வேதங்கள்
2 நேபி 21


அதிகாரம் 21

ஈசாயின் அடிமரம் (கிறிஸ்து) நீதியிலே நியாயந்தீர்ப்பார் – ஆயிர வருஷ காலத்திலே, தேவனை அறிகிற அறிவினாலே பூமி நிறைக்கப்படும் – கர்த்தர் ஒரு கொடியை உயர்த்தி இஸ்ரவேலைச் கூட்டிச்சேர்ப்பார் – ஏசாயா 11ஐ ஒப்பிடவும். ஏறக்குறைய கி.மு. 559–545.

1 ஈசாயின் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி அதன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தரிடம் பயத்தையும் அருளும் ஆவியுமாகிய, கர்த்தருடைய ஆவியானவர் அவர் மேல் தங்கியிருப்பார்.

3 அவரைக் கர்த்தருக்கு பயப்படுதலில் விரைவாய் உணர்பவராக்கும், அவர் தமது கண் கண்டபடி நியாயம் தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தண்டியாமலும்,

4 நீதியின்படி அவர் ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள எளிமையானவர்களுக்கு தீர்ப்புச் செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

5 நீதி அவருக்கு அரைக் கட்டும், விசுவாசம் அவருக்கு இடைக் கச்சையுமாயிருக்கும்.

6 ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், சிறுத்தைப்புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும், கன்றுக்குட்டியும் பாலசிங்கமும் காளையும் ஒருமித்திருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை நடத்துவான்.

7 பசுவும் கரடியும் கூடிமேயும்; அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.

8 பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை, கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைப்பான்.

9 என் பரிசுத்த பர்வதமெங்கும் அழிப்பாருமில்லை. கேடு செய்வாருமில்லை, சமுத்திரம் ஜலத்தினால் மூடப்பட்டிருப்பதுபோல, பூமி கர்த்தரின் ஞானத்தால் நிறைந்திருக்கும்.

10 அந்நாளிலே ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக புறஜாதியார் தேடுவார்கள். அவரின் தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும்.

11 அந்நாளிலே விட்டுப்போன தன் ஜனத்தின் மீதியானவர்களை அசீரியாவிலும் எகிப்திலிருந்தும், பத்ரோஸ்ஸிலிருந்தும், கூஷ்ஷிலிருந்தும் ஏலாமிலிருந்தும், சிநேயாரிலிருந்தும், ஆமாத்திலிருந்தும், சமுத்திரத் தீவுகளிலிருந்தும் மீட்டுக்கொள்ள இரண்டாம் விசை தமது கரத்தை நீட்டிடுவார்.

12 தேசங்களுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்தும் கூட்டிச்சேர்ப்பார்.

13 எப்பிராயீமின் பொறாமை நீங்கும். யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள். எப்பிராயீம் யூதாவின் மேல் பொறாமை கொள்ளான். யூதா எப்பிராயீமை கோபப்படுத்தான்.

14 அவர்கள் மேற்குப்புறமாக பெலிஸ்தருடைய தோள்களின்மீது பறப்பார்கள், அவர்கள் கிழக்கில் உள்ளவர்களை ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடிப்பார்கள், அவர்கள் தங்கள் கையை ஏதோம் மற்றும் மோவாபின் மேலும் போடுவார்கள். அம்மோன் புத்திரர் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.

15 எகிப்தின் சமுத்திரமுனையை கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தன் கையை நீட்டி, ஏழாறுகளாப் பிரித்து, ஜனங்கள் கால் நனையாமல் நடந்து போகும்படிபண்ணுவார்.

16 எகிப்து தேசத்தின் வெளியே அவன் வந்த அந்த நாளிலே, இஸ்ரவேலுக்கு இருந்ததைப்போல அசீரீயாவிலிருந்து மீதியானவர்களுக்காக அங்கே ஒரு பெரும் பாதையிருக்கும்.