வேதங்கள்
2 நேபி 7


அதிகாரம் 7

ஏசாயாவிலிருந்து யாக்கோபு வாசித்தலைத் தொடருகிறான்: ஏசாயா மேசியாவைப் போல் பேசுதல் – மேசியா கல்விமானின் நாவைப் பெற்றிருப்பார் – அவர், அடிப்பவர்களுக்குத் தன் முதுகைக் காட்டுவார் – அவர் தாறுமாறாக்கப்படுவதில்லை – ஏசாயா 50ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 ஆம், ஏனெனில் கர்த்தர் உரைப்பதாவது: நான் உன்னை விலக்கினேனோ அல்லது, உன்னை நான் என்றென்றைக்குமாய் அனுப்பினேனோ? ஏனெனில் கர்த்தர் உரைப்பதாவது: உன் தாயின் தள்ளுச்சீட்டு எங்கே? நான் யாருக்கு உன்னை விலக்கிவைத்தேன்? எனக்குக் கடன்கொடுத்த எவனுக்கு உன்னை விற்றேன்? ஆம், யாரிடத்தில் உன்னை நான் விற்றேன்? இதோ உங்கள் அக்கிரமங்களினிமித்தம் உங்களை நீங்களே விற்றீர்கள், உங்கள் மீறுதல்களினால் உங்களுடைய தாய் விலக்கப்பட்டாள்.

2 ஆதலால், நான் வந்தபோது, அங்கே ஒருவனும் இல்லை; நான் அழைத்தபோது, அங்கே பதிலளிப்பதற்கு ஒருவரும் இல்லை; இஸ்ரவேலின் வீட்டாரே! மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ! அல்லது விடுவிப்பதற்கு என்னிடம் வல்லமையில்லாமற்போயிற்றோ? இதோ, என் அதட்டலினாலே நான் சமுத்திரத்தை வற்றப்பண்ணி, அவைகளின் நதிகளை வெட்டாந்தரையாக்கிப் போடுகிறேன், தண்ணீர் வற்றி, அவைகளின் மீன்கள் தாகத்தால் இறப்பதினால், அவைகளை நாறப்பண்ணுவேன்.

3 நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவற்றின் போர்வையாக்குகிறேன்.

4 இஸ்ரவேல் வீட்டாரே! உனக்குச் சமயத்திற்கேற்றபடி, வார்த்தையை எப்படிப் பேசவேண்டும் என்று நான் அறிவதற்காக, கர்த்தராகிய தேவன் எனக்குக் கல்விமானின் நாவைக் கொடுத்திருக்கிறார். நீ களைப்பாய் இருக்கும்போது, அவர் காலைதோறும் எழுப்புவார். கற்றவர்களைப்போல நான் கேட்கும்படி அவர் என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்.

5 கர்த்தராகிய தேவன் என் செவியைத் திறந்தார். நான் கலகம் செய்கிறவனாகவும் இல்லை, பின்வாங்கவும் இல்லை.

6 நான் அடிக்கிறவனுக்கு என் முதுகையும், முடியைப் பிடுங்குகிறவர்களுக்கு என் கன்னத்தையும் ஒப்புக்கொடுத்தேன். என் முகத்தை அவமானத்திற்கும், உமிழ்நீருக்கும் மறைக்கவில்லை.

7 ஏனெனில் கர்த்தராகிய தேவன் எனக்குச் சகாயம் பண்ணுவார். ஆகையால் நான் தாறுமாறாக்கப்பட்டேன். ஆதலால் நான் என் முகத்தை ஒரு கன்மலையைப்போல ஆக்கினேன். நான் வெட்கப்பட்டுப்போவதில்லை என நான் அறிந்திருக்கிறேன்.

8 கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் என்னை நியாயவானாக்குகிறார். என்னோடு கூடப்போராடுகிறவன் யார்? ஒருமித்து நிற்போமாக. எனக்குச் சத்துருவானவன் யார்? அவன் என் அருகாமைக்கு வரட்டும். என் வாயின் பெலத்தால் அவனை நான் அடிப்பேன்.

9 ஏனெனில், கர்த்தராகிய தேவன் எனக்குத் துணை நிற்பார். என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்கள் எல்லோரும், இதோ அவர்கள் அனைவரும் வஸ்திரம் போல் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

10 உங்களில், கர்த்தருக்குப் பயந்து அவரின் ஊழியக்காரனின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, ஒளியற்று, இருளில் நடக்கிறவன் யார்?

11 இதோ, நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப் பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்தாலும், நீங்கள் மூட்டின அக்கினிப் பொறிகளிலும் நடவுங்கள். வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.