வேதங்கள்
3 நேபி 13


அதிகாரம் 13

இயேசு நேபியர்களுக்கு கர்த்தருடைய ஜெபத்தைப் போதித்தல் – அவர்கள் பரலோகத்தில் பொக்கிஷங்கள் சேமித்து வைக்கவேண்டும் – தங்களுடைய ஊழியங்களிலே உலகப்பிரகாரமான காரியங்களைக் குறித்து எண்ணவேண்டாமென்று பன்னிரு சீஷர்களுக்கு கட்டளையிடப்படுதல். மத்தேயு 6ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.பி. 34.

1 எளியோருக்கு நீங்கள் தர்மம் செய்யவேண்டுமென்று, நான் வாஞ்சிக்கிறேன் என்று, மெய்யாகவே, மெய்யாகவே சொல்லுகிறேன்; ஆனால் மனுஷர் காணவேண்டுமென்பதற்காக அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அப்படிச் செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

2 ஆதலால் நீ தர்மம் செய்யும்போது, மனுஷருடைய மகிமையைப் பெறும்படியாக, மாயக்காரர் ஜெப ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே. அவர்கள் தங்கள் பலனை அடைந்தார்கள், என்று மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3 நீயோ தர்மம் செய்யும்போது, உன் வலது கரம் செய்கிறதை, உன் இடது கரம் அறியாதிருக்கக்கடவது.

4 இப்படிச் செய்வதினால் உன் தர்மமும் அந்தரங்கமாய் இருக்கும், அந்தரங்கத்தில் காண்கிற உன் பிதாவும், உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்.

5 நீ ஜெபம் செய்யும்போது மாயக்காரரைப்போல் செய்யவேண்டாம். ஏனெனில் மனுஷரால் காணப்படும்படிக்கு அவர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபிக்க விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் பலனைப் பெற்றுக் கொண்டார்கள், என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6 நீயோ ஜெபிக்கும்போது, உனது அறைவீட்டினுள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டிய பின்பு, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவினிடத்தில் ஜெபம் பண்ணு; அந்தரங்கத்தில் காண்கிற உன் பிதாவும் வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

7 நீங்களோ ஜெபிக்கும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள், அவர்கள் தாங்கள் அதிகமாய்ப் பேசினால் தாங்கள் கேட்கப்படுவோம், என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

8 ஆதலால் நீங்கள் அவர்களைப் போல இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் உங்களுடைய பிதாவினிடத்தில் கேட்பதற்கு முன்பதாகவே, உங்களுக்குத் தேவையானவைகளை அவர் அறிந்திருக்கிறார்.

9 ஆதலால் இவ்விதமாய் நீங்கள் ஜெபியுங்கள்: பரமண்டலத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.

10 உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படுவதாக.

11 நாங்கள் எங்களுடைய கடனாளிகளை மன்னிப்பதைப் போல, எங்களுடைய கடன்களை எங்களுக்கு மன்னியும்.

12 சோதனைக்குள் எங்களை உட்படுத்தாமல் தீமையிலிருந்து இரட்சியும்.

13 ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென்.

14 நீங்கள் மனுஷருடைய மீறுதல்களை மன்னித்தால், உங்களுடைய பரலோக பிதாவும் உங்களை மன்னிப்பார்.

15 நீங்கள் மனுஷருடைய மீறுதல்களை மன்னியாவிட்டால், உங்களுடைய பிதாவும் உங்களின் மீறுதல்களை மன்னியார்.

16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப் போல முகவாடலாய் இராதேயுங்கள். ஏனெனில் அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்படியாக, தங்கள் முகங்களை வாடலாய் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பலனை அடைந்தார்களென்று மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

17 ஆனால், நீயோ உபவாசிக்கும்போது, உன் தலைக்கு எண்ணைய் பூசி, உனது முகத்தைக் கழுவு.

18 நீ உபவாசிக்கும்போது மனுஷருக்கு அல்ல, அந்தரங்கமாய் இருக்கிற உனது பிதாவுக்கே நீ காண்பிக்கவேண்டும். அந்தரங்கத்தில் காண்கிற உனது பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் கெடுக்கும். திருடர்கள் கன்னமிட்டுத் திருடுவார்கள்.

20 ஆனால் பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். அங்கே பூச்சியும், துருவும் கெடுப்பதுமில்லை. அங்கே திருடர்கள் கன்னமிட்டுத் திருடுவதுமில்லை.

21 உங்கள் பொக்கிஷம் எங்கே உள்ளதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

22 சரீரத்தின் ஒளி கண். ஆதலால் உன் கண் ஒரே நோக்கு உடையதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் ஒளி நிறைந்ததாயிருக்கும்.

23 உன் கண் பொல்லாததாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் காரிருள் நிறைந்ததாயிருக்கும். ஆதலால் உனக்குள் இருக்கும் ஒளி காரிருளாய் இருந்தால், அந்தக் காரிருள் எவ்வளவு பெரிதாயிருக்கும்!

24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் முடியாது; ஏனெனில் அவன் ஒருவனைப் பகைத்து, மற்றொருவனை சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றொருவனை அசட்டை பண்ணுவான். உங்களால் தேவனுக்கும், உலகப்பொருளுக்கும் ஊழியஞ் செய்யமுடியாதே.

25 இப்பொழுதும், அந்தப்படியே, இயேசு இவ்வார்த்தைகளைப் பேசினவுடனே, அவர் தாம் தெரிந்துகொண்ட பன்னிருவரைப் பார்த்து அவர்களிடத்தில் சொன்னதாவது: நான் பேசின வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் இதோ, இந்த ஜனத்திற்கு ஊழியஞ் செய்யும்படிக்கு நான் தெரிந்துகொண்டவர்கள் நீங்களே. ஆதலால் எதை உண்போம் அல்லது எதைக் குடிப்போம் என்று உங்கள் உயிருக்காவும், எதை உடுப்போமென்று உங்கள் உடலுக்காவும் கவலைப்படாதிருங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் முக்கியமல்லவா?

26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை. களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; இருப்பினும் உங்களுடைய பரலோக பிதா அவைகளைப் போஷிக்கிறார். அவைகளைக் காட்டிலும் நீங்கள் விசேஷித்தவர்களல்லவா?

27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் வளர்த்தியோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

28 உடைக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? வெளியின் புஷ்பங்கள் எப்படி வளர்கிறதென்று பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்க்கிறதுமில்லை.

29 ஆயினும் சாலொமோன் தன் சர்வ மகிமையிலும் இவைகளில் ஒன்றைப்போல உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

30 ஆதலால் இன்றைக்கிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் வெளியின் புல்லுக்கு தேவன் இவ்விதமாய் உடுத்தினால், அற்ப விசுவாசிகளாய் நீங்கள் இல்லாதிருந்தால் அப்படியே அவர் உங்களுக்கும் உடுத்துவார்.

31 ஆதலால் எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போமென்று, கவலைப்படவேண்டாம்.

32 ஏனெனில் இவைகள் யாவும் உங்களுக்குத் தேவையாயிருக்கிறது, என்று உங்களுடைய பரலோக பிதா அறிவார்.

33 ஆனால் முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

34 ஆதலால் நாளையைக் குறித்து கவலைப்படாதிருங்கள். நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்பட்டுக்கொள்ளும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.