வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84


பாகம் 84

செப்டம்பர் 22 மற்றும் 23, 1832ல் ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். செப்டம்பர் மாதத்தில், மூப்பர்கள் தங்களின் கிழக்கு மாகாணங்களின் ஊழியங்களிலிருந்து திரும்பிவரவும் தங்களுடைய பிரயாசங்களின் அறிக்கைகளை கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். இந்த மகிழ்ச்சியான காலத்தில் அவர்கள் கூடியிருந்தபோது பின்வரும் தொடர்பு பெறப்பட்டது. தீர்க்கதரிசி ஆசாரியத்துவத்துவத்தைப்பற்றிய வெளிப்படுத்தலாக இதற்குப் பெயரிட்டார்.

1–5, மிசௌரியில் புதிய எருசலேமும் ஆலயமும் கட்டப்படும்; 6–17, மோசேயிலிருந்து ஆதாம்வரை ஆசாரியத்துவத்தின் வரிசை கொடுக்கப்பட்டது; 18–25, உயர் ஆசாரியத்துவம் தேவனின் ஞானத்தின் திறவுகோலைத் தரித்திருக்கிறது; 26–32, தூதர்களின் பணிவிடை மற்றும், ஆயத்த சுவிசேஷத்தின் திறவுகோல்களை இளநிலை ஆசாரியத்துவம் தரித்திருக்கிறது; 33–44, ஆசாரியத்துவத்தின் வாக்குறுதி மற்றும் உடன்படிக்கையின் மூலம் மனுஷர்கள் நித்திய ஜீவனைப் பெறுகிறார்கள்; 45–53, கிறிஸ்துவின் ஆவி மனுஷர்களைத் தெளிவாக்குகிறது, உலகம் பாவத்தில் வீழ்ந்திருக்கிறது; 54–61, அவர்கள் பெற்றுக்கொண்ட அந்த காரியங்களைக் குறித்து பரிசுத்தவான்கள் சாட்சியளிக்க வேண்டும்; 62–76, சுவிசேஷத்தை அவர்கள் பிரசங்கிக்க வேண்டும், அடையாளங்கள் பின்தொடரும்; 77–91, பணப்பையோ அல்லது பையோ இல்லாமல் மூப்பர்கள் போக வேண்டும், அவர்களின் தேவைகளை கர்த்தர் கவனித்துக்கொள்ளுவார்; 92–97, சுவிசேஷத்தை மறுப்பவர்களுக்கு கொள்ளைநோய்களும் சாபங்களும் காத்திருக்கின்றன; 98–102, சீயோனின் மீட்பின் புதிய பாடல் கொடுக்கப்படுகிறது; 103–110, ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய அலுவலில் நின்று அவனுடைய அழைப்பில் பிரயாசப்படுவானாக; 111–120, கடைசி நாட்களின் பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து கர்த்தரின் ஊழியக்காரர்கள் அறிவிக்கவேண்டும்.

1 அவர்கள் தங்களுடைய இருதயங்களை ஒன்றுபடுத்தி உன்னதத்தை நோக்கி குரல்களை உயர்த்தியபோது அவருடைய ஊழியக்காரனான ஜோசப் ஸ்மித் இளையவருக்கும் ஆறு மூப்பர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தல்.

2 ஆம், அவருடைய தீர்க்கதரிசிகளின் வாயால் அவர் பேசியதைப்போல, புதிய எருசலேம் பட்டணமாக இருக்கப்போகிற சீயோன் மலையின்மேல் நிற்க அவருடைய பரிசுத்தவான்களின் கூடுகைக்காகவும், அவருடைய ஜனங்களை திரும்பக் கொண்டுவர கடைசி நாட்களில் ஸ்தாபிக்கப்பட்ட அவருடைய சபையைக் குறித்தும் கர்த்தரின் வார்த்தை.

3 மிசௌரி மாகாணத்தின் மேற்கு எல்லைகளில், கர்த்தரின் விரலால் நியமிக்கப்பட்ட, ஜோசப் ஸ்மித் இளையவர் மற்றும் கர்த்தர் மிகப் பிரியமாயிருந்த மற்றவர்களின் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தின் இடத்தில் தொடங்கி அந்த பட்டணம் கட்டப்படும்.

4 இந்த தலைமுறையில் உருவாக்கப்படவிருக்கிற ஆலயமான அந்த ஆலயத்தின் இடத்தில் தொடங்கி, பரிசுத்தவான்கள் கூடிச்சேர்வதால் புதிய எருசலேம் பட்டணம் கட்டப்படும் என்பது, மெய்யாகவே கர்த்தரின் வார்த்தையாகும்.

5 ஏனெனில், கர்த்தருக்கென்று ஒரு ஆலயம் கட்டப்படும்வரைக்கும், இந்த தலைமுறை கடந்துபோகாது. ஒரு மேகம் அதன்மேல் இறங்கும். ஆலயத்தை நிரப்பப் போகிற அந்த மேகம் கர்த்தரின் மகிமையாயிருக்கும்

6 தன்னுடைய மாமனான எத்திரோவின் கையால் மோசே பெற்ற பரிசுத்த ஆசாரியத்துவத்தின்படி மோசேயின் குமாரர்கள் பெற்றார்கள்;

7 காலேப்பின் கையால் எத்திரோ அதைப் பெற்றான்;

8 எலிகூவின் கையால் காலேப் அதைப்பெற்றான்;

9 எரிமியின் கையால் எலிகூ;

10 காத்தின் கையால் எரிமி;

11 இசாயாஸ் கையால் காத்;

12 தேவனின் கையால் இசாயாஸ் அதைப்பெற்றான்.

13 இசாயாஸும்கூட ஆபிரகாமின் நாட்களில் ஜீவித்து அவனால் ஆசீர்வதிக்கப்பட்டான்,

14 நோவா வரையிலும் அவனுடைய பிதாக்களின் வம்சத்தின் மூலமாக அதைப்பெற்ற மெல்கிசேதேக்கிடமிருந்து ஆபிரகாம் ஆசாரியத்துவத்தைப் பெற்றான்;

15 தங்களின் பிதாக்களின் வம்சத்தின் மூலமாக நோவாவிலிருந்து ஏனோக்கு வரை;

16 ஏனோக்கிடமிருந்து ஆபேல் வரை, முதல் மனுஷனான அவனுடைய தகப்பனான ஆதாமின் கைகளால் அவனுடைய சகோதரனின் சதியால் கொல்லப்பட்ட ஆபேல் தேவனின் கட்டளைகளால் ஆசாரியத்துவத்தைப் பெற்றான்.

17 நாட்களின் தொடக்கமும், வருஷங்களின் முடிவுமில்லாமல் சகல தலைமுறைகளுக்கும் தேவனின் சபையில் அந்த ஆசாரியத்துவம் தொடர்கிறது.

18 அவர்களுடைய சந்ததி முழுவதுக்கும் ஆரோனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கர்த்தர் ஒரு ஆசாரியத்துவத்தை உறுதி செய்தார். தேவனின் மிகப்பரிசுத்த முறைமையின்படியான ஆசாரியத்துவத்துடன் அந்த ஆசாரியத்துவம் தொடர்ந்து என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கிறது.

19 இந்த மகத்தான ஆசாரியத்துவம் சுவிசேஷத்தை நிர்வகித்து ராஜ்யத்தின் இரகசியங்களின் திறவுகோல்களையும், தேவனின் ஞானத்தின் திறவுகோலையும் கூட தரித்திருக்கிறது.

20 ஆகவே, அதிலுள்ள நியமங்களில் தேவபக்திக்குரிய வல்லமை வெளிப்படுத்தப்படுகிறது.

21 அதிலுள்ள நியமங்களும், ஆசாரியத்துவத்தின் அதிகாரமுமில்லாமல் மாம்சத்தில் மனுஷர்களுக்கு தேவதன்மையின் வல்லமை வெளிப்படுத்தபடமாட்டாது.

22 ஏனெனில் இது இல்லாமல் பிதாவாகிய தேவனின், முகத்தை எந்த மனுஷனும் கண்டு பிழைத்திருக்கமுடியாது.

23 இப்பொழுது இதை வனாந்தரத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே தெளிவாக போதித்தான், தேவனுடைய முகத்தை அவர்கள் காணும்படியாக அவனுடைய ஜனங்களை பரிசுத்தம் பண்ண கருத்தாய் வகைதேடினான்;

24 அவர்கள் தங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தியதால் அவரது பிரசன்னத்தை தாங்க முடியாது போயிற்று; ஆகவே அவர்களுக்கு விரோதமாக அவர் கோபமூட்டப்பட்டதால், கர்த்தர் தம்முடைய கோபத்தில் அவருடைய மகிமையின் பரிபூரணத்தின் இளைப்பாறுதலான அவருடைய இளைப்பாறுதலில் வனாந்தரத்தில் இருக்கும்போது அவர்கள் பிரவேசிக்ககூடாது என அவர் ஆணையிட்டார்.

25 ஆகவே அவர்களுக்கு மத்தியிலிருந்து மோசேயையும் பரிசுத்த ஆசாரியத்துவத்தையும் அவர் எடுத்துப்போட்டார்;

26 தூதர்களின் பணிவிடை மற்றும், ஆயத்த சுவிசேஷத்தின் திறவுகோலைத் தரித்திருக்கிற இளநிலை ஆசாரியத்துவம் தொடர்ந்தது;

27 அதை அவனுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு தேவன் உயர்த்திய யோவான் வரை, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மத்தியில் ஆரோனின் வீட்டாருடன் கர்த்தர் அவருடைய கோபத்தில் தொடரப்பண்ணின மனந்திரும்புதல் மற்றும் ஞானஸ்நானம், பாவங்களின் மீட்பு மற்றும் மாம்சப்பிரகாரமான கட்டளைகளின் நியாயப்பிரமாணமாகிய சுவிசேஷமே அந்த சுவிசேஷம்.

28 ஏனெனில் அவன் இன்னமும் பிள்ளைப் பருவத்திலிருந்த போது அவன் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டான், யூதர்களின் ராஜ்யத்தை வீழ்த்தவும், அவனுடைய ஜனங்களின் முகத்துக்கு முன்பாக கர்த்தருக்கு நேரான வழியை ஏற்படுத்தவும், சகல வல்லமையும் கையில் கொடுக்கப்பட்டவரான கர்த்தரின் வருகைக்காக அவர்களை ஆயத்தப்படுத்தவும், இந்த அதிகாரத்திற்கு அவனுக்கு வயது எட்டு நாளாயிருந்தபோது தேவதூதனால் நியமனம் செய்யப்பட்டான்.

29 மீண்டும், மூப்பர் மற்றும் ஆயரின் அலுவல்கள், பிரதான ஆசாரியத்துவத்திற்கு சொந்தமான அத்தியாவசியமான பிற்சேர்க்கைகள் ஆகும்.

30 மீண்டும், ஆசிரியர்கள் மற்றும் உதவிக்காரர்களின் அலுவல்கள், ஆரோன் மற்றும் அவனுடைய குமாரர்கள் மேலும் அருளப்பட்ட ஆசாரியத்துவமான இளநிலை ஆசாரியத்துவத்திற்கு சொந்தமான அத்தியாவசியமான பிற்சேர்க்கைகள்.

31 ஆகவே, மோசேயின் குமாரர்களைக் குறித்து நான் சொன்னதைப்போல, நான் நியமித்ததைப்போல ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்த தலைமுறையில் கர்த்தருக்கென்று கட்டப்படவிருக்கின்ற ஆலயமான கர்த்தருடைய வீட்டில் மோசேயின் குமாரர்களும், ஆரோனின் குமாரர்களும் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க காணிக்கையையும் பலியையும் செலுத்துவார்கள்,

32 சீயோன் மலையின் மேல் கர்த்தரின் ஆலயத்தில் மோசேயின் குமாரர்களும் ஆரோனின் குமாரர்களும், கர்த்தரின் மகிமையால் நிரப்பப்படுவார்கள். அவர்களின் குமாரர்களே நீங்கள். மற்றும் நான் அழைத்து என்னுடைய சபையைக் கட்ட அனுப்பிய அநேகரும்கூட.

33 நான் பேசிய இந்த இரண்டு ஆசாரியத்துவங்களைப் பெறுகிறதிலும், அவர்களுடைய அழைப்புகளை சிறப்பாக்குகிறதிலும் உண்மையுள்ளவர்களாயிருப்பவர்கள் தங்களுடைய சரீரங்களைப் புதுப்பிக்க ஆவியால் பரிசுத்தப்படுத்தப்படுகிறார்கள்.

34 அவர்கள் மோசே, மற்றும் ஆரோனின், குமாரர்களாகவும், ஆபிரகாமின் சந்ததியாகவும், சபை மற்றும் ராஜ்யமாகவும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகவும் ஆகிறார்கள்.

35 கர்த்தர் சொல்லுகிறார், இந்த ஆசாரியத்துவத்தை ஏற்றுக்கொள்ளுகிற யாவரும் என்னை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்;

36 ஏனெனில் என்னுடைய ஊழியக்காரர்களை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்;

37 என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னுடைய பிதாவை ஏற்றுக் கொள்ளுகிறான்;

38 என்னுடைய பிதாவை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னுடைய பிதாவின் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளுகிறான்; ஆகவே என்னுடைய பிதாவுக்குள்ள சகலமும் அவனுக்குக் கொடுக்கப்படும்.

39 இது ஆசாரியத்துவத்திற்குச் சொந்தமான வாக்குறுதி மற்றும் உடன்படிக்கையின்படியுமாயிருக்கிறது.

40 ஆகவே, ஆசாரியத்துவத்தைப் பெறுகிற யாவரும், அவனால் மீறவும் மாற்றவும் முடியாத, என்னுடைய பிதாவின் வாக்குறுதியையும் உடன்படிக்கையையும் பெறுகிறார்கள்.

41 ஆனால் அவன் அதைப் பெற்ற பின்பு, இந்த உடன்படிக்கையை மீறுகிறவனும், அதிலிருந்து முற்றிலுமாக திரும்புகிறவனும், இம்மையிலும் மறுமையிலும் பாவங்களிலிருந்து மன்னிப்படையமாட்டான்.

42 இந்த நாளில் இங்கிருப்பவர்களான உங்கள்மேல் என்னுடைய குரலில் பரலோகங்களிலிருந்து இந்த நாளில் நான் உறுதியளிக்கிற, நீங்கள் பெற்றுக்கொண்ட இந்த ஆசாரியத்துவத்திற்குள் வராதவர்கள் அனைவருக்கும் ஐயோ; வானத்து சேனைகளுக்கும் என்னுடைய தூதர்களுக்கும் உங்கள் மீது நான் பொறுப்பளித்திருக்கிறேன்.

43 உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கவும், நித்திய ஜீவனைக் குறித்த வார்த்தைகளுக்கு கருத்தாய் செவிகொடுக்கவும், இப்போது உங்களுக்கு நான் ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்.

44 ஏனெனில் தேவனின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் நீங்கள் பிழைப்பீர்கள்.

45 ஏனெனில் கர்த்தரின் வார்த்தை சத்தியமாயிருக்கிறது, சத்தியமாயிருக்கிற எதுவும் ஒளியாயிருக்கிறது, ஒளியாயிருக்கிற எதுவும் ஆவியாய், இயேசு கிறிஸ்துவின் ஆவியாயுமிருக்கிறது.

46 உலகத்திற்குள் வருகிற ஒவ்வொரு மனுஷனுக்கும் ஆவி ஒளியைக் கொடுக்கிறது, உலக ஜீவியம் முழுவதிலும் ஆவியின் சத்தத்திற்கு செவிகொடுக்கிற ஒவ்வொரு மனுஷனையும் ஆவி தெளிவுபடுத்துகிறது.

47 ஆவியின் சத்தத்தைக் கேட்கிற ஒவ்வொருவனும் பிதாவாகிய தேவனிடத்தில் வருகிறான்.

48 உங்கள் நிமித்தம், உங்கள் நிமித்தம் மட்டுமல்ல, முழுஉலகத்தின் நிமித்தம் உங்கள்மேல் உறுதி செய்யப்பட்ட, அவர் புதுப்பித்து உங்கள்மேல் உறுதி செய்த, உடன்படிக்கையை பிதா அவனுக்குப் போதிக்கிறார்.

49 முழு உலகமும் பாவத்தில் விழுந்து கிடக்கிறது, அந்தகாரத்தின் கீழும் பாவத்தின் அடிமைத்தனத்திலும் வேதனைப்படுகிறது.

50 அவர்கள் பாவத்தின் அடிமைத்தனத்திலிருக்கிறார்கள் என்பதை இதன்மூலமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள், ஏனெனில் அவர்கள் என்னிடத்தில் வரவில்லை.

51 ஏனெனில் என்னிடத்தில் வராதவர்கள் பாவத்தின் அடிமைத்தனத்தின் கீழிருப்பார்கள்,

52 என்னுடைய சத்தத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்னுடைய சத்தத்தை அறியாதிருக்கிறார்கள், அவர்கள் என்னுடையவர்களல்ல.

53 இப்போதும் கூட துன்மார்க்கரிலிருந்து நீதிமான்களையும், முழு உலகமும் பாவம் மற்றும் அந்தகாரத்தின் கீழ் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதையும், இதனால் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

54 அவிசுவாசத்தினாலும், நீங்கள் பெற்றுக்கொண்ட காரியங்களை நீங்கள் எளிதாக எடுத்துக்கொண்டதாலும், கடந்த காலங்களில் உங்கள் மனங்கள் அந்தகாரப்பட்டன,

55 அந்த மாயையும் அவிசுவாசமும் முழுசபையையும் ஆக்கினைக்குள் கொண்டுவந்தது.

56 இந்த ஆக்கினை சீயோனின் எல்லா பிள்ளைகள் மீதும் இறங்கியது.

57 அவர்கள் மனந்திரும்பி, புதிய உடன்படிக்கையையும், மார்மன் புஸ்தகத்தையும், நான் அவர்களுக்குக் கொடுத்த முன்னாள் கட்டளைகளையும், சொல்வதற்கு மட்டுமல்ல, நான் எழுதியவற்றின்படி செய்யவும், நினைக்கும்வரை அவர்கள் இந்த ஆக்கினையின் கீழிருப்பார்கள்,

58 அவர்களின் பிதாவின் ராஜ்யத்திற்காக பலனைக் கொண்டுவரும்படிக்கே; இல்லையெனில் சீயோனின் பிள்ளைகள் மேல் ஊற்றப்பட ஒரு வாதையும் நியாயத்தீர்ப்பும் இருக்கிறது.

59 ஏனெனில் ராஜ்யத்தின் பிள்ளைகள் என்னுடைய பரிசுத்த தேசத்தை பரிசுத்த குலைச்சலாக்கமாட்டார்களா? மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அப்படியல்ல.

60 மெய்யாகவே, மெய்யாகவே, நான், என்னுடைய சத்தமாயிருக்கிற என்னுடைய வார்த்தைகளை இப்போது கேட்கிற, உங்களுக்குச் சொல்லுகிறேன், இந்தக் காரியங்களை நீங்கள் பெறுகிற அளவில் நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;

61 ஏனெனில், உங்களுக்கு தெரிவிக்கப்பட்ட அந்த காரியங்களை முழுஉலகத்திற்கும் சாட்சி கொடுப்பதிலும், ஜெபத்தின் ஆவியிலும் பவித்திரத்திலும், உங்கள் மனங்களில் உறுதியுள்ளவர்களாயிருக்க, இந்த கட்டளையுடன் உங்கள் பாவங்களிலிருந்து நான் உங்களை மன்னிப்பேன்.

62 ஆகவே, உலகம் முழுவதற்கும் நீங்கள் செல்லுங்கள், நீங்கள் போகமுடியாத இடத்திற்கெல்லாம் உலகம் முழுவதற்கும் சகல சிருஷ்டிகளுக்கும் உங்களிடமிருந்து சாட்சி போகும்படிக்கு நீங்கள் அனுப்புங்கள்.

63 நான் என்னுடைய அப்போஸ்தலர்களுக்கு சொன்னதைப்போல நான் உங்களுக்கும் சொல்லுகிறேன், ஏனெனில் நீங்கள் என்னுடைய அப்போஸ்தலராயும், தேவனின் பிரதான ஆசாரியருமாயிருக்கிறீர்கள்; என்னுடைய பிதா எனக்குக் கொடுத்தவர்கள் நீங்களே; நீங்கள் என்னுடைய சிநேகிதர்கள்;

64 ஆகவே, என்னுடைய அப்போஸ்தலர்களுக்கு சொன்னதைப்போல மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுடைய வார்த்தைகளை நம்புகிற, பாவங்களின் மீட்பிற்காக தண்ணீரில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட, ஒவ்வொரு ஆத்துமாவும், பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள்.

65 நம்புகிற அவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்,

66 என்னுடைய நாமத்தினாலே அவர்கள் அநேக அற்புத கிரியைகளைச் செய்வார்கள்;

67 என்னுடைய நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள்;

68 என்னுடைய நாமத்தினாலே அவர்கள் பிணியாளிகளைச் சொஸ்தமாக்குவார்கள்;

69 என்னுடைய நாமத்தினாலே அவர்கள் குருடர்களின் கண்களைத் திறப்பார்கள், மற்றும் செவிடர்களின் காதுகளைத் திறப்பார்கள்;

70 செவிடரின் நாவு பேசும்;

71 எந்த மனுஷனும் அவர்களுக்கு விஷத்தைக் கொடுத்தாலும் அது அவர்களுக்கு கேடு விளைவிக்காது;

72 அவர்களுக்கு கேடு விளைவிக்க ஒரு சர்ப்பத்தின் விஷத்திற்கு சக்தியில்லை.

73 ஆனால் இந்தக் காரியங்களைக் குறித்து அவர்கள் பெருமை பாராட்டாதிருக்கவும், உலகத்திற்கு முன்பாக அவைகளைப்பற்றி பேசாதிருக்கவும் அவர்களுக்கு ஒரு கட்டளையை நான் கொடுக்கிறேன்; ஏனெனில் உங்கள் ஆதாயத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும் இந்த காரியங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

74 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் வார்த்தைகளை நம்பாத, பரிசுத்த ஆவியை அவர்கள் பெறும்படியாக தங்களின் பாவங்களின் மீட்பிற்காக, என்னுடைய நாமத்தில் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதவர்கள் ஆக்கினைக்குள்ளாவார்கள், என்னுடைய பிதாவும் நானுமிருக்கிற என்னுடைய பிதாவின் ராஜ்யத்திற்குள் வரமாட்டார்கள்.

75 இந்த வெளிப்படுத்தல் உங்களுக்காகவே, மற்றும் இக்கட்டளை இந்த மணிநேரத்திலிருந்து உலகம் முழுவதற்கும் அமுலிலிருக்கும், அதைப் பெறாத யாவருக்காகவும் சுவிசேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

76 ஆனால், ராஜ்யம் கொடுக்கப்பட்டிருக்கிற யாவருக்கும் மெய்யாகவே நான் சொல்லுகிறேன், அவர்களின் முந்தின தீய கிரியைகளுக்காக அவர்கள் மனந்திரும்பும்படியாகவும், அது உங்களிடமிருந்து அவர்களுக்குப் பிரசங்கிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் தங்களின் அவிசுவாசத்தின் பொல்லாத இருதயங்களுக்காகவும், நான் உங்களை அனுப்பிய நேரத்தில் உங்களுக்கெதிராக செய்த கலகத்திற்காக சீயோனிலிலுள்ள உங்கள் சகோதரர்களும் கடிந்துகொள்ளப்பட வேண்டும்.

77 மீண்டும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய சிநேகிதரே, ஏனெனில் இப்போதிலிருந்து நான் உங்களை சிநேகிதர்கள் என்றழைப்பேன், என்னுடைய வல்லமையினால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க பயணப்பட்டு நான் அவர்களோடிருந்த நாட்களில் நீங்கள் என்னுடைய சிநேகிதரானதால், உங்களுக்கு இந்த கட்டளையைக் கொடுப்பது அவசியமாயிருக்கிறது;

78 ஏனெனில் பணத்தையோ அல்லது பையையோ, அல்லது இரண்டு அங்கிகளையோ அவர்கள் வைத்திருக்க நான் விடவில்லை.

79 இதோ, உலகத்தை சோதிக்க நான் உங்களை அனுப்பினேன், வேலைக்காரன் தன் கூலிக்கு பாத்திரனாயிருக்கிறான்.

80 ராஜ்யத்தின் இந்த சுவிசேஷத்தைப் போய் பிரசங்கிக்கிறவனும் சகல காரியங்களிலும் தொடர்ந்து உண்மையாயிருக்கும் எந்த மனுஷனும், மனதிலோ சரீரத்திலோ, கைகாலிலோ, மூட்டுகளிலோ சோர்ந்து போகாதிருப்பானாக, அந்தகாரப்படாதிருப்பானாக, அவன் தலையிலே இருக்கிற ஒரு மயிரும் கவனிக்கப்படாமல் தரையிலே விழாது. அவர்கள் பட்டினியாயிருக்கமாட்டார்கள், தாகமாயுமிருக்கமாட்டார்கள்.

81 ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என நீங்கள் நாளைக்காக கவலைப்படாதிருங்கள்.

82 ஏனெனில், காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள், அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, உலகத்தின் ராஜ்யங்கள் தங்களின் சர்வ மகிமையிலும் இவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை.

83 ஏனெனில் இந்தக் காரியங்கள் அனைத்தும் உங்களுக்குத் தேவையென்பது, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவுக்குத் தெரியும்.

84 ஆகவே, நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்பட்டுக் கொள்ளட்டும்.

85 நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்படாமலுமிருங்கள்; ஆனால் ஜீவ வார்த்தைகளை உங்கள் மனங்களில் தொடர்ந்து பொக்கிஷப்படுத்துங்கள், ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிற அந்த பங்கு அந்த மணிநேரமே உங்களுக்குக் கொடுக்கப்படும்.

86 ஆகவே, ராஜ்யத்தின் இந்த சுவிசேஷத்தை அறிவிக்கப்போகிற உங்களுக்குள் எவனும் இந்த மணிநேரத்திலிருந்து பணப்பையையோ அல்லது பையையோ எடுத்துப் போகாதிருப்பானாக. ஏனெனில் ஊழியத்திற்காக சபையில் தேவனால் அழைக்கப்பட்ட உண்மையுள்ள யாவருக்கும் இந்த கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது.

87 இதோ, தங்களுடைய அநீதியின் செய்கைகள் அனைத்திற்காகவும் உலகத்தை கடிந்துகொள்ளவும், வரப்போகிற ஒரு நியாயத்தீர்ப்பை அவர்களுக்கு போதிக்கவும் நான் உங்களை அனுப்புகிறேன்.

88 உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் எவர்களோ அங்கே நானிருப்பேன், ஏனெனில் நான் உங்களுக்கு முன்போவேன். நான் உங்களுடைய வலதுபாரிசத்திலும் இடது பாரிசத்திலுமிருப்பேன், என்னுடைய ஆவி உங்களுடைய இருதயங்களிலே இருக்கும், உங்களைத் தாங்கிக்கொள்ள என்னுடைய தூதர்கள் உங்களைச் சுற்றிலுமிருப்பார்கள்.

89 உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள்; அவர்களே உங்களுக்கு ஆகாரமளிப்பார்கள், உங்களுக்கு வஸ்திரம் கொடுப்பார்கள், உங்களுக்கு பணம் கொடுப்பார்கள்.

90 உங்களுக்கு ஆகாரமளிப்பவன், அல்லது உங்களுக்கு வஸ்திரம் கொடுப்பவன், அல்லது உங்களுக்கு பணம் கொடுப்பவன் தன் பலனை ஒருபோதும் இழந்து போகமாட்டான்.

91 இந்தக் காரியங்களை செய்யாதவன் என்னுடைய சீஷனாயிருக்கமாட்டான்; இதிலிருந்து என்னுடைய சீஷர்களை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

92 உங்களை ஏற்றுக்கொள்ளாதவனிடமிருந்து நீங்கள் தனியே போய், உஷ்ணத்திலோ அல்லது குளிரிலோ தண்ணீரில், சுத்தமான தண்ணீரில் உங்கள் பாதங்களைக் கழுவி, அதைப்பற்றி பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடம் சாட்சி கொடுங்கள். அந்த மனுஷனிடத்திற்கு திரும்ப வராதிருங்கள்.

93 நீங்கள் பிரவேசிக்கிற எந்த ஊரிலும் அல்லது பட்டணத்திலும் இதைப்போன்று செய்யுங்கள்.

94 ஆயினும், கருத்தாய் தேடுங்கள், தவறவிடாதிருங்கள்; உங்களை, அல்லது உங்கள் வார்த்தைகளை, அல்லது என்னைக்குறித்த உங்கள் சாட்சியை தள்ளிவிடுகிற அந்த வீடு அல்லது அந்த ஊர் அல்லது பட்டணத்திற்கு ஐயோ.

95 உங்களை, அல்லது உங்கள் வார்த்தைகளை, அல்லது என்னைக்குறித்த உங்கள் சாட்சியை தள்ளிவிடுகிற அந்த வீடு அல்லது அந்த ஊர் அல்லது பட்டணத்திற்கு ஐயோ என மீண்டும் சொல்லுகிறேன்;

96 ஏனெனில், அவர்களின் அக்கிரமத்திற்காக அவர்களை சவுக்கால் அடிக்க சர்வ வல்லவரான நான் தேசங்களின்மேல் என் கைகளைப்போட்டேன்.

97 கொள்ளை நோய்கள் போகும், நீதியோடே சீக்கிரமாய் நிறைவேற்றுகிற என் கிரியையை நான் செய்து முடிக்குமட்டும் பூமியிலிருந்து அவர்கள் எடுத்துக் கொள்ளப்படமாட்டார்கள்,

98 சிறியவன் முதல் பெரியவன் வரைக்கும் மீதியாயிருக்கிற யாவரும் என்னை அறியும் வரைக்கும், கர்த்தரின் ஞானத்தினால் நிரப்பப்பட்டு, கண்ணுக்குக் கண் நோக்கி, தங்கள் குரலை உயர்த்தி ஒரே குரலில் இந்த புதிய பாடலைப் பாடுவார்கள்:

99 சீயோனை கர்த்தர் மீண்டும் கொண்டுவந்தார்;அவர்களின் பிதாக்களின் விசுவாசத்தாலும்உடன்படிக்கையாலும் கிடைக்கப்பட்ட,கிருபையினால் தெரிந்துகொள்ளப்பட்டதம்முடைய ஜனங்களான இஸ்ரவேலை கர்த்தர் மீட்டார்.

100 கர்த்தர் அவருடைய ஜனங்களை மீட்டார்சாத்தான் கட்டப்பட்டான், இனியும் நேரமில்லை.சகல காரியங்களையும் கர்த்தர் ஒன்றாக கூட்டிச் சேர்த்தார்.சீயோனை கர்த்தர் மேலிருந்து கீழே கொண்டு வந்தார்.சீயோனை கர்த்தர் கீழேயிருந்து மேலே கொண்டு வந்தார்.

101 பூமி வேதனையடைந்து, தன்னுடைய பலத்தைப் பெற்றது.அவளுடைய நெஞ்சில் சத்தியம் நிலைப்பட்டதுவானங்கள் அவள் மேல் புன்னகைத்தது.அவளுடைய தேவனின் மகிமையுடன் அவள் வஸ்திரந்தரித்தாள்.ஏனெனில் அவர் தம்முடைய ஜனங்களுக்கு மத்தியிலே நின்று கொண்டிருக்கிறார்.

102 மகிமையும், கனமும், வல்லமையும், பராக்கிரமும்,நம்முடைய தேவனுக்கே கொடுக்கப்படுவதாக,ஏனெனில், அவர் இரக்கமும், நீதியும், கிருபையும் சத்தியமும் சமாதானமும் நிறைந்தவராயிருக்கிறார்,என்றென்றும் எப்போதும், ஆமென்.

103 மீண்டும், மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னுடைய நித்திய சுவிசேஷத்தை அறிவிக்கப் போகிற ஒவ்வொரு மனுஷனும் அவர்களுக்கு குடும்பங்களிருக்கிற அளவில், வெகுமதியாய் பணத்தை பெறும்போது அவர்களுக்கு அனுப்பவேண்டும் அல்லது கர்த்தர் அவர்களுக்கு வழிகாட்டுவதைப்போல அவர்களின் பலனுக்காக அதைப் பயன்படுத்தவேண்டும், ஏனெனில் அது எனக்கு நன்மையாகத் தோன்றுவதால் அது அவசியமாயிருக்கிறது.

104 பணத்தைப் பெறுகிற குடும்பங்களில்லாதவர்கள், வெளிப்படுத்தல்களை வெளிக்கொண்டுவருவதற்காகவும், அவற்றை அச்சடிப்பதற்காகவும் சீயோனை ஸ்தாபிப்பதற்காகவும், அதை சீயோனிலிருக்கிற ஆயருக்கு, அல்லது ஒஹாயோவிலுள்ள ஆயருக்கு அனுப்புவார்களாக.

105 எந்த மனுஷனாவது உங்களில் யாருக்காவது ஒரு அங்கியையோ மேலாடையையோ கொடுத்தால், பழையதை எடுத்து அதை தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு களிகூர்தலோடு உங்கள் வழியில் போங்கள்.

106 உங்களுக்கு மத்தியில் எந்த மனுஷனாவது ஆவியில் பலமுள்ளவனாயிருந்தால், பலவீனமானவனை சகல தாழ்மையுடனும் அவன் பக்திவிருத்தியடையவும், அவனும்கூட பலமுள்ளவனாக ஆகவும், அவனோடு அழைத்துக் கொண்டுபோவானாக.

107 ஆகவே, இளநிலை ஆசாரியத்துவத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர்களை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள், சந்திப்பை ஏற்பாடு செய்யவும், வழியை ஆயத்தம் செய்யவும், உங்களால் செய்யமுடியாத சந்திப்புகளைச் செய்ய உங்களுக்கு முன்பாக அவர்களை அனுப்புங்கள்.

108 இதோ, பூர்வநாட்களில் என்னுடைய அப்போஸ்தலர்கள் இந்த விதத்திலேயே என்னுடைய சபையை எனக்காகக் கட்டினார்கள்.

109 ஆகவே, ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய அலுவலிலிருந்து, அவனுடைய அழைப்பில் பிரயாசப்படுவானாக; தலையானது பாதங்களை நோக்கி பாதங்கள் வேண்டியதில்லையென சொல்லாதிருப்பதாக; ஏனெனில் பாதமில்லாமல் சரீரம் எவ்வாறு நிற்கமுடியும்?

110 யாவரும் ஒன்றாக பக்திவிருத்தியடையவும், அமைப்பு பரிபூரணமாக இருக்கவும் ஒவ்வொரு அங்கமும் சரீரத்துக்கு அவசியமானவைகள்.

111 இதோ, பிரதான ஆசாரியர்களும், மூப்பர்களும், இளநிலை ஆசாரியர்களும் பயணம் செய்யவேண்டும்; ஆனால் சபைக்கு நிரந்தர ஊழியக்காரர்களாக சபையை கண்காணிக்க உதவிக்காரர்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்படவேண்டும்.

112 ஐஸ்வர்யவான்களையும் அகங்காரிகளையும் தாழ்த்தச் செய்து, தரித்திரர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய அவர்களைத் தேடி, சுற்றிலும் எல்லா சபைகளின் மத்தியிலும் ஆயர், நீவல் கே. விட்னி பயணம் செய்யவேண்டும்.

113 பொறுப்பெடுக்கவும் அவன் வழிகாட்டுகிறபடி அவனுடைய உலகப்பிரகாரமான விவகாரங்களைச் செய்யவும் ஒரு பிரதிநிதியை அவன் பணி அமர்த்தவேண்டும்.

114 ஆயினும், நியூயார்க் பட்டணத்திற்கும், அல்பேனி பட்டணத்திற்கும், போஸ்டன் பட்டணத்திற்கும் ஆயர் போய் சுவிசேஷத்தைச் சொல்லி, உரத்த குரலில், இந்தக் காரியங்களை அவர்கள் புறக்கணித்தால் அவர்களுக்காக காத்திருக்கும் பாழ்க்கடிப்பையும் முழுதும் ஒழிக்கப்படுவதையும் அந்த பட்டணங்களிலுள்ள ஜனங்களுக்கு எச்சரிப்பானாக.

115 ஏனெனில், இந்தக் காரியங்களை அவர்கள் புறக்கணித்தால் அவர்களுடைய நியாயத்தீர்ப்பின் மணிநேரம் சமீபித்திருக்கிறது, அவர்களுடைய வீடு பாழாய்ப் போனதாக விடப்படும்.

116 அவன் என்னில் நம்பிக்கை வைப்பானாக, அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்; அவன் தலையிலே இருக்கிற ஒரு மயிரும் கவனிப்பாரற்று தரையிலே வீழாது.

117 மீதியான என்னுடைய ஊழியக்காரர்களே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுடைய ஏராளமான அழைப்புகளில் உங்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கிறார்போல், அவர்களுடைய அநீதியான, அவபக்தியான கிரியைகளுக்காக நீதியில் உலகத்தைக் கடிந்துகொண்டும், கடைசி நாட்களில் பாழாக்கும் அருவருப்பை தெளிவாகவும், புரிந்துகொள்ளும்படியாகவும் அமைத்துச்சொல்லி, பெரிதும் குறிப்பிடத்தக்கதுமான பட்டணங்களுக்கும் ஊர்களுக்கும் போங்கள்.

118 ஏனெனில், நான் அவர்களின் ராஜ்யங்களை பிளப்பேன்; பூமியை மட்டுமே நான் அசைப்பதில்லை, நட்சத்திரங்கள் உள்ள வானங்களும் நடுங்கும் என கர்த்தராகிய சர்வ வல்லவர் உங்களுக்குச் சொல்லுகிறார்.

119 ஏனெனில், கர்த்தராகிய நான் பரலோகத்தின் வல்லமைகளைப் பிரயோகிக்க என்னுடைய கையை நீட்டினேன்; இப்போது அதை நீ காணமுடியாது, இருந்தும் கொஞ்ச காலத்தில் நீ அதைக் காண்பாய், நான் இருக்கிறேன் என்றும், நான் வந்து என்னுடைய ஜனங்களை ஆளுவேன் என்றும் அறிந்துகொள்வாய்.

120 நானே அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். ஆமென்.