வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 33


பாகம் 33

அக்டோபர் 1830ல் நியூயார்க்கின் பயெட்டியில் எஸ்றா தாயருக்கும், நார்த்ராப் ஸ்வீட்டுக்கும் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தலை அறிமுகம் செய்யும்போது, “விசுவாசத்தில் கருத்தாய் தேடுகிறவர்களுக்கு அறிவுறுத்த கர்த்தர் எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார்” என ஜோசப் ஸ்மித்தின் வரலாறு உறுதிசெய்கிறது.

1–4, பதினோறாம் மணிநேரத்தில் சுவிசேஷத்தை அறிவிக்க வேலையாட்கள் அழைக்கப்படுகிறார்கள்; 5–6, சபை அமைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கூட்டிச்சேர்க்கப்பட வேண்டும்; 7–10, பரலோக ராஜ்யம் சமீபித்திருப்பதால் மனந்திரும்புங்கள்; 11–15, சுவிசேஷமென்னும் கன்மலையின்மேல் சபை கட்டப்பட்டுள்ளது; 16–18, மணவாளன் வருகைக்காக ஆயத்தமாயிரு.

1 இதோ, எனது ஊழியக்காரர்களாகிய எஸ்றா மற்றும் நார்த்ராப், உங்கள் காதுகளை திறந்து கணுக்களையும் ஊனையும், ஆத்துமாவையும் ஆவியையும், பிரிக்கதக்கதும், ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைவிட கருக்கானதாயும், இருக்கிற, உங்கள் தேவனாகிய கர்த்தரின் குரலைக் கேளுங்கள்; அவர் சிந்தனைகளையும், இருதயத்தின் நோக்கங்களையும் பிரித்தறிகிறவராய் இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2 மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியாருக்கு எனது சுவிசேஷத்தை அறிவிக்க நீங்கள் அழைக்கப்பட்டிருப்பதால் ஒரு எக்காளச் சத்தத்தைப்போல, உங்கள் குரல்களை உயர்த்துங்கள் என மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3 ஏனெனில், இதோ, வயல் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது; இது பதினோராவது மணிநேரமாயிருக்கிறது, எனது திராட்சைத் தோட்டத்துக்கு வேலையாட்களை அழைக்கிற, இதுவே எனது கடைசி முறையாயிருக்கும்.

4 எனது திராட்சைத் தோட்டம் முழுவதும் சீர்கெட்டுப்போயிற்று; ஒரு சிலரைத்தவிர நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை; ஆசாரிய வஞ்சகங்களினால் யாவரும் சீர்கெட்டுப்போன மனதுடையவர்களாயிருப்பதால் அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் தவறு செய்தார்கள்.

5 இந்த சபையை நான் ஸ்தாபித்து வனாந்தரத்திலிருந்து எழுந்து வர அழைத்தேன் என மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்.

6 என்னில் நம்பிக்கை வைத்து எனது குரலைக்கேட்கும் அநேகரையும், பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் எனது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்.

7 ஆம், வயல் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது ஆகவே, உன்னுடைய அரிவாளை நீட்டி உன் முழு ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் அறுப்பாயாக என மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன்.

8 உங்கள் வாய்களைத் திறவுங்கள், அவைகள் நிரப்பப்படும், எருசலேமிலிருந்து வனாந்தரத்துக்கு பயணப்பட்ட பழங்காலத்து நேபியைப் போலவும் நீங்கள் ஆவீர்கள்.

9 ஆம், உங்கள் வாய்களைத் திறவுங்கள், தவறாதிருங்கள், உங்கள் முதுகுகளின்மேல் அரிக்கட்டுகளால் சுமத்தப்படுவீர்கள், ஏனெனில், இதோ, நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.

10 ஆம், மனந்திரும்புங்கள், மனந்திரும்பி, கர்த்தருக்கு பாதையை ஆயத்தப்படுத்துங்கள், அவரது பாதைகளை செவ்வை பண்ணுங்கள்; ஏனெனில் பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று சொல்லி உங்கள் வாய்களைத் திறவுங்கள், அவை நிரப்பப்படும்.

11 ஆம், உங்கள் பாவங்களின் மன்னிப்பிற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெறுங்கள்; ஆம், தண்ணீரிலும் ஞானஸ்நானம் பெறுங்கள், பின்னர் அக்கினியின் மற்றும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் வருகிறது.

12 இதோ, மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இது என்னுடைய சுவிசேஷம்; அவர்கள் என்னில் விசுவாசம் கொண்டிருக்கவேண்டும், அல்லது அவர்கள் எந்தவிதத்திலும் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை நினைவுகூருங்கள்;

13 இந்த கன்மனையின் மேல் நான் எனது சபையைக் கட்டுவேன், ஆம், இந்தக் கன்மலையின்மேல் நீங்கள் கட்டப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் நிலைத்திருந்தால், பாதாளத்தின் வாசல்கள் உங்களை எதிர்த்து நிற்க முடியாது.

14 சபையின் பிரமாணங்களையும் உடன்படிக்கைகளையும் கைக்கொள்ள நீங்கள் நினைவுகூருவீர்கள்.

15 கைகளை வைப்பதனால் விசுவாசமுள்ளவர்களை நீங்கள் எனது சபையில் திடப்படுத்துவீர்கள், அவர்கள்மேல் பரிசுத்த ஆவியின் வரத்தை நான் அருளுவேன்.

16 உங்களுக்கு அறிவுறுத்த மார்மன் புஸ்தகமும் பரிசுத்த வேதங்களும் என்னால் கொடுக்கப்பட்டிருக்கின்றன; எனது ஆவியின் வல்லமை சகல காரியங்களுக்கும் உயிரூட்டும்.

17 ஆகவே, விசுவாசமாயிருங்கள், எப்பொழுதும் ஜெபம் செய்து, மணவாளனின் வருகைக்கு ஆயத்தமாயிருக்கும்படியாக, உங்களின் விளக்குகளை ஆயத்தப்படுத்தி, எரிய வைத்து உங்களோடு எண்ணெய் வைத்திருங்கள்.

18 ஏனெனில் இதோ, மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் சீக்கிரமாய் வருகிறேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.