வேதங்கள்
3 நேபி 9


அதிகாரம் 9

அவர்களுடைய துன்மார்க்கத்தினிமித்தம் அநேக ஜனங்களும், பட்டணங்களும் அழிந்துபோவதைக் குறித்து காரிருளிலிருந்து, கிறிஸ்துவினுடைய சத்தம் அறிவித்தல் – அவர் அவருடைய தெய்வீகத் தன்மையையும் பிரகடனம் செய்து, மோசேயின் நியாயப்பிரமாணம் நிறைவேறியதென்றும் அறிவித்து மனுஷர் அவரிடத்தில் வந்து இரட்சிக்கப்படும்படியாக அழைத்தல். ஏறக்குறைய கி.பி. 34.

1 அந்தப்படியே, இந்த பூமியின் எல்லா குடிகளுக்குள்ளும், இந்த தேசத்தின் மேலெங்கும், ஒரு சத்தம் கேட்கப்பட்டது, அது கூக்குரலிட்டதாவது,

2 இந்த ஜனங்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ; இந்த பூமியெங்கும் உள்ள குடிகள் மனந்திரும்பாவிடில் அவர்களுக்கு ஐயோ; ஏனெனில் என் ஜனத்தின் அழகான குமாரர்களும் குமாரத்திகளும் மடிந்து போனதினிமித்தம், பிசாசு நகைக்கிறான், அவனுடைய தூதர்கள் களிகூருகிறார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தினிமித்தமும், அருவருப்புகளினிமித்தமும் அவர்கள் வீழ்ந்து போனார்கள்.

3 இதோ, அந்த மகா பட்டணமாகிய சாரகெம்லாவையும், அதனுடைய குடிகளையும் நான் அக்கினியாலே சுட்டெரித்தேன்.

4 இதோ, அந்தப் பெரிய பட்டணமாகிய மரோனியை, சமுத்திரத்தின் ஆழங்களில் மூழ்கவும், அதன் குடிகளை அமிழவும் பண்ணினேன்.

5 இதோ, அவர்களுக்கு விரோதமாய், என்னிடத்தில் தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தம் இனி ஒருபோதும் வராதபடிக்கு, என் முகத்திற்கு முன்பாக அவர்களுடைய அக்கிரமங்களையும் அருவருப்புகளையும் மறைப்பதற்காக, அந்த மகா பட்டணமாகிய மரோனிகாவையும் அதன் குடிகளையும் மண்ணால் மூடினேன்.

6 இதோ கில்காலின் பட்டணத்தை மூழ்கப்பண்ணி, அதனுடைய குடிகள் பூமியின் ஆழங்களில் புதைக்கப்படவும் பண்ணினேன்.

7 ஆம், ஓனிகா பட்டணத்தின் மீதும் அதின் குடிகள் மீதும், மோகூம் பட்டணத்தின் மீதும் அதின் குடிகள் மீதும், எருசலேம் பட்டணத்தின் மீதும் அதின் குடிகள் மீதும், தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தம் இனி ஒருபோதும் என்னிடத்தில் அவர்களுக்கு விரோதமாக வராமல் இருக்கும்படியாக, அதினிமித்தம் அவர்களுடைய துன்மார்க்கத்தையும் அருவருப்புகளையும் என் முகத்தின் முன்பிருந்து மறைக்கும் பொருட்டு, அவைகளின் இடத்திலே தண்ணீர்களை வரப்பண்ணினேன்.

8 இதோ, காதியாந்தி பட்டணத்தையும், காதியோம்நா பட்டணத்தையும், யாக்கோபு பட்டணத்தையும், கிம்கிம்நோ பட்டணத்தையும், இவை அனைத்தையும், நான் மூழ்கும்படிச் செய்து, அவைகளின் இடத்தில் மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் வரப்பண்ணினேன்; தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தம் இனி ஒருபோதும் என்னிடத்தில் அவைகளின் குடிகளுக்கு விரோதமாய் வராதபடிக்கு, அவர்களுடைய துன்மார்க்கத்தையும் அருவருப்புகளையும் என் முகத்துக்கு முன்பிருந்து மறைக்கத்தக்கதாக, அவர்களைப் பூமியின் ஆழங்களிலே புதைத்தேன்.

9 இதோ, ராஜாவாகிய யாக்கோபின் ஜனங்களால் சுதந்தரிக்கப்பட்ட அந்த மகா பட்டணமாகிய யாக்கோபுகாத்தை, அவர்களின் பாவங்களினிமித்தமும், துன்மார்க்கங்களினிமித்தமும், அக்கினியால் சுட்டெரிக்கப் பண்ணினேன். அவர்களுடைய இரகசியக் கொலைகளின் நிமித்தமும், சங்கங்களினிமித்தமும், பூமியெங்குமுள்ள எல்லா துன்மார்க்கத்திலும் அவர்களின் துன்மார்க்கம் பெரிதாயிருந்தது. ஏனெனில் அவர்களே என் ஜனத்தின் சமாதானத்தையும் தேசத்தின் ராஜாங்கத்தையும் அழித்துப் போட்டார்கள்; ஆதலால் தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தம் அவர்களுக்கு விரோதமாக இனி என்னிடத்தில் வராதபடிக்கு, என் முகத்தின் முன்பிருந்து அவர்களை அழித்துப்போடும் பொருட்டு, அவர்களை எரிந்து போகப்பண்ணினேன்.

10 இதோ, லாமான் பட்டணத்தையும், யோஸின் பட்டணத்தையும், காத்தின் பட்டணத்தையும், கிஸ்குமனின் பட்டணத்தையும், அவைகளின் குடிகளையும், அவர்களுடைய துன்மார்க்கத்தையும் அவர்களுடைய அருவருப்புகளையும் குறித்து, அவர்களுக்குள்ளே அறிவிக்க நான் அனுப்பின, தீர்க்கதரிசிகளைப் புறம்பே தள்ளி, கல்லெறிந்ததிலும் உள்ள அவர்களின் துன்மார்க்கத்தினிமித்தம், அக்கினியால் எரிந்துபோகப் பண்ணினேன்.

11 அவர்களுக்குள்ளே ஒரு நீதிமானும் இராதபடிக்கு அவர்கள் எல்லோரையும் துரத்திவிட்டதால், அவர்களுக்குள்ளே நான் அனுப்பின தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தம், அவர்களுக்கு விரோதமாய் பூமியிலிருந்து என்னை நோக்கி கூக்குரலிடாதபடிக்கு, அவர்களுடைய துன்மார்க்கத்தையும் அருவருப்புகளையும் என் முகத்தின் முன்னின்று மறைக்கும் பொருட்டு, அக்கினியை அனுப்பி அவர்களை அழித்துப் போட்டேன்.

12 அவர்களின் துன்மார்க்கத்தினிமித்தமும், அவர்களின் அருவருப்புகளினிமித்தமும், இந்த தேசத்தின் மேலும், இந்த ஜனத்தின்மேலும், அநேக பெரிய அழிவுகளை வரப்பண்ணினேன்.

13 அவர்களைக் காட்டிலும் அதிக நீதியுள்ளவர்களாய் இருந்ததினிமித்தம் தப்புவிக்கப்பட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும், இப்பொழுதாவது என்னிடத்தில் திரும்பி, உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, நான் உங்களை குணப்படுத்தும்படியாக மனம் மாறமாட்டீர்களோ?

14 ஆம், மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னிடத்தில் நீங்கள் வந்தால், நித்திய ஜீவனைப் பெறுவீர்கள். இதோ, என் இரக்கத்தின் புயம் உங்களுக்கு நேராய் நீட்டப்பட்டிருக்கிறது. யார் வந்தாலும், அவனை நான் ஏற்றுக்கொள்ளுவேன். என்னிடத்தில் வருகிறவர்கள் பாக்கியவான்கள்.

15 இதோ, நானே தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து, நான் வானத்தையும் பூமியையும் மற்றும் அவைகளிலுள்ள யாவையும் சிருஷ்டித்தேன். நான் ஆதியிலிருந்தே பிதாவோடு இருந்தேன். நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறார்; என்னிலே பிதா தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தினார்.

16 நான் என்னுடையவர்களிடம் வந்தேன். என்னுடையவர்களோ என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. என் வருகையைக் குறித்த வேதவாக்கியங்கள் நிறைவேறின.

17 என்னை ஏற்றுக்கொண்ட அனைவரும், தேவனுடைய குமாரராகும்படி அவர்களுக்கு நான் அருளியிருக்கிறேன்; அப்படியே என் நாமத்தில் விசுவாசிக்கிற அனைவருக்கும் செய்வேன், ஏனெனில் இதோ, என்னாலே மீட்பு வருகிறது. என்னிலே மோசேயின் நியாயப்பிரமாணம் நிறைவேறுகிறது.

18 நானே உலகத்தின் ஒளியும், ஜீவனுமாயிருக்கிறேன். நானே அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்.

19 இனி இரத்தம் சிந்துதலை எனக்கு நீங்கள் படைக்கவேண்டாம்; ஆம், உங்களுடைய பலிகளும் உங்களுடைய தகன பலிகளும் ஒழிக்கப்படும். ஏனெனில் நான் உங்களுடைய எந்த பலிகளையும் தகனபலிகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.

20 நீங்கள் நொறுங்குண்ட இருதயத்தையும், நருங்குண்ட ஆவியையும் எனக்கு பலியாக செலுத்துங்கள். லாமானியர் மனம் மாறிய சமயத்தில் என்மேல் அவர்கள் வைத்த விசுவாசத்தினிமித்தம், அவர்களுக்கு அக்கினியாலும் பரிசுத்த ஆவியானவராலும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது போலவே, என்னிடத்தில் நொறுங்குண்ட இருதயத்தோடும் நருங்குண்ட ஆவியோடும் வருகிற எவருக்கும் அக்கினியாலும் பரிசுத்த ஆவியானவராலும் ஞானஸ்நானம் கொடுப்பேன். இதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

21 இதோ, உலகத்தைப் பாவத்திலிருந்து இரட்சிக்கும்படி உலகத்திற்கு மீட்பைக் கொண்டுவருவதற்கே நான் உலகத்திற்கு வந்தேன்.

22 ஆதலால் மனந்திரும்பி ஒரு சிறுபிள்ளையைப்போல என்னிடத்தில் வருகிற எவரையும் நான் ஏற்றுக்கொள்வேன். ஏனெனில் பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையதே. இதோ, அப்படிப்பட்டவர்களுக்காகவே நான் என் ஜீவனை ஈந்து மறுபடியும் அதை எடுத்துக்கொண்டேன்; ஆதலால் பூமியின் கடையாந்தரங்களே மனந்திரும்பி என்னிடத்தில் வந்து இரட்சிப்பைப் பெறுங்கள்.