வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38


பாகம் 38

ஜனுவரி 2, 1831ல் நியூயார்க்கின் பயெட்டியில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். நிகழ்ச்சி சபையின் ஒரு மாநாடு ஆகும்.

1–6, சகலத்தையும் கிறிஸ்து சிருஷ்டித்தார்; 7–8, சீக்கிரத்திலே அவரைப் பார்க்கப்போகிற பரிசுத்தவான்களுக்கு மத்தியிலே அவர் இருக்கிறார்; 9–12, அவருக்கு முன்பாக எல்லா மாம்சங்களும் கெட்டுப்போயின; 13–22, இப்போதைக்கும் நித்தியத்துக்கும் பரிசுத்தவான்களுக்காக ஒரு வாக்குத்தத்தத்தின் தேசத்தை அவர் வைத்திருக்கிறார்; 23–27, பரிசுத்தவான்கள் ஒன்றாயிருக்கவும், ஒருவரையொருவர் சகோதரர்களாக மதிக்கவும் கட்டளையிடப்பட்டார்கள்; 28–29, யுத்தங்கள் முன்னறிவிக்கப்பட்டன; 30–33, உன்னதத்திலிருந்து பரிசுத்தவான்களுக்கு வல்லமையளிக்கப்பட்டு, சகல தேசங்களுக்கும் போகவேண்டும்; 34–42, சிறுமையும் எளிமையுமானவர்களைப் பராமரிக்கவும், நித்தியத்தின் ஐஸ்வரியத்தை நாடவும் சபைக்குக் கட்டளையிடப்பட்டது.

1 கர்த்தரும் உங்கள் தேவனுமாகிய இயேசு கிறிஸ்து இப்படியாக சொல்கிறார், நானே மகத்தானவரும் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், நித்தியத்தின் அகன்ற விசாலத்தையும், உலகம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே வானதூதர்களின் சேனைகளையும் பார்த்தவர்.

2 நானே சகலவற்றையும் அறிந்தவர், ஏனெனில் சகலமும் என் கண்களுக்கு முன்பாக இருக்கின்றன;

3 நானே பேசினேன், உலகம் உண்டாக்கப்பட்டது, சகலமும் என்னால் வந்தன.

4 என்னுடைய நெஞ்சிலே ஏனோக்கின் சீயோனை எடுத்துக் கொண்டதும் நானே, நானே கிறிஸ்துவாயிருப்பதால், என் நாமத்தில் என் சொந்த நாமத்தில் நம்பிக்கை வைத்த யாவருக்காகவும் நான் சிந்திய இரத்தத்தின் நிமித்தம் அவர்களுக்காக பிதாவுக்கு முன்பாக மன்றாடினேன் என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

5 ஆனால் இதோ, துன்மார்க்கரில் மீதியானவர்களை, பூமியின் முடிவில் வரக்கூடிய நியாயத்தீர்ப்பின் மகத்தான நாள்வரைக்கும் அந்தகாரச் சங்கிலிகளால் நான் கட்டிவைத்தேன்;

6 அப்படியானால் எனது குரலைக் கேட்காமல் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்திய துன்மார்க்கரை கட்டி வைக்கப்படச் செய்யமாட்டேனோ, ஐயோ, ஐயோ, ஐயோ, இதுவே அவர்களின் முடிவாயிருக்கும்.

7 ஆனால் இதோ, மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என் கண்கள் உங்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. நான் உங்களின் மத்தியிலிருக்கிறேன், உங்களால் என்னைக் காணமுடியாது;

8 ஆனால் நீங்கள் என்னைக் காணும்படியான நாள் சீக்கிரத்திலே வருகிறது, நானே என அறிந்துகொள்வீர்கள்; ஏனெனில் அந்தகாரத்தின் திரை சீக்கிரத்திலே கிழிக்கப்படும், சுத்திகரிக்கப்படாதவன் அந்த நாளில் இருக்க மாட்டான்.

9 ஆகவே, உங்கள் அரைக்கச்சையைக் கட்டிக்கொண்டு ஆயத்தப்படுங்கள். இதோ, ராஜ்யம் உங்களுடையது, சத்துரு ஜெயங்கொள்ளுவதில்லை.

10 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் சுத்தமானவர்கள், ஆனால் அனைவரும் அல்ல; வேறொருவருடனும் நான் மகிழ்ச்சியாயில்லை;

11 ஏனெனில் எனக்கு முன்பாக எல்லா மாம்சமானதும் கெட்டுப்போயிருக்கிறது; வானத்து சகல சேனைகளின் முன்பாக மனுபுத்திரருக்கு மத்தியில் பூமியின் மேல் அந்தகாரத்தின் வல்லமைகள் ஜெயங்கொள்ளுகிறது.

12 அது அமைதியை ஆளுகை செய்யச் செய்து, நித்தியம் முழுவதும் வேதனையடைகிறது, பூமியை அறுவடை செய்யவும், சுட்டெரிக்கப்பட பதர்களை கூட்டிச்சேர்க்கவும், பெரும் கட்டளைக்கு தூதர்கள் காத்திருக்கிறார்கள், இதோ, சத்துரு சேர்ந்திருக்கிறான்.

13 இப்பொழுதும், காலப்போக்கில் உங்களை அழிக்க இரகசிய அறைகளில் தீட்டப்பட்ட உங்களுடைய அழிவை ஏற்படுத்தவிருக்கிற ஒரு இரகசியத்தை நான் உங்களுக்கு காட்டுகிறேன், நீங்கள் அதை அறியவில்லை.

14 ஆனால், இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுடைய அக்கிரமத்தினால் அல்ல, உங்களுடைய அவிசுவாசத்தினாலும் அல்ல; ஏனெனில் மெய்யாகவே உங்களில் சிலர் எனக்கு முன்பாக குற்றமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் பெலவீனத்துக்காக நான் இரக்கமாயிருப்பேன்.

15 ஆகவே, இப்போதிலிருந்து பெலப்படுங்கள்; பயப்படாதிருங்கள், ஏனெனில் ராஜ்யம் உங்களுடையது.

16 உங்களுடைய இரட்சிப்பிற்காக நான் உங்களுக்கு ஒரு கட்டளை கொடுக்கிறேன், ஏனெனில் உங்களுடைய ஜெபங்களை நான் கேட்டேன், சிறுமைப்பட்டோரும் நான் உண்டாக்கிய ஐஸ்வரியவான்களும் எனக்கு முன்பாக முறையிட்டார்கள், சகல மாம்சமானவர்களும் என்னுடையவர்கள், நான் பட்சபாதமில்லாதவர்.

17 நான் பூமியை செழிப்பாக உண்டாக்கினேன், இதோ இது எனது பாதப்படி, ஆகவே மீண்டும் அதன்மேல் நான் நிற்பேன்.

18 மிகுந்த ஐஸ்வரியங்களையும், கர்த்தர் வரும்போது சாபம் எதுவுமே அங்கிருக்காத, பாலும் தேனும் வழிந்தோடுகிற, வாக்குத்தத்தத்தின் தேசத்தையும்கூட உங்களுக்குக் கொடுக்க நான் அருள்புரிகிறேன்;

19 உங்களுடைய முழு இருதயத்தோடும் அதை நீங்கள் நாடுவீர்களானால் உங்களின் சுதந்தரத்தின் தேசமாக அதை நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

20 இது உங்களோடு நான் செய்த உடன்படிக்கையாயிருக்கும், பூமி இருக்கும் வரைக்கும் உங்களுடைய சுதந்தரத்தின் தேசமாகவும், என்றென்றைக்கும் உங்களுடைய பிள்ளைகள் சுதந்தரித்துக் கொள்ளத்தக்கதாகவும் அதை நீங்கள் பெற்றிருப்பீர்கள், நித்தியத்துக்கும் மீண்டும் நீங்கள் அதை சுதந்தரித்துக்கொள்வீர்கள், ஒருபோதும் கடந்துபோகாது.

21 ஆனால், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அச்சமயம் உங்களுக்கு ஒரு ராஜாவோ அதிகாரியோ இருக்கமாட்டான், ஏனெனில் நானே உங்கள் ராஜாவாக இருந்து உங்களை கண்காணிப்பேன்.

22 ஆகவே, என்னுடைய குரலைக் கேட்டு, என்னைப் பின்பற்றி வாருங்கள், நீங்கள் ஒரு சுதந்தரமான ஜனங்களாக இருப்பீர்கள், நான் வருகிறபோது என்னுடைய நியாயப்பிரமாணங்களில்லாமல் வேறு நியாயப்பிரமாணங்கள் உங்களுக்கிருக்காது, ஏனெனில் நானே உங்களின் நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பவர், எது என் கையைத் தடுக்க முடியும்?

23 ஆனால், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களை நியமித்த அலுவலுக்குத் தக்கதாக ஒருவருக்கொருவர் போதியுங்கள்;

24 தன்னைப்போலவே ஒவ்வொரு மனுஷனும் தனது சகோதரனை கனம் பண்ணக்கடவன், எனக்கு முன்பாக ஒழுக்கத்தையும் பரிசுத்தத்தையும் கொண்டிருங்கள்.

25 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தன்னைப்போல தனது சகோதரனை ஒவ்வொரு மனுஷனும் கனம் பண்ணுவானாக.

26 ஏனெனில் உங்களில் எந்த மனுஷன் பன்னிரண்டு குமாரர்களைப் பெற்றிருந்தும், அவர்களை மதிக்காமல், அவனுக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களாக பணிபுரிகிற அவர்களில் ஒருவனிடம் நீ அங்கியை அணிந்து இங்கே அமர்ந்திரு என்றும், மற்றொருவனிடம் நீ கந்தைகளை அணிந்து அங்கே அமர்ந்திரு என்றும் சொல்லுவான், பின்னர் அவனது குமாரர்களைப் பார்த்து நான் நீதிமான் என்பானோ?

27 இதோ, இதை நான் உங்களுக்கு ஒரு உவமையாகச் சொல்லுகிறேன், இது என்னைப் போலிருக்கிறது. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒன்றாயிருங்கள் நீங்கள் ஒன்றாயில்லாவிட்டால் நீங்கள் என்னுடையவர்களல்ல.

28 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இரகசிய அறைகளிலிருக்கிற சத்துரு உங்கள் ஜீவன்களை நாடுகிறான்.

29 தூர தேசங்களில் யுத்தங்களைப்பற்றி நீங்கள் கேள்விப்படுகிறீர்கள், தூர தேசங்களில் சீக்கிரத்திலே யுத்தங்கள் வருமென சொல்கிறீர்கள், ஆனால் உங்கள் சொந்த தேசங்களிலுள்ள மனுஷர்களின் இருதயங்களை நீங்கள் அறியவில்லை.

30 உங்களின் ஜெபங்களால் இவற்றை நான் உங்களுக்குக் கூறுகிறேன்; ஆகவே, உங்கள் நெஞ்சிலே ஞானத்தைப் பொக்கிஷப்படுத்துங்கள், இல்லையேல் பூமியை அசைக்கப்பண்ணுகிற ஒரு சத்தத்தைவிட உரத்த குரலுடன் உங்கள் காதுகளில் பேசுகிற வகையில் அவர்களின் துன்மார்க்கத்தால் இந்தக் காரியங்களை மனுஷர்களின் துன்மார்க்கம் வெளிப்படுத்தும்; ஆனால் நீங்கள் ஆயத்தமாயிருந்தால் நீங்கள் பயப்படமாட்டீர்கள்.

31 மேலும் சத்துருவின் வல்லமைக்கு நீங்கள் தப்பும்படிக்கு கறையற்றவர்களாகவும் பிழையில்லாதவர்களாகவும், ஒரு நீதியுள்ள ஜனங்களாக என்னிடத்தில் கூடிச்சேருங்கள்,

32 ஆகவே, இந்தக் காரணத்திற்காகவே, ஒஹாயோவுக்கு நீங்கள் போகவேண்டுமென்ற இந்த கட்டளையை நான் உங்களுக்குக் கொடுத்தேன்; அங்கே எனது நியாயப்பிரமாணத்தை நான் உங்களுக்குக் கொடுப்பேன்; அங்கே உன்னதத்திலிருந்து வல்லமையுடன் நீங்கள் தரிப்பிக்கப்படுவீர்கள்;

33 அப்போதிலிருந்து, நான் சொல்லுகிற யாவரும் சகல தேசங்களுக்கும் மத்தியில் போவார்கள், அவர்கள் செய்ய வேண்டுவதென்ன என்று அவர்களுக்குக் கூறப்படும்; ஏனெனில் ஒரு மகத்தான பணி என்னிடம் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது, ஏனெனில் இஸ்ரவேல் இரட்சிக்கப்படும், எனது சித்தப்படியெல்லாம் நான் அவர்களை வழிநடத்துவேன், எந்த வல்லமையும் என் கையைத் தடுப்பதில்லை.

34 இப்பொழுது, சபையின் இந்த பகுதிகளுக்கு ஒரு கட்டளையை நான் கொடுக்கிறேன், அவர்களுக்குள் குறிப்பிட்ட மனுஷர்கள் நியமிக்கப்படுவார்கள், சபையின் ஒப்புதலால் அவர்கள் நியமிக்கப்படுவார்கள்;

35 அவர்கள் சிறுமையும் எளிமையுமானவர்களை நோக்கிப்பார்ப்பார்கள், அவர்கள் பாடனுபவியாதிருக்க அவர்களின் நல்வாழ்வுக்காக பணிவிடை செய்யவேண்டும்; அவர்களுக்கு நான் கட்டளையிட்ட இடத்திற்கு அவர்களை நான் அனுப்புவேன்;

36 இந்த சபையின் சொத்துக்களின் விவகாரங்களை நிர்வகிக்கும் இதுவே அவர்களின் பணியாயிருக்கும்.

37 பண்ணைகளை வைத்திருப்போர் விற்கமுடியாமல் இருந்தால், அவர்களுக்கு நன்மையாய் தோன்றுகிறபடி அவைகளை அப்படியே விடவோ அல்லது வாடகைக்குக் கொடுக்கவோ செய்யலாம்.

38 சகல காரியங்களும் பாதுகாப்பாயிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உன்னதத்திலிருந்து மனுஷர்கள் வல்லமையுடன் தரிப்பிக்கப்பட்டு அனுப்பப்படும்போது சகல காரியங்களும் சபையின் நெஞ்சில் சேர்த்து வைக்கப்படும்.

39 உங்களுக்குக் கொடுக்க பிதா சித்தமாயிருக்கிற ஐஸ்வரியங்களை நீங்கள் நாடினால், சகல ஜனங்களிலும் நீங்கள் ஐஸ்வரியவான்களாயிருப்பீர்கள், ஏனெனில் நித்தியத்தின் ஐஸ்வரியம் உங்களோடிருக்கும். பூமியின் என்னுடைய ஐஸ்வரியங்கள் கொடுக்கப்பட வேண்டியதாயிருக்கிறது, ஆனால் பெருமையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், இல்லையெனில் பழங்காலத்து நேபியர்களைப் போலாவீர்கள்.

40 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் கட்டளையிட்ட காரியங்களை ஆயத்தப்படுத்தவும், நிறைவேற்றவும், மூப்பர், ஆசாரியர், ஆசிரியர் மற்றும் அங்கத்தினரும், ஒவ்வொரு மனுஷனும் தனது கைகளால் பிரயாசத்துடன், தனது பராக்கிரமத்துடன் போக உங்களுக்கு ஒரு கட்டளை கொடுக்கிறேன்.

41 ஒவ்வொரு மனுஷனும் தனது அண்டை வீட்டாருக்கு மென்மையாகவும் சாந்தமாகவும் சொல்கிற, உங்களின் போதகம் எச்சரிக்கையின் குரலாக இருப்பதாக.

42 துன்மார்க்கர் மத்தியிலிருந்து வெளியே போங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கர்த்தரின் பாத்திரங்களை தரித்திருக்க சுத்தமாயிருங்கள். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.