பொது மாநாடு
சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, மெருகூட்டப்பட்டது
அக்டோபர் 2020 பொது மாநாடு


சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, மெருகூட்டப்பட்டது

நமது சோதனைகளின்போது நமது உடன்படிக்கைகளுக்கு நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கிறோம் என்பதை நாமே நம்மை நிரூபிக்கும்போது வருகிற மிகப்பெரிய ஆசீர்வாதங்கள் நமது இயல்புகளில் ஒரு மாற்றமாயிருக்கும்.

எனக்கன்பான சகோதர சகோதரிகளே, இன்று நான் உங்களிடம் பேச இருப்பதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை கடினமாகவும் நிச்சயமற்றதாகவும் தோன்றும்போது ஊக்கமளிப்பது எனது நம்பிக்கை. உங்களில் சிலருக்கு அந்த நேரம் இப்போதே. இல்லையென்றால் அத்தகைய ஒரு நேரம் வரும்.

அது ஒரு மங்கிய பார்வையல்ல. இந்த உலகத்தை சிருஷ்டிப்பதில் தேவனின் நோக்கம் இருப்பதால் இது யதார்த்தமானது, ஆனால் நம்பிக்கையானது. இது கடினமாக இருக்கும்போது, சரியானதைத் தேர்ந்தெடுக்க சாத்தியமாகவும் விருப்பமாகவும் இருப்பதை அவர்களே நிரூபிப்பதற்காக அவருடைய பிள்ளைகளுக்கு வாய்ப்பளிப்பதே அந்த நோக்கம். அப்படிச் செய்வதில் அவர்களுடைய தன்மைகள் மாறி, அவரைப்போன்று அவர்களால் மாறமுடியும். அவரில் அசைக்கமுடியாத விசுவாசம் அதற்கு அவசியமென்பதை அவர் அறிவார்.

நான் அறிந்துகொண்டவற்றில் அதிகமானவை எனது குடும்பத்திலிருந்து வந்தன. எங்களுடைய குடும்பத்தின் கொல்லைப்புறத் தோட்டத்தில் எங்களுடைய தாயுடன் சேர்ந்து களை பிடுங்க எனக்கு ஏறக்குறைய எட்டு வயதாயிருந்தபோது என் சகோதரனையும் என்னையும் என்னுடைய புத்திசாலியான தாய் கேட்டாள். இப்போது, அது ஒரு எளிய வேலையாகத் தோன்றுகிறது, ஆனால் நாங்கள் நியுஜெர்சியில் வாழ்ந்து வந்தோம். அடிக்கடி மழை பெய்துகொண்டிருந்தது. மண் கெட்டியான களிமண்ணாயிருந்தது. காய்கறிகளைவிட களைகள் வேகமாக வளர்ந்திருந்தன.

களைகள் என் கைகளால் உடைந்து அவற்றின் வேர்கள் கடினமான களிமண்ணில் உறுதியாக வேரூன்றியிருந்ததால் என்னுடைய விரக்தி எனக்கு நினைவிருக்கிறது. என்னுடைய தாயும் என்னுடைய சகோதரனும் அவர்களுடைய வரிசையில் மிக முன்பிருந்தார்கள். நான் கடினமாக முயற்சி செய்தபோது அதிகமாக நான் பின்னுக்குச் சென்றேன்.

“இது மிகக் கடினமாயிருந்தது. நான் கதறினேன்,

அனுதாபம் காட்டுவதற்குப் பதிலாக, என் தாய் புன்னகைத்து, சொன்னாள், “ஓ, ஹால், நிச்சயமாக, அது கடினம். இது இப்படித்தானிருக்கும். வாழ்க்கை ஒரு பரிட்சை” என்றாள்.

அவளுடைய வார்த்தைகள் உண்மையாயிருந்தது, என்னுடைய வருங்காலத்தில் அவை தொடர்ந்து உண்மையாயிருக்குமென்பதை அந்த நேரத்தில் நான் அறிந்தேன்.

இந்த உலகத்தை சிருஷ்டிப்பதிலும், நித்திய ஜீவனுக்கான வாய்ப்பை ஆவிப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதிலும் பரலோக பிதாவுக்கும் அவருடைய நேச குமாரனுக்குமுள்ள நோக்கத்தைப்பற்றி அவர்கள் பேசியதை நான் வாசித்தபோது, பல ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் அன்பான புன்னகை எனக்குத் தெளிவானது.

“அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு கட்டளையிட்ட சகல காரியங்களையும் அவர்கள் செய்வார்களாவென அவர்களை நாம் சோதித்துப் பார்ப்போம்;

“அவர்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொண்டவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்; தங்களுடைய ஆதி மேன்மையை காத்துக் கொள்ளாதவர்கள் தங்களுடைய ஆதி மேன்மையை காத்துக் கொண்டவர்களின் அதே ராஜ்யத்தில் மகிமையைக் கொண்டிருக்க மாட்டார்கள்; தங்களுடைய பூலோக ஜீவியத்தைக் காத்துக் கொள்பவர்கள் என்றென்றைக்குமாக தங்களுடைய தலைகளின்மேல் மகிமையை சேர்த்துக்கொள்வார்கள்.”1

சோதிக்கப்படவும், நமது பரலோக பிதாவின் பிரசன்னத்தில் இனி எப்போதுமிருக்கமாட்டோம் என்ற போதிலும் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ள தேர்ந்தெடுப்பதை நிரூபிக்கவும் நீங்களும் நானும் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டோம்.

நமது பரலோக பிதாவிடமிருந்து வந்த அத்தகைய ஒரு அன்பான அழைப்புடனும், ஆவி பிள்ளைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் அவனைப் பின்பற்றவும், நமது வளர்ச்சிக்கும் நித்திய சந்தோஷத்திற்குமான பிதாவின் திட்டத்தைப் புறக்கணிக்கவும் லூசிபர் கட்டாயப்படுத்தினான். சாத்தானின் கிளர்ச்சியால் அவனைப் பின்பற்றியவர்களுடன் அவன் தள்ளப்பட்டான். இப்போது, இந்த அநித்திய வாழ்க்கையில், அவனால், அநேகர் தேவனிடமிருந்து விலகிச்செல்ல அவன் முயற்சிக்கிறான்.

நமது இரட்சகராகவும் மீட்பருமாக மாற முன்வந்த இயேசு கிறிஸ்துவில் நமது விசுவாசத்தினிமித்தம் திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அப்படிச் செய்தார்கள். நமக்கிருக்கிற அநித்திய பலவீனங்கள் எதுவாயிருந்தாலும், நமக்கெதிராக எந்த தீயசக்திகளிருந்தாலும், நன்மையின் சக்திகள் மிகப்பெரியதாயிருக்கும் என நாம் அப்போது நம்பியிருப்போம்.

பரலோக பிதாவும் இயேசு கிறிஸ்துவும் அறிந்திருக்கிறார்கள், உங்களை நேசிக்கிறார்கள். அவரிடம் திரும்பிவந்து அவரைப் போலாக அவர்கள் விரும்புகிறார்கள் உங்களுடைய வெற்றி அவர்களுடைய வெற்றி. இந்த வார்த்தைகளை நீங்கள் வாசிக்கும்போது அல்லது கேட்கும்போது பரிசுத்த ஆவியால் உறுதி செய்யப்பட்ட அந்த அன்பை நீங்கள் உணருகிறீர்கள்: “ஏனெனில் இதோ, மனுஷனின் அநித்தியத்தையும் நித்திய ஜீவனையும் கொண்டுவர, இது என்னுடைய கிரியையும் என்னுடைய மகிமையுமாயிருக்கிறது.”2

நமது வழியை எளிதாக்குவதற்கு தேவனிடம் வல்லமையிருக்கிறது. வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குப் போக அவர்கள் அலைந்து திரிந்ததில் இஸ்ரவேல் மக்களுக்கு அவர் மன்னாவை உணவளித்தார். அவருடைய அநித்திய ஊழியத்தில் கர்த்தர் வியாதியஸ்தரைக் குணமாக்கினார், மரித்தவரை உயிரோடெழுப்பினார், கடலை அமைதிப்படுத்தினார். அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், அவர் கட்டுண்டவர்களுக்கு சிறைச்சாலையைத் திறந்தார்.”3

அவருடைய தீர்க்கதரிசிகளில் மிகப்பெரிய ஒருவரான தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் சிறைச்சாலையில் பாடனுபவித்தாலும் தொடர்ச்சியான விசுவாசத்தின் சோதனைகளில் நம் அனைவருக்கும் தேவையானதும் அதிலிருந்து பலனையடைவதுமான பாடத்தை போதித்தார்: “நீ குழிக்குள் அல்லது கொலைகாரர்களின் கைகளில் தள்ளப்பட்டு மரணதண்டனை உனக்குக் கொடுக்கப்பட்டால்; நீ ஆழத்தில் தள்ளப்பட்டால்; பொங்கிவரும் பெரும் அலை உனக்கு விரோதமாக சதிசெய்தால்; கொடும் புயல்கள் உன்னுடைய சத்துருக்களானால்; வானங்கள் இருளை கூட்டிச்சேர்த்து, வழியைத் தடுக்க எல்லா கூறுகளும் ஒன்றுசேர்ந்தால்; எல்லாவற்றிற்கும் மேலாக பாதாளத்தின் கதவுகள் உனக்காக வாயை அகலத்திறந்தால் இந்தக் காரியங்கள் யாவும் உனக்கு அனுபவத்தைத் தரும், உன்னுடைய நன்மைக்காயிருக்கும் என்பதை என் மகனே, நீ அறிந்துகொள்.”4

நமது அநித்திய சோதனை மிகக் கடினமாயிருக்க ஒரு அன்பான மற்றும் சகல வல்லமையான தேவன் ஏன் அனுமதிக்கிறாரென நீங்கள் நியாயமாக ஆச்சரியப்படக்கூடும். அது ஏனெனில், குடும்பங்களில் அவருடைய பிரசன்னத்தில் என்றென்றும் வாழ நாம் ஆவிக்குரிய தூய்மையிலும் அந்தஸ்திலும் வளர வேண்டும் என்பதை அவர் அறிகிறார். அதை சாத்தியமாக்க, ஒரு இரட்சகரையும், விசுவாசத்தில் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவரண்டைவர மனந்திரும்பவும் தேர்ந்தெடுக்க ஆற்றலையும் பரலோக பிதா நமக்குக் கொடுத்தார்.

அவருடைய நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்போல அதிகமாக மாறுவதை பிதாவின் சந்தோஷத்தின் திட்டம் மையமாகக் கொண்டிருக்கிறது. சகல காரியங்களிலும், இரட்சகரின் எடுத்துக்காட்டு நமது சிறந்த வழிகாட்டி. தன்னையே நிரூபிக்க வேண்டிய அவசியத்திலிருந்து அவர் விலக்கப்படவில்லை. நமது பாவங்களுக்கான கிரயத்தைச் செலுத்தி, பரலோக பிதாவின் பிள்ளைகள் அனைவருக்காகவும் அவர் சகித்திருந்தார். அநித்தியத்திற்குள் வருகிற வரப்போகிற அனைவரின் பாடுகளையும் அவர் உணர்ந்திருக்கிறார்.

எவ்வளவு வேதனையை உங்களால் சகித்துக்கொள்ள முடியுமென நீங்கள் வியப்புறும்போது அவரை நினைத்துக்கொள்ளுங்கள். உங்களை எவ்வாறு உயரத்தூக்குவதென்பதை அறியும்படியாக உங்கள் பாடுகளை அவர் பாடுபட்டார். சுமையை அவர் அகற்றாதிருக்கக்கூடும், ஆனால், அவர் உங்களுக்கு பெலத்தை, ஆறுதலை, நம்பிக்கையைக் கொடுப்பார். வழியை அவர் அறிந்திருக்கிறார். கசப்பான பானத்தை அவர் அருந்தினார். அனைவரின் பாடுகளையும் அவர் சகித்தார்.

நீங்கள் எம்மாதிரியான சோதனைகளை எதிர்கொண்டாலும் உங்களை எவ்வாறு ஆதரிப்பதென அறிந்திருக்கிற ஒரு நேசமுள்ள இரட்சகரால் நீங்கள் போஷிக்கப்பட்டு ஆறுதலடைகிறீர்கள். ஆல்மா போதித்தான்:

“அவர் ஜனங்களுடைய வேதனைகளையும், நோய்களையும் தம் மேல் ஏற்றுக்கொள்வார் என்ற வார்த்தை நிறைவேறும்படியாய் அவர் போய் சகலவித துன்பங்களையும், உபத்திரவங்களையும், சோதனைகளையும் அனுபவிப்பார்.

“தம்முடைய ஜனத்தைக் கட்டியிருக்கிற மரணக்கட்டுக்களை அவிழ்க்கும்பொருட்டு அவர் மரணத்தை தம்மீது ஏற்றுக்கொள்வார்; தம் ஜனத்தினுடைய பெலவீனங்களுக்குத் தக்கதாய், அவர்களுக்கு மாம்சத்தின் பிரகாரமாய், ஒத்தாசை புரிவதெப்படி என்று தாம் அறிந்துகொள்ளும்படிக்கும் மாம்சத்தின்படி தாம் உருக்கமான இரக்கத்தினால் நிறைக்கப்படும்படிக்கும், அவர்களுடைய பெலவீனங்களைத் தம்மேல் ஏற்றுக்கொள்வார்.”5

எப்போதும் அவரை நினைவில் வைக்கவும் அவரண்டை வரவும் உங்களை அழைக்க, உங்களை ஆதரிப்பது ஒரு வழி. அவர் நம்மை ஊக்குவித்தார்:

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

“நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.”6

அவருடைய வார்த்தைகளை ருசித்துப் பார்க்க, மனந்திரும்புதலுக்காக விசுவாசத்தை கைக்கொள்ள, ஞானஸ்நானத்தைத் தேர்ந்தெடுத்து, அதிகாரம்பெற்ற அவருடைய ஊழியக்காரர்களால் திடப்படுத்தப்பட்டு, பின்னர் தேவனுடனான உங்கள் உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள அவரண்டைவர வழியாகும். உங்கள் தோழராக, ஆறுதலளிப்பவராக, வழிகாட்டியாக இருக்க பரிசுத்த ஆவியை அவர் அனுப்புகிறார்.

பரிசுத்த ஆவியின் வரத்திற்கு நீங்கள் தகுதியாய் வாழும்போது, நீங்கள் வழியைக் காணமுடியாவிட்டாலும் பாதுகாப்பிற்கு கர்த்தர் உங்களுக்கு வழிகாட்ட முடியும். என்னைப் பொறுத்தவரை, எடுக்க வேண்டிய அடுத்த அடியை அல்லது இரண்டை அவர் பெரும்பாலும் காட்டியுள்ளார். எப்போதாவது, தொலைதூர எதிர்காலத்தைப்பற்றிய ஒரு காட்சியை அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார், ஆனால் அந்த அரிதான பார்வைகள் கூட நான் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்ய தேர்ந்தெடுக்கிறேன் என்பதை வழிநடத்துகின்றன.

கர்த்தர் விவரித்தார்:

“தற்போதைய நேரத்தில், … வரப்போகிற காரியங்களைக் குறித்த உங்கள் தேவனின் நோக்கத்தையும், மிகுந்த உபத்திரவத்திற்குப் பின்னர் தொடரப்போகிற மகிமையையும் நீங்கள் உங்களுடைய சுபாவக் கண்களால் காணமுடியாது.

“ஏனெனில் அதிக உபத்திரவத்திற்குப் பின்னர் ஆசீர்வாதங்கள் வருகிறது.”7

நமது சோதனைகளின்போது நமது உடன்படிக்கைகளுக்கு நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கிறோம் என்பதை நாமே நம்மை நிரூபிக்கும்போது வருகிற மிகப்பெரிய ஆசீர்வாதங்கள் நமது இயல்புகளில் ஒரு மாற்றமாயிருக்கும். நமது உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள நமது தேர்ந்தெடுப்பால், இயேசு கிறிஸ்துவின் வல்லமையும் அவருடைய பாவநிவர்த்தியின் ஆசீர்வாதங்களும் நம்மில் செயல்படமுடியும். அன்பு செலுத்த, மன்னிக்க, இரட்சகரண்டை வர மற்றவர்களை அழைக்க நமது இருதயங்கள் மிருதுவாகும். கர்த்தரிடத்தில் நமது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. நமது பயங்கள் குறைகிறது.

இப்போது, உபத்திரவங்களினூடே அத்தகைய வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களுடனும், உபத்திரவத்தை நாம் நாடுவதில்லை. அநித்திய அனுபவத்தில், நம்மை நிரூபிக்க, இரட்சகரையும் நம்முடைய பரலோக பிதாவையும் போல மாறுவதற்கு போதுமான சோதனைகளை கடக்க நமக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.

கூடுதலாக, மற்றவர்களின் துயரங்களை நாம் கவனித்து உதவ முயற்சிக்கவேண்டும். நம்மை நாமே கடுமையாக சோதனைக்குட்படுத்தும்போது குறிப்பாக அது மிகக் கடினமாயிருக்கும். ஆனால், மற்றவரின் சுமையை நாம் தூக்கும்போது, அது சிறியதாயிருந்தாலும், நமது முதுகுகள் பெலப்படுவதையும், இருளில் ஒரு வெளிச்சத்தை நாம் உணருவதையும் நாம் கண்டுபிடிப்போம்.

இதில் கர்த்தர் நமது உதாரணர். கொல்கதா சிலுவையில் ஏற்கனவே மிகக் கடினமான வேதனையில் பாடுபட்டிருந்ததில், அவர் தேவனின் ஒரேபேறான குமாரனாய் இல்லாதிருந்தால் அவர் மரித்திருப்பார், அவர் தனக்கு மரணதண்டனை அளித்திருப்பவர்களை நோக்கி, அவருடைய பிதாவிடம் சொன்னார், “இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்”8 வாழப்போகிற அனைவருக்காகவும் பாடுபட்டிருக்கும்போது, யோவானையும், துக்கப்பட்டுக்கொண்டிருந்த அவருடைய தாயையும் சிலுவையிலிருந்து நோக்கி, அவளுடைய துயரத்தில் அவளுக்கு அவர் பணிவிடை செய்தார்:

“அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி, ஸ்திரீயே, அதோ உன் மகன்! என்றார்

“பின்பு அந்தச் சீஷனை நோக்கி, அதோ உன் தாய்! என்றார் அந்நேர முதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.”9

அந்த மிகப் பரிசுத்தமான நாட்களில் அவருடைய செயல்களால், இந்த வாழ்க்கையில் ஆதரிப்பது மட்டுமல்லாமல், வரப்போகிற வாழ்க்கையிலும் நித்திய ஜீவனை வழங்கி, நம் ஒவ்வொருவருக்காவும் அவருடைய ஜீவனைக் கொடுக்க அவர் முன்வந்தார்

பயங்கரமான சோதனைகளிலும் உண்மையுள்ளவர்களாயிருக்க நிரூபிப்பதன் மூலமாக மிகப்பெரிய உயரத்திற்கு வளர்ந்த மக்களை நான் பார்த்திருக்கிறேன். இன்று சபை முழுவதிலும் எடுத்துக்காட்டுகள் உள்ளன. துயரத்தினால் மக்கள் தங்கள் முழங்காலில் நிற்க தள்ளப்படுகிறார்கள். தங்களுடைய உண்மையான சகிப்பினாலும் முயற்சியினாலும் இரட்சகரை மற்றும் நமது பரலோக பிதாவைப் போலாகிறார்கள்.

என்னுடைய தாயிடமிருந்து மற்றொரு பாடத்தை நான் கற்றேன். ஒரு சிறுபெண்ணாக அவருக்கு டிப்தீரியா நோயிருந்து ஏறக்குறைய அவர் மரிக்க இருந்தார். பின்னர் அவருக்கு முதுகெலும்பு மூளைக்காய்ச்சலிருந்தது. அவருடைய தகப்பன் இளமையிலேயே மரித்து என்னுடைய தாயும் அவருடைய சகோதரரும் தங்களுடைய தாயை ஆதரிக்க உதவினார்கள்.

அவருடைய வாழ்நாள் முழுவதிலும் சோதனைகளின், நோயின் பாதிப்புகளை அவள் உணர்ந்தார். அவளுடைய வாழ்வின் கடைசி 10 ஆண்டுகளில் பல அறுவை சிகிச்சைகள் அவருக்குத் தேவையாயிருந்தது. ஆனால் இவை அனைத்தின் மூலமாக, படுக்கையிலானபோதிலும் கர்த்தருக்கு உண்மையுள்ளவராக அவர் நிரூபித்தார். அவருடைய படுக்கை அறையின் சுவற்றிலிருந்த ஒரே படம் இரட்சகருடையது. அவருடைய மரணப்படுக்கையில் எனக்குக் கூறிய அவருடைய கடைசி வார்த்தைகள்: “ஹால், உனக்கு ஜலதோஷம் பிடிக்கப்போவது போலிருக்கிறது. உன்னை நீ நன்றாகக் கவனித்துக்கொள்ளவேண்டும்.”

அவருடைய அடக்க ஆராதனையில், இறுதி உரையாற்றுபவராக மூப்பர் ஸ்பென்சர் டபுள்யு கிம்பலிருந்தார். அவருடைய சோதனைகள் மற்றும் அவருடைய விசுவாசத்தைப்பற்றி சிலவற்றை சொன்ன பின்பு, அத்தியாவசியமான இதை அவர் சொன்னார்: “ஏன் மில்ரெட் இவ்வளவு அதிகமாகவும் நீண்ட காலமாகவும் பாடுபட்டிருக்கவேண்டுமென உங்களில் சிலர் வியப்புறலாம். ஏன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் கர்த்தர் அவரை இன்னும் அதிகமாக மெருகூட்ட விரும்பினார்.

நிலையான விசுவாசத்துடன் சுமைகளை தாங்குகிற, அவர்களை இன்னும் அதிகமாக மெருகூட்ட கர்த்தர் நாடுவதால் தங்களுடைய சுமைகளைத் தாங்க மற்றவர்களுக்கு உதவுகிற இயேசு கிறிஸ்துவின் சபையின் அநேக உண்மையுள்ள அங்கத்தினர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்தகைய மெருகூட்டுதலை அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சகித்துக்கொண்டிருந்து மற்றவர்களுக்கு சேவை செய்கிற உலகெங்கிலுமுள்ள பராமரிப்பாளார்களுக்கும் தலைவர்களுக்கும்கூட என் அன்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம், நம்மை நேசிக்கிற ஒரு பரலோக பிதாவின் பிள்ளைகள் என நான் சாட்சியளிக்கிறேன். தலைவர் ரசல் எம்.நெல்சனுக்கு நம் எல்லோர் மேலுமுள்ள அன்பை நான் உணருகிறேன். இன்றைய உலகத்தில் அவர் கர்த்தருடைய தீர்க்கதரிசி. அப்படியே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.