திடப்படுத்தவும், உங்கள் ஊழியம் மற்றும் இதே காரியங்களை அவர்களுக்கும் நான் வெளிப்படுத்தியவற்றின் திறவுகோல்களை தரித்திருக்கிற, நான் உங்களிடத்தில் அனுப்பிய, பேதுருவுடனும், யாக்கோபுடனும், யோவானுடனும்;

13 எனது ராஜ்யம், மற்றும் கடைசி நாட்களுக்கான சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காலம் மற்றும் வானத்திலும் பூமியிலுமிருக்கிறவையான சகலத்தையும் நான் கூட்டிச்சேர்க்கும் காலங்களின் நிறைவேறுதலுக்கான திறவுகோல்களை நான் பொறுப்பளித்த அவர்களுடனும்;

14 உலகத்திலிருந்து எனது பிதா எனக்குக் கொடுத்த அனைவரோடும்கூட நான் திராட்சைப்பழ ரசத்தைப் பானம்பண்ணும் வேளை வந்து விட்டது.

15 ஆகவே, உங்கள் இருதயங்களை உயர்த்தி, களிகூருங்கள், உங்கள் அரைக் கச்சையை கட்டிக்கொள்ளுங்கள், தீங்கு நாளிலே நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்க திராணியுள்ளவர்களாகும்படிக்கும் என்னுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுங்கள்.

16 ஆகவே, சத்தியத்துடன் உங்கள் கச்சையை அரையில் கட்டினவர்களாகவும், நீதியின் மார்புக்கவசத்தை தரித்தவர்களாயும், சமாதானத்தின் சுவிசேஷத்துக்குரிய ஆயத்தத்துடன் உங்கள் பாதங்களைப் பதித்து நில்லுங்கள், அதற்காக உங்களுக்கு உதவ எனது தூதர்களை அனுப்பியிருக்கிறேன்.

17 பொல்லாங்கன் எய்யும் அக்கினியஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாய்;

18 இரட்சிப்பென்னும் தலைச்சீராவையும், உங்கள்மீது நான் ஊற்றும் ஆவியின் பட்டயத்தையும், நான் உங்களுக்கு வெளிப்படுத்துகிற எனது வார்த்தையையும் எடுத்துக்கொள்ளுங்கள், என்னிடத்தில் நீங்கள் கேட்கிற சகல காரியங்களையும் குறித்து ஒருமித்திருந்து, நான் வரும்வரை விசுவாசமாயிருங்கள், நானிருக்கும் இடத்தில் நீங்களும் இருக்கும்படிக்கு எடுத்துகொள்ளப்படுவீர்கள். ஆமென்.