வேதங்கள்
2 நேபி 31


அதிகாரம் 31

கிறிஸ்துவுக்கு ஏன் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது என நேபி சொல்லுதல் – இரட்சிக்கப்பட மனுஷர் கிறிஸ்துவைப் பின்பற்றி, ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, முடிவுபரியந்தமும் நிலைத்திருக்கவேண்டும் – மனந்திரும்புதலும், ஞானஸ்நானமுமே இடுக்கமான, மற்றும் நெருக்கமான பாதைக்கு வாசல் – ஞானஸ்நானத்திற்குப் பின்பு கட்டளைகளைக் கைக்கொள்பவர்களுக்கே நித்திய ஜீவன் கிடைக்கிறது. ஏறக்குறைய கி.மு. 559–545.

1 என் பிரியமான சகோதரரே, இப்பொழுது நேபியாகிய நான், உங்களிடத்தில் சொல்லும் என் தீர்க்கதரிசனங்களை முடித்துக்கொள்கிறேன். நிச்சயமாக வரப்போகிறவைகள் என அறிந்த சிலவற்றைத் தவிர, மற்றவைகளை நான் எழுத முடியாது; என் சகோதரனாகிய யாக்கோபின் வார்த்தைகளிலும் சிலவற்றைத் தவிர எல்லாவற்றையும் எழுத இயலாது.

2 ஆகையால், கிறிஸ்துவின் உபதேசங்களைக் குறித்தும் சில வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர, நான் எழுதிய காரியங்கள் எனக்குப் போதுமானவைகளாக இருக்கின்றன. ஆதலால், என் தீர்க்கதரிசனங்களின் தெளிவின்படியே, நான் உங்களிடம் தெளிவாகப் பேசுவேன்.

3 ஏனெனில், என் ஆத்துமா தெளிவானவைகளில் களிகூர்கிறது, இப்படியே கர்த்தராகிய தேவன், மனுபுத்திரர் மத்தியில் கிரியை செய்கிறார். ஏனெனில் கர்த்தராகிய தேவன் புரிந்து கொள்ளுவதற்குரிய ஒளியைத் தருகிறார். அவர் மனுஷனுடைய பாஷையின்படியே அவர்கள் புரிந்துகொள்ளுவதற்காக பேசுகிறார்.

4 ஆகையால், உலகத்தின் பாவங்களை நீக்குகிறவராகிய தேவ ஆட்டுக்குட்டிக்கு, ஞானஸ்நானம் கொடுக்க இருக்கிற, கர்த்தர் எனக்குக் காட்டிய தீர்க்கதரிசியைக் குறித்து உங்களிடத்தில் பேசினேன் என்பதை நீங்கள் நினைவுகூரவேண்டும், என விரும்புகிறேன்.

5 இப்பொழுதும், தேவாட்டுக்குட்டியானவர் பரிசுத்தமாயிருந்தும், எல்லா நீதியையும் நிறைவேற்றும்படி, தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுவது, அவசியமாயிருக்குமெனில், பரிசுத்தமற்றவர்களாயிருக்கிற நாம், தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுவது எவ்வளவு அவசியமானதாயிருக்கும்.

6 இப்பொழுதும், என் பிரியமான சகோதரரே, தேவாட்டுக்குட்டியானவர் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெற்றதினால், எல்லா நீதியையும் நிறைவேற்றினாரா? என்று நான் உங்களைக் கேட்கிறேன்.

7 அவர் பரிசுத்தர் என்று நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அவர் பரிசுத்தராயிருந்த போதிலும், மாம்சத்தின்பிரகாரமாய் பிதாவுக்கு முன்பாகத் தம்மைத் தாழ்த்தினார் என்பதை மனுபுத்திரருக்குக் காண்பித்து, பிதாவினுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படிகிறார் என்றும், அவருக்குச் சாட்சி கொடுக்கிறார்.

8 ஆகையால் அவர் தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, பரிசுத்த ஆவியானவர் புறாவின் வடிவத்திலே அவர் மேல் இறங்கினார்.

9 இது அவர்கள் பிரவேசிக்கவேண்டுமென்று, அவர்கள் முன்பாக அவர் எடுத்துக்காட்டாக விளங்குகிற, வழியின் இடுக்கத்தையும், வாசலின் நெருக்கத்தையும் மனுபுத்திரருக்கு மறுபடியும் காண்பிக்கிறது.

10 அவர் மனுபுத்திரரை நோக்கி: என்னைப் பின்பற்றுங்கள் என்றார். ஆகையால் என் பிரியமான சகோதரரே, பிதாவின் கட்டளைகளைக் கைக்கொள்ள சித்தமுடையவர்களாயிராமல், நாம் இயேசுவைப் பின்பற்ற முடியுமா?

11 பிதா சொன்னதாவது: மனந்திரும்புங்கள், மனந்திரும்புங்கள், என் நேசகுமாரனின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்.

12 குமாரனின் சத்தம் எனக்கு உண்டாகிச் சொன்னதாவது: என் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்பவன் எவனோ, அவனுக்கும் என்னைப் போலவே பிதா பரிசுத்த ஆவியானவரை அளிப்பார். ஆகையால் என்னைப் பின்பற்றி, நான் செய்ததாக நீங்கள் கண்ட காரியங்களைச் செய்யுங்கள்.

13 ஆகையால், என் பிரியமான சகோதரரே, உங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி, உங்களின் கர்த்தரும் இரட்சகருமானவரின் வார்த்தைகளின்படியே அவரைப் பின்பற்றி, தண்ணீருக்குள் மூழ்கிப்பெறும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவினுடைய நாமத்தை, தங்கள்மீது எடுத்துக்கொள்ள மனதுள்ளவர்களாயிருக்கிறீர்கள், என பிதாவுக்குச் சாட்சியளித்து, தேவசமுகத்தில், உள்ளத்தின் முழுநோக்கத்தோடும், மாய்மாலம் புரியாமலும், வஞ்சிக்காமலும், போலியற்ற விருப்பத்தோடும் இருந்து, குமாரனைப் பின்பற்றுவீர்களானால், இதோ, பரிசுத்த ஆவியானவரைப் பெறுவீர்கள் என்று அறிந்திருக்கிறேன். அதன் பின்பு அக்கினியாலும், பரிசுத்த ஆவியானவராலும் ஞானஸ்நானம் வரும். பிறகு நீங்கள் தூதர்களின் பாஷைகளைப் பேசி, இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு துதிகளை எழுப்ப முடியும்.

14 ஆனாலும் இதோ, என் பிரியமான சகோதரரே, குமாரனுடைய வார்த்தை இவ்விதமாய் எனக்கு உண்டாகிச் சொன்னதாவது: உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, தண்ணீரில் ஞானஸ்நானம் மூலமாக என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளச் சித்தமாயிருக்கிறீர்கள் என்று பிதாவுக்குச் சாட்சிகொடுத்து, பரிசுத்த ஆவியானவராலும், அக்கினியாலும் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டு, தூதர்களின் பாஷையாகிய, புதிய பாஷையினால் பேச முடிந்த பின்பு, என்னை மறுதலிப்பீர்களானால், நீங்கள் என்னை அறியாமலிருந்திருப்பதே உங்களுக்கு நலமாயிருந்திருக்கும்.

15 பிதாவிடமிருந்து நான் கேட்ட சத்தம் சொன்னதாவது: ஆம், எனக்குப் பிரியமானவரின் வார்த்தைகள் சத்தியமும் உண்மையுமானவை. முடிவுபரியந்தமும் நிலை நிற்பவனே, இரட்சிக்கப்படுவான்.

16 இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, ஒருவன் முடிவுபரியந்தமும், ஜீவனுள்ள தேவ குமாரனின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நிலைத்திராவிட்டால், அவன் இரட்சிக்கப்படமுடியாது என்பதை இதனால் அறிவேன்.

17 ஆகையால் உங்களுடைய கர்த்தரும், மீட்பருமானவர் செய்யப்போகிறவைகளாக நான் கண்டு உங்களுக்குச் சொன்ன காரியங்களையே செய்யுங்கள். நீங்கள் எந்த வாசலின் வழியாகப் பிரவேசிக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கே, இவைகள் எனக்குக் காட்டப்பட்டுள்ளன. நீங்கள் பிரவேசிக்கவேண்டிய வாசல் மனந்திரும்புதலும், தண்ணீரினால் பெறுகிற ஞானஸ்நானமுமாயிருக்கிறது. அதன் பின்னர் உங்கள் பாவமன்னிப்பு அக்கினியினாலும், பரிசுத்த ஆவியானவராலும் வருவதாயிருக்கிறது.

18 பின்பு நீங்கள் நித்திய ஜீவனுக்கு அழைத்துச் செல்லும் நெருக்கமும் இடுக்கமுமான வழியிலிருப்பீர்கள். ஆம், நீங்கள் இந்த வாசலின் வழியாக உட்பிரவேசித்திருக்கிறீர்கள். பிதா, குமாரன் ஆகியோரின் கட்டளைகளின்படியே நீங்கள் செய்திருக்கிறீர்கள், நீங்கள் பெறப்போகிற வழியின் மூலமாகப் பிரவேசிப்பீர்களானால், பெற்றுக்கொள்வீர்களென்று அவர் செய்த வாக்குத்தத்தம் நிறைவேறும்படியாக, பிதாவையும் குமாரனையும் சாட்சி கொடுக்கிற, பரிசுத்த ஆவியானவரையும் நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள்.

19 இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, நீங்கள் நெருக்கமும் இடுக்கமுமான வழியை அடைந்த பின்பு, எல்லாம் முற்றுப்பெற்றதா என்று உங்களைக் கேட்கிறேன். இதோ, அப்படியல்ல என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வார்த்தையினாலே அவரிலே உண்டான அசைக்கமுடியாத விசுவாசத்தினாலும், இரட்சிக்க வல்லமையுடையவருடைய நற்குணங்களில் முழுமையாய் சார்ந்திருந்ததனாலுமேயன்றி, நீங்கள் இதுவரைக்கும் வராமல் போயிருப்பீர்கள்.

20 ஆகையால், கிறிஸ்துவில் திடநம்பிக்கையாய், பூரணமான நம்பிக்கையின் பிரகாசத்தோடும், தேவனிடத்திலும், எல்லா மனுஷரிடத்திலும் அன்போடும் நீங்கள் முன்னேறிச்செல்லவேண்டும். அதனால் நீங்கள் கிறிஸ்துவின் வார்த்தைகளை ருசித்து, முடிவுபரியந்தம் நிலைநின்று முன்னேறிச் செல்வீர்களானால், இதோ நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள், என பிதா உரைக்கிறார்.

21 இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, இதுவே வழி, இதைத் தவிர வானத்தின்கீழே, தேவனுடைய ராஜ்யத்தில் மனுஷன் இரட்சிக்கப்படும்படிக்கு வேறெந்த வழியோ, நாமமோ கொடுக்கப்படவில்லை. இதோ இப்பொழும், இதுவே கிறிஸ்துவின் உபதேசமாயும், சதாகாலங்களிலும் என்றென்றுமாயிருக்கிற ஒரே தேவனான, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோருடைய, ஒரே சத்தியமான உபதேசமுமாயிருக்கிறது. ஆமென்.