வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58


பாகம் 58

ஆகஸ்டு 1, 1831ல் மிசௌரியிலுள்ள ஜாக்சன் மாகாணத்தின் சீயோனில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாக கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். முதல் ஓய்வுநாளில் மிசௌரியிலுள்ள ஜாக்சன் மாகாணத்தில் தீர்க்கதரிசியும் அவரது குழுவும் வந்தடைந்தபின்பு, ஒரு மதக்கூட்டம் நடத்தப்பட்டு ஞானஸ்நானத்தால் இரண்டு அங்கத்தினர்கள் வரவேற்கப்பட்டார்கள். அந்த வாரத்தில் தாம்சன் கிளையிலிருந்து கோல்ஸ்வில்லின் சில பரிசுத்தவான்களும் மற்றவர்களும் வந்தடைந்தார்கள் (பாகம் 54 பார்க்கவும்).கூடிச்சேர்கிற புதிய இடத்தில் அவர்களைப்பற்றிய கர்த்தரின் சித்தத்தை அறிந்துகொள்ள அநேகர் ஆர்வமாயிருந்தனர்.

1–5, உபத்திரவத்தில் நிலைத்திருப்பவர்கள் மகிமையின் கிரீடத்தால் முடி சூட்டப்படுவார்கள்; 6–12, ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்திற்கும் கர்த்தரின் விருந்துக்கும் பரிசுத்தவான்கள் ஆயத்தப்படவேண்டும்; 13–18, ஆயர்கள் இஸ்ரவேலின் நியாயாதிபதிகள்; 19–23, தேசத்தின் சட்டத்திற்கு பரிசுத்தவான்கள் கீழ்ப்படியவேண்டும்; 24–29, நன்மையானவற்றைச் செய்ய புருஷர்கள் தங்கள் சுயாதீனத்தைப் பயன்படுத்தவேண்டும்; 30–33, கர்த்தர் கட்டளையிடுகிறார், திரும்பப்பெறுகிறார்; 34–43, மனந்திரும்ப புருஷர்கள் அறிக்கையிட்டு தங்கள் பாவங்களை கைவிடவேண்டும்; 44–58, பரிசுத்தவான்கள் தங்கள் சுதந்தரத்தை வாங்கி மிசௌரியில் கூடிச்சேரவேண்டும்; 59–65, சகல சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படவேண்டும்.

1 என்னுடைய சபையின் மூப்பர்களே கேளுங்கள், என்னுடைய வார்த்தைக்குச் செவிகொடுங்கள், உங்களைக் குறித்தும், நான் உங்களை அனுப்பிய இந்த தேசத்தைக் குறித்தும் என்னுடைய விருப்பத்தை என்னிடமிருந்து அறிந்துகொள்ளுங்கள்.

2 ஏனெனில், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், செத்தாலும் பிழைத்தாலும் என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான், உபத்திரவத்திலே உண்மையாயிருப்பவனுக்கும் அதன் பலன் பரலோக ராஜ்யத்திலே பெரிதாயிருக்கும்.

3 தற்போதைய நேரத்தில், பின்னே வரப்போகிற காரியங்களைக் குறித்த உங்கள் தேவனின் நோக்கத்தையும், மிகுந்த உபத்திரவத்திற்குப் பின்னர் தொடரப்போகிற மகிமையையும் நீங்கள் உங்களுடைய சுபாவக் கண்களால் காணமுடியாது.

4 ஏனெனில் அதிக உபத்திரவத்திற்குப் பின்னர் ஆசீர்வாதங்கள் வருகிறது. ஆகவே நீங்கள் அதிக மகிமையின் கிரீடம் சூட்டப்படுகிற நாள் வருகிறது; நேரம் இன்னும் வரவில்லை, ஆனால் சமீபமாயிருக்கிறது.

5 அதை இருதயத்திலே நீங்கள் வைக்கும்படியாகவும், தொடர்ந்து வருகிறதைப் பெறும்படியாகவும் உங்களுக்கு நான் முன்பே கூருகிற இதை நினைவுகூருங்கள்.

6 இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் கீழ்ப்படிதலுள்ளவர்களாயிருக்கவும், வரப்போகிற காரியங்களைப்பற்றி சாட்சியளிக்க உங்கள் இருதயங்கள் ஆயத்தமாயிருக்கவும், இந்தக் காரணத்திற்காகவே நான் உங்களை அனுப்பினேன்;

7 அஸ்திபாரத்தைப் போடுகிறதிலும் தேவனின் சீயோன் நிற்கிற தேசத்தின் சாட்சியைக் கொடுக்கிறதிலும் நீங்கள் கனம் பண்ணப்படுவீர்கள்;

8 கொழுமையான பதார்த்தங்களின் விருந்தும் ஏழைகளுக்கு ஆயத்தம் பண்ணப்படவேண்டும்; ஆம், தீர்க்கதரிசிகளின் நாவுகள் பொய்க்காது என பூமி அறிந்து கொள்ளும்படியாக, கொழுமையான பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சைரசமும் கொண்ட விருந்து;

9 ஆம், சகல ஜாதிகளும் அழைக்கப்படுகிற நன்றாக ஆயத்தம் பண்ணப்பட்ட கர்த்தரின் வீட்டின் விருந்து.

10 முதலாவதாக, செல்வந்தர்களுக்கும் கல்விமான்களுக்கும், ஞானிகளுக்கும் பிரபுக்களுக்கும்;

11 பின்னர் என்னுடைய வல்லமையின் நாள் வருகிறது; பின்னர் ஏழைகளும் சப்பாணியரும், குருடரும், செவிடரும் ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்திற்கு வந்து, வரப்போகிற மகத்தான நாளுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற கர்த்தரின் விருந்தில் பங்கேற்பார்கள்.

12 இதோ, கர்த்தராகிய நானே இதைப் பேசினேன்.

13 சீயோனிலிருந்து சாட்சி புறப்பட்டுப்போகும், ஆம், தேவனின் சுதந்தரத்தின் பட்டணத்தின் வாயிலிருந்து,

14 ஆம், இந்தக் காரணத்திற்காகவே நான் உங்களை இங்கேயிருந்து அனுப்பினேன், எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜை தெரிந்தெடுத்து இந்த தேசத்தில் அவனது ஊழியத்திற்காக அவனை நியமித்தேன்.

15 ஆனால் அவிசுவாசமாகவும் இருதயக் குருட்டுத்தன்மையாகவுமிருக்கிற தனது பாவங்களுக்காக அவன் மனந்திரும்பாவிட்டால் அவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.

16 இதோ, அவனுடைய ஊழியம் அவனிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது, மீண்டும் அது கொடுக்கப்படமாட்டாது.

17 இந்த ஊழியத்தில் நிலை நிற்கிறவன், பூர்வ நாட்களைப்போல, அவரது பிள்ளைகளுக்காக தேவனின் சுதந்தரத்தின் தேசங்கள் பிரிக்கப்பட,

18 நியாயத்தின் சாட்சியாலும், அவனது ஆலோசகர்களின் உதவியாலும், தேவனின் தீர்க்கதரிசிகளால் கொடுக்கப்பட்ட ராஜ்யத்தின் சட்டங்களால் அவனது ஜனங்களை நியாயந்தீர்க்க இஸ்ரவேலின் நியாயாதிபதியாயிருக்க நியமிக்கப்படுகிறான்.

19 ஏனெனில் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எனது பிரமாணமே இந்த தேசத்தில் கைக்கொள்ளப்படும்.

20 அவனை அதிபதியென எந்த மனுஷனும் நினையாதிருப்பானாக; ஆனால் அவருடைய சித்தத்தின் ஆலோசனையின்படி அல்லது வேறு வார்த்தைகளில் எனில், நியாயாசன இருக்கையில் ஆலோசனையளிக்கிற அல்லது அமர்ந்திருந்து நியாயம் செய்கிற தேவனே அவனை அரசாளுவாராக.

21 தேசத்தின் சட்டங்களை எந்த மனுஷனும் மீறாதிருப்பானாக, ஏனெனில் தேவனின் பிரமாணங்களை கைக்கொள்ளுகிறவனுக்கு தேசத்தின் சட்டங்களை மீற அவசியமிருக்காது.

22 ஆகவே, ஆளும்படியான உரிமையுள்ளவரும், சகல சத்துருக்களையும் தனது பாதங்களுக்குக் கீழே கீழ்ப்படுத்துபவருமான அவர் ஆளும்வரை அவரது வல்லமைகளுக்கு கீழ்ப்பட்டிருங்கள்.

23 இதோ, எனது கைகளிலிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பிரமாணங்களே சபையின் பிரமாணங்கள், மற்றும், இந்த ஒளியில் நீங்கள் முன்னேறிச்செல்வீர்கள். இதோ, இதிலே ஞானம் விளங்கும்.

24 இப்பொழுது, எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜைப்பற்றிப் பேசும்போது, இந்த தேசம் அவனும், அவனது ஆலோசகர்களாக அவன் நியமித்தவர்களும் வசிக்கும் தேசமாயிருக்கிறது; எனது பண்டசாலையைக் காத்துக்கொள்ள நான் நியமித்தவனுடைய வசிக்கும் தேசமாயுமிருக்கும்;

25 ஆகவே, அவர்களுக்கும் எனக்குமிடையில் அவர்கள் ஆலோசித்ததைப்போல, இந்த தேசத்திற்கு அவர்கள் தங்களுடைய குடும்பத்தைக் கொண்டுவருவார்களாக.

26 ஏனெனில் இதோ, சகல காரியங்களிலும் நான் கட்டளையிடவேண்டுமென்பது சரியல்ல; ஏனெனில் சகல காரியங்களிலும் கட்டாயப்படுத்தப்படுகிறவன் ஒரு சோம்பேறியாயிருக்கிறான், ஒரு புத்தியுள்ள வேலைக்காரனாயல்ல; ஆகவே அவன் எந்த பலனையும் அடைவதில்லை.

27 மெய்யாகவே நான் சொல்லுகிறேன், ஒரு நல்ல காரணத்திற்காக மனுஷர்கள் ஆவலோடு ஈடுபடவேண்டும், தங்களின் சுயவிருப்பத்தில் அநேக காரியங்களைச் செய்து, மிகுந்த நீதியைக் கொண்டு வரவேண்டும்;

28 ஏனெனில் அதிகாரம் அவர்களிடத்திலிருக்கிறது, அதனால் அவர்கள் தங்களுக்கே பிரதிநிதிகளாயிருக்கிறார்கள். மனுஷர்கள் எவ்வளவாய் நன்மை செய்கிறார்களோ அவ்வளவாய் அவர்கள் தங்கள் பலனை ஒருபோதும் இழக்கமாட்டார்கள்.

29 ஆனால் அவன் கட்டளையிடப்படும்வரை எதையும் செய்யாதவனும், இருதயத்தில் சந்தேகத்தோடு ஒரு கட்டளையை பெறுகிறவனும், சோம்பேறித்தனத்தோடு அதைக் கைக்கொள்ளுகிறவனுமான அவன் ஆக்கினைக்குள்ளாவான்.

30 என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாதவனை தண்டியாமல்விட மனுஷனை உண்டாக்கிய நான் எம்மாத்திரம் என கர்த்தர் சொல்லுகிறார்?

31 வாக்குத்தத்தம் கொடுத்து நிறைவேற்றாமலிருக்க நான் எம்மாத்திரம் என கர்த்தர் சொல்லுகிறார்?

32 நான் கட்டளையிடுகிறேன், மனுஷர்கள் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்; நான் திரும்பப் பெறுகிறேன், அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெறமாட்டார்கள்.

33 பின்னர் அவர்கள் தங்கள் இருதயங்களுக்குள் சொல்லிக்கொள்வார்கள்: இது கர்த்தருடைய கிரியை அல்ல, ஏனெனில் அவரது வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு ஐயோ, ஏனெனில் அவர்களின் பலன் கீழே ஒளிந்துகொள்ளும், மேலிருந்தல்ல.

34 இப்பொழுது, இந்த தேசத்தைக்குறித்து கூடுதலான வழிகாட்டுதல்களை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்.

35 என் ஞானத்தின்படி சபையின் ஆயருக்கு முன்பாக அவனது பணங்களை வைப்பதில் எனது ஊழியக்காரனாகிய மார்டின் ஹாரிஸ் எடுத்துக்காட்டாயிருக்க வேண்டும்.

36 ஒரு சுதந்தரத்தைப் பெற இந்த தேசத்திற்கு வருகிற ஒவ்வொரு மனுஷனுக்கும் இது ஒரு சட்டமாயிருக்கிறது, சட்டம் வழிகாட்டுவதன்படி அவனது பணங்களை அவன் கையாளுவான்.

37 பண்டசாலையின் இடத்திற்காகவும், அச்சடிப்பதற்கான வீட்டிற்காகவும்கூட இன்டிபென்டன்ஸில் நிலங்கள் வாங்கப்படவேண்டுமென்பதுவும் ஞானமாயிருக்கிறது.

38 என்னுடைய ஊழியக்காரனாகிய மார்டின் ஹாரிஸைக் குறித்த பிற வழிகாட்டுதல்கள் ஆவியால் அவனுக்குக் கொடுக்கப்படும், அவனுக்கு நன்மையாகத் தோன்றுகிற அவனுடைய சுதந்தரத்தை அவன் பெறுவான்;

39 அவனது பாவங்களுக்காக அவன் மனந்திரும்புவானாக, ஏனெனில் அவன் உலகத்தின் புகழை நாடுகிறான்.

40 என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸூம்கூட அவனை நான் நியமித்த அலுவலில் நிற்பானாக, தேசத்தில் அவனது சுதந்தரத்தைப் பெறுவானாக;

41 அவனும்கூட மனந்திரும்பவேண்டியது அவசியமாயிருக்கிறது, ஏனெனில் கர்த்தராகிய நான் அவனோடு பிரியமாயிருக்கவில்லை, ஏனெனில் அவன் மேன்மையடைய நாடுகிறான், எனக்கு முன்பாக போதுமான அளவிற்கு சாந்தமாயிருக்கவில்லை.

42 இதோ, தனது பாவங்களுக்காக மனந்திரும்புகிறவன் மன்னிக்கப்படுகிறான், கர்த்தராகிய நான் அவற்றை நினைவுகூரமாட்டேன்.

43 தனது பாவங்களுக்காக ஒரு மனுஷன் மனந்திரும்பினால், இதோ, அவற்றை அவன் அறிக்கையிட்டு, அவற்றை கைவிடுவான் என்பதை இதனால் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

44 இப்பொழுது, என்னுடைய சபையின் மீதியான மூப்பர்களைக் குறித்து மெய்யாகவே நான் சொல்லுகிறேன். அவர்கள் விசுவாச ஜெபத்தின் மூலமாக விரும்பி, கர்த்தரால் அது நியமிக்கப்பட்டாலொழிய அநேக வருஷங்களுக்கு இந்த தேசத்தில் தங்கள் சுதந்தரத்தை அவர்கள் பெறுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை.

45 ஏனெனில், இதோ, அவர்கள் ஜனங்களை ஏகமாய் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து தள்ளுவார்கள்.

46 ஆகவே, ஒன்றுகூடிச்சேருங்கள்; இந்த தேசத்தில் வசிக்க நியமிக்கப்படாதவர்கள், சுற்றிலுமுள்ள எல்லைகளில் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார்களாக; அதன் பின்னர் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்களாக.

47 சகல இடங்களிலும் சத்தியத்தின் சாட்சியைச் சொல்லி, ஐஸ்வரியவான்களையும், தாழ்ந்தவனையும், உயர்ந்தவனையும், ஏழையையும் மனந்திரும்ப அழைத்து அந்த வழியில் அவர்கள் பிரசங்கிப்பார்களாக.

48 பூமியின் குடிகள் எவ்வளவாய் மனந்திரும்புகிறார்களோ அவ்வளவாய் அவர்கள் சபைகளைக் கட்டுவார்களாக.

49 ஒஹாயோவிலுள்ள சபைக்கு சீயோனின் தேசங்களில் நிலங்களை வாங்க பணத்தைப்பெற, சபையின் குரலால் ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவானாக.

50 சீயோன் தேசத்தைப்பற்றி ஒரு விளக்கத்தை அவன் எழுதவும், தேவனின் சித்தத்தைப்பற்றி ஒரு உரையை எழுதவும், என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டனுக்கு நான் ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன், அது ஆவியால் அவனுக்கு அறியப்படுத்தப்படும்;

51 தேவனின் பிள்ளைகளின் சுதந்தரத்திற்காக நிலங்களை வாங்குவதற்கு ஆயருடைய கைகளிலோ அல்லது அவரின் பிரதிநிதியிடமோ கொடுக்கப்பட பணங்களைப் பெறும்பொருட்டு அவருக்கு நன்மையாகத் தோன்றுகிறதையோ அல்லது அவர் வழிகாட்டுகிறதைப்போலவோ, ஒரு கடிதமும் சந்தாவும் சகல சபைகளுக்கும் வழங்கப்படவேண்டும்.

52 ஏனெனில், இதோ, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், விரைவில் நேரம் அனுமதிக்கும்பொழுது, தேசத்தின் இந்த முழு பகுதிகளையும்கூட வாங்குவதற்கு சீஷர்களும், மனுபுத்திரர்களும் அவர்களுடைய இருதயங்களை திறக்கவேண்டுமென கர்த்தர் வாஞ்சிக்கிறார்.

53 இதோ, ஞானம் இதிலே விளங்கும், இரத்தம் சிந்துதலைத் தவிர, எந்த சுதந்தரத்தையும் அவர்கள் பெறமாட்டார்களோவென அவர்கள் இதைச் செய்வார்களாக.

54 மீண்டும், எவ்வளவாய் நிலங்கள் பெறப்பட்டதோ அவ்வளவாய் தேவனின் பரிசுத்தவான்களுக்காக பிரயாசப்பட சகல வகையான தொழிலாளிகள் அனுப்பப்படுவார்களாக.

55 இந்த சகல காரியங்களும் கிரமமாய் செய்யப்படுவதாக, ஆயரால் அல்லது சபையின் பிரதிநிதியால் அவ்வப்போது தேசங்களின் நலன்கள் அறியப்படுத்தப்படுவதாக.

56 கூடிச்சேர்ந்தவர்களின் வேலை தீவிரித்தோ ஓடியோ இருக்கவேண்டாம்; ஆனால் நேரத்திற்கு தகுந்தாற்போல அவர்கள் பெறும் அறிவின்படி மாநாடுகளில் சபையின் மூப்பர்களால் ஆலோசனையளிக்கப்படுவதைப்போல அது செய்யப்படுவதாக.

57 என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டன் இந்த தேசத்தையும் கர்த்தரின் ஆலயத்திற்கான இடத்தையும் பரிசுத்தமாக்கி பிரதிஷ்டை செய்வானாக.

58 ஒரு மாநாட்டு கூட்டம் அழைக்கப்படுவதாக, அதன் பின்னர், அவர்களுடைய தேசத்தில் நான் அவர்களுக்கு நியமித்த மீதியான வேலையையும், மாநாடுகளில் தீர்மானிக்கப்பட்ட மீதியானவைகளையும் செய்து முடிக்கவும் எனது ஊழியக்காரர்களாகிய சிட்னி ரிக்டனும், ஜோசப் ஸ்மித் இளையவனும் அவர்களுடன் ஆலிவர் கௌட்ரியும்கூட திரும்புவார்களாக.

59 அவன் அறிந்திருக்கிறதும் மிக நிச்சமாய் நம்புகிறதுமான அந்த வழியில் சாட்சி சொல்கிற அவனைத்தவிர இந்த தேசத்திற்கு எந்த மனுஷனும் திரும்பாதிருப்பானாக.

60 சீபா பீட்டர்சன்மீது அருளப்பட்ட அது, அவனிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுவதாக; அவனது சகல பாவங்களுக்காகவும் அவன் போதுமான அளவு தண்டிக்கப்படும்வரை அவனுடைய சகோதரர்களுடன் தனது சொந்தக் கைகளால் பிரயாசப்பட்டு அவன் சபையின் ஒரு அங்கத்தினராக இருப்பானாக; ஏனெனில் அவன் அவைகளை அறிக்கையிடாமல் மறைத்துவைக்க நினைக்கிறான்.

61 இந்த தேசத்திற்கு வந்துகொண்டிருக்கிற, மிகுதியாகவும் அளவுக்கதிகமாகவும் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த சபையின் மீதியான மூப்பர்களில் சிலர் இந்த தேசத்தில் ஒரு மாநாட்டையும் நடத்துவார்களாக.

62 அவர்களால் நடத்தப்படவேண்டிய மாநாட்டை என்னுடைய ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜ் வழிநடத்துவானாக.

63 அந்த வழியில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டு, அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட காரியங்களை சாட்சி சொல்லிக்கொண்டு அவர்களும்கூட திரும்புவார்களாக.

64 ஏனெனில், மெய்யாகவே உலகம் முழுவதற்கும், பூமியின் கடையாந்தரம் வரைக்கும் இந்த இடத்திலிருந்து சத்தம் புறப்பட்டுப் போகவேண்டும், சகல சிருஷ்டிகளுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு விசுவாசிப்பவர்களுடனேகூட அடையாளங்கள் பின்தொடரும்.

65 மேலும் இதோ மனுஷகுமாரன் வருகிறார். ஆமென்.