வேதங்கள்
ஏலமன் 7


ஏலமனின் குமாரனாகிய நேபியின் தீர்க்கதரிசனம் – நேபியின் ஜனங்கள் தங்கள் துன்மார்க்கத்திலிருந்து மனந்திரும்பாவிடில், அவர்கள் முழுவதுமாய் அழியும்படியாய் தமது கோபத்தினால் அவர்களை சந்திப்பேன் என்று தேவன் பயமுறுத்தல். தேவன் நேபியின் ஜனங்களை வாதையினால் அடித்தல். அவர்கள் மனந்திரும்பி அவரிடம் திரும்புதல். லாமானியனான சாமுவேல் நேபியர்களுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தல்.

அதிகாரங்கள் 7 முதல் 16 உள்ளிட்டவை.

அதிகாரம் 7

வடக்கில் நேபி நிராகரிக்கப்பட்டு சாரகெம்லாவிற்குத் திரும்புதல் – அவன் தன் தோட்ட கோபுரத்தின் மேலிருந்து ஜெபித்து, பின்பு அவர்கள் மனந்திரும்பும்படியாகவும், இல்லையேல் அழிக்கப்படுவார்களென்றும் சொல்லுதல். ஏறக்குறைய கி.மு. 23–21.

1 இதோ, இப்பொழுது, அந்தப்படியே, நேபியின் ஜனங்களின் மேல் நியாயாதிபதிகளின் ஆளுகையின் அறுபத்தி ஒன்பதாம் வருஷத்திலே ஏலமனின் குமாரனாகிய நேபி வடதேசத்திலிருந்து சாரகெம்லா தேசத்திற்குத் திரும்பினான்.

2 ஏனென்றால் அவன் வடதேசத்திலிருந்த ஜனங்களுக்குள்ளே போய், அவர்களுக்கு தேவ வசனத்தைப் பிரசங்கித்து, அவர்களுக்கு அநேகக் காரியங்களைத் தீர்க்கதரிசனமாய் உரைத்தான்.

3 அவர்களுக்குள்ளே அவன் தங்கக்கூடாமல் மறுபடியும் தன் சொந்த தேசத்திற்குத் திரும்பும் அளவுக்கு, அவர்கள் அவனுடைய எல்லா வார்த்தைகளையும் நிராகரித்தனர்.

4 அவன் தன் ஜனங்கள் அப்படிப்பட்ட அஞ்சத்தக்க, துன்மார்க்க நிலையிலே இருப்பதையும், தேசத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பிடுங்கிக்கொண்டு, காதியாந்தன் திருடர்கள் நியாயாசனங்களில் இருக்கிறதையும், தேவ கட்டளைகளை ஒதுக்கி, அவருக்கு முன்பாக கொஞ்சமும் சரியாய்ச் செய்யாமல், மனுபுத்திரருக்கு எந்த நியாயத்தையும் செய்யாமல்;

5 நீதிமான்களை அவர்களுடைய நீதியினிமித்தம் ஆக்கினைக்குட்படுத்தி, அவர்களது பணத்தினிமித்தம் குற்றமுள்ளோரையும், துன்மார்க்கரையும் தண்டிக்காமல் விட்டுவிட்டு, தங்கள் விருப்பப்படியே ஆளவும், உலகத்தின் லாபத்தையும் புகழையும் பெறும்படிக்கும், இதற்கும் மேலாக சுலபமாய் விபசாரம் பண்ணவும், திருடவும், கொலை செய்யவும், தங்களுடைய சுய சித்தப்படி நடக்கவும், மேலும் ராஜாங்கத்தின் தலைமை அலுவலில் இருப்பதையும், கண்டான்.

6 இப்பொழுதும், சில வருஷங்களுக்குள்ளாகவே இப்பெரிய அக்கிரமம் நேபியர்கள் மேல் வந்தது; நேபி இதைக் கண்டபோது, நெஞ்சுக்குள் அவனது இருதயம் துக்கத்தால் நிறைந்தது; அவன் தன் ஆத்தும வியாகுலத்தோடு ஓலமிட்டான்.

7 என் தகப்பனாகிய நேபி, எருசலேம் தேசத்திலிருந்து முதலாவதாக வந்த அந்த நாட்களில் என் நாட்களும் இருந்திருக்குமேயானால், நான் அவரோடுகூட வாக்குத்தத்தத்தின் தேசத்திலே சந்தோஷமாயிருந்திருப்பேன். அப்போது அவருடைய ஜனங்கள் நடத்தப்படுவதற்கு எளிதானவர்களாயும், தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதில் உறுதியுள்ளவர்களாயும், அக்கிரமம் செய்ய தயங்கினவர்களாயும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க துரிதப்பட்டார்கள்.

8 ஆம், என் நாட்கள் அந்நாட்களில் இருந்திருக்குமேயானால், அப்பொழுது என் ஆத்துமா என் சகோதரரின் நீதியிலே சந்தோஷமடைந்திருக்கும்.

9 ஆனால் இதோ, இவைகளே என் நாட்களாக இருக்கின்றன. என் சகோதரரின் இந்த துன்மார்க்கத்தினிமித்தம், என் ஆத்துமா துக்கத்தால் நிறைக்கப்பட்டிருக்கும்படிக்கு நிர்பந்தப்பட்டிருக்கிறேன்.

10 இதோ, இப்பொழுதும், அந்தப்படியே, இது சாரகெம்லா பட்டணத்திலுள்ள முக்கியமான சந்தைக்குப் போகிற அந்த நெடுஞ்சாலைக்கு அருகே அமைந்த நேபியின் தோட்டத்திலுள்ள கோபுரத்தின் மேல் நடந்தது. ஆதலால் நேபி தன் தோட்டத்தில் இருந்த கோபுரத்தின் மேல் முகங்குப்புற விழுந்திருந்தான். அக்கோபுரம் நெடுஞ்சாலைக்குப் போகிற வழியருகில் இருந்த தோட்ட வாசலுக்கும் அருகாமையிலிருந்தது.

11 அந்தப்படியே, அங்கே வழிப்போக்கர் சிலர் கோபுரத்தின் மேல் தேவனிடத்தில் தன் ஆத்துமாவை நேபி ஊற்றுவதைக் கண்டு, அவர்கள் ஓடி தாங்கள் கண்டதை ஜனங்களுக்குச் சொன்னார்கள், ஜனங்களின் துன்மார்க்கத்தினிமித்தம், இப்படி மிகுதியாய்த் துன்பப்படுகிறதின் காரணத்தை அறியும்படிக்கு ஜனங்கள் திரள்கூட்டமாய் வந்தார்கள்.

12 இப்பொழுதும் நேபி எழுந்தபோது, அவன் ஏகமாய்க் கூடின ஜனங்களின் திரள்கூட்டத்தைக் கண்டான்.

13 அந்தப்படியே, அவன் தன் வாயைத் திறந்து அவர்களை நோக்கி சொன்னான்: இதோ நீங்கள் ஏன் ஏகமாய்க் கூடியிருக்கிறீர்கள்? நான் உங்களுடைய அக்கிரமங்களைக் குறித்து சொல்ல வேண்டுமென்பதற்காகவா?

14 ஆம், உங்களுடைய துன்மார்க்கங்களினிமித்தம், என் இருதயத்தில் ஏற்பட்ட மிகுந்த துன்பத்தினிமித்தம், என் ஆத்துமாவை என் தேவனுக்கென்று ஊற்றும்படியாக என் கோபுரத்தின் மேல் நான் வந்த காரணத்தினிமித்தமே!

15 என் துயரத்தினிமித்தமும், புலம்பலினிமித்தமும், நீங்கள் கூடி அதிசயிக்கிறீர்கள். ஆம், நீங்கள் அதிசயப்பட மிகவும் அவசியம் உண்டு. ஆம், பிசாசு உங்களுடைய இருதயங்களை மிகவும் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ள, நீங்கள் உங்களையே கொடுத்ததினிமித்தமே, நீங்கள் அதிசயிக்கவேண்டும்.

16 ஆம், என்றுமுள்ள துன்பத்திற்கும், முடிவில்லா துயரத்திற்கும், உங்களின் ஆத்துமாக்களை எறிய வகை தேடிக்கொண்டிருப்பவனின் வஞ்சனைக்கு நீங்கள் எப்படி இடங்கொடுப்பீர்கள்?

17 நீங்கள் மனந்திரும்புங்கள், மனந்திரும்புங்கள்! நீங்கள் ஏன் மரித்துப்போக வேண்டும்? திரும்புங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள். அவர் ஏன் உங்களைக் கைவிட்டார்?

18 உங்களுடைய இருதயங்களை நீங்கள் கடினப்படுத்தினதினிமித்தம், ஆம், நல் மேய்ப்பனின் சத்தத்திற்குச் செவிகொடாமல், ஆம், உங்களுக்கு விரோதமாய் அவரைக் கோபமூளச் செய்தீர்கள்.

19 இதோ, நீங்கள் மனந்திரும்பாவிடில், உங்களைக் கூட்டுவதற்குப் பதிலாக, இதோ, நீங்கள் நாய்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் மாம்சமாகும்படி அவர் உங்களைச் சிதறடிப்பார்.

20 உங்கள் தேவன் உங்களைத் தப்புவித்த அதே நாளில், அவரை நீங்கள் மறந்து போகக்கூடுமோ?

21 ஆனால், இதோ, ஆதாயம் பெறவும், மனுஷரால் புகழப்படவும், ஆம், பொன்னையும் வெள்ளியையும் பெறவேண்டியே அதைச் செய்தீர்கள். நீங்கள் ஐஸ்வரியத்தின் மேலும், உலகத்தின் வீணானவைகளின் மேலும் உங்கள் இருதயங்களை வைத்ததாலேதான், நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, உங்கள் அயலாருக்கு விரோதமாய் பொய் சாட்சி, மற்றும் எல்லாவிதமான அக்கிரமத்தையும் செய்கிறீர்கள்.

22 நீங்கள் மனந்திரும்பாவிடில், இந்தக் காரணத்தினிமித்தம், உங்கள் மேல் அழிவு வரும். நீங்கள் மனந்திரும்பாவிடில், இதோ நம்முடைய வசமிருக்கும் தேசத்திலுள்ள இந்த மாநகரமும், சுற்றியுமுள்ள அந்த எல்லா மாநகரங்களும், உங்களுக்கு இடமில்லாமல் எடுத்துக் கொள்ளப்படும்; ஏனெனில் இதோ, நீங்கள் உங்களுடைய விரோதிகளை எதிர்த்து நிற்க, கர்த்தர் இதுவரைக்கும் செய்ததைப்போல, உங்களுக்கு பெலத்தை அருளமாட்டார்.

23 ஏனெனில் இதோ, கர்த்தர் உரைப்பதாவது: தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, என் வார்த்தைக்கு செவிகொடுத்தாலொழிய ஒருவரைவிட ஒருவருக்கு அதிகமாய்த் துன்மார்க்கருக்கு என் பெலத்தை நான் காண்பிப்பதில்லை. இப்பொழுதும் ஆதலால், என் சகோதரரே, நீங்கள் மனந்திரும்பாவிடில் உங்களைக் காட்டிலும் லாமானியர்களுக்கு நலமாயிருக்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

24 ஏனெனில் இதோ, அவர்கள் உங்களைக் காட்டிலும் நீதியுள்ளவர்கள். ஏனெனில் அவர்கள் நீங்கள் பெற்ற அந்த மகா ஞானத்திற்கு விரோதமாக பாவம் செய்யவில்லை; ஆதலால் கர்த்தர் அவர்களுக்கு இரக்கமுள்ளவராயிருப்பார்; ஆம், நீங்கள் மனந்திரும்பாவிடில், நீங்கள் முழுவதுமாய் அழிக்கப்பட்டாலும், அவர் அவர்களின் நாட்களை நீட்டித்து, அவர்களின் சந்தானத்தைப் பெருகப்பண்ணுவார்.

25 ஆம், உங்களுக்குள் வந்த இந்த மகா அருவருப்பினிமித்தம் உங்களுக்கு ஐயோ; காதியாந்தனால் ஸ்தாபிக்கப்பட்ட அந்த இரகசியக் கூட்டத்தோடு நீங்கள் சேர்ந்து கொண்டீர்களே!

26 ஆம், உங்களுடைய மிகுந்த ஐஸ்வரியங்களினிமித்தமும், நன்மையானதற்கு அப்பால் உங்களை உயரப்பண்ணின அந்த பெருமையை உங்களுடைய இருதயங்களுள் நீங்கள் நுழைய அனுமதித்ததினிமித்தமும், உங்களுக்கு ஐயோ!

27 ஆம், உங்களுடைய துன்மார்க்கத்தினிமித்தமும், அருவருப்புகளினிமித்தமும், உங்களுக்கு ஐயோ!

28 நீங்கள் மனந்திரும்பாவிடில் நீங்கள் அழிந்துபோவீர்கள்; ஆம், உங்கள் தேசங்களும் உங்களிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் பூமியின் பரப்பின் மேலிருந்து நிர்மூலமாக்கப்படுவீர்கள்.

29 இதோ, இப்பொழுதும், நான் நானே இவைகளைச் சொல்லுவதில்லை. ஏனெனில், நானாகவே இவைகளை அறிந்துகொள்ளவில்லை; ஆனால் இதோ, தேவனாகிய கர்த்தர் எனக்கு இவை சத்தியமானவை என்று தெரியப்படுத்தியதினிமித்தம் அவை அப்படியே ஆகும், என்று சாட்சி கொடுக்கிறேன்.