வேதங்கள்
2 நேபி 18


அதிகாரம் 18

கிறிஸ்து தடைக் கல்லும், இடறுதலின் கன்மலையுமாயிருப்பார் – கர்த்தரைத் தேடுங்கள். ஓதுகிற குறிசொல்வோனை அல்ல – வழிநடத்தப்படும்படிக்கு, நியாயப்பிரமாணத்திற்கும், சாட்சியத்துக்கும் திரும்புங்கள் – ஏசாயா 8ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 பின்னும் கர்த்தருடைய வார்த்தை என்னை நோக்கி: நீ ஒரு பத்திரத்தை எடுத்து, மனுஷனின் எழுத்தாணியால், அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ்ஸைக் குறித்து எழுது என்றார்.

2 அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய, ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன்.

3 நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு.

4 ஏனெனில் இதோ, இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக்கொண்டு போகப்படுமென்றார்.

5 பின்னும் கர்த்தர் என்னை நோக்கிச் சொன்னதாவது:

6 இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால்;

7 இப்பொழுது, இதோ, கர்த்தர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போல, அசீரியாவின் ராஜாவும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும், அவர்கள்மீது புரளப்பண்ணுவார், அது அவனுடைய ஓடைகளெல்லாவற்றின் மீதும் போய், அவனுடைய எல்லா கரைகள் மேலும் புரண்டு,

8 யூதாவுக்குள் புகுந்து கழுத்துமட்டும் அது தளும்பிப்போகும். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு, உமது தேசத்தின் விசாலத்தை மூடும்.

9 ஜனங்களே நீங்கள் கூட்டங்கூடுங்கள். நீங்கள் துண்டுகளாக நொறுக்கப்படுவீர்கள், தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள், இடைக்கட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் துண்டுகளாக நொறுக்கப்படுவீர்கள், இடைக் கட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் துண்டுகளாக நொறுக்கப்படுவீர்கள்.

10 ஆலோசனை செய்யுங்கள். அது அபத்தமாகும், வார்த்தையை வசனியுங்கள். அது நிற்காது, ஏனெனில் தேவன் எங்களோடே இருக்கிறார்.

11 கனமான கரத்தால் கர்த்தர் என்னுடனே இவ்விதமாய்ப் பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடக்கக்கூடாது, என்று எனக்குப் படிப்பித்து விளம்பினதாவது:

12 இந்த ஜனங்கள் கட்டுப்பாடென்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடென்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலுமிருங்கள்.

13 சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம் பண்ணுங்கள், அவரே உங்கள் பயமாயிருப்பாராக, அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.

14 அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு வீட்டாருக்கும் தடைக் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்குக் கண்ணியுமாயிருப்பார்.

15 அவர்களில் அநேகர் இடறிவிழுந்து, நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.

16 சாட்சியத்தின் ஆகமத்தைக் காட்டி, என் சீஷருக்குள்ளே நியாயப்பிரமாணத்தை முத்திரையிடு, என்றார்.

17 யாக்கோபின் வீட்டாருக்குத் தமது முகத்தை மறைக்கிற, கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.

18 இதோ, நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும், சீயோன் மலையில் வாசமாயிருக்கிற, சேனைகளின் கர்த்தராலே, இஸ்ரவேலில் அறிகுறிகளாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்.

19 அவர்கள் உங்களை நோக்கி, அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும், விசாரியுங்களென்று சொல்லும்போது, ஜீவனுள்ளோர் மரித்தோரிலிருந்து கேட்க, ஜனம் தங்கள் தேவனிடத்தில் விசாரிக்கக் கூடாதோ?

20 நியாயப்பிரமாணத்தையும் சாட்சியத்தின் ஆகமத்தையும் கவனிக்கவேண்டும், அவர்கள் இந்த வார்த்தையின்படி பேசவில்லையெனில், அது அவர்களுக்குள் ஒளியில்லாமையினால் இருக்கும்.

21 அவர்கள் பலப்படாமலும், பசியாலும் அதைக் கடந்துபோவார்கள். ஆனபடியால், அவர்கள் பட்டினியாயிருக்கும்போது மூர்க்க வெறிகொண்டு தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷித்து அண்ணாந்து பார்ப்பார்கள்.

22 அவர்கள் பூமியை நோக்கிப் பார்ப்பார்கள், இக்கட்டும், அந்தகாரமும், வியாகுலத்தின் புகைச்சலையும், காண்பார்கள். அந்தகாரத்திலே தள்ளப்படுவார்கள்.