பொது மாநாடு
அவர் என்னைக் குணப்படுத்த முடியும்!
ஏப்ரல் 2023 பொது மாநாடு


அவர் என்னைக் குணப்படுத்த முடியும்!

தற்செயலான தவறுகள், மோசமான முடிவுகள், சவால்கள் மற்றும் எல்லா வகையான சோதனைகளுக்கும், அப்படியே நமது பாவங்களுக்கும் இரட்சகரின் குணமாக்கும் மற்றும் மீட்கும் வல்லமை பொருந்துகிறது.

நாம் மார்மன் புஸ்தகத்தை வாசித்து, அக்கறையுள்ள இருதயத்தோடும், கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து அது உண்மையாவென நித்திய பிதாவாகிய தேவனிடம் பின்னர் கேட்போமேயானால், அவர் அதன் சத்தியத்தை உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையிலே வெளிப்படுத்துவார் என்று மரோனி உறுதியளிக்கிறான்.1 லட்சக்கணக்கான மக்கள் இந்த வாக்குறுதியைப் பயன்படுத்தியுள்ளனர் மற்றும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபித முழுமைக்கு உறுதியான சாட்சியைப் பெற்றுள்ளனர்

மார்மன் புஸ்தகத்தைப் படிக்கும்போது, கர்த்தர் மனுபுத்திரருக்கு ஆதாமின் சிருஷ்டிப்பு தொடங்கி, நீங்கள் இவைகளைப் பெறும் சமயம் வரைக்குமாய், கர்த்தர் எவ்வளவு இரக்கமுள்ளவராயிருந்திருக்கிறார்… இதை உங்கள் இருதயங்களில் தியானிக்கவேண்டுமென்று மரோனி நமக்கு அறிவுறுத்துகிறான்.2 மார்மன் புஸ்தகத்தில் உள்ள கதைகள் மற்றும் போதனைகள் இரட்சகரின் அன்பு, மனதுருக்கம் மற்றும் இரக்கத்தை நமக்கு நினைவூட்டுகின்றன, சாட்சியமளிக்கின்றன.

எனது தந்தை ஏப்ரல் 2013-ல் மரித்தார் அவருக்குப் பிடித்தமான வேதங்களை அறிந்து அவற்றை நேசிப்பதால் நான் எவ்வளவு பாக்கியசாலி என்பதை அவருடைய இறுதிச் சடங்கில் நான் பேசத் தயாரானபோது உணர்ந்தேன். குடும்பக் கூட்டங்களில் அவர் அவற்றைப் பகிர்ந்து கொண்டார், எனக்கு ஆலோசனை, வழிகாட்டுதல் அல்லது என் விசுவாசத்தைப் பலப்படுத்துதல் தேவைப்படும்போது அவற்றை என்னுடன் வாசித்தார். சபை சொற்பொழிவுகளிலும், பொறுப்புகளிலும் அவர் அவற்றைப் பகிர்ந்து கொள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அவைகளை அறிந்திருப்பது மட்டுமல்லாமல் அவரது குரலின் ஒலி மற்றும் அவர் அவற்றைப் பகிர்ந்து கொள்ளும்போது நான் கொண்டிருந்த ஆவிக்குரிய உணர்வுகளை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன் வேதவசனங்கள் மற்றும் உணர்வுகளைப் பகிர்வதன் மூலம், விசுவாசத்தின் உறுதியான அடித்தளத்தை நிறுவுவதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் என் தந்தை எனக்கு உதவினார்.

குறிப்பாக நேபியின் ஜனங்களுக்கு இரட்சகரின் வருகையின் குறிப்பை என் தந்தை விரும்பினார்3 உயிர்த்தெழுப்பப்பட்ட மற்றும் மேன்மையடைந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றியது இந்த பரிசுத்த நிகழ்வு. நாம் மனந்திரும்பினால் துன்பப்படக்கூடாது என்பதற்காக அவர் கசப்பான கோப்பையை குடித்துவிட்டு, பெரும் பாடுகளை அனுபவித்தார்.4 அவர் ஆவி உலகத்திற்குச் சென்று அங்கு சுவிசேஷத்தை பிரசங்கிக்க ஏற்பாடு செய்திருந்தார்.5 அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், வருங்கால சந்ததியினரை ஆசீர்வதிக்கும் வேதவசனங்களை நேபியர்களுடன் பகிர்ந்து கொள்ள பிதாவிடமிருந்து கட்டளைகளைப் பெற்றார்.6 அவர் மேன்மையடைந்தவராக நித்திய வல்லமை, திறன் அனைத்தையும் கொண்டிருந்தார். அவருடைய போதனைகளின் ஒவ்வொரு விவரத்திலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம்.

உலகிற்கு வருவார் என்று தீர்க்கதரிசிகள் சாட்சியமளித்த மற்றும் நேபியர்களுக்கு இயேசு கிறிஸ்து தாமே என்று கற்பிக்க இரட்சகர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்ததை 3 நேபி 11-ல் நாம் வாசிக்கிறோம். அவர் உலகத்தின் ஒளி என்றும், உலகின் பாவங்களை எடுத்துக்கொள்வதில் பிதாவை மகிமைப்படுத்தினார் என்றும் அவர் பிரகடனப்படுத்தினார். தங்களுடைய கைகளை அவருடைய விலாவினுள் போட்டு, அவருடைய கைகளிலும் கால்களிலும் உள்ள ஆணிகளின் தழும்புகளை உணரும்படியாக அவர் ஜனங்களை எழுந்துவரும்படி அழைத்தார். உலகத்தின் பாவங்களுக்காகக் கொல்லப்பட்ட இஸ்ரவேலின் தேவன் அவர் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள அவர் விரும்பினார் ஜனங்கள் தங்கள் கைகளினால் உணர்ந்தும், வரப்போகிறவர் என்று தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவர் அவரே என்றும், அவர்கள் ஒவ்வொருவராய் சென்று மகிழ்ச்சியுடன் மறுமொழி கூறினர்.7

மனந்திரும்புதலின் முக்கியத்துவம், சிறுபிள்ளையைப் போல் மாறுதல், மற்றும் அவருடைய அதிகாரத்தைப் பெற்ற ஒருவரால் ஞானஸ்நானம் பெறுவதைப்பற்றி இயேசு நேபியர்களுக்கு போதித்தார். புதிய ஏற்பாட்டில் இந்த ஆண்டு நாம் படிக்கும் கோட்பாட்டின் பெரும்பகுதியை அவர் கற்பித்தார்.

பிதாவினிடத்திற்குச் செல்வதற்கும், காணாமற்போன இஸ்ரவேலின் கோத்திரத்தாருக்கு தம்மைக் காட்டுவதற்கும் இதுவே நேரம் என்று இயேசு மக்களிடம் கூறியதாக நாம் 3 நேபி 17-ல் வாசிக்கிறோம்.8 அவர் திரளான மக்கள் மீது தம் கண்களை செலுத்தியபோது, மக்கள் “கண்ணீரோடு” அங்கேயே அமர்ந்திருந்து, “அவர் தங்களோடு சற்று அதிகமாய்த் தங்கவேண்டுமென்று கேட்பதுபோன்று அவர்கள் அவரையே, கண்ணிமைக்காமல் பார்த்ததையும் கவனித்தார்.9

நேபியர்களுக்கு இரட்சகரின் பதில் மனதைத் தொடுவதாகவும் போதனையாகவும் இருந்தது. அவர் கூறினார் “இதோ, என் உள்ளம் உங்கள் பேரில் மனதுருக்கத்தால் நிரம்பியிருக்கிறது”.10

அவருடைய இரக்கம் மக்களின் கண்ணீருக்கான பதிலை விட அதிகம் என்று நான் நம்புகிறேன். அவருடைய பாவ நிவாரண பலியின் கண்களால் அவர் அவர்களைப் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது. அவர்களுடைய ஒவ்வொரு வலியையும், துன்பத்தையும், சோதனையையும் கண்டார். அவர்களுடைய நோய்களைக் கண்டார். அவர் அவர்களின் பலவீனங்களைக் கண்டார், மேலும் கெத்செமனே மற்றும் கொல்கொதாவில் அவர் அனுபவித்த வேதனையிலிருந்து அவர்களின் குறைபாடுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பதை அவர் அறிந்திருந்தார்.11

அதேபோல், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பார்க்கும்போது, ​​அவர் நம்முடைய பாவங்களின் வலியையும் பாரத்தையும் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார். அவர் நம்முடைய அடிமைத்தனங்களையும் சவால்களையும் பார்க்கிறார். அவர் எவ்விதமான நம் போராட்டங்களையும் துன்பங்களையும் பார்க்கிறார், மேலும் அவர் நம்மீது இரக்கத்தால் நிரப்பப்படுகிறார்.

நேபியர்களுக்கு அவருடைய அன்பான அழைப்பு தொடர்ந்தது: “உங்களுள் வியாதியஸ்தர் எவரேனும் உண்டோ? அவர்களை இங்கே கொண்டுவாருங்கள். உங்களிடையே முடவர், குருடர், சப்பாணி, ஊனர், குஷ்டரோகி, சூம்பின உறுப்புடையர், செவிடர், எந்த விதத்திலும் உபத்திரவப்பட்டவர் எவரேனும் உண்டா? அவர்களை இங்கே கொண்டுவாருங்கள் நான் அவர்களை சுகப்படுத்துவேன், ஏனெனில் நான் உங்கள்மேல் மனதுருக்கமாயிருக்கிறேன், என் உள்ளம் இரக்கத்தால் நிரம்பியிருக்கிறது.”12

“திரளானோர் அனைவரும் ஒரே மனதாய்த் தங்கள் வியாதியஸ்தரோடும் … எந்த விதத்திலும் உபத்திரவப்பட்ட அனைவருடனும் போனார்கள், அவர் அவர்கள் தம்மிடத்தில் அழைத்துவரப்பட்டபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தினார்.”13

1990-ல் நாங்கள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள சேல் என்ற சிறிய நகரத்தில் வசித்து வந்தோம். நாங்கள் குடும்பம், சபை மற்றும் வேலை பொறுப்புகளில் மகிழ்ச்சியுடன் தீவிரமாக இயங்கிகொண்டிருந்தோம். கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் முன்பு ஒரு அழகான கோடைகால சனிக்கிழமையன்று, சில பூங்காக்களையும் பிடித்த கடற்கரையையும் பார்வையிட முடிவு செய்தோம். குடும்பமாக விளையாடி ஒரு அற்புதமான நாளை அனுபவித்துவிட்டு, அனைவரையும் காரில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பினோம். வாகனம் ஓட்டும் போது, ​​நான் சிறிது தூங்கியதால், மற்றொரு காருடன் நேருக்கு நேராக மோதி விபத்தை ஏற்படுத்தினேன். சிறிது குணமாக்கப்பட்ட நேரம் கழித்து, நான் வாகனத்தை சுற்றி பார்த்தேன். என் மனைவி மாக்சின் கால் மோசமாக முறிந்து மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மார்பெலும்பு உடைந்தது. எங்கள் மூன்று மகள்களும் அதிர்ச்சியில் இருந்தனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக நன்றாக இருப்பதாகத் தோன்றியது. எனக்கு சில சிறிய காயங்கள் இருந்தன. ஆனால் எங்கள் ஐந்து மாத மகன் அசையாமல் இருந்தான்.

அந்த விபத்துக் காட்சியின் மன அழுத்தம் மற்றும் குழப்பத்திற்கு மத்தியில், எங்கள் 11 வயது மூத்த மகள் கேத் அவசரமாக, “அப்பா, நீங்கள் ஜரோமிற்கு ஒரு ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும்.” என்றாள் சிறிது போராட்டத்திற்கு பிறகு நானும் என் மகள்களும் காரை விட்டு இறங்கினோம். மாக்சினால் நகர முடியவில்லை. கவனமாக நான் ஜரோமை கையில் எடுத்தேன்; பிறகு என் முதுகு நிலத்தில் படும்படி படுத்து, ​​மெதுவாக அவனை என் மார்பில் வைத்து, அவனுக்கு ஒரு ஆசாரியத்துவ ஆசீர்வாதத்தை வழங்கினேன். சுமார் 40 நிமிடங்கள் கழித்து ஆம்புலன்ஸ் வருவதற்குள், ஜரோம் சுயநினைவுக்கு திரும்பினான்.

அன்று இரவு, நான் மூன்று குடும்ப உறுப்பினர்களை மருத்துவமனையில் விட்டுவிட்டு என் இரண்டு மகள்களுடன் டாக்ஸியில் வீட்டிற்கு சென்றேன். நீண்ட இரவு முழுவதும், என் குடும்பத்தாரும் மற்ற வாகனத்தில் காயமடைந்தவர்களும் குணமடைய பரலோக பிதாவிடம் மன்றாடினேன். என் ஜெபங்களுக்கும் பலர் மனமுவந்து செய்த ஜெபங்களுக்கும் இரக்கத்துடன் பதில் கிடைத்தது. ஒரு பெரிய ஆசீர்வாதம் மற்றும் மென்மையான இரக்கத்தின் மூலம் காலப்போக்கில் அனைவரும் குணமடைந்தனர்.

ஆனாலும், இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான விபத்தை ஏற்படுத்தியதற்காக எனக்கு ஆழ்ந்த குற்ற உணர்வும் வருத்தமும் இருந்தது. நான் இரவில் விழித்திருந்து பயங்கரமான நிகழ்வுகளை நினைவுகூருவேன். நான் சமாதானம் பெறவும், என்னை மன்னிக்கவும் பல ஆண்டுகள் போராடினேன். பின்னர், ஒரு ஆசாரியத்துவத் தலைவராக, மற்றவர்கள் மனந்திரும்புவதற்கு உதவும்போதும், இரட்சகரின் மனதுருக்கம், இரக்கம் மற்றும் அன்பை உணர அவர்களுக்கு உதவும்போதும், ​​அவர் என்னைக் குணப்படுத்த முடியும் என்பதை நான் உணர்ந்தேன்.

இரட்சகரின் குணமாக்கும் மற்றும் மீட்கும் வல்லமை தற்செயலான தவறுகள், மோசமான முடிவுகள், சவால்கள் மற்றும் ஒவ்வொரு வகையான சோதனைகளுக்கும், நமது பாவங்களுக்கும் பொருந்தும். நான் அவரிடம் திரும்பியபோது, ​​​​என் குற்ற உணர்வு மற்றும் வருத்தம் படிப்படியாக மாறி சமாதானம் மற்றும் இளைப்பாறுதலை பெற்றேன்.

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “இரட்சகர் அனைத்து மனிதகுலத்திற்காகவும் பாவநிவர்த்தி செய்தபோது, அவரைப் பின்தொடர்பவர்கள் அவருடைய குணப்படுத்துதல், பலப்படுத்துதல் மற்றும் மீட்கும் வல்லமையை அணுகுவதற்கான ஒரு வழியைத் திறந்தார். இந்த ஆவிக்குரிய சிலாக்கியங்கள், அவரைக் கேட்கவும், அவரைப் பின்பற்றவும் முயல்பவர்களுக்குக் கிடைக்கும்.14

சகோதர சகோதரிகளே, தீர்க்கப்படாத பாவத்தின் சுமையை நீங்கள் சுமந்திருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பு உங்களுக்கு எதிராக செய்த குற்றத்தால் துன்பப்பட்டாலும், அல்லது தற்செயலான தவறுக்காக உங்களை மன்னிக்க போராடினாலும், இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் குணப்படுத்தும், மீட்கும் வல்லமையை நீங்கள் அணுகலாம்.

அவர் ஜீவிக்கிறாரென நான் சாட்சியளிக்கிறேன்! அவரே நமது இரட்சகர், நமது மீட்பர். அவர் நம்மை நேசிக்கிறார். அவர் நம்மீது இரக்கமுள்ளவர், அவர் மனதுருக்கத்தால் நிறைக்கப்பட்டிருக்கிறார், அவரால் உங்களைக் குணப்படுத்த முடியும். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.