பொது மாநாடு
ஒரு வல்லமையான இருதய மாற்றம்; “இனி உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை”
ஏப்ரல் 2022 பொது மாநாடு


ஒரு வல்லமையான இருதய மாற்றம்:

“இனி உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை”

இந்த இருதய மாற்றம் ஒரு நிகழ்வு அல்ல; இதற்கு விசுவாசம், மனந்திரும்புதல் மற்றும் நிலையான ஆவிக்குரிய கிரியை தேவை.

முன்னுரை

1588 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி வெள்ளியன்று, துடுப்பினால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுவதற்கு அதன் சுக்கானை இழந்த நிலையில், கிரேட் ஸ்பானிஷ் ஆர்மடாவைச் சேர்ந்த லா ஜிரோனா என்ற கப்பல், வடக்கு அயர்லாந்தில் உள்ள லகாடா பாயின்ட் பாறைகளில் மோதியது.1

கப்பல் கவிழ்ந்தது உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர், சில மாதங்களுக்கு முன் மனைவி கொடுத்த தங்க மோதிரத்தை அணிந்திருந்தார், அதில் “இனி உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை”2 என பொறிக்கப்பட்டிருந்தது.

“இனி உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை,” என்ற சொற்றொடர் மற்றும் இருதயத்தை ஒரு கை பிடித்திருக்கும் வடிவத்துடன் கூடிய மோதிரம், மனைவியிடமிருந்து தனது கணவருக்கு ஒரு அன்பின் வெளிப்பாடு.

வேத தொடர்பு

இந்தக் கதையை நான் படித்தபோது, அது என் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் இரட்சகரின் வேண்டுகோளை நான் நினைத்தேன்: “நீங்கள் உடைந்த இருதயத்தையும், நொறுங்குண்ட ஆவியையும் எனக்கு பலியாக செலுத்துங்கள்.”3

“ஆம், நீர் எங்களுக்குப் பேசிய சகல வார்த்தைகளையும் விசுவாசிக்கிறோம் … , பொல்லாப்பை இனிச் செய்ய மனமில்லாதவர்களாய், நன்மையையே தொடர்ந்து செய்யும்படிக்கு, எங்கள் இருதயங்களிலேயும், எங்களுக்குள்ளேயும், பலத்த மாற்றத்தைச் செய்வித்தது”4 என்ற பென்யமீன் ராஜாவின் வார்த்தைகளுக்கு மக்களின் பிரதிகிரியையும் நான் நினைத்துப் பார்த்தேன்.

தனிப்பட்ட தொடர்பு

எனக்கு 12 வயதிருக்கும்போது, எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ளுகிறேன். அதன் பாதிப்பு இந்நாள்வரை இருக்கிறது.

என் அம்மா சொன்னார், “எடுவார்டோ, சீக்கிரம் புறப்படு. சபைக் கூட்டங்களுக்கு நாம் தாமதமாகிறோம்.”

“அம்மா, நான் இன்று அப்பாவுடன் இருக்கப் போகிறேன்,” என நான் பதிலளித்தேன்.

“நிச்சயமாக சொல்கிறாயா? ஆசாரியத்துவ குழுமக் கூட்டத்தில் நீ கலந்துகொள்ள வேண்டும்” என அவர் சொன்னார்.

நான் சொன்னேன் “பாவம் அப்பா! அவர் தனித்து விடப்படப் போகிறார். இன்று நான் அப்பாவுடன் இருக்கப் போகிறேன்.”

அப்பா, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினரில்லை.

என்னுடைய தாயும் சகோதரிகளும் ஞாயிறு கூட்டங்களுக்குச் சென்றனர். எனவே, நான் ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பா இருக்க விரும்பும் அவரது பட்டறைக்கு அவரைச் சந்திக்கச் சென்றேன், நான் என் அம்மாவிடம் சொன்னது போல், நான் அவருடன் சிறிது நேரம், அதாவது சில நிமிடங்கள் செலவழித்தேன், பின்னர் நான் கேட்டேன், “அப்பா, எல்லாம் சரியாக இருக்கிறதா?”

ரேடியோக்கள் மற்றும் கடிகாரங்களை பழுதுபார்ப்பதை அவர் தனது பொழுதுபோக்காக வைத்திருந்தார், அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார்.

பின்னர், “அவரிடம், நான் என் நண்பர்களுடன் விளையாடப் போகிறேன்” என்றேன்.

அப்பா, நிமிர்ந்து பார்க்காமல் என்னிடம், “இன்று ஞாயிற்றுக்கிழமை. நீ சபைக்குப் போகவேண்டுமில்லையா?”

“ஆம், ஆனால் இன்று நான் போகமாட்டேன் என்று அம்மாவிடம் சொன்னேன்,” என நான் பதிலளித்தேன். அப்பா தனது வேலையைத் தொடர்ந்தார், என்னைப் பொறுத்தவரை அது வெளியேற அனுமதி.

அன்று காலை ஒரு முக்கியமான கால்பந்தாட்ட விளையாட்டு இருந்தது, என் நண்பர்கள் அவர்களுக்கு நான் தேவை என்று என்னிடம் சொன்னார்கள், என்னால் அதை தவறவிட முடியாது, ஏனெனில் அந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்.

எனது சவால் என்னவென்றால், நான் கால்பந்தாட்ட மைதானத்திற்குச் செல்ல ஜெபாலயத்தின் முன் கடந்து செல்ல வேண்டும்.

தீர்மானித்தவனாக, நான் கால்பந்தாட்ட மைதானத்தை நோக்கி ஓடி, பெரிய தடைக்கல்லான ஜெபாலயத்தின் முன் நின்றேன். சில பெரிய மரங்கள் இருந்த எதிர் நடைபாதைக்கு நான் ஓடினேன், கூட்டங்களுக்கு உறுப்பினர்கள் வரும் நேரம் என்பதால் யாரும் என்னைப் பார்க்காதபடி அவற்றுக்கிடையே ஓட முடிவு செய்தேன்.

ஆட்டம் தொடங்கும் நேரத்தில்தான் நான் வந்துசேர்ந்தேன். அம்மா வீட்டுக்கு வருவதற்குள் விளையாடிவிட்டு வீட்டுக்குப் போக என்னால் முடிந்தது.

எல்லாம் நன்றாகப் போனது; எங்கள் அணி வெற்றி பெற்றது, நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் களத்தில் நன்றாகச் செயல்படுத்தப்பட்ட அந்த ஓட்டம் உதவிக்காரர்கள் குழும ஆலோசகரால் கவனிக்கப்படாமல் போகவில்லை.

கண்டுபிடிக்காமலிருக்கும்படி நான் மரத்திலிருந்து மரத்திற்கு வேகமாக ஓடுவதை சகோதரர் பெலிக்ஸ் எஸ்பினோசா பார்த்தார்.

வாரத்தின் தொடக்கத்தில், சகோதரர் எஸ்பினோசா என் வீட்டிற்கு வந்து என்னுடன் பேச வேண்டும் எனச் சொன்னார். ஞாயிற்றுக்கிழமை அவர் பார்த்ததைப்பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை, நான் ஏன் எனது கூட்டத்தைத் தவறவிட்டேன் என்று அவர் என்னிடம் கேட்கவில்லை;

“ஞாயிற்றுக்கிழமை ஆசாரியத்துவ வகுப்பை நீ கற்பிக்க நான் விரும்புகிறேன் என சொல்லி ஒரு கையேட்டை என்னிடம் அவர் கொடுத்தார். உங்களுக்காக பாடத்தை நான் குறித்து வைத்திருக்கிறேன். அது மிகவும் கடினம் அல்ல. நீ அதைப் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், பாடத்திற்கான தயாரிப்பில் உனக்கு உதவ நான் இரண்டு நாட்களில் வருவேன்.” இதைச் சொல்லிவிட்டு கையேட்டை என்னிடம் கொடுத்துவிட்டு அவர் சென்றார்.

நான் வகுப்பில் கற்பிக்க விரும்பவில்லை, ஆனால் அவரிடம் முடியாது என்று சொல்ல என்னால் முடியவில்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை, மீண்டும் என் அப்பாவுடன் தங்க வேண்டும் என்று நான் திட்டமிட்டிருந்தேன், அதாவது, மற்றொரு முக்கியமான விளையாட்டு இருந்தது.

சகோதரர் எஸ்பினோசா இளைஞர்கள் போற்றும் ஒரு நபராயிருந்தார்.5 அவர் மறுஸ்தாபிதம் செய்யப்ட்ட சுவிசேஷத்தைக் கண்டுபிடித்து, அவரது வாழ்க்கையை அல்லது வேறு வார்த்தைகளில் எனில், அவரது இருதயத்தை மாற்றினார்.

சனிக்கிழமை மதியம் வந்ததும், நான் நினைத்தேன், “சரி, ஒருவேளை நாளை நான் உடல்நிலை சரியில்லாமல் எழுந்திருப்பேன், நான் சபைக்குச் செல்ல வேண்டியதில்லை.” என்னை கவலையடைய செய்தது கால்பந்து விளையாட்டு அல்ல; அது நான் கற்பிக்க வேண்டிய வகுப்பு, குறிப்பாக ஓய்வு நாள் பற்றிய பாடம்.

ஞாயிற்றுக்கிழமை வந்தது, நான் முன்னெப்போதையும் விட ஆரோக்கியமாக எழுந்தேன். என்னிடம் காரணம் இல்லை, தப்பிக்க முடியாது.

நான் ஒரு பாடம் கற்பிப்பது இதுவே முதல் முறை, ஆனால் சகோதரர் எஸ்பினோசா என் பக்கத்தில் இருந்தார், அது எனக்கு ஒரு வல்லமையான இருதய மாற்றத்தின் நாள்.

அந்த தருணத்திலிருந்து, நான் ஓய்வு நாளை பரிசுத்தமாக கடைப்பிடிக்க ஆரம்பித்தேன், காலப்போக்கில், தலைவர் ரசல் எம். நெல்சனின் வார்த்தைகளின்படி, ஓய்வு நாள் மகிழ்ச்சியாக மாறியது.6

“கர்த்தாவே, நான் உம்மிடம் சகலவற்றையும் கொடுக்கிறேன்; இனி உம்மிடம் கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை.”

பெறுதல்

இருதயத்தின் வல்லமையான மாற்றத்தை நாம் எவ்வாறு பெறுவது? இது தொடங்கப்பட்டு இறுதியில் நிகழ்கிறது:

  1. இயேசு கிறிஸ்து மீதான நமது விசுவாசத்தை வலுப்படுத்தும் அறிவைப் பெறுவதற்கு நாம் வேதங்களைப் படிக்கும்போது, அது மாறுவதற்கான விருப்பத்தை உருவாக்கும்.7

  2. ஜெபம் மற்றும் உபவாசம் மூலம் அந்த விருப்பத்தை நாம் வளர்க்கும்போது.8

  3. படித்த அல்லது பெற்ற வார்த்தையின்படி நாம் செயல்படும்போது, பென்யமீன் ராஜாவின் மக்களைப் போலவே, நம் இருதயங்களை அவரிடம் ஒப்படைக்க நாம் உடன்படிக்கை செய்கிறோம்.9

அங்கீகரித்தலும் உடன்படிக்கையும்

நமது இருதயம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் எவ்வாறு அறிகிறோம்?10

  1. நாம் எல்லாவற்றிலும் தேவனைப் பிரியப்படுத்த விரும்பும்போது.11

  2. நாம் மற்றவர்களை அன்புடனும், மரியாதையுடனும், அக்கறையுடனும் நடத்தும்போது.12

  3. கிறிஸ்துவின் குணாதிசயங்கள் நம் குணத்தின் ஒரு பகுதியாக மாறுவதை நாம் காணும்போது.13

  4. பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலை நாம் அதிகமாய் தொடர்ந்து உணரும்போது.14

  5. நாம் கீழ்ப்படிவதற்கு கடினமாக இருந்த ஒரு கட்டளையை நாம் கைக்கொண்டு, அதில் தொடர்ந்து வாழும்போது.15

நம் தலைவர்களின் அறிவுரைகளைக் கவனமாகக் கேட்டு, அதைப் பின்பற்ற வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் முடிவு செய்யும் போது, ஒரு வல்லமையான இருதய மாற்றத்தை நாம் அனுபவிக்கவில்லையா?

“கர்த்தாவே, நான் உம்மிடம் சகலவற்றையும் கொடுக்கிறேன்; இனி உம்மிடம் கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை.”

பராமரிப்பும் பலன்களும்

வல்லமையான மாற்றத்தை நாம் எவ்வாறு பராமரிப்பது?

  1. நாம் வாரந்தோறும் திருவிருந்தில் பங்கேற்கும்போது, கிறிஸ்துவின் நாமத்தை நம்மீது தரித்துக்கொள்வதற்கான உடன்படிக்கையைப் புதுப்பிக்கும்போது, எப்போதும் அவரை நினைவுகூரவும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது.16

  2. ஆலயத்தை நோக்கி நம் வாழ்க்கையை நாம் திருப்பும்போது.17 நியமங்களில் நாம் பங்குகொள்ளும்போது, ஒரு புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட இருதயத்தை பராமரிக்க வழக்கமான ஆலய வருகை நமக்கு உதவும்.

  3. ஊழிய நடவடிக்கைகள் மற்றும் ஊழியப்பணிகள் மூலம் நம் அண்டை வீட்டாரை நேசித்து சேவை செய்யும்போது.18

பின்னர் நமது பெரும் மகிழ்ச்சிக்காக, அந்த உள் மாற்றம் பலப்படுத்தப்பட்டு, நல்ல செயல்களில் பெருகும் வரை பரவுகிறது.19

இந்த வல்லமையான இருதய மாற்றம் நமக்கு சுதந்திரம், நம்பிக்கை மற்றும் சமாதான உணர்வைத் தருகிறது.20

இந்த இருதய மாற்றம் ஒரு நிகழ்வு அல்ல; அது நடக்க விசுவாசம், மனந்திரும்புதல் மற்றும் நிலையான ஆவிக்குரிய பணி தேவை. நம் விருப்பத்தை கர்த்தருக்கு சமர்ப்பிக்க விரும்பும்போது அது தொடங்குகிறது, மேலும் நாம் அவருடன் உடன்படிக்கைக்குள் பிரவேசிக்கும்போது அது நிறைவேறுகிறது.

அந்த தனிப்பட்ட செயல் நம் மீதும் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதும் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது.

தலைவர் ரசல் எம். நெல்சனின் வார்த்தைகளில், “நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, அவருடைய போதனைகளுக்குச் செவிசாய்க்க முடிவு செய்தால், உலகம் முழுவதிலும் உள்ள அழிவுகரமான மோதல்களும், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையும் எவ்வளவு விரைவில் தீர்க்கப்படும் என கற்பனை செய்யுங்கள்.”21 இரட்சகரின் போதனைகளைப் பின்பற்றும் இந்தச் செயல் இருதயத்தில் வல்லமையான மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

அன்பான சகோதர சகோதரிகளே, இளைஞர்களே, பிள்ளைகளே, இந்த வார இறுதியில் நாம் மாநாட்டில் பங்கேற்கும்போது, கர்த்தரிடமிருந்து வரும் நமது தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள், ஒரு மாபெரும் மாற்றத்தை அனுபவிப்பதற்காக நம் இருதயங்களில் நுழைவதாக.

கர்த்தரின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையில் இன்னும் சேராதவர்களுக்காக, தேவன் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறியவும், அந்த உள்மாற்றத்தை அனுபவிக்கவும் உண்மையான விருப்பத்துடன் ஊழியக்காரர்களுக்கு செவிகொடுக்க உங்களை நான் அழைக்கிறேன்.22

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்ற முடிவு செய்யும் நாள் இன்றே. “கர்த்தாவே, நான் உம்மிடம் என் இருதயத்தைக் கொடுக்கிறேன்; இனி உம்மிடம் கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை.”

அந்தக் கப்பல் விபத்தில் இருந்து மோதிரம் மீட்கப்பட்டது போல், நம் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கும்போது, இந்த வாழ்க்கையின் பொங்கி எழும் கடல்களிலிருந்து நாம் மீட்கப்பட்டு, செயல்பாட்டில், கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் நாம் சுத்திகரிக்கப்பட்டு “அவரிடமிருந்து பிறந்தவர்களாக” ஆவிக்குரிய ரீதியில் “கிறிஸ்துவின் பிள்ளைகளாக மாறுகிறோம்.”23 இதைப்பற்றி நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சாட்சியளிக்கிறேன், ஆமென்.