வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 43


பாகம் 43

பிப்ருவரி 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த சமயத்தில் வெளிப்படுத்துபவர்களாக உரிமை பாராட்டிய சிலரால் சபையின் சில அங்கத்தினர்கள் குழப்பமடைந்தார்கள். கர்த்தரிடம் தீர்க்கதரிசி விசாரித்து சபையின் மூப்பர்களுக்குக் கொடுக்கப்பட்ட இந்த உரையாடலைப் பெற்றார். சபையின் நிர்வாகத்தைப்பற்றிய காரியங்களை முதல் பாகம் விவரிக்கிறது; பூமியின் தேசங்களுக்கு மூப்பர்கள் கொடுக்கவேண்டுமென்ற ஒரு எச்சரிக்கை பின் பகுதியில் அடங்கியிருக்கிறது.

1–7, நியமிக்கப்பட்ட ஒருவரின் மூலமாக மட்டுமே வெளிப்படுத்தல்களும் கட்டளைகளும் வருகின்றன; 8–14, கர்த்தருக்கு முன்பாக முழு பரிசுத்தத்தோடு செயல்படுவதால் பரிசுத்தவான்கள் பரிசுத்தமாக்கப்படுகிறார்கள்; 15–22, மனந்திரும்புதலுக்காக கூக்குரலிடவும் கர்த்தரின் மகத்தான நாளுக்கு மனுஷர்களை ஆயத்தப்படுத்தவும் மூப்பர்கள் அனுப்பப்படுகிறார்கள்; 23–28, அவரது சொந்தக் குரலின் மூலமாகவும் இயற்கையின் சக்திகளின் மூலமாகவும் மனுஷர்களை கர்த்தர் அழைக்கிறார்; 29–35, ஆயிரம் வருஷ அரசாட்சியும், சாத்தானைக் கட்டுதலும் வரும்.

1 எனது சபையின் மூப்பர்களே கேளுங்கள், நான் உங்களிடத்தில் பேசுகிற என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

2 ஏனெனில், இதோ, எனது கரத்திலிருந்து கட்டளைகளையும் வெளிப்படுத்தல்களையும் பெற்றுக்கொள்ள உங்களுக்கு நான் நியமித்த அவன் மூலமாக எனது சபைக்கான ஒரு பிரமாணத்திற்கான ஒரு கட்டளையை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் என மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3 அவன் என்னில் நிலைத்திருந்தால் அவன் எடுத்துக்கொள்ளப்படும்வரை கட்டளைகளையும் வெளிப்படுத்தல்களையும் பெற்றுக்கொள்ள உங்களுக்காக வேறு யாருமே நியமிக்கப்படவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும்.

4 ஆனால் மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அவன் மூலமாகவே தவிர இந்த வரத்திற்காக வேறு யாருமே நியமிக்கப்படப் போவதில்லை; ஏனெனில் அவனிடமிருந்து இது எடுத்துக்கொள்ளப்பட்டால் மற்றொருவனை அவனுக்குப் பதிலாக ஏற்படுத்துவதை தவிர அவனுக்கு அதிகாரமிருக்காது.

5 வெளிப்படுத்தல்களாக அல்லது கட்டளைகளாக உங்களுக்கு முன்பாக வரக்கூடிய எந்த போதனைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்ற இது உங்களுக்கு ஒரு பிரமாணமாயிருப்பதாக;

6 அவைகள் என்னிடமிருந்து வந்தவை அல்லவென்று நீங்கள் அறியத்தக்கதாக நீங்கள் ஏமாற்றப்படாமலிருக்க இதை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

7 ஏனெனில் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உங்களுக்கு முன்பே சொன்னது போலவே என்னால் ஏற்படுத்தப்பட்டவன் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட, வெளிப்படுத்தல்களையும் பெறப் போகிறவைகளையும் போதிக்க என்னால் நியமனம் செய்யப்பட்டவன், வாசலின் வழியே வந்து நியமிக்கப்படுவான்.

8 இப்பொழுதும், இதோ, நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன், நீங்கள் ஒன்றாய்க் கூடிவரும்போது, எனது சபையை எவ்வாறு நடத்தவேண்டுமென்றும், வழிநடத்தவேண்டுமென்றும் நான் கொடுத்த பிரமாணம் மற்றும் கட்டளைகளின் கருத்துக்களை எவ்வாறு செயல்படுத்துவது எனவும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் ஒருவருக்கொருவர் அறிவுறுத்தி பக்திவிருத்தி செய்யுங்கள்.

9 அப்படியாக எனது சபையின் பிரமாணத்தில் நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள், நீங்கள் பெற்றுக்கொண்ட அதனால் பரிசுத்தமாக்கப்படுவீர்கள், எனக்கு முன்பாக சகல பரிசுத்தத்திலும் செயல்பட நீங்கள் உங்களையே கட்டுப்படுத்திக் கொள்வீர்கள்.

10 இதை நீங்கள் எவ்வளவாய் செய்கிறீர்களோ அவ்வளவாய் நீங்கள் பெற்றுக்கொண்ட ராஜ்யத்திலே மகிமை சேர்க்கப்படும். அதை நீங்கள் எவ்வளவாய் செய்யாதிருக்கிறீர்களோ அவ்வளவாய் நீங்கள் பெற்ற அதுவும்கூட எடுத்துக்கொள்ளப்படும்.

11 உங்களுக்கு மத்தியிலிருக்கும் அக்கிரமத்தை புறம்பே கழித்துப்போடுங்கள்; எனக்கு முன்பாக உங்களை பரிசுத்தமாக்குங்கள்;

12 ராஜ்யத்தின் மகிமைகளில் நீங்கள் வாஞ்சையாயிருந்தால், எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனை நியமித்து, விசுவாசத்தின் ஜெபத்தால் எனக்கு முன்பாக அவனைத் தாங்குங்கள்.

13 மீண்டும், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ராஜ்யத்தின் இரகசியங்களை நீங்கள் வாஞ்சித்தால், அவனுக்கு ஆகாரத்தையும் வஸ்திரத்தையும், நான் அவனுக்குக் கட்டளையிட்ட பணியை நிறைவேற்ற அவனுக்கு தேவையானவற்றை எல்லாம் கொடுங்கள்;

14 நீங்கள் இதைச் செய்யாவிடில், குற்றமற்ற ஒரு ஜனத்தை நான் எனக்கு முன்பாக எனக்காக பாதுகாக்கும் பொருட்டு அவனை ஏற்றுக்கொண்டவர்களோடு அவன் தங்கியிருப்பான்.

15 மீண்டும் நான் சொல்லுகிறேன், நான் நியமித்த என்னுடைய சபையின் மூப்பர்களே, செவி கொடுங்கள்: போதிக்கப்படுவதற்காக நீங்கள் அனுப்பப்படவில்லை, ஆனால் எனது ஆவியின் வல்லமையால் உங்கள் கைகளில் நான் கொடுத்த காரியங்களை மனுபுத்திரருக்குப் போதிக்கவே;

16 உன்னத்திலிருந்து நீங்கள் போதிக்கப்படவிருக்கிறீர்கள். உங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள், நான் பேசியதைப்போலவே நீங்கள் கொடுக்கும்படிக்கு நீங்கள் அதிகாரத்தால் தரிப்பிக்கப்படுவீர்கள்.

17 நீங்கள் கேளுங்கள், ஏனெனில் இதோ, கர்த்தரின் மகத்தான நாள் சமீபித்திருக்கிறது.

18 கர்த்தர் வானத்திலிருந்து சத்தமிடுகிற நாள் வருகிறது; வானங்கள் அசையும், பூமி நடுங்கும், தேவனின் எக்காளம் நீண்டதாயும் சத்தமுள்ளதாயுமிருக்கும், உறங்கிக்கொண்டிருக்கும் தேசங்களுக்குச் சொல்வீர்கள்: பரிசுத்தவான்களே, எழுந்து ஜீவித்திருங்கள்; பாவிகளாகிய நீங்கள், நான் மீண்டும் அழைக்கும்வரை உறங்கிக்கொண்டிருங்கள்.

19 ஆகவே, துன்மார்க்கருக்கு மத்தியிலே நீங்கள் காணப்படாதபடிக்கு உங்கள் அரைக்கச்சையைக் கட்டிக்கொள்ளுங்கள்.

20 உங்கள் குரலை உயர்த்துங்கள், தப்பவிடாதிருங்கள். கர்த்தரின் மகத்தான நாளுக்காக உங்களை ஆயத்தப்படுங்கள் எனச் சொல்லி, மனந்திரும்ப தேசங்களையும் வயோதிகர்களையும் வாலிபர்களையும், அடிமைகளையும் சுயாதீனர்களையும் அழையுங்கள்;

21 ஏனெனில், நான் ஒரு மனுஷனாக எனது குரலை உயர்த்தி மனந்திரும்ப அழைத்து, என்னை நீங்கள் வெறுத்தாலும், மனந்திரும்புங்கள், கர்த்தரின் மகத்தான நாளுக்காக ஆயத்தப்படுங்கள் எனச்சொல்லி ஜீவித்திருப்பவர்கள் அனைவருடைய காதுகளிலும் பேசி, பூமியின் கடையாந்தரங்களிலிருந்து தங்கள் குரல்களில் இடிமுழக்கங்கள் ஓசையிடும் அந்த நாள் வரும்போது,

22 ஆம், மீண்டும், மின்னல்கள் கிழக்கேயிருந்து மேற்கேவரை கோடுகளிடும்போது, ஜீவிக்கிற சகலவற்றையும் நோக்கி தங்கள் குரல்களில் சத்தமிடுகையில், கேட்கிற அனைவரின் காதுகளையும் அதிரச் செய்து கேட்கச் செய்யும்போது, மனந்திரும்புங்கள், ஏனெனில் கர்த்தரின் மகத்தான நாள் வருகிறது என இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது என்ன சொல்வீர்கள்?

23 மீண்டும், பூமியின் ஜாதிகளே உங்களை சிருஷ்டித்த தேவனின் வார்த்தைகளைக் கேளுங்கள் எனச் சொல்லி, வானத்திலிருந்து கர்த்தர் அவருடைய குரலில் பேசுவார்.

24 பூமியின் ஜாதிகளே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உங்களைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று!

25 எனது ஊழியக்காரர்களின் வாயின் மூலமாக, தூதர்களின் பணிவிடையினாலும், எனது சொந்தக் குரலினாலும், இடிகளின் சத்தத்தாலும், மின்னல்களின் சத்தத்தாலும், புயல்களின் சத்தத்தாலும், பூமியதிர்ச்சிகளின் சத்தத்தாலும், பெரிய சூரைக்காற்றாலும், பஞ்சங்கள் மற்றும் சகலவகையான கொள்ளை நோய்களின் சத்தத்தாலும், ஒரு எக்காளத்தின் பெரிய சத்தத்தாலும், நியாயத்தீர்ப்பின் சத்தத்தாலும், நாள் முழுதும் இரக்கத்தின் சத்தத்தாலும், மகிமை, கனம் மற்றும் நித்திய ஜீவனின் ஐஸ்வரியத்தின் சத்தத்தாலும், எத்தனை தரமோ நான் உங்களை அழைத்தேன், ஒரு நித்திய இரட்சிப்புடன் உங்களை இரட்சித்திருப்பேன், உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று!

26 இதோ, எனது மூர்க்கத்தின் சினத்தின் பாத்திரம் நிரம்பியிருக்கும் நாள் வந்திருக்கிறது.

27 இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இவைகள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் வார்த்தைகளாயிருக்கின்றன.

28 ஆகவே, பிரயாசப்படுங்கள், கடைசி முறையாக எனது திராட்சைத்தோட்டத்திலே பிரயாசப்படுங்கள், ஆதலால், பூமியின் குடிகளை கடைசி முறையாக அழையுங்கள்.

29 ஏனெனில் நியாயத்தீர்ப்பில் என்னுடைய சொந்த காலத்தில் நான் பூமியின் மீது வருவேன், எனது ஜனங்கள் மீட்கப்பட்டு பூமியில் என்னோடு அரசாளுவார்கள்.

30 ஏனெனில், எனது ஊழியக்காரர்களின் வாயினால் நான் பேசிய மகத்தான ஆயிரம் வருஷம் வரும்.

31 ஏனெனில், சாத்தான் கட்டப்படுவான், அவன் தளர்த்தப்படும்போது ஒரு சிறிய காலத்திற்கு மட்டுமே அவன் ஆளுகை செய்வான், பின்னர் பூமியின் முடிவு வருகிறது.

32 நீதியில் ஜீவிக்கிறவன் ஒரு கண் இமைக்கும் நேரத்தில் மாற்றப்படுவான், அக்கினியால் போவதுபோல பூமி கடந்துபோகும்.

33 துன்மார்க்கர் அவியாத அக்கினிக்குள் போவார்கள், அவர்களுடைய முடிவை பூமியின் மீதுள்ள ஒரு மனுஷனும் அறிவதில்லை, நியாயத்தீர்ப்பில் எனக்கு முன்பாக அவர்கள் வரும்வரை எப்போதும் அறியமாட்டார்கள்.

34 இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். இதோ, உலகத்தின் இரட்சகரான நானே இயேசு கிறிஸ்து. உங்கள் இருதயங்களில் இந்தக் காரியங்களை பொக்கிஷப்படுத்துங்கள், நித்தியத்தின் பவித்திரங்கள் உங்கள் மனங்களில் நிலைத்திருப்பதாக.

35 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள். என்னுடைய அனைத்துக் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.