வேதங்கள்
ஏத்தேர் 8


அதிகாரம் 8

அங்கே ராஜ்யத்தைக் குறித்து விவாதங்களும் பிணக்குகளும் இருத்தல் – ராஜாவைக் கொல்ல உறுதிமொழியால் பிணைக்கப்பட்ட இரகசிய சங்கத்தை ஆகீஸ் உருவாக்குதல் – இரகசிய சங்கங்கள் பிசாசினுடையவை, தேசங்களின் அழிவை விளைவிக்கிறது. எல்லா இடங்கள், தேசங்கள், மற்றும் நாடுகளின், சுதந்திரத்தை வீழ்த்த வகைதேடும் இரகசிய சங்கத்திற்கு விரோதமாக தற்கால புறஜாதியார் எச்சரிக்கப்படுதல்.

1 அந்தப்படியே, அவன் ஓமரைப் பெற்றெடுத்தான். ஓமர் அவனுக்குப் பதிலாக ஆளுகை பண்ணினான். ஓமர், யாரேதைப் பெற்றெடுத்தான்; யாரேது குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றெடுத்தான்.

2 யாரேது தன் தகப்பனுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, கேத்தின் தேசத்திலே வாசம் பண்ணினான். அந்தப்படியே, அவன் தன்னுடைய வஞ்சக வார்த்தைகளினாலே, ராஜ்யத்தின் பாதியை பெறும்வரைக்குமாக அநேக ஜனங்களிடத்தில் முகஸ்துதியாய்ப் பேசினான்.

3 அவன் ராஜ்யத்தின் பாதியை பெற்றுக்கொண்ட பின்பு, அவன் தன் தகப்பனோடு போர் தொடுத்தான். அவன் தன் தகப்பனைச் சிறைத்தனத்திற்குள்ளாகக் கொண்டுபோய், சிறைவாசம் மேற்கொள்ளச் செய்தான்.

4 இப்பொழுதும், ஓமரின் ஆளுகையின் நாட்களில், அவன் தன் வாழ்நாட்களின் பாதியை சிறைத்தனத்தில் கழித்தான். அந்தப்படியே, அவன் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். அவர்களுக்குள் எஸ்ரோமும், கொரியாந்தமரும் இருந்தார்கள்.

5 அவர்கள் தங்கள் சகோதரனாகிய யாரேதின் செயல்களால் மிகவும் கோபம்கொண்டதினிமித்தம், அவர்கள் ஒரு சேனையைத் திரட்டி யாரேதோடு போர் தொடுத்தார்கள். அந்தப்படியே, அவர்கள் அவனோடு இரவில் போர் தொடுத்தார்கள்.

6 அந்தப்படியே, அவர்கள் யாரேதின் சேனையை வெட்டிப்போட்ட பின்பு, அவர்கள் அவனையும் வெட்டிப்போட இருந்தார்கள்; அவன் தன்னை வெட்டிப்போட வேண்டாமென்றும், ராஜ்யத்தை தன் தகப்பனிடத்தில் கொடுக்க விரும்புவதாகவும் கெஞ்சினான். அந்தப்படியே, அவர்கள் அவன் ஜீவனைத் தப்புவித்தார்கள்.

7 இப்பொழுதும் யாரேது தன் இருதயத்தை ராஜ்யத்தின் மேலும், உலகத்தின் மகிமையின் மேலும் வைத்ததினிமித்தம் ராஜ்யத்தின் இழப்பினால் மிகவும் வருந்தினான்.

8 இப்பொழுதும் யாரேதின் குமாரத்தி மிகவும் கைதேர்ந்தவளாய் இருந்தபடியால், தன் தகப்பனின் துக்கங்களைக் கண்டு, தன் தகப்பனுக்கு ராஜ்யத்தை மீட்டுத்தர ஒரு திட்டம் வகுக்க நினைத்தாள்.

9 இப்பொழுதும் யாரேதின் குமாரத்தி மிகவும் ரூபவதியாய் இருந்தாள். அந்தப்படியே, அவள் தன் தகப்பனிடத்தில் பேசி, அவனை நோக்கி: என்ன முகாந்தரத்தினிமித்தம் என் தகப்பனுக்கு இவ்வளவு துக்கம் ஏற்பட்டிருக்கிறது, நம்முடைய பிதாக்கள் பெரும் ஆழத்தைக் கடந்து கொண்டுவந்த பதிவேட்டினை அவர் வாசித்ததில்லையா? இதோ, அவர்களுடைய இரகசிய திட்டங்களினிமித்தம் ராஜ்யங்களையும், பெரும் மகிமையையும் பெற்றார்கள் என்று பூர்வத்தினரைக் குறித்து ஒரு விவரம் அங்கே இல்லையா?

10 இப்பொழுதும், ஆதலால், என் தகப்பன் கீம்நோரின் குமாரனாகிய ஆகீஸை அழைக்க ஆளனுப்புவாராக; இதோ, நான் அழகாயிருக்கிறேன். நான் அவன் முன்பு நடனமாடுவேன். அவன் என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள விரும்பும்படியாக நான் அவனைப் பிரியப்படுத்துவேன்; ஆதலால் தனக்கு மனைவியாக என்னைக் கொடுக்கவேண்டுமென்று அவன் உம்மிடத்தில் வாஞ்சித்தால், நீர் அவனிடத்தில், நீ ராஜாவாகிய என் தகப்பனுடைய தலையை என்னிடத்தில் கொண்டுவந்தால், நான் அவளைக் கொடுப்பேன், என்று சொல்லும், என்றாள்.

11 இப்பொழுதும் ஓமர், ஆகீஸின் நண்பனாய் இருந்தான். யாரேது ஆகீஸை அழைத்திருந்தபோது, யாரேதின் குமாரத்தி அவனுக்கு முன்பாக நடனமாடி அவனைப் பிரியப்படுத்தினதினிமித்தம் அவன் அவளை மனைவியாய்ப் பெற வாஞ்சித்தான். அந்தப்படியே, அவன் யாரேதை நோக்கி, அவளை எனக்கு மனைவியாகக் கொடும், என்றான்.

12 யாரேது அவனை நோக்கி: நீ என்னிடத்தில் ராஜாவாகிய என் தகப்பனுடைய தலையைக் கொண்டுவந்தால், நான் அவளை உனக்குத் தருவேன், என்றான்.

13 அந்தப்படியே, ஆகீஸ் யாரேதின் வீட்டிலே தன் உறவினர்கள் யாவரையும் கூடச் செய்து, அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் வாஞ்சிக்கிற இக்காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாய் இருப்பீர்களென்று எனக்கு நீங்கள் ஆணையிட்டுக் கொடுப்பீர்களா, என்றான்.

14 அந்தப்படியே, ஆகீஸ் வாஞ்சித்த அவ்வுதவியிலிருந்து விலகிப்போகிற எவனும் தன் தலையை இழக்க வேண்டுமென்றும், ஆகீஸ் தங்களுக்கு தெரிவிக்கப்பண்ணுகிற எந்தக் காரியத்தையும் வெளியரங்கமாக்குகிற எவனும் தன் ஜீவனை இழக்க வேண்டுமென்றும் அவர்கள் அவனிடத்தில் பரலோக தேவன் மீதும், பரலோகங்கள்மீதும், பூமியின்மீதும், தங்கள் சிரசுகளின்மீதும் ஆணையிட்டார்கள்.

15 அந்தப்படியே, அவர்கள் இப்படியாக ஆகீஸுக்கு உடன்பட்டார்கள். அதிகாரத்திற்காக வகைதேடின பழங்காலத்தினரால் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதும், ஆதியிலிருந்தே கொலைபாதகனான காயீனிடத்திலிருந்து கையளிக்கப்பட்டதுமான உறுதிமொழிகளை ஆகீஸ் அவர்களுக்குச் செய்வித்தான்.

16 இந்த உறுதிமொழிகளை ஜனங்களுக்குச் செய்விக்கவும், அவர்களை இருளில் வைக்கவும், அதிகாரத்தைப் பெற, அதிகாரம் பெற உதவவும், கொலை செய்யவும், களவுசெய்யவும், பொய்யுரைக்கவும், எல்லாவிதமான துன்மார்க்கத்தையும், வேசித்தனங்களைச் செய்யவும், அவர்கள் பிசாசின் வல்லமையினால் வைக்கப்பட்டிருந்தனர்.

17 பழங்காலக் காரியங்களைத் தேடும்படியான ஓர் யோசனையை அவன் இருதயத்தினுள் போட்டது யாரேதின் குமாரத்திதான்; யாரேது அதை ஆகீஸின் இருதயத்தினுள் போட்டான்; ஆதலால் ஆகீஸ் அதை தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து, தான் விரும்புகிற எந்த காரியத்தையும் செய்ய நல்ல வாக்குத்தத்தங்களாலே அவர்களை வழிநடத்திப்போனான்.

18 அந்தப்படியே, பூர்வ காலத்தினரைப்போல அவர்கள் ஒரு இரகசிய சங்கத்தைத் தோற்றுவித்தார்கள்; அந்த சங்கம் தேவனுடைய பார்வைக்கு சகலத்தையும் விட மிக அருவருக்கத்தக்கதும், பொல்லாததுமாயிருந்தது.

19 கர்த்தர் இரகசிய சங்கங்கள் மூலம் கிரியை செய்வதில்லையாதலால், அவர் மனுஷன் இரத்தத்தை சிந்தவேண்டுமென்று விரும்புவதுமில்லை. ஆனால் சகலத்திலும் மனுஷ தொடக்கத்திலிருந்தே அதைத் தவிர்த்திருக்கிறார்.

20 இப்பொழுதும் மரோனியாகிய நான் அவர்களுடைய உறுதிமொழிகளையும், சங்கங்களையும் குறித்து எழுதுவதில்லை. ஏனெனில் அவை சகல ஜனங்களுக்குள்ளும், லாமானியருக்குள்ளும் இருக்கிறதென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

21 அவை நான் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிற இந்த ஜனத்தின் அழிவையும், நேபியின் ஜனத்தின் அழிவையும் ஏற்படுத்தின.

22 வல்லமையையும் ஆதாயத்தையும் பெற, தேசம் முழுவதும் இரகசிய சங்கங்கள் பரவும் வரைக்குமாய் அதை ஆதரிக்கிற எந்த தேசமும் இதோ, அழிக்கப்படும்; ஏனெனில் கர்த்தர் அவர்களால் சிந்தப்படும் அவருடைய பரிசுத்தவான்களின் இரத்தம் எப்பொழுதும் பூமியிலிருந்து அவரிடத்தில் பழிதீர்க்கும்படி கூக்குரலிடும்படியாக அனுமதிப்பதில்லை. இருப்பினும் அவர் அவர்களை பழிதீர்ப்பதில்லை.

23 ஆதலால் புறஜாதியாராகிய நீங்கள் உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பவும் வல்லமையும் லாபத்தையும் பெற ஏற்படுத்தப்பட்ட இந்த கொலைச் சங்கங்கள் உங்கள் மேல் அதிகாரத்தைச் செலுத்த அனுமதியாமல் இருக்கவும், இவைகள் உங்களுக்குக் காண்பிக்கப்படவேண்டியது தேவனுடைய ஞானமாயிருக்கிறது. இவைகள் இருக்க அனுமதித்தால், உங்களை வீழ்த்தவும், அழிக்கவும், கிரியை ஆம், அழிவின் கிரியை உங்கள் மேல் வரும். ஆம், நித்திய பிதாவின் நீதியின் பட்டயம், நீங்கள் வீழ்ந்து அழிந்து போகும்படியாய் உங்கள்மேல் விழும்.

24 ஆதலால் உங்களுக்குள் இக்காரியங்கள் வருகிறதை நீங்கள் காணும்போது, உங்களுக்குள்ளிருக்கப்போகும் இந்த இரகசிய சங்கத்தினிமித்தம், உங்களுடைய அஞ்சத்தக்க நிலையில் நீங்கள் விழித்தெழுவீர்களாக, என்று கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிடுகிறார்; இல்லையேல் கொல்லப்பட்டோரின் இரத்தத்தினிமித்தம், அதற்கு ஐயோ, ஏனெனில் அதன்மீதும், அதைக் கட்டியெழுப்பினவர்கள் மீதும் பழிதீர்க்கும்படியாக புழுதியிலிருந்து அவர்கள் கூக்குரலிடுகிறார்கள்.

25 அதைக் கட்டுகிற எவனும் சகல இடங்கள், தேசங்கள், மற்றும் நாடுகளின் சுதந்திரத்தை வீழ்த்த வகை தேடுகிறான்; சகல பொய்களுக்கும் தகப்பனான பிசாசினால் அது கட்டி எழுப்பப்பட்டிருப்பதாலே, அது சகல ஜனங்களுக்கும் அழிவை வரப்பண்ணுகிறது. அதே பொய்யனே நம்முடைய முதற்பெற்றோரை வஞ்சித்தான். ஆம், அதே பொய்யனே ஆதியிலிருந்து மனுஷனைக் கொலை செய்யும்படி தூண்டினான்; மனுஷர் தீர்க்கதரிசிகளைக் கொலைபண்ணவும், அவர்களைக் கல்லெறியவும், அவர்களைத் துரத்தவும், அவர்களுடைய இருதயங்களை ஆதியிலிருந்தே அவன் கடினப்படுத்தினான்.

26 ஆதலால் பொல்லாப்பு முற்றுப்பெறவும், மனுபுத்திரரின் இருதயங்களின் மேல் சாத்தானுக்கு எந்த வல்லமையும் இராத சமயம் வரவும், ஆனால் அவர்கள் சகல நீதியின் ஊற்றுக்கு வந்து இரட்சிக்கப்பட, அவர்கள் தொடர்ந்து நன்மையே செய்யும்படி இணங்கச்செய்யவுமே, மரோனியாகிய நான் இவைகளை எழுதும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறேன்.