வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 52


பாகம் 52

ஜூன் 6, 1831ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் சபையின் மூப்பர்களுக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஜூன் 3ஆம் தேதி ஆரம்பித்து 6ஆம் தேதி முடிகிற ஒரு மாநாடு கர்த்லாந்தில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதான ஆசாரியனின் அலுவலுக்கான முதல் பிரத்தியேக நியமங்கள் உருவாக்கப்பட்டன, பொய்யான, வஞ்சிக்கும் ஆவிகளைப்பற்றிய குறிப்பிட்ட வெளிப்படுத்தல்கள் பிரித்தறியப்பட்டு கடிந்து கொள்ளப்பட்டன.

1–2, அடுத்த மாநாடு மிசௌரியில் நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டது; 3–8, குறிப்பிட்ட மூப்பர்கள் ஒன்றாக பயணம் செய்ய நியமிக்கப்பட்டார்கள்; 9–11, அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் எழுதியவைகளையே மூப்பர்கள் போதிக்கவேண்டும்; 12–21, ஆவியால் தெளிவுபடுத்தப்பட்டவர்கள் துதி மற்றும் ஞானத்தின் கனிகளைக் கொண்டுவருகிறார்கள்; 22–44, மாநாட்டிற்காக மிசௌரிக்கு பயணம் செய்யும்போது சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க போக அநேக மூப்பர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

1 இதோ, அவரது ஆவியின் குரலால் இந்த கடைசி நாட்களில் அவர் அழைத்த மற்றும் தெரிந்துகொண்ட மூப்பர்களுக்கு கர்த்தர் இப்படியாக சொல்லுகிறார்,

2 சொல்வதாவது: யாக்கோபுவின் மீதியானவர்களும் உடன்படிக்கையின்படி சந்ததியருமான எனது ஜனங்களுக்கு நான் இந்த நேரத்திலிருந்து பரிசுத்தப்படுத்தும் தேசமான மிசௌரியில் நடக்கப்போகும் அடுத்த மாநாடுவரை நீங்கள் செய்யவேண்டுமென நான் எதிர்பார்க்கிறவற்றை கர்த்தராகிய நான், உங்களுக்கு அறியப்பண்ணுவேன்.

3 ஆகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரர்களாகிய ஜோசப் ஸ்மித் இளையவர் மற்றும் சிட்னி ரிக்டன், அவர்களின் வீடுகளைவிட்டு மிசௌரி தேசத்திற்கு பயணம் செய்வதற்கான ஆயத்தங்களை செய்து முடித்தவுடன் அவர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்வார்களாக.

4 அவர்கள் எவ்வளவாய் எனக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கிறார்களோ அவ்வளவாய் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு அறியப்படுத்தப்படும்;

5 அவர்கள் எவ்வளவாய் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறார்களோ அவ்வளவாய் உங்கள் சுதந்தரத்தின் தேசமும்கூட அவர்களுக்கு அறியப்படுத்தப்படும்.

6 அவர்கள் எவ்வளவாய் உண்மையுள்ளவர்களாய் இல்லாதிருக்கிறார்களோ அவ்வளவாய் எனக்கு நன்மையாகத் தோன்றுகிற எனது சித்தத்தின்படி அவர்கள் அறுப்புண்டுபோவார்கள்.

7 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரனாகிய லைமன் விட்டும் எனது ஊழியக்காரனாகிய ஜான் கோரிலும் தங்கள் பயணத்தை சீக்கிரமே மேற்கொள்ளக்கடவர்;

8 எனது ஊழியக்காரனாகிய ஜான் மர்டாக்கும், எனது ஊழியக்காரனாகிய ஹைரம் ஸ்மித்தும், டெட்ராய்ட் வழியாக அதே இடத்திற்கு தங்கள் பயணத்தை மேற்கொள்வார்கள்.

9 தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் எழுதியவைகள் மற்றும் விசுவாசத்தின் ஜெபத்தின் மூலமாக தேற்றரவாளனால் போதிக்கப்பட்டவை தவிர வேறு எந்தக் காரியங்களையும் சொல்லாமல், வழியில் வார்த்தையை பிரசங்கித்துக்கொண்டு அங்கிருந்து அவர்கள் பயணிப்பார்களாக.

10 இருவர் இருவராக அவர்கள் போவார்களாக, அப்படியாக வழியிலுள்ள ஒவ்வொரு சபையிலும் பிரசங்கித்து தண்ணீருக்கருகில், தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுத்து, கைகள் வைப்பார்களாக.

11 ஏனெனில் அப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், நீதியில் எனது கிரியையைக் குறைப்பேன், ஏனெனில், ஜெயிக்க நான் நியாயத்தீர்ப்பை அனுப்பும் நாட்கள் வருகின்றன.

12 எனது ஊழியக்காரனாகிய லைமன் விட் எச்சரிக்கையாயிருப்பானாக, ஏனெனில் அவனைப் பதரைப்போல புடைக்க சாத்தான் வாஞ்சிக்கிறான்.

13 இதோ, உண்மையாயிருக்கிறவன் அநேகத்தின் பேரில் அதிகாரியாக்கப்படுவான்.

14 மேலும் நீங்கள் வஞ்சிக்கப்படாதிருக்க, சகல காரியங்களிலும் ஒரு மாதிரியை நான் உங்களுக்குக் கொடுப்பேன், ஏனெனில் சாத்தான் தேசத்தின் பரப்பின் மீதெங்கும் இருக்கிறான், அவன் தேசங்களை வஞ்சித்துக்கொண்டு போகிறான்,

15 ஆகவே, ஜெபிக்கிறவன், நருங்குண்ட ஆவியுடையவன், என்னுடைய நியமங்களுக்கு அவன் கீழ்ப்படிந்தால், அவனே என்னால் ஏற்றுக்கொள்ளப்படுகிறான்.

16 நருங்குண்ட ஆவியுடன் சாந்தமும் பக்திவிருத்தியுமுள்ள பாஷையில் பேசுகிறவன் என்னுடைய நியமங்களுக்கு கீழ்ப்படிந்தால் அவனே, தேவனுடையவனாயிருக்கிறான்.

17 மீண்டும், எனது வல்லமையினால், நடுங்குகிறவன் பராக்கிரமசாலியாக்கப்பட்டு, உனக்கு நான் கொடுத்த வெளிப்படுத்தல்கள் மற்றும், சத்தியங்களின்படி துதி மற்றும், ஞானத்தின் கனிகளைக் கொண்டுவருவான்.

18 மீண்டும், மேற்கொள்ளப்பட்டு, இந்த மாதிரியின்படி கனிகளைக் கொண்டு வராதவன் என்னுடையவனல்ல.

19 ஆகவே, இந்த மாதிரியால் எல்லா வானங்களின் கீழுள்ளவைகள் அனைத்திலும், ஆவிகளை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

20 நாட்கள் வந்துவிட்டன; மனுஷர்களின் விசுவாசத்தின்படி அது அவர்களுக்குச் செய்யப்படும்.

21 இதோ, நான் தெரிந்து கொண்ட சகல மூப்பர்களுக்கும் இந்த கட்டளை கொடுக்கப்படுகிறது.

22 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரனாகிய தாமஸ் பி. மார்ஷ் மற்றும் என்னுடைய ஊழியக்காரனாகிய எஸ்றா தாயரும்கூட இதே தேசத்தில் வழியிலே வார்த்தையை பிரசங்கித்துக்கொண்டு தங்களின் பயணத்தை மேற்கொள்வார்களாக.

23 மீண்டும், என்னுடைய ஊழியக்காரனாகிய ஐசக் மோர்லி மற்றும் என்னுடைய ஊழியக்காரனாகிய எஸ்றா பூத் இருவரும், இதே தேசத்தில் வழியிலே வார்த்தையை பிரசங்கித்துக்கொண்டு தங்களின் பயணத்தை மேற்கொள்வார்களாக.

24 மீண்டும், என்னுடைய ஊழியக்காரர்களாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜூம், மார்ட்டின் ஹாரிஸும், என்னுடைய ஊழியக்காரர்களாகிய சிட்னி ரிக்டன் மற்றும் ஜோசப் ஸ்மித் இளையவனுடன் தங்களின் பயணத்தை மேற்கொள்வார்களாக.

25 என்னுடைய ஊழியக்காரர்களாகிய டேவிட் விட்மரும் ஹார்வி விட்லாக்கும்கூட இதே தேசத்தில் வழியிலே பிரசங்கித்துக்கொண்டு தங்களின் பயணத்தை மேற்கொள்வார்களாக.

26 என்னுடைய ஊழியக்காரர்களாகிய பார்லி பி. பிராட்டும், ஆர்சன் பிராட்டும், இதே தேசத்தில் வழியிலே பிரசங்கித்துக் கொண்டு தங்களின் பயணத்தை மேற்கொள்வார்களாக.

27 என்னுடைய ஊழியக்காரர்களாகிய சாலொமோன் ஹான்காக்கும் சிமியோன் கார்ட்டரும்கூட, இதே தேசத்தில் வழியிலே பிரசங்கித்துக்கொண்டு தங்களின் பயணத்தை மேற்கொள்வார்களாக.

28 என்னுடைய ஊழியக்காரர்களாகிய எட்சன் புல்லரும் ஜேக்கப் ஸ்காட்டும்கூட தங்களின் பயணத்தை மேற்கொள்வார்களாக.

29 என்னுடைய ஊழியக்காரர்களாகிய லேவி டபுள்யு. ஹான்காக்கும், செபடீ கோல்டிரின்னும்கூட தங்களின் பயணத்தை மேற்கொள்வார்களாக.

30 என்னுடைய ஊழியக்காரர்களாகிய ரெய்னால்ட்ஸ் ககூனும், சாமுவேல் ஹெச். ஸ்மித்தும்கூட தங்களின் பயணத்தை மேற்கொள்வார்களாக.

31 என்னுடைய ஊழியக்காரர்களாகிய வீலர் பால்ட்வின்னும் வில்லியம் கார்ட்டரும்கூட தங்களின் பயணத்தை மேற்கொள்வார்களாக.

32 எனது ஊழியக்காரர்களாகிய நீவல் நைட்டும், சேலா ஜெ. கிரிப்பின் இருவரும் நியமனம் செய்யப்பட்டு அவர்களும்கூட தங்கள் பயணத்தை மேற்கொள்வார்களாக.

33 ஆம், மெய்யாகவே நான் சொல்லுகிறேன், இவர்கள் அனைவரும் தங்களின் பல பாதைகளில் ஒரு இடத்திற்கு தங்கள் பயணத்தை மேற்கொள்வார்களாக, ஒரு மனுஷன் மற்றொருவனின் அஸ்திபாரத்தின்மேல் கட்டக்கூடாது, மற்றொருவனின் தடத்திலும் பயணம் செய்யக்கூடாது.

34 உண்மையுள்ளவனாயிருப்பவன் காத்துக்கொள்ளப்பட்டு அதிக கனிகளால் ஆசீர்வதிக்கப்படுவான்.

35 மீண்டும், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது ஊழியக்காரர்களாகிய ஜோசப் வேக்பீல்டும், சாலொமோன் ஹம்பரியும் கிழக்கு தேசங்களுக்கு தங்கள் பயணத்தை மேற்கொள்வார்களாக.

36 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்படிக்கு தாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மிக நிச்சயத்தோடு நம்பி தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் அறிவித்தது தவிர, வேறு எந்தக் காரியங்களையும் அறிவிக்காதவாறு அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் பிரயாசப்படுவார்களாக.

37 மீறுதலின் விளைவாக, ஹூமன் பெசட் மீது அருளப்பட்டது அவனிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு சைமன்ட்ஸ் ரைடர் தலையின்மீது வைக்கப்படுவதாக.

38 மீண்டும், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஜேரட் கார்ட்டர் ஒரு ஆசாரியனாக நியமிக்கப்படுவானாக, மேலும் ஜார்ஜ் ஜேம்ஸூம்கூட ஒரு ஆசாரியனாக நியமிக்கப்படுவானாக.

39 மூப்பர்களில் மீதியானவர்கள் சபைகளைக் கவனித்துக்கொண்டு, அவர்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வார்த்தையை அறிவிப்பார்களாக; விக்கிரக ஆராதனையோ, துன்மார்க்கமோ பயிற்சி செய்யப்படாமல் அவர்கள் தங்கள் சொந்த கைகளால் பிரயாசப்படுவார்களாக.

40 எளியோரையும், திக்கற்றோரையும், வியாதியஸ்தரையும், உபத்திரவப்படுவோரையும் சகல காரியங்களிலும் நினைவுகூருங்கள், ஏனெனில் இந்தக் காரியங்களைச் செய்யாதவன் எனது சீஷன் அல்ல.

41 மேலும், எனது ஊழியக்காரர்களாகிய ஜோசப் ஸ்மித் இளையவன், சிட்னி ரிக்டன் மற்றும் எட்வர்ட் பாட்ரிட்ஜ் சபையிலிருந்து ஒரு சிபாரிசை எடுத்துப் போவார்களாக. எனது ஊழியக்காரனாகிய ஆலிவர் கௌட்ரிக்கும் ஒன்று பெறப்படுவதாக.

42 அப்படியாக, நான் சொன்னதைப்போலவே, நீங்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்தால், உங்கள் சுதந்தரத்தின் தேசமாயிருக்கிற, இப்போது உங்கள் சத்துருக்களின் தேசமாயிருக்கிற மிசௌரி தேசத்தில் களிகூர நீங்கள் ஒன்றுகூடுவீர்கள்.

43 ஆனால், இதோ, கர்த்தராகிய நான் ஏற்ற காலத்தில் பட்டணத்தை துரிதப்படுத்துவேன், உண்மையுள்ளவர்களை ஆனந்தத்துடனும் களிகூருதலுடனும் முடிசூட்டுவேன்.

44 இதோ, தேவகுமாரனாகிய நானே இயேசு கிறிஸ்து, கடைசி நாளில் நான் அவர்களை உயர்த்துவேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.