வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 61


பாகம் 61

ஆகஸ்டு 12, 1831ல் மெக்வெயின்ஸ் பென்டில், மிசௌரி நதியின் கரையில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். அவர்கள் கர்த்லாந்துக்கு திரும்பிவரும் பயணத்தில், தீர்க்கதரிசியும் பத்து மூப்பர்களும் சிறு படகுகளில், மிசௌரி நதியில் பயணம் செய்தார்கள். பயணத்தின் மூன்றாவது நாளில் அநேக அபாயங்கள் சந்திக்கப்பட்டன. தண்ணீருக்கு மேலே அதிகாரத்துடன் சங்காரக்காரன் சவாரி செய்வதை ஒரு பகல்நேர தரிசனமாக மூப்பர் வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸ் கண்டார்.

1–12, தண்ணீர்கள்மேல் அநேக அழிவுகளைக் கர்த்தர் கட்டளையிடுகிறார்; 13–22, யோவானால் தண்ணீர்கள் சபிக்கப்பட்டன, அதன் மேற்பரப்பில் சங்காரக்காரன் சவாரி செய்கிறான்; 23–29, தண்ணீர்களுக்கு கட்டளையிட சிலருக்கு அதிகாரமிருக்கிறது; 30–35, மூப்பர்கள் இருவர் இருவராக பயணம் செய்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவேண்டும்; 36–39, மனுஷ குமாரனின் வருகைக்காக அவர்கள் ஆயத்தப்படுத்த வேண்டும்.

1 இதோ, சர்வ வல்லமையுடைய, அநாதியாய் என்றென்றைக்குமுள்ள, அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிற, ஆதியும் அந்தமுமாயிருக்கிற அவருடைய சத்தத்தைக் கேளுங்கள்.

2 இதோ, இந்த இடத்தில் கூடியிருக்கிற, உங்கள் பாவங்கள் இப்போது மன்னிக்கப்பட்ட, என்னுடைய சபையின் மூப்பர்களே, மெய்யாகவே இப்படியாக கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார், ஏனெனில் கர்த்தராகிய நான் பாவங்களை மன்னிக்கிறேன், தாழ்மையான இருதயத்தோடு தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறவர்களுக்கு நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன்;

3 ஆனால், இருபக்கங்களிலும் குடிகள் அவிசுவாசத்தில் அழிந்துகொண்டிருக்கும்போது, என்னுடைய மூப்பர்களின் முழுக் குழு தண்ணீர்கள்மேல் வேகமாய்ப் போவது அவசியமில்லை என மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

4 ஆயினும், நீங்கள் சாட்சி சொல்லவேண்டுமென நான் அதற்கு இடங்கொடுத்தேன், இதோ தண்ணீர்கள்மேல், விசேஷமாக இப்போதிலிருந்து அநேக அபாயங்களுண்டு;

5 ஏனெனில், கர்த்தராகிய நான் தண்ணீர்கள் மேல் அநேக அழிவுகளை என்னுடைய கோபத்தில் கட்டளையிட்டேன், ஆம், குறிப்பாக இந்த தண்ணீர்கள் மேலாக.

6 ஆயினும், எல்லா மாம்சமும் என்னுடைய கையிலிருக்கிறது, உங்களுக்கு மத்தியில் உண்மையுள்ளவனாயிருப்பவன் தண்ணீர்களால் அழியமாட்டான்.

7 ஆகவே, என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி கில்பர்ட்டும் என்னுடைய ஊழியக்காரனாகிய வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸூம் தங்களுடைய பணியிலும் ஊழியத்திலும் விரைவாக இருப்பது அவசியமாயிருக்கிறது.

8 ஆயினும், நீங்கள் ஒன்றாயிருக்கும்படியாகவும், நீங்கள் துன்மார்க்கத்தில் அழிந்து விடாமலிருக்கவும் உங்களுடைய பாவங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படும் வரைக்கும் நீங்கள் பிரிய நான் அனுமதிக்கமாட்டேன்.

9 ஆனால் இப்பொழுது மெய்யாகவே நான் சொல்லுகிறேன், நீங்கள் பிரிய வேண்டுமென்பது எனக்கு நியதியாயிருக்கிறது. ஆகவே என்னுடைய ஊழியக்காரர்களாகிய சிட்னி கில்பர்ட்டும், வில்லியம் டபுள்யு. பெல்ப்ஸூம் முன்பு போல இணைந்து, தங்களுடைய ஊழியத்தை அவர்கள் நிறைவேற்றும்படியும், விசுவாசத்தினால் அவர்கள் மேற்கொள்ளவும் தங்கள் பயணத்தை விரைவில் மேற்கொள்வார்களாக;

10 அவர்கள் உண்மையுள்ளவர்களாயிருக்கிற அளவில் அவர்கள் காக்கப்படுவார்கள், கர்த்தராகிய நான் அவர்களோடே கூட இருப்பேன்.

11 அவசியமான வஸ்திரங்களை மீதியானவர்கள் எடுத்துக்கொள்வார்களாக.

12 நீங்கள் ஏற்றுக்கொள்கிறபடி, என்னுடைய ஊழியக்காரனாகிய சிட்னி கில்பர்ட் அவசியமில்லாததை தம்முடன் எடுத்துக்கொள்வானாக.

13 இப்பொழுது, இதோ, இந்தக் காரியங்களைக் குறித்து உங்கள் நன்மைக்காக நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்தேன்; கர்த்தராகிய நான் பூர்வ கால மனுஷர்களுடன் போல உங்களோடும் வழக்காடுவேன்.

14 இதோ, கர்த்தராகிய நான் ஆரம்ப காலத்தில் தண்ணீர்களை ஆசீர்வதித்தேன்; ஆனால் கடைசி நாட்களில் என்னுடைய ஊழியக்காரனாகிய யோவானின் வாயால் தண்ணீர்களை சபித்தேன்.

15 ஆகவே, தண்ணீர்கள்மேல் எந்த மாம்சமும் பாதுகாப்பாயில்லாத நாட்கள் வரும்.

16 தண்ணீர்கள் மேலாக சீயோன் தேசத்திற்கு நேர்மையான இருதயமுள்ளவனைத் தவிர எவனாலும் போகமுடியாதென வரும் நாட்களில் சொல்லப்படும்.

17 கர்த்தராகிய நான் ஆரம்பத்தில் தேசத்தை சபித்தது போல, என்னுடைய பரிசுத்தவான்களின் பயனுக்காக அதன் கொழுப்பானதைப் புசிக்க அதன் ஏற்றகாலத்தில் கடைசி நாட்களில் அதை நான் ஆசீர்வதித்தேன்.

18 நான் ஒருவருக்கு சொல்லுவது சகலருக்கும் சொல்லுவதாகும், இந்த தண்ணீர்களைக் குறித்து உங்கள் சகோதரருக்கு நீங்கள் முன்னெச்சரிக்கை கொடுக்கவேண்டுமென்றும், அவைகள்மேல் அவர்கள் பயணப்பட்டு வரக்கூடாதென்றும் இப்பொழுது உங்களுக்கு நான் ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன், இல்லையென்றால், அவர்களின் விசுவாசம் ஒழிந்துபோய் அவர்கள் கண்ணிகளிலே அகப்படுவார்கள்;

19 கர்த்தராகிய நான், ஆணையிட்டேன், சங்காரக்காரன் அதன்மேல் சவாரி செய்கிறான், ஆணையை நான் திரும்பப் பெறுவதில்லை.

20 கர்த்தராகிய நான் நேற்று உங்கள்மீது கோபமாயிருந்தேன், ஆனால் இன்று என்னுடைய கோபம் மாறிவிட்டது.

21 ஆகவே, நான் யாரைப்பற்றி பேசினேனோ, அவர்கள் தங்கள் பயணத்தை விரைவாக மேற்கொள்வார்களாக, மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், விரைவாக அவர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்வார்களாக.

22 சிறிது காலத்திற்குப்பின், அவர்கள் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றுவது என்றிருந்தால், அவர்கள் தண்ணீர் வழியாகவோ அல்லது தரைவழியாகவோ போனாலும், எனக்கு அது ஒரு பொருட்டல்ல; இப்போதிலிருந்து அவர்கள் தீர்மானிக்கிறபடியே அவர்களுக்கு அது அறியப்படுத்தப்படுவதாக.

23 இப்பொழுது, எனது ஊழியக்காரர்களாகிய சிட்னி ரிக்டனையும், ஜோசப் ஸ்மித் இளையவனையும், ஆலிவர் கௌட்ரியையும் குறித்தவரை, அவர்கள் தங்கள் வீடுகளுக்கு பயணப்படும்போது, வாய்க்கால்களைத் தவிர, அவர்கள் மீண்டும் தண்ணீர்கள்மேல் வரவேண்டாம், வேறு வார்த்தைகளில் எனில், கால்வாயைத்தவிர பயணத்திற்காக அவர்கள் தண்ணீர்கள்மேல் வரவேண்டாம்.

24 இதோ, கர்த்தராகிய நான் எனது பரிசுத்தவான்களின் பயணத்துக்காக ஒரு வழியை நியமித்திருக்கிறேன்; இதோ, இதுதான் வழி, பயணப்படவும் சீயோன் தேசத்திற்கு போகவும் அவர்கள் கட்டளையிடப்பட்ட அளவில் அவர்கள் கால்வாயை விட்டகன்ற பின்பு தரை வழியாக பயணப்படுவார்கள்;

25 வழியில் அவர்கள் பாளயமிறங்கி இஸ்ரவேல் புத்திரர் செய்ததைப்போல அவர்கள் செய்வார்களாக.

26 இதோ, உங்கள் சகோதரர் யாவருக்கும் இந்த கட்டளையை நீங்கள் கொடுக்கவேண்டும்.

27 ஆயினும், தண்ணீர்களுக்கு கட்டளையிட யாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவரது சகல வழிகளையும் ஆவியினால் அறிய அது அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது;

28 ஆகவே, இனிமேலும் என்னுடைய வல்லமையின்படியே, நிலத்திலோ அல்லது தண்ணீர்கள்மேலோ, ஜீவிக்கிற தேவனின் ஆவி அவனுக்கு கட்டளையிடுவதைப்போல அவன் செய்வானாக.

29 பரிசுத்தவான்களின் வழி அல்லது பயணப்பட கர்த்தரின் பாளையத்திலுள்ள பரிசுத்தவான்களின் பாதை உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

30 மீண்டும் மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய ஊழியக்காரர்களாகிய சிட்னி ரிக்டன், ஜோசப் ஸ்மித், இளையவர் மற்றும் ஆலிவர் கௌட்ரி, சின்சின்னாட்டிக்கு வந்துசேரும் மட்டும் துன்மார்க்கரின் சபைகளில் தங்கள் வாய்களைத் திறக்காதிருப்பார்களாக.

31 ஆம், அவர்களுடைய துன்மார்க்கத்திற்கு எதிராக, அவரது கோபம் மூட்டப்பட்டிருக்கிற, அழிவுக்கேதுவாக வெகுவாகப் பழுத்திருக்கிற அந்த ஜனங்களுக்கு எதிராக, அந்த இடத்தில் தேவனிடம் அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்துவார்களாக.

32 அப்போதிலிருந்து தங்களுடைய சகோதரரின் சபைகளுக்கு அவர்கள் பயணப்படுவார்களாக, ஏனெனில் இப்பொழுதும்கூட துன்மார்க்கருக்கு மத்தியிலுள்ள சபைகளைவிட அவர்களுக்கு மத்தியில், அவர்களுடைய பிரயாசம் அதிகமாகத் தேவையாயிருக்கிறது.

33 இப்பொழுது, மீதியானவர்களைக் குறித்தவரை, அவர்கள் பயணப்பட்டு, அது கொடுக்கப்பட்டிருக்கிறபடி துன்மார்க்கரின் சபைகளுக்கு மத்தியில் வார்த்தையை அறிவிப்பார்களாக;

34 இதை அவர்கள் செய்கிற அளவில் அவர்கள் தங்கள் வஸ்திரங்களை உதறிப்போட்டு, எனக்கு முன்பாக கறையற்றவர்களாயிருப்பார்கள்.

35 அவர்கள் ஒன்றாக, அல்லது அவர்களுக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி இருவர் இருவராக பயணப்படுவார்களாக, நான் பிரியமாயிருக்கிற என்னுடைய ஊழியக்காரனாகிய ரெய்னால்ட்ஸ் ககூனும், என்னுடைய ஊழியக்காரனாகிய சாமுவேல் ஹெச். ஸ்மித்தும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் மட்டும் பிரியாதிருப்பார்களாக, இது என்னில் ஒரு ஞானமான நோக்கமாயிருக்கிறது.

36 இப்பொழுது, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் ஒருவருக்குச் சொல்லுகிறது சகலருக்கும் சொல்லுவதாகும், சிறு பிள்ளைகளே, உற்சாகமாயிருங்கள்; ஏனெனில் நான் உங்களுக்கு மத்தியிலே இருக்கிறேன், நான் உங்களை கைவிடவில்லை;

37 எனக்கு முன்பாக நீங்கள் உங்களை தாழ்த்துகிற அளவில் ராஜ்யத்தின் ஆசீர்வாதங்கள் உங்களுடையதாயிருக்கும்.

38 மனுஷ குமாரனை எதிர்பார்த்து, உங்கள் அரைக் கச்சையைக் கட்டிக்கொண்டு, விழித்திருங்கள், தெளிந்த புத்தியுடையவர்களாய் இருங்கள், ஏனெனில் நீங்கள் நினையாத நாழிகையில் அவர் வருகிறார்.

39 ஜீவியத்திலும் அல்லது மரணத்திலும் அவரது வருகையின் நாளில் நீங்கள் நீங்காதிருக்கும்படியாக, நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.