வேதங்கள்
2 நேபி 24


அதிகாரம் 24

இஸ்ரவேல் கூட்டிச்சேர்க்கப்பட்டு ஆயிரவருஷ இளைப்பாறுதலில் மகிழ்தல் – கலகம் செய்ததால் லூசிபர் பரலோகத்திலிருந்து துரத்தப்பட்டான் – இஸ்ரவேல், பாபிலோன் (உலகம்) மேல் ஜெயங்கொள்ளுதல் – ஏசாயா 14ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே குடியேற்றுவார்; அந்நியரும் அவர்களோடு சேர்க்கையாகி, யாக்கோபின் வம்சத்தோடு கூடிக்கொள்வார்கள்.

2 ஜனங்கள் அவர்களை அழைத்துக்கொண்டு, ஆம், பூமியின் கடையாந்திர தூரங்களிலிருந்தும் அவர்களை அவர்களின் ஸ்தானங்களில் விடுவார்கள். அவர்கள் தங்கள் வாக்குத்தத்தத்தின் தேசங்களுக்குத் திரும்புவார்கள். இஸ்ரவேல் வீட்டார் அவைகளைத் தன்வசம் செய்துகொள்வார்கள். கர்த்தருடைய தேசம் வேலைக்காரருக்கும், வேலைக்காரிகளுக்குமிருக்கும், எவரிடத்தில் இவர்கள் சிறைப்பட்டவர்களாய் இருந்தார்களோ, அவர்களை சிறைத்தனத்தவர்களாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள்.

3 அந்த நாளிலே, உன் துக்கத்திலிருந்தும் உன் பயத்திலிருந்தும் எதிலே நீ சேவிக்கும்படி உட்படுத்தப்பட்டாயோ, அந்தக் கடின அடிமைத்தனத்திலிருந்தும், கர்த்தர் உனக்கு இளைப்பாறுதல் கொடுப்பார்.

4 அந்த நாளிலே நீ பாபிலோன் ராஜாவுக்கு விரோதமாய் சொல்லவேண்டியது, ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே, பொன்னான நகரம் ஒழிந்துபோயிற்றே!

5 கர்த்தர் துஷ்டரின் கோலையும், அரசர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்.

6 உக்கிரங்கொண்டு, ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் தேசங்களை அரசாண்டவன் தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.

7 பூமி முழுவதும் இளைப்பாறி, அமைதியாயிருக்கிறது; அவர்கள் கெம்பீரமாய்ப் பாடத் தொடங்குகிறார்கள்.

8 ஆம், தேவதாரு மரங்களும், லீபனோனின் கேதுருக்களும், உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு, எங்களை வெட்டவருவார் ஒருவருமில்லை, என்று சொல்லுகிறது.

9 கீழேயிருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு அது மரித்தோரையும், பூமியிலுள்ள அதிபதிகள் எல்லோரையும் உனக்காகக் கூட ஏவுகிறது. தேசங்களுடைய எல்லா ராஜாக்களையும், அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.

10 அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலவீனமானாயோ, நீயும் எங்களைப் போலானாயோ?

11 உன் ஆடம்பரமும் கல்லறைக்குக் கொண்டுபோகப்படுகிறது; உன் வாத்தியங்களின் சத்தங்களும் கேட்கப்படுவதில்லை; உனக்குக் கீழே புழு படர்ந்திருக்கிறது, உன்னைப் புழுக்கள் மூடியிருக்கிறது.

12 லூசிபரே, விடியற்காலையின் மகனே, நீ வானத்திலே இருந்து விழுந்தாயே! தேசங்களை ஈனப்படுத்தினவனே, நீ தரையில் விழவெட்டப்பட்டாயே!

13 நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன், வடபுறங்களிலுள்ள ஆராதனை கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,

14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன் என்றும் நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும், உன் இருதயத்திலே சொன்னாய்.

15 ஆனாலும் நீ துரவின் பக்கங்களாகிய பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.

16 உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக் குறித்து சிந்தித்து, இவன்தானா பூமியை நடுங்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து,

17 உலகத்தை வனாந்தரமாக்கி அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களின் வீடுகளை திறக்காமலிருந்தவன் என்பார்கள்.

18 தேசங்களுடைய சகல ராஜாக்களும், ஆம், அவர்களின் அனைவரும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடக்கிறார்கள்.

19 ஆனால் நீயோ, அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயத்தால் குத்தப்பட்டு, கொலையுண்டவர்களின் மீதியானவர்கள் துரவின் கற்களுக்கு கீழே போகிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கபட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பே எறிந்துவிடப்பட்டாய்.

20 அடக்கம்பண்ணப்படுவதில் நீ அவர்களோடே சேர்ந்திருக்கமாட்டாய். ஏனெனில் நீ உன் தேசத்தை அழித்தாய். உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய், தீமை செய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.

21 அவன் புத்திரர் எழும்பித் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, உலகத்தின் மேற்பரப்பைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்களுடைய பிதாக்களுடைய அக்கிரமத்தினிமித்தம், அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம்பண்ணுங்கள்.

22 ஏனெனில், நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன், என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும், பௌத்திரனையும், சங்கரிப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

23 அதை முள்ளம்பன்றிகள் ஆட்கொள்ளும் இடமாயும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதை சங்காரமென்ற துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன், என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்.

24 சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னதாவது: நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும், நான் நிர்ணயித்தபடியே நிலை நிற்கும்.

25 நான் என் தேசத்திலே அசீரியனைக் கொண்டுவந்து, என் மலைகளின் மீது காலுக்குக் கீழே மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவன் நுகம் அவர்கள் மேலிருந்து விலகி, அவன் சுமை அவர்களின் தோளிலிருந்து நீங்கும்.

26 பூமியனைத்தின் மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல தேசங்கள் மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையுமிதுவே, என்றார்.

27 சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார். யார் அதை வியத்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது. யார் அதை திருப்புவான்?

28 ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் என்னவென்றால்,

29 முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த அவனுடைய கோல் முறிந்ததென்று களிப்பாயிராதே; ஏனெனில் சர்ப்பத்தின் வேரிலிருந்து கட்டுவிரியன் வரும், அவனுடைய கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும்.

30 சிறுமையானவர்களின் தலைப்பிள்ளைகள் திருப்தியாய்ப் புசித்து, எளியவர்கள் சுகமாய்ப் படுத்திருப்பார்கள்; உன் வேரைப் பஞ்சத்தினாலே சாகப்பண்ணுவேன். உன்னில் மீதியானவர்களை அவன் கொன்றுபோடுவான்.

31 வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே நீ முழுவதும் கரைந்து போகிறாய். ஏனென்றால் வடக்கேயிருந்து புகைக்காடு வருகிறது. அவருடைய நிர்ணயித்த நேரங்களில் ஒருவரும் தனித்திருப்பதில்லை.

32 அப்பொழுது இந்த தேசங்களில் தூதுவர்களுக்கு என்ன மறு உத்தரவு சொல்லப்படும்? சீயோனை கர்த்தர் ஸ்தாபித்தார். அதிலே அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் திடன்கொள்வார்கள்.