பொது மாநாடு
இயேசு கிறிஸ்துவைப்பற்றிய இந்த எண்ணத்தை என் மனம் பிடித்துக் கொண்டது
ஏப்ரல் 2023 பொது மாநாடு


இயேசு கிறிஸ்துவைப்பற்றிய இந்த எண்ணத்தை என் மனம் பிடித்துக் கொண்டது

இயேசு கிறிஸ்துவின் சிந்தனையை நீங்கள் கவனமாகப் பிடித்துக் கொள்ளும்போது, உங்களுக்கு வழிகாட்டுதல் மட்டுமல்ல, பரலோக வல்லமையும் கிடைக்கும் என நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்.

இந்த அழகான ஈஸ்டர் நேரத்தில், “Guide us, O thou great Jehovah” 1 என்ற இந்த வல்லமைவாய்ந்த பாடலின் ஜெபத்தை நான் எதிரொலிக்கிறேன்.

மார்மன் புஸ்தகத்தில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க கதை, ஆல்மா என்ற ஒரு பிரசித்தம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனைப்பற்றி சொல்கிறது, இவனைப்பற்றி வேதவசனங்கள் விக்கிரக ஆராதனை செய்யும் அவிசுவாசி என்று விவரிக்கின்றன.2 அவன் வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் இருந்தான், மற்றவர்கள் தன்னைப் பின்பற்றும்படி வற்புறுத்துவதற்காக முகஸ்துதியைப் பயன்படுத்தினான். ஆச்சரியப்படும் விதமாக, ஒரு தூதன் ஆல்மாவுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் தோன்றினான். ஆல்மா பூமியில் விழுந்து மிகவும் பலவீனமாக இருந்ததால், ஆதரவற்ற முறையில் தன் தந்தையின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டான். அவன் மூன்று நாட்கள் மயக்க நிலையில் இருந்தான்.3 பின்னர், அவன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு சுயநினைவின்றித் தோன்றியபோது, ​​கட்டளைகளைக் கடைப்பிடிக்காத தனது வாழ்க்கையை நினைத்து, அவனது ஆத்துமா துக்கப்படும்போது, அவனது மனம் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது என்று அவன் விளக்கினான். அவன் தனது மனம் “[அவனது] சகல பாவங்களின் நினைவால் வேதனையடைந்ததாகவும்”4 “நித்திய வேதனையில் அலைக்கழிக்கப்பட்டதாகவும்”5 விவரித்தான்.

அவனது ஆழ்ந்த விரக்தியில், “உலகத்தின் பாவங்களை நிவர்த்தியாக்க தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்பவருடைய வரவைக் குறித்து போதிக்கப்பட்டதை அவன் நினைவு கூர்ந்தான்6. அடுத்ததாக அவன் இந்த சிந்தனையைத் தூண்டும் கூற்றை வெளியிட்டான்: “என் மனம் இந்த எண்ணத்தைப் பற்றிக்கொண்டபோது, ​​நான் என் உள்ளத்தினுள்ளே அழுது: தேவ குமாரனாகிய இயேசுவே, என் மேல் இரக்கமாயிரும்.”7 இரட்சகரின் தெய்வீக வல்லமைக்காக அவன் முறையிட்டபோது, ​​அதிசயமான ஒன்று நடந்தது: “நான் இதை எண்ணியபோது,” அவன் கூறினான், “என் வலிகளை என்னால் இனியும் நினைவில் கொள்ள முடியவில்லை.”8 திடீரென்று அவன் சமாதானத்தையும் ஒளியையும் உணர்ந்தான். “என் சந்தோஷத்தைப்போல மிக அற்புதமானதும் இனிமையானதும் வேறெதுவும் இருக்கமுடியாது”9 என்று அவன் அறிவித்தான்.

இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஆல்மா “பற்றிப் பிடித்தான்”. “பற்றிப்பிடித்தல்” என்ற வார்த்தைகளை நாம் உடல் ரீதியான கருத்தில் பயன்படுத்தினால், “விழும் போதே அவன் தடுப்புச்சுவரைப் பிடித்தான்” என்று நாம் கூறலாம். அதாவது, அவன் திடீரென்று கையை நீட்டி, ஒரு பாதுகாப்பான அடித்தளத்தில் உறுதியாகப் பதிக்கப்பட்ட ஒன்றோடு தன்னை இறுக்கமாக இணைத்துக் கொண்டான்.

ஆல்மாவின் விஷயத்தில், இயேசு கிறிஸ்துவின் பாவநிவிர்த்தி பலியின் இந்த வல்லமைவாய்ந்த சத்தியத்தை அடைந்து பாதுகாத்தது அவனுடைய மனம்தான். அந்த சத்தியத்தின் மீது விசுவாசம் வைத்து, தேவனின் வல்லமை மற்றும் கிருபையால், அவன் விரக்தியிலிருந்து மீட்கப்பட்டு நம்பிக்கையால் நிரப்பப்பட்டான்.

நமது அனுபவங்கள் ஆல்மாவைப் போல வியக்கத்தக்க முறையில் இல்லாவிட்டாலும், அவை நித்திய முக்கியத்துவம் வாய்ந்தவை. இயேசு கிறிஸ்துவையும் அவரது இரக்கமுள்ள தியாகத்தைப்பற்றியும் “இந்த எண்ணத்தை நம் மனங்கள் பிடித்துக் கொண்டன”, நம் ஆத்துமாக்கள் ஒளியையும் மகிழ்ச்சியையும் உணர்ந்தன.

இயேசு கிறிஸ்துவின் சிந்தனையைப் பாதுகாத்தல்

இந்த ஈஸ்டர் நேரத்தில் எனது ஜெபம் என்னவென்றால், இந்த மிக முக்கியமான இயேசு கிறிஸ்துவின் சிந்தனையை, தொடர்ந்து மற்றும் ஆர்வத்துடன் நம் மனதில் ஓட அனுமதித்து, நாம் என்ன நினைக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை நமக்கு வழிகாட்டி, இரட்சகரின் அன்பின் இனிமையான மகிழ்ச்சியை தொடர்ந்து கொண்டுவந்து, நம் ஆத்துமாவின் அறைகளில்10 நாம் இன்னும் உணர்வுடன் வடிவமைத்து, பலப்படுத்தி, பாதுகாப்பதாகும்.11

இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் நம் மனதை நிரப்புவது, அவர் மட்டுமே நமக்குள்ள ஒரே சிந்தனை என்று அர்த்தமல்ல. ஆனால் நமது எண்ணங்கள் அனைத்தும் அவருடைய அன்பு, அவரது வாழ்க்கை போதனைகள் மற்றும் அவரது பாவநிவாரண பலி மற்றும் மகிமையான உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் சுருக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம். இயேசு ஒருபோதும் மறக்கப்பட்ட மூலையில் இல்லை, ஏனென்றால் அவரைப்பற்றிய நமது எண்ணங்கள் எப்போதும் உள்ளன, அவரை “[நம்மில் உள்ள அனைத்தும் வணங்குகின்றன!]”12 அவரிடம் நம்மை நெருக்கமாகக் கொண்டுவந்த அனுபவங்களை நாம் ஜெபித்து, நம் மனதிற்குள் ஒத்திகை பார்க்கிறோம். நமது பரபரப்பான வாழ்க்கையில் விரையும் எண்ணற்ற தினசரி எண்ணங்களை மெதுவாகத் தணிக்க தெய்வீக உருவங்கள், பரிசுத்த வேதங்களை மற்றும் ஊக்கமளிக்கும் பாடல்களை நம் மனதில் நாம் வரவேற்கிறோம். அவர் மீதான நமது அன்பு இந்த அநித்திய வாழ்வில் சோகம் மற்றும் துக்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றாது, ஆனால் அது நம்முடைய சொந்த வலிமைக்கும் அப்பாற்பட்டு, சவால்களை கடந்து செல்ல அனுமதிக்கிறது.

இயேசுவே, உம்மைப்பற்றிய நினைப்பு மட்டுமே

இனிமையால் என் மார்பை நிரப்புகிறது;

ஆனால் உமது முகம் பார்ப்பதற்கு மிகவும் இனிமையானது

உமது பிரசன்னத்தில் இளைப்பாறுகிறோம்.13

நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் பரலோக பிதாவின் ஆவி குழந்தை. அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குவது போல், நாம் “தேவனுடைய சந்ததி.”14 நீங்கள் பூமிக்கு வருவதற்கு முன்பே உங்கள் சொந்த அடையாளத்துடன் வாழ்ந்திருக்கிறீர்கள். நாம் பூமிக்கு வருவதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அவரிடம் திரும்புவதற்கும் நமது பிதா ஒரு சரியான திட்டத்தை உருவாக்கினார். அவருடைய எல்லையற்ற பாவநிவர்த்தி, உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம், நாம் கல்லறைக்கு அப்பால் வாழும்படியாக அவர் தனது நேச குமாரனை அனுப்பினார்; நாம் அவர்மீது விசுவாசம் வைக்க நாம் விரும்பும்போது, நம்முடைய பாவங்களுக்காக மனந்திரும்பும்போது,15 நாம் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனின் நம்பிக்கையைப் பெறுகிறோம்.16

நமது மனதுக்கும் ஆத்துமாவுக்கும் மிக அதிக கவனம் செலுத்துதல்

இந்த அநித்திய வாழ்வில், நமது மனதுக்கும் ஆவிக்கும் மிக அதிக கவனம் தேவை.17 நம் ஆவி நம்மை வாழவும், தேர்ந்தெடுக்கவும், நன்மை தீமைகளை பகுத்தறியவும் அனுமதிக்கிறது.”18 தேவன் நம் பிதா, இயேசு கிறிஸ்து தேவ குமாரன் மற்றும் அவர்களின் போதனைகள் இங்கே மகிழ்ச்சி மற்றும் கல்லறைக்கு அப்பாற்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிகாட்டி என்பதை உறுதிப்படுத்தும் சாட்சியை நம் ஆவி பெறுகிறது.

ஆல்மாவின் மனம் இயேசு கிறிஸ்துவைப்பற்றிய இந்த எண்ணத்தைப் பற்றிக்கொண்டது. அது அவனது வாழ்க்கையை மாற்றியது. நாம் என்ன செய்ய வேண்டும், ஆக வேண்டும் என கர்த்தர் விரும்புகிறதைப் புரிந்துகொள்ள பொது மாநாடு ஒரு நேரம். நமது முன்னேற்றத்தைப்பற்றி சிந்திக்க வேண்டிய தருணமும் இதுவே. எனது பணிகள் என்னை உலகம் முழுவதும் அழைத்துச் சென்றதால், சபையின் நீதியுள்ள, அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களிடம் ஆவிக்குரிய பலம் அதிகரித்து வருவதை நான் கவனித்தேன்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை என்ற உண்மையான பெயரைப் பயன்படுத்தி, நாம் செய்யும் எல்லாவற்றிலும் இரட்சகரை மிக முக்கியமாக வைக்கும்படி நாம் கேட்டுக் கொள்ளப்பட்டோம்.19 நாம் அவருடைய பெயரை இன்னும் தீவிரமாக பேசுகிறோம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நமது திருவிருந்துக் கூட்டத்தின் நேரத்தைக் குறைப்பதன் மூலம், கர்த்தருடைய திருவிருந்தில் பங்குகொள்வதில் நமது கவனத்தை அதிகரித்தோம். நாம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி அதிகம் சிந்திக்கிறோம், அவரை எப்போதும் நினைவுகூருவோம் என்ற வாக்குறுதியில் மிகவும் தீவிரமாக இருக்கிறோம்.20

உலகளாவிய தொற்றுநோயால் தனிமைப்படுத்தப்பட்டதாலும், என்னைப் பின்பற்றி வாருங்களின் உதவியாலும், இரட்சகரின் போதனைகள் நம் வீடுகளில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன, வார நாட்களில் இரட்சகரை வணங்குவதற்கு உதவுகின்றன.

“அவருக்கு செவிகொடுங்கள்”,21 என்ற தலைவர் ரசல் எம். நெல்சனின் அறிவுரையைப் பின்பற்றுவதன் மூலம், பரிசுத்த ஆவியின் கிசுகிசுக்களை அடையாளம் காணவும், நம் வாழ்வில் கர்த்தருடைய கரத்தைக் காணவும் நமது திறனை மேம்படுத்துகிறோம்.

டஜன் கணக்கான ஆலயங்களின் அறிவிப்பு மற்றும் அவை முற்றுப் பெற்றவுடன், நாம் அடிக்கடி கர்த்தரின் வீட்டிற்குள் நுழைந்து அவருடைய வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். நமது இரட்சகரின், மீட்பரின் உன்னதமான அழகை நாம் மிகவும் வல்லமை வாய்ந்ததாக உணர்கிறோம்.

தலைவர் நெல்சன் கூறினார்: “[ஒரு] ஆற்றல் வாய்ந்த [சீஷனாக] மாறுவதற்கு எளிதானது அல்லது இயல்பானது எதுவும் இல்லை. நமது கவனம் இரட்சகர் மற்றும் அவரது சுவிசேஷத்தில் நிலைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு சிந்தனையிலும் அவரை நோக்கிப் பார்க்க முயல்வது மனத்தளவில் கடினமானது.22

இயேசு கிறிஸ்து மீது நம் கவனத்தை செலுத்துவதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும், இன்னும் இருக்கும்போது, அவர் மீதான நமது அன்பின் ஊடாக பார்க்கப்படுகிறது. குறைவான முக்கியத்துவம் வாய்ந்த கவனச்சிதறல்கள் மறைந்துவிடும், அவருடைய ஒளி மற்றும் தன்மைக்கு இணங்காத காரியங்களை நாம் அகற்றுவோம். இயேசு கிறிஸ்துவின் இந்த எண்ணத்தை நீங்கள் கவனமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு, அவர் மீது நம்பிக்கை வைத்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, உங்களுக்கு பரலோக வழிகாட்டுதல் மட்டுமல்ல, உங்கள் உடன்படிக்கைகளுக்கு வலிமையையும், உங்கள் சிரமங்களுக்கு சமாதானத்தையும், உங்கள் ஆசீர்வாதங்களுக்கு மகிழ்ச்சியையும் கொண்டுவருகிற பரலோக வல்லமையையும், நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன்.

இயேசு கிறிஸ்துவை நினைவுகூருதல்

சில வாரங்களுக்கு முன்பு, கேத்தியும் நானும் மாட் மற்றும் சாரா ஜான்சன் வீட்டிற்குச் சென்றோம். சுவரில் அவர்களின் விலையேறப்பெற்ற குடும்பத்தின் படம், இரட்சகரின் அழகான உருவம் மற்றும் ஆலயத்தின் படம் இருந்தன.

அவர்களின் நான்கு மகள்கள், மேடி, ரூபி, கிளாரி மற்றும் ஜூன் ஆகியோர் தங்கள் தாயை எவ்வளவு நேசித்தார்கள் என்பதைப்பற்றி மகிழ்ச்சியுடன் அவர்கள் பேசினார்கள்.

முன்பு வாழ்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கான ஞானஸ்நானத்தில் பெண்கள் பங்கேற்கும்படியாக, குடும்பம் ஒன்று சேர்ந்து ஆலயத்திற்குச் செல்வதற்காக சனிக்கிழமை சந்திப்பை சாரா தவறாமல் திட்டமிட்டார்.

கடந்த ஆண்டு, நவம்பரில், டிசம்பர் கடைசி வாரத்தில் சனிக்கிழமைக்குப் பதிலாக வியாழன் அன்று குடும்ப ஆலய சந்திப்பை சாரா திட்டமிட்டார். “நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்,” என்று அவள் மேட்டிடம் சொன்னாள்.

சாராவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வாழ்வார் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர். அவரால் “வெற்றி ஏற்கனவே வெல்லப்பட்டதால்” தனக்கான விளைவு எதுவாக இருந்தாலும், இரட்சகரை முழு இருதயத்துடன் நேசிப்பதாக திருவிருந்துக் கூட்டத்தில் சொல்லி, சாரா தனது வல்லமைவாய்ந்த சாட்சியைப் பகிர்ந்து கொண்டார். டிசம்பர் மாதம் வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாராவின் உடல்நிலை வேகமாக மோசமாகி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 29, வியாழன் அதிகாலையில், அவள் தன் பூலோக வாழ்வை அமைதியாக முடித்தாள். மாட் இரவு முழுவதும் சாராவின் பக்கத்தில் இருந்தார்.

அவரது இருதயம் உடைந்து, உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் முற்றிலும் சோர்வடைந்த நிலையில், அவர் தனது மகள்களுடன் சோகமாக வீட்டிற்கு வந்தார். மாட் தனது தொலைபேசியைப் பார்த்தபோது, அன்றைய தினம் சாரா திட்டமிட்டிருந்த வழக்கத்திற்கு மாறான வியாழன் ஆலய சந்திப்பின் நினைவூட்டலைக் கவனித்தார். மாட் கூறினார், “நான் அதை முதலில் பார்த்தபோது, இது வேலை செய்யப் போவதில்லை என்று நினைத்தேன்.”

ஆனால் பின்னர் மாட்டின் மனம் இந்த எண்ணத்தைப் பிடித்தது: “இரட்சகர் ஜீவிக்கிறார். அவருடைய பரிசுத்த இல்லத்தில் இருப்பதை விட குடும்பமாக நாம் இருக்க விரும்பும் இடம் வேறு எதுவும் இல்லை.

படம்
ஜான்சன் குடும்பம்

மாட், மேடி, ரூபி, கிளாரி மற்றும் ஜூன் ஆகியோர் சாரா அவர்களுக்குத் திட்டமிட்டிருந்த சந்திப்பிற்காக ஆலயத்திற்கு வந்தனர். அவரது கன்னங்களில் கண்ணீர் வழிய, மாட் தனது மகள்களுடன் ஞானஸ்நானம் நடத்தினார். அவர்கள் சாராவுடனான தங்கள் அன்பையும் நித்திய பந்தத்தையும் ஆழமாக உணர்ந்தனர், இரட்சகரின் அபரிமிதமான அன்பையும் ஆறுதலளிக்கும் சமாதானத்தையும் அவர்கள் உணர்ந்தனர். “நான் ஆழ்ந்த துக்கத்தையும் விசனத்தையும் உணர்கிறேன், என் பிதாவின் அற்புதமான இரட்சிப்பின் திட்டத்தை அறிந்து மகிழ்ச்சியுடன் கத்துகிறேன்” என்று மேட் மென்மையாகப் பகிர்ந்துகொண்டார்.

இந்த ஈஸ்டர் நேரத்தில், இரட்சகரின் ஒப்பற்ற பாவநிவாரண பலி மற்றும் அவரது மகிமையான உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் முழுமையான முற்றான சத்தியத்தை நான் காண்கிறேன். உங்கள் மனம் இயேசு கிறிஸ்து மீதான இந்த எண்ணத்தை உறுதியாகவும் என்றென்றைக்குமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு, இரட்சகர்மீது முற்றிலுமாக உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்தும்போது, அவருடைய நம்பிக்கையையும், சமாதானத்தையும், அவருடைய அன்பையும் நீங்கள் உணர்வீர்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. “Guide Us, O Thou Great Jehovah,” Hymns, no. 83.

  2. மோசியா 27:8 பார்க்கவும்.

  3. ஆல்மா 36:10 பார்க்கவும்

  4. ஆல்மா 36:17.

  5. ஆல்மா 36:12.

  6. ஆல்மா 36:17.

  7. ஆல்மா 36:18. மற்ற நேரத்தில் மார்மன் புஸ்தகத்தில் “பற்றிப் பிடித்தல்” என்பது “இரும்புக் கம்பியின் நுனியைப் பிடித்தவர்களைப்பற்றி” பேசுகிறது.(1 நேபி 8:24, 30).

  8. ஆல்மா 36:19.

  9. ஆல்மா 36:21.

  10. “வாழ்க்கையின் மிகப்பெரிய போர் உங்கள் சொந்த ஆத்துமாவின் அமைதியான அறைகளுக்குள் நடத்தப்படுகிறது”(David O. McKay, in Conference Report, Apr. 1967, 84).

  11. “[எண்ணங்கள்] எல்லா செயல்களையும் ஆதரிக்கின்றன. நம் எண்ணங்கள் சொடுக்குப் பெட்டி, நம் செயல்களை நிர்வகிக்கும் கட்டுப்பாட்டு குழு” (Boyd K. Packer, That All May be Edified [1982], 33).

    தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்தார்: “நாம் தீய ஆசைகளை அடக்கி, நீதியானவைகளாக மாற்றலாம். இது கல்வி மற்றும் பயிற்சியை உள்ளடக்கியது. தலைவர் ஜோசப் எப். ஸ்மித், “கல்வி… நமது ஆசைகளின் தொலைநோக்கு முக்கியத்துவம் வாய்ந்தது” என்று போதித்தார் (Pure in Heart [1988], 149).

  12. “Praise to the Lord, the Almighty,” Hymns, no. 72.

  13. “Jesus, the Very Thought of Thee,” Hymns, no. 141.

  14. அப்போஸ். 17:29.

  15. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 58:42–43 பார்க்கவும்.

  16. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 14:7 பார்க்கவும்.

  17. “உனது சிந்தனைகளையும் உனது இருதயத்தின் நோக்கங்களையும் தேவனைத் தவிர வேறு யாரும் அறியார்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:16).

  18. “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக் காட்டுகிறான் வெளிப்படுத்துகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.”(லூக்கா 6:45).

  19. Russell M. Nelson, “The Correct Name of the Church,” Liahona, Nov. 2018, 87–89 பார்க்கவும்.

  20. திருவிருந்து ஜெபத்தில் ஒவ்வொரு வாரமும் நமது உடன்படிக்கை என்னவென்றால், நாம் “எப்போதும் அவரை நினைவில் கொள்வோம்” (மரோனி 4:3; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77). “நினைவில் கொள்ளுங்கள், நினைவில் கொள்ளுங்கள்” என்ற வார்த்தையை ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு முறை பயன்படுத்துவதன் மூலம் மார்மன் புஸ்தகம் நம்மை ஊக்குவிக்கிறது.(மோசியா 2:41; ஆல்மா 37:13; ஏலமன் 5:9). ஆவிக்குரிய நினைவு பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் வருகிறது: “அவர் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26).

  21. Russell M. Nelson, “Hear Him,” Liahona, May 2020, 90.

  22. Russell M. Nelson, “Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 41. தலைவர் நெல்சன் மேலும் கூறினார், “[பிற்காலப் பரிசுத்தர்கள்] நாம் உணரும் மகிழ்ச்சி நம் வாழ்க்கையின் சூழ்நிலைகளுக்கு சிறிதும் சம்பந்தப்பட்டதல்ல மற்றும் நம் வாழ்வின் மையத்துடன் சம்பந்தப்பட்டதாகும் “(“Joy and Spiritual Survival,” Liahona, Nov. 2016, 82).