வேதங்கள்
3 நேபி 22


அதிகாரம் 22

கடைசி நாட்களில், சீயோனும் அதின் பிணையங்களும் ஸ்தாபிக்கப்படும். இஸ்ரவேல் இரக்கத்தோடும் மென்மையாகவும் கூட்டிச்சேர்க்கப்படும் – அவர்கள் ஜெயம் பெறுவார்கள் – ஏசாயா 54ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.பி. 34.

1 பின்பு எழுதப்பட்டவை சம்பவிக்கும்: பிள்ளை பெறாத மலடியே, பாடு, குழந்தை பெறாமல் கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப்பாடி, கூவிச்சத்தமிடு; ஏனெனில் வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும், மலடியின் பிள்ளைகள் அநேகம், என்று கர்த்தர் உரைக்கிறார்.

2 உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு, உன் வாசஸ்தலங்களின் திரைகளை அவர்கள் விரிவாக்கட்டும். தடை செய்யாதே. உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து.

3 ஏனெனில் நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய். உன் சந்ததியார் புறஜாதிகளை சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்ப்போன பட்டணங்களை குடியேறப்பண்ணுவார்கள்.

4 பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; தாறுமாறாக்கப்படுவதுமில்லை, நீ வெட்கமடைய விடப்படுவதில்லை. ஏனெனில் உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் வாலிபத்தின் நிந்தையை நினையாதிருப்பாய். உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.

5 உன் சிருஷ்டிகரே, உன் புருஷர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர். அவர் பூமி முழுவதற்குமான தேவன் எனப்படுவார்.

6 கைவிடப்பட்டு ஆவியிலே சஞ்சலப்பட்ட ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ் செய்து தள்ளப்பட்ட மனைவியைப் போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார், என்று உன் தேவன் சொல்லுகிறார்.

7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன். ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக் கொள்வேன்.

8 அற்ப கோபத்தினால் என் முகத்தை உன்னிடமிருந்து இமைப்பொழுது மறைத்திருந்தேன். ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.

9 இது எனக்கு நோவாவின் காலத்தில் உண்டான வெள்ளம் போலிருக்கும், நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டு வருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபம் கொண்டிருப்பதில்லையென்றும் ஆணையிட்டேன்.

10 மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.

11 சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றினால் அடிபட்டவளே, ஆதரவற்றவளே இதோ, அழகிய வண்ணங்களாலே உன் கற்களைக் கிடத்தி, நீல இரத்தினங்களால் உனக்கு அஸ்திபாரம் அமைப்பேன்.

12 உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.

13 உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளினுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.

14 நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை.

15 இதோ, உனக்கு விரோதமாய் நிச்சயமாக கூட்டம் கூடுவார்கள், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல. எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உனக்குச் சாதகமாய் விழுவார்கள்.

16 இதோ, கரிநெருப்பை ஊதி தன் கிரியைகளான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்.

17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய். இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்திரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.