பொது மாநாடு
சமாதான பிரபுவைப் பின்பற்றுபவர்கள்
ஏப்ரல் 2023 பொது மாநாடு


சமாதான பிரபுவைப் பின்பற்றுபவர்கள்.

இரட்சகரைப் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள நாம் முயற்சி செய்யும்போது, உலகில் அவருடைய சமாதானத்துக்கான கருவிகளாக நாம் மாறலாம்.

சகரியாவுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றுதலாக,1 “யூத அரசகுலத்தின் பண்டைய சின்னமாக,” இலக்கியத்தில் கருதப்படும் கழுதையின் மீது ஏறிக்கொண்டு இயேசு வெற்றியுடன் பரிசுத்த நகருக்குள் நுழைந்தார்.2 ராஜாதி ராஜா மற்றும் சமாதான பிரபு என்பவருக்கு உண்மையில் பொருத்தமானது.3 இயேசு கடந்து வந்த பாதையில் தங்கள் ஆடைகள், பனை ஓலைகள் மற்றும் பிற இலைகளை பரப்பிய மகிழ்ச்சியான சீஷர்கள் அவரைச் சூழ்ந்தனர். “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக” என்று உரத்த குரலில் சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.4 மீண்டும் “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா”.5 குருத்தோலை ஞாயிறு என்று அழைக்கப்படும் இந்த நாளில் நாம் கொண்டாடும் இந்த கம்பீரமான நிகழ்வு, இரட்சகரின் தன்னலமற்ற தியாகம் மற்றும் காலியான கல்லறையின் அற்புதமான அதிசயம் ஆகியவற்றில் உச்சக்கட்டமாக அந்த துரதிர்ஷ்டவசமான வாரத்தில் நிகழும் வேதனையான நிகழ்வுகளுக்கு ஒரு மகிழ்ச்சியான முன்னுரையாக இருந்தது.

அவரைப் பின்பற்றுபவர்களாகிய நாம், அவருடைய நற்பண்புகளைப் பறைசாற்றுவதற்காக அழைக்கப்பட்ட அவருடைய தனித்துவமான மக்கள்,6 அவரது பாவநிவாரண பலி மூலம் தாராளமாக வழங்கப்பட்ட சமாதானத்தை ஊக்குவிப்பவர்கள். இரட்சகரிடம் தங்கள் இருதயங்களைத் திருப்பி, நீதியாக வாழும் அனைவருக்கும் இந்த சமாதானம் வாக்களிக்கப்பட்ட பரிசு; அத்தகைய சமாதானம் பூலோக வாழ்க்கையை அனுபவிக்க நமக்கு பலத்தை அளிக்கிறது மற்றும் நமது பயணத்தின் வேதனையான சோதனைகளை தாங்கிக்கொள்ள உதவுகிறது.

1847-ல், மேற்கு நோக்கிய பயணத்தில் எதிர்பாராத சிரமங்களை எதிர்கொண்டதால் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க சமாதானம் தேவைப்படும் முன்னோடி பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினார். மற்றவற்றுடன், கர்த்தர் பரிசுத்தவான்களுக்கு அறிவுறுத்தினார் “ஒருவருக்கொருவர் விவாதம் செய்வதை நிறுத்துங்கள்; ஒருவருக்கொருவர் தீமை பேசுவதை நிறுத்துங்கள்.”7 நீதியின் கிரியைகளைச் செய்து, கர்த்தருடைய ஆவியின் சாந்தத்தில் நடக்கப் பிரயாசப்படுகிறவர்களுக்கு, இன்று நாம் வாழும் குழப்பமான நாட்களில் தப்பிப்பிழைக்கத் தேவையான சமாதானம் வாக்களிக்கப்படுகிறது என்பதை வேதம் உறுதிப்படுத்துகிறது.8

சமாதானப் பிரபுவின் சீடர்களாகிய நாம், “அன்னியோனியத்திலே நம் இருதயங்கள் ஒன்றாய் பின்னப்பட்டு, ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க,” அறிவுறுத்தப்பட்டுள்ளோம்.9 நம் அன்பிற்குரிய தீர்க்கதரிசி, தலைவர் ரசல் எம். நெல்சன், சமீபத்தில் கூறினார், “பிணக்கு இரட்சகர் போதித்த அனைத்தையும் மீறுகிறது.”10 தற்போது நம் இருதயங்களிலும் நம் வாழ்விலும் பொங்கி வரும் தனிப்பட்ட மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நமது தீர்க்கதரிசி மன்றாடினார்.11

கிறிஸ்து நம்மீது வைத்திருக்கும் தூய்மையான அன்பையும், அவரைப் பின்பற்றுபவர்களாகிய நாம் ஒருவரையொருவர் விரும்புவதையும் நாடி இந்தக் கொள்கைகளை நாம் கருத்தில் கொள்வோம். இவ்வகை அன்பை தயாளம் என்று வேதங்கள் வரையறுக்கின்றன.12 நாம் தயாளத்தைப்பற்றி நினைக்கும் போது, ​​நம் மனம் பொதுவாக உடல், பொருள் அல்லது உணர்ச்சி ரீதியாக சிரமங்களை அனுபவிப்பவர்களின் துன்பத்தை நிவர்த்தி செய்ய தாராளமான செயல்கள் மற்றும் நன்கொடைகளை நோக்கி திரும்புகிறது. இருப்பினும், தயாளம் என்பது நாம் ஒருவருக்கு நன்கொடை அளிக்கும் விஷயத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல, அது இரட்சகரின் பண்பு மற்றும் நம் குணத்தின் ஒரு பகுதியாக மாறலாம். “பரிபூரணம் மற்றும் சமாதானத்தின் கட்டான, தயாளத்தின் பிணைப்பை” அணிந்து கொள்ளுமாறு கர்த்தர் நமக்கு அறிவுறுத்தியதில் ஆச்சரியமில்லை.13 தயாளம் இல்லாமல் நாம் ஒன்றுமில்லை14 மேலும் நமது பரலோக பிதாவின் மாளிகைகளில் கர்த்தர் நமக்காக ஆயத்தம் செய்துள்ள இடத்தை நாம் சுதந்தரிக்க முடியாது.15

பரிபூரணம் மற்றும் சமாதானத்தின் இந்த பிணைப்பை சொந்தமாக்குவதன் அர்த்தம் என்ன என்பதை இயேசு மிகச் சரியாக எடுத்துக்காட்டுகிறார், குறிப்பாக அவரது இரத்தசாட்சி மரணத்துக்கு முந்தைய வேதனையான நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது. தம்முடைய சீஷர்களில் ஒருவன் அன்றிரவே தம்மைக் காட்டிக் கொடுப்பான் என்பதை அறிந்து, தாழ்மையுடன் அவனுடைய பாதங்களைக் கழுவியபோது இயேசு என்ன உணர்ந்திருப்பார் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.16 அல்லது இயேசு, சில மணிநேரங்களுக்குப் பிறகு, காட்டிக் கொடுத்து, அவரைக் கைது செய்ய யூதாஸுடன் வந்திருந்த ஒருவனின் காதை இரக்கத்துடன் குணப்படுத்தினார்.17 அல்லது இரட்சகர், பிலாத்துவின் முன் நின்று, பிரதான ஆசாரியர்களாலும் மூப்பர்களாலும் நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டபோதும், அவருக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை, மேலும் அவர் ரோமானிய ஆளுநரை ஆச்சரியப்படுத்தினார்.18

இந்த மூன்று சோகமான சம்பவங்கள் மூலம், இரட்சகர், அதிகப்படியான சோகத்தாலும் மன அழுத்தத்தாலும் பாரமாக இருந்தபோதிலும், அவருடைய உதாரணத்தின் மூலம் நமக்குக் கற்பித்தார், “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது.”19

வலியுறுத்த வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம், மற்றும் நமது சீஷத்துவத்தின் மீது நேரடியான தாக்கங்களை ஏற்படுத்துவது மற்றும் இரட்சகரின் சமாதானத்தை நாம் எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பது, நாம் ஒருவரையொருவர் நடத்தும் விதம் ஆகும். அவரது பூலோக ஊழியத்தின் போது, இரட்சகரின் போதனைகள், அன்பு, தயாளம், பொறுமை, பணிவு மற்றும் இரக்கம் ஆகிய நற்பண்புகள் மீது மட்டும் கவனம் செலுத்தியது, அவருடன் நெருங்கி வர விரும்புவோருக்கான அடிப்படை குணங்கள் மற்றும் அவரது சமாதானத்தை மேம்படுத்துகின்றன. இத்தகைய பண்புக்கூறுகள் தேவனின் வரங்கள், அவற்றை வளர்த்துக் கொள்ள நாம் முயற்சி செய்யும்போது, ​​நம் அண்டை வீட்டாரின் வேறுபாடுகள் மற்றும் பலவீனங்களை அதிக பச்சாதாபம், உணர்திறன், மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையுடன் பார்க்கத் தொடங்குவோம். நாம் இரட்சகரிடம் நெருங்கி வருகிறோம் என்பதற்கான மிகத் தெளிவான அறிகுறிகளில் ஒன்று, சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நம் சக மனிதர்களிடம் அன்பாகவும், பொறுமையாகவும், கனிவாகவும் நடந்துகொள்வது.

மற்றவர்களின் உணரப்பட்ட குணாதிசயங்கள், பலவீனங்கள் மற்றும் கருத்துக்களைப்பற்றி எதிர்மறையான மற்றும் இழிவான கருத்துகளில் ஈடுபடும் நபர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம், முக்கியமாக இத்தகைய குணாதிசயங்கள் மற்றும் கருத்துக்கள் வேறுபடும்போது அல்லது அவர்கள் செயல்படும் மற்றும் சிந்திக்கும் விதத்தில் முரண்படும் போது. ஒரு சூழ்நிலையைச் சுற்றிய மற்ற எல்லா சூழ்நிலைகளையும் உண்மையாக அறியாமல் அவர்கள் கேட்டதையே திரும்பச் சொல்லும் இந்த நபர்கள் இதுபோன்ற கருத்துக்களை மற்றவர்களுக்கு அனுப்புவதைப் பார்ப்பது மிகவும் பொதுவானது. துரதிர்ஷ்டவசமாக, சமூக ஊடகங்கள் அவை சார்புடைய உண்மைகள் மற்றும் வெளிப்படைத்தன்மையின் பெயரில் இதுபோன்ற நடத்தையை ஊக்குவிக்கின்றன. கட்டுப்பாடு இல்லாமல், டிஜிட்டல் உரையாடல் பெரும்பாலும் மக்களை தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சூடான தகராறுகளுக்கு இட்டுச் செல்கிறது, ஏமாற்றங்களை உருவாக்குகிறது, இருதயங்களை காயப்படுத்துகிறது மற்றும் தீப்பிடிக்கும் விரோதத்தை பரப்புகிறது.

பிற்காலத்தில், சத்துரு கோபமடைந்து, நல்லவற்றுக்கு எதிராக மக்களைக் கோபப்படுத்துவான் என்று நேபி தீர்க்கதரிசனம் கூறினான்.20 “ஆதலால் நன்மையான சகல காரியமும் தேவனை நேசிக்கவும், அவரை சேவிக்கவும், தேவனால் உணர்த்தப்படவும், தேவனிடத்திலிருந்து வருகிறது;” 21 என வேதம் போதிக்கிறது. மறுபுறம், “பொல்லாங்கு பிசாசினால் வருகிறது; பிசாசு தேவனுக்குப் பகைவன், அவருக்கு விரோதமாக எப்பொழுதும் போராடுகிறான், பாவம் செய்ய அழைக்கிறான், வசீகரிக்கிறான், தொடர்ந்து தீமையைச் செய்கிறான்.”22

இந்த தீர்க்கதரிசன போதனையைக் கருத்தில் கொண்டு, எதிரிகளின் தந்திரங்களில் ஒன்று தேவனின் பிள்ளைகளின் இருதயங்களில் பகையையும் வெறுப்பையும் தூண்டுவதில் ஆச்சரியமில்லை. ஒருவரையொருவர் விமர்சிப்பதையும், கேலி செய்வதையும், அவதூறாகப் பேசுவதையும் கண்டு அவன் மகிழ்ச்சி அடைகிறான். இந்த நடத்தை ஒரு நபரின் தன்மை, குறிப்பாக நியாயமற்ற முறையில் தீர்மானிக்கப்படும் போது, நற்பெயர் மற்றும் சுயமரியாதையை அழிக்கக்கூடும். இந்த மாதிரியான அணுகுமுறையை நம் வாழ்வில் அனுமதிக்கும் போது, சத்துரு நமக்குள் முரண்பாடு என்ற விதையை விதைத்து, அவனது கொந்தளிப்பான வலையில் விழும் அபாயத்தை நம் இருதயங்களில் ஏற்படுத்துகிறான் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.

நம் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் நாம் கவனமாக இல்லாவிட்டால், எதிரிகளின் தந்திரமான உபாயங்களில் நாம் சிக்கி, நம்மைச் சுற்றியுள்ளவர்களுடனும், நம் அன்புக்குரியவர்களுடனும் உள்ள உறவுகளை அழித்துவிடுவோம்.

சகோதர சகோதரிகளே, கர்த்தரின் தனித்தன்மை வாய்ந்த மக்களாகவும், அவரது சமாதானத்தை ஊக்குவிப்பவர்களாகவும், பொல்லாதவனின் இந்த தந்திரங்களை நம் இருதயங்களில் இடம் பெற அனுமதிக்க முடியாது. உணர்வுகளையும், உறவுகளையும், உயிர்களையும் கூட அழிக்கும் இத்தகைய அரிக்கும் சுமையை நாம் சுமக்க முடியாது. சுவிசேஷம் மிகுந்த மகிழ்ச்சியின் நற்செய்தியைக் குறிக்கிறது.

நிச்சயமாக, நம்மில் யாரும் பரிபூரணமானவர்கள் அல்ல, நிச்சயமாக, இந்த வகையான நடத்தையில் நாம் ஏமாற்றப்படும் நேரங்கள் உள்ளன. அவருடைய பரிபூரண அன்பிலும், நமது மனித மனநிலைகளைப்பற்றிய சர்வ ஞானத்திலும், இரட்சகர் எப்போதும் இத்தகைய ஆபத்துகளைப்பற்றி எச்சரிக்க முயற்சிக்கிறார். அவர் நமக்குப் போதித்தார், “ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.”23

என் அன்பான சகோதர சகோதரிகளே, இரட்சகரைப் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள நாம் முயற்சி செய்யும்போது, அவரே ஏற்படுத்திய மாதிரியின்படி உலகில் அவருடைய சமாதானத்துக்கான கருவிகளாக நாம் மாறலாம். நம்மை மேம்படுத்தும், ஆதரவளிக்கும் நபர்களாக, புரிந்துகொள்ளும், மன்னிக்கும் இருதயம் கொண்டவர்களாக, மற்றவர்களிடம் சிறந்ததைத் தேடுபவர்களாக, “உத்தமமானவை, அழகானவை அல்லது, நற்கீர்த்தியுள்ளவை அல்லது, புகழத்தக்கவை எதாவதிருந்தால் அந்தக் காரியங்களை நாங்கள் நாடுகிறோம்,” என்பதை எப்போதும் நினைவில் இருப்பவர்களாக மாற்றுவதற்கான வழிகளைப் பரிசீலிக்க உங்களை அழைக்கிறேன் 24.

இந்தப் பண்புகளை நாம் பின்பற்றி வளர்த்துக் கொள்ளும்போது, நம் சக மனிதர்களின் தேவைகளைப்பற்றி மேலும் மேலும் அன்பாகவும் உணர்திறன் உடையவர்களாகவும் மாறுவோம் 25 மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சியை அனுபவிப்போம் 26 என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சந்தேகத்திற்கு இடமின்றி, கர்த்தர் நம்முடைய முயற்சிகளை அங்கீகரித்து, ஒருவருக்கொருவர் வேறுபாடுகள், பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளுடன் நாம் மிகவும் சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டிய வரங்களை நமக்குத் தருவார். மேலும், நம்மைக் காயப்படுத்துபவர்களை காயப்படுத்தும் அல்லது புண்படுத்தும் தூண்டுதலை நாம் சிறப்பாக எதிர்க்க முடியும். இரட்சகரைப் போலவே, நம்மைத் தவறாக நடத்துபவர்களை அல்லது நம்மைப்பற்றித் தீமையாகப் பேசுபவர்களை மன்னிக்க வேண்டும் என்ற நமது விருப்பம் நிச்சயமாக அதிகரிக்கும், மேலும் அது நம் குணத்தின் ஒரு பகுதியாக மாறும்.

இன்று, இந்த குருத்தோலை ஞாயிறு அன்று, நம் அன்பின் அங்கிகளையும், தயாளத்தின் பனை ஓலைகளையும் விரித்து, சமாதான பிரபுவின் அடிச்சுவடுகளில் நடப்போம், வரும் ஞாயிற்றுக்கிழமை காலி கல்லறையின் அதிசயத்தைக் கொண்டாடத் தயாராவோம். கிறிஸ்துவில் சகோதர சகோதரிகளாக, மகிழ்ச்சியுடன் அறிவிப்போம்,“தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா”.27

இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார் என்றும், அவருடைய பாவநிவாரண பலி மூலம் வெளிப்படுத்தப்பட்ட அவரது பரிபூரண அன்பு, அவருடன் நடக்கவும், இந்த உலகத்திலும், வரும் உலகிலும் அவருடைய சமாதானத்தை அனுபவிக்கவும் விரும்பும் அனைவருக்கும் நீட்டிக்கப்படுகிறது என்று நான் சாட்சி கூறுகிறேன். இந்தக் காரியங்களை, இரட்சகரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சொல்கிறேன், ஆமென்.