வேதங்கள்
3 நேபி 1


மூன்றாம் நேபி

ஏலமனின் குமாரனாகிய, நேபியின் குமாரனான
நேபியின் புஸ்தகம்

யூதாவின் ராஜாவாகிய, சிதேக்கியாவின் ஆளுகையின் முதலாம் வருஷத்தில், எருசலேமை விட்டுவந்த, லேகியினுடைய குமாரனான, நேபியின் சந்ததியான ஏலமன், ஏலமனுடைய குமாரன். அவன் ஆல்மாவினுடைய குமாரனான ஆல்மாவினுடைய குமாரன்.

அதிகாரம் 1

ஏலமனின் குமாரனான நேபி, தேசத்தை விட்டுப்போகுதல். அவன் குமாரனான நேபி பதிவேடுகளை வைத்திருத்தல் – அறிகுறிகளும் அற்புதங்களும் பெருகியிருந்தாலும், துன்மார்க்கர் நீதிமான்களைக் கொல்லத் திட்டம் போடுதல் – கிறிஸ்து பிறப்பின் இரவு வருதல் – அறிகுறி கொடுக்கப்படுதல். புதிய நட்சத்திரம் எழுதல் – பொய்களும் வஞ்சனைகளும் பெருகுதல். காதியாந்தன் திருடர்கள் அநேகரை வெட்டிப்போடுதல். ஏறக்குறைய கி.பி. 1–4.

1 இப்பொழுது, அந்தப்படியே, தொண்ணூற்று ஒன்றாம் வருஷமும் கடந்து போயிற்று. எருசலேமை விட்டு லேகி வந்த காலத்திலிருந்து அது அறுநூறு வருஷமாயிருந்தது; அந்த வருஷத்தில்தான் லாசோனியஸ் தேசத்தின்மேல் பிரதான நியாயாதிபதியாயும் விசாரணைக்காரனாயும் இருந்தான்.

2 ஏலமனின் குமாரனாகிய நேபி, தன்னுடைய மூத்த குமாரனாகிய நேபியினிடத்தில் பித்தளைத் தகடுகளையும், வைக்கப்பட்டிருந்த சகல பதிவேடுகளையும், எருசலேமை விட்டு லேகி புறப்பட்டது முதல் பரிசுத்தமாக பாதுகாக்கப்பட்டு வந்த எல்லாவற்றையும் குறித்த பொறுப்பையும் கொடுத்துவிட்டு சாரகெம்லா தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போனான்.

3 அவன் தேசத்தைவிட்டுப் போன பின்பு, அவன் எங்கு போனான் என்று ஒருவனும் அறியவில்லை; அவனுடைய குமாரனான நேபி அவனுக்குப் பதிலாக பதிவேடுகளை, ஆம், இந்த ஜனத்தின் பதிவேடுகளை வைத்திருந்தான்.

4 அந்தப்படியே, தொண்ணூற்று இரண்டாம் வருஷ துவக்கத்திலே, இதோ, தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்கள் முழுமையாக நிறைவேறத் துவங்கின; ஏனெனில் ஜனங்களுக்குள்ளே பெரிய அறிகுறிகளும் பெரிய அற்புதங்களும் ஏற்படத் துவங்கின.

5 ஆனால், லாமானியனான சாமுவேலினால் பேசப்பட்ட வார்த்தைகள் நிறைவேறும் காலம் கடந்து போயிற்று, என்று சிலர் சொல்லத் துவங்கினார்கள்.

6 அவர்கள் தங்கள் சகோதரர் குறித்து களிகூரத் துவங்கி, இதோ, காலம் கடந்து போயிற்று. சாமுவேலின் வார்த்தைகள் நிறைவேறவில்லை; ஆதலால் இதைக் குறித்த உங்களின் சந்தோஷமும் விசுவாசமும் விருதாவாய்ப்போனது, என்றார்கள்.

7 அந்தப்படியே, அவர்கள் தேசமெங்கும் பெரிய கலகம் உண்டாக்கினார்கள்; பேசப்பட்டவைகள் எந்த வகையிலும் நிறைவேறாமல் போகுமோ என்று, விசுவாசித்திருந்த ஜனங்கள் மிகவும் விசனமடையத் துவங்கினார்கள்.

8 இருப்பினும் தங்களின் விசுவாசம் விருதாவாய்ப் போகவில்லை என்று அவர்கள் அறியும்படிக்கு இரவே இல்லாமல் ஒரே பகலைப்போல காட்சியளிக்கிற அந்தப் பகல், இரவு, பகலுக்காக அவர்கள் திடமனதோடு காத்திருந்தார்கள்.

9 இப்பொழுது, அந்தப்படியே, தீர்க்கதரிசி சாமுவேலினால் கொடுக்கப்பட்ட அறிகுறி நிறைவேறாமற் போனால், அந்தப் பாரம்பரியங்களில் விசுவாசித்த யாவரும் மரணத்திற்குள்ளாக்கப்பட, ஒரு நாளானது அவிசுவாசிகளால் குறிக்கப்பட்டது.

10 இப்பொழுது. அந்தப்படியே, நேபியின் குமாரனாகிய நேபி தன் ஜனங்களுடைய இந்த துன்மார்க்கத்தைக் கண்டவுடன் அவனுடைய இருதயம் மிகவும் விசனமடைந்தது.

11 அந்தப்படியே, அவன் வெளியே போய் பூமியில் சாஷ்டாங்கமாய் விழுந்து, தங்கள் பிதாக்களின் பாரம்பரியத்தின் மீதிருந்த அவர்களுடைய விசுவாசத்தினிமித்தம், அழிக்கப்படவிருந்தவர்களாகிய தன் ஜனத்துக்காக தன் தேவனிடத்தில் ஊக்கமாய்க் கூக்குரலிட்டான்.

12 அந்தப்படியே, அவன் அந்த நாள் முழுவதும் கர்த்தரிடத்தில் ஊக்கமாய்க் கூக்குரலிட்டான். இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி:

13 உன் தலையை உயர்த்தி களிகூருவாயாக; ஏனெனில் இதோ, காலம் சமீபமாயிருக்கிறது, இன்று இரவு அறிகுறி கொடுக்கப்படும், என்னுடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் நாவால் பேசப்படும்படி, நான் செய்த சகலத்தையும் நான் நிறைவேறப் பண்ணுவேன் என்று, உலகிற்குக் காண்பிக்கும்படியாக நாளை நான் உலகினுள் வருகிறேன்.

14 இதோ, உலக அஸ்திபாரம் முதல் மனுபுத்திரருக்கு நான் தெரியப்பண்ணின சகல காரியங்களையும் நிறைவேற்றவும், பிதா மற்றும் குமாரனுடைய சித்தத்தைச் செய்யவும், என்னிமித்தம் பிதாவினுடைய சித்தத்தையும், என் மாம்சத்தினிமித்தம் குமாரனுடைய சித்தத்தையும் செய்ய, நான் என் சொந்தமானோருக்குள்ளே வருகிறேன். இதோ, காலம் சமீபமாயிருக்கிறது, இன்று இரவு அறிகுறி கொடுக்கப்படும்.

15 அந்தப்படியே, நேபிக்கு உண்டான வார்த்தைகள் சொல்லப்பட்டபடியே நிறைவேறின; ஏனெனில் இதோ, சூரியன் அஸ்தமிக்கையில் அங்கே இருள் சூழவில்லை; இரவு வந்தபோது அங்கே இருளில்லாததால் ஜனங்கள் ஆச்சரியப்படத் துவங்கினார்கள்.

16 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை விசுவாசித்தவர்களுக்காகப் போட்ட அந்த மகா அழிவின் திட்டம் வீணாய்ப்போனது, என்று தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை விசுவாசியாத அநேகர் அறிந்து பூமியில் விழுந்து மரித்தவர்களைப் போலானார்கள், ஏனெனில் கொடுக்கப்பட்ட அறிகுறி ஏற்கனவே சமீபத்திலிருந்தது.

17 தேவ குமாரன் சீக்கிரமாய் தோன்றுவார், என்று அவர்கள் அறியத் துவங்கினார்கள். ஆம், இறுதியாக வட தேசத்திலும், தென் தேசத்திலும், மேற்கு தொடங்கி கிழக்கு வரைக்குமாக, பூமியிலிருந்த சகல ஜனங்களும், மிகவும் ஆச்சரியப்பட்டுப் போய் பூமியில் விழுந்தார்கள்.

18 இந்தக் காரியங்களைக் குறித்து அநேக வருஷமாய்த் தீர்க்கதரிசிகள் சாட்சி பகர்ந்து வருகிறார்களென்றும், கொடுக்கப்பட்ட அறிகுறி ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறதென்றும் அவர்கள் அறிந்ததால், தங்கள் அக்கிரமத்தினிமித்தமும் தங்களின் அவிசுவாசத்தினிமித்தமும், அஞ்சத் துவங்கினார்கள்.

19 அந்தப்படியே, அந்த இரவு முழுவதும் அங்கே இருளே இல்லாமல், அது நண்பகலைப்போல ஒளிமிக்கதாயிருந்தது. அந்தப்படியே, காலையில் மறுபடியும் சூரியன் தன்னுடைய சரியான ஒழுங்கின்படியே உதித்தது. கொடுக்கப்பட்ட அறிகுறியினிமித்தம், அந்நாளில்தான் கர்த்தர் பிறப்பார் என்று, அவர்கள் அறிந்தார்கள்.

20 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்கேற்ப, ஆம், சகலமும் துல்லியமாக நிறைவேறியது.

21 அந்தப்படியே, வார்த்தைக்கேற்ப ஒரு புதிய நட்சத்திரமும் தோன்றியது.

22 அந்தப்படியே, ஜனங்கள் தாங்கள் கண்ட அந்த அறிகுறிகளிலும், அற்புதங்களிலும் விசுவாசிக்காதபடிக்கு அவர்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்துவதற்காக, இச்சமயம் முதற்கொண்டு அவர்களுக்குள்ளே உண்மைக்கு புறம்பானவைகளை சாத்தான் அனுப்பினான். ஆனாலும் இந்த பொய்களும் வஞ்சனைகளும் இருந்தும்கூட, ஜனங்களில் பெரும்பாலானோர் விசுவாசித்து, கர்த்தருக்குள்ளாக மனம் மாறினார்கள்.

23 அந்தப்படியே, நேபியும் மற்ற அநேகரும் ஜனங்களுக்குள்ளே போய் மனந்திரும்புதலுக்கேதுவாய் ஞானஸ்நானம் கொடுத்தார்கள், அதினிமித்தம் அங்கே பாவங்களுக்காக மிகுந்த மன்னிப்பு உண்டாயிற்று. இப்படியாக ஜனங்கள் மறுபடியுமாக தேசத்திலே சமாதானத்தை அடையத் துவங்கினார்கள்.

24 மோசேயின் நியாயப்பிரமாணத்தை ஆசரிக்க இனிமேலும் அவசியமில்லை என்று வேத வாக்கியங்களினால் நிரூபிக்க முயற்சித்துப் பிரசங்கித்த சிலரைத் தவிர, அங்கே எந்த பிணக்குகளும் காணப்படவில்லை. இப்பொழுது வேத வாக்கியங்களைப் புரிந்து கொள்ளாமல், இந்த காரியத்தில் அவர்கள் பிழை செய்தனர்.

25 ஆனால், அந்தப்படியே, நியாயப்பிரமாணம் இன்னும் நிறைவேறவில்லை என்றும், அது பூரணமாய் நிறைவேற வேண்டுமென்றும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் சீக்கிரமாய் மனம் மாறி, தங்களின் தவறை உணர்ந்து கொண்டார்கள்; ஆம், அது நிறைவேறவேண்டுமென்றும், அது முழுவதும் நிறைவேறுமளவும் ஒரு எழுத்தாகிலும் ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்ற வார்த்தை அவர்களுக்கு உண்டானது; ஆதலால் இந்த வருஷத்திலே அவர்கள் தங்களுடைய பிழையைக் குறித்த ஞானத்திற்குக் கொண்டு வரப்பட்டார்கள், அவர்கள் தங்கள் தவறுதல்களை அறிக்கை பண்ணினார்கள்.

26 பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லோருடைய தீர்க்கதரிசன வார்த்தைகளின்படியே சம்பவித்த அறிகுறிகளினிமித்தம், ஜனங்களுக்கு நற்செய்திகளைக் கொண்டுவந்து, இப்படியாக தொண்ணூற்று இரண்டாம் வருஷமும் கடந்துபோயிற்று.

27 அந்தப்படியே, மலைகளில் வாசம்பண்ணினவர்களும், தேசத்தின்மேல் பெருகினவர்களுமாகிய, காதியாந்தன் திருடர்களைத் தவிர, மற்றபடி தொண்ணூற்று மூன்றாம் வருஷமும், சமாதானமாய்க் கடந்து போயிற்று; ஏனெனில் அவர்களுடைய கொத்தளங்களும், அவர்களுடைய மறைவிடங்களும், மிகவும் பலமுள்ளதாய் இருந்தபடியாலே, ஜனங்கள் அவர்களை மேற்கொள்ளமுடியவில்லை. ஆதலால் அவர்கள் அநேக கொலைகளைப் புரிந்து, ஜனங்களுக்குள்ளே பெரும் சங்காரத்தை உண்டாக்கினார்கள்.

28 அந்தப்படியே, தொண்ணூற்று நாலாம் வருஷத்தில், நேபியினரின் அநேக கொலைகாரர் அவர்களிடம் போனபடியினாலே அவர்கள் பெரிய அளவிலே பெருகத் தொடங்கினார்கள், இது தேசத்தின் மீதிருந்த நேபியர்களுக்கு அதிக துக்கத்தை ஏற்படுத்தியது.

29 லாமானியருக்குள்ளும் மிகுந்த துக்கம் உண்டாகக் காரணமிருந்தது; ஏனெனில் இதோ, வளர்ந்து, நாளடைவில் பலமடைந்து, தங்களுக்கென்று நிதானிக்கிறவர்களாய் மாறின அவர்களின் பிள்ளைகள், சோரமியரான சிலருடைய, பொய்யான மற்றும் முகஸ்துதியான வார்த்தைகளினால், அந்த காதியாந்தன் திருடர்களுடன் சேரும்படிக்கு வழிநடத்தப்பட்டுப் போனார்கள்.

30 இப்படியாக லாமானியர்களும் உபத்திரவப்பட்டு, எழும்புகிற தலைமுறையினரின் துன்மார்க்கத்தினிமித்தம், தங்களுடைய விசுவாசத்திலும் நீதியிலும் குறைந்து போகத் துவங்கினார்கள்.