பொது மாநாடு
சத்தியத்தை அறிவிக்கும் தைரியம்
அக்டோபர் 2022 பொது மாநாடு


சத்தியத்தை அறிவிக்கும் தைரியம்

நாம் சத்தியத்தைக் கற்றுக்கொண்டவுடன், கர்த்தர் இன்று இங்கே இருந்தால் என்ன செய்வார் என்பதைச் செய்வதற்கான வாய்ப்பை நமக்குத் தருகிறார்.

1982 இல், நான் ஒரு தொழில்நுட்ப பள்ளியில் நிலப்பரப்பியலில் எனது இணை பட்டப்படிப்பை முடித்தேன்.

ஆண்டின் இறுதியில், ஒரு வகுப்புத் தோழர் என்னை உரையாட அழைத்தார். நாங்கள் வகுப்பின் மற்ற உறுப்பினர்களை விட்டுவிட்டு ஒரு விளையாட்டு மைதானத்திற்குப் பக்கத்தில் ஒரு பகுதிக்குச் சென்றோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் அங்கு சென்றதும், அவர் தனது மத நம்பிக்கைகளைப் பற்றி என்னிடம் பேசினார், மேலும் அவர் ஒரு புத்தகத்தை என்னிடம் காட்டியது மட்டுமின்றி, அவர் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். உண்மையாகவே, அவர் சொன்ன எல்லா வார்த்தைகளும் எனக்கு நினைவில் இல்லை, ஆனால் அந்த தருணம் மற்றும் அவர் சொன்னபோது நான் உணர்ந்த விதம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, “இந்த புத்தகம் உண்மை என்றும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் மறுஸ்தாபிதம் செய்யப்பட்டது என்றும் உங்களுக்கு என் சாட்சியைச் சொல்ல விரும்புகிறேன்.”

எங்கள் உரையாடலுக்குப் பிறகு, நான் வீட்டிற்குச் சென்று, புத்தகத்தில் சில பக்கங்களைப் புரட்டி, அதை ஒரு அலமாரியில் வைத்தேன். நாங்கள் ஆண்டின் இறுதியில் இருந்ததால், அது எனது நிலப்பரப்பியல் பட்டத்தின் கடைசி ஆண்டு என்பதால், நான் உண்மையில் புத்தகத்தின் மீதும், என்னுடன் பகிர்ந்து கொண்ட என் வகுப்புத் தோழன் மீதும் அதிக கவனம் செலுத்தவில்லை. புத்தகத்தின் பெயரை நீங்கள் ஏற்கனவே யூகித்திருக்க முடியும். ஆம், அது மார்மன் புஸ்தகம்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஊழியக்காரர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள்; நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது அவர்கள் கிளம்பினார்கள். நான் அவர்களை மீண்டும் உள்ளே அழைத்தேன். நாங்கள் என் வீட்டின் முன் சிறிய உள் முற்றத்தில் அமர்ந்தோம், அவர்கள் எனக்கு போதித்தார்கள்.

சத்தியத்திற்கான எனது தேடலில், எந்த சபை உண்மை என்றும் அதை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது என்றும் அவர்களிடம் கேட்டேன். அந்த பதிலை நானே பெற முடியும் என்று ஊழியக்காரர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். மிகுந்த எதிர்பார்ப்புடனும் விருப்பத்துடனும், மார்மன் புஸ்தகத்திலிருந்து பல அதிகாரங்களைப் படிக்க, அவர்களின் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். நான் உண்மையான இருதயத்துடனும் உண்மையான நோக்கத்துடனும் ஜெபித்தேன் (மரோனி 10:4–5 பார்க்கவும்). எனது கேள்விக்கான பதில் தெளிவாக இருந்தது, பல நாட்களுக்குப் பிறகு, இன்னும் துல்லியமாக மே 1, 1983 அன்று, நான் ஞானஸ்நானம் பெற்றேன் மற்றும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் உறுப்பினராக திடப்படுத்தப்பட்டேன்

இன்று, நடந்த நிகழ்வுகளின் வரிசையைப் பற்றி நான் சிந்திக்கும்போது, ​​எனது வகுப்புத் தோழனின் தைரியம் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் தெளிவாகக் காண்கிறேன், அவர் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சத்தியத்தைப் பற்றிய தனது சாட்சியைப் பகிர்ந்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் மற்றும் மார்மன் புஸ்தகம் பற்றிய உறுதியான நிரூபணத்தை என்னிடம் வழங்கினார். அந்த எளிய செயல், ஆனால் எனக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது, நான் அவர்களைச் சந்தித்தபோது எனக்கும் ஊழியக்காரர்களுக்கும் இடையே ஒரு தொடர்பை உருவாக்கியது.

சத்தியம் எனக்கு வழங்கப்பட்டது, ஞானஸ்நானம் பெற்ற பிறகு, நான் இயேசு கிறிஸ்துவின் சீஷரானேன். பின்வந்த ஆண்டுகளில், தலைவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் போன்ற மிகவும் சிறப்பு வாய்ந்த நபர்களின் உதவியுடனும், எனது சொந்த படிப்பின் மூலமாகவும், நான் இயேசு கிறிஸ்துவின் சீஷனாக இருக்க முடிவு செய்தபோது, ​​சத்தியத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அதை அறிவிப்பதையும் நான் ஏற்றுக் கொண்டேன் என்று அறிந்தேன்.

சத்தியத்தை நம்புவதற்கும், அதைப் பின்பற்றுவதற்கும், இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக ஆவதற்கு முயற்சிக்கும் போது, நாம் தவறு செய்ய மாட்டோம், விமர்சிக்கப்பட மாட்டோம் சத்தியத்திலிருந்து விலகிச் செல்ல நாம் ஆசைப்பட மாட்டோம், அல்லது துன்பங்களை அனுபவிக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்துடன் சான்றிதழைப் பெறுவதில்லை. ஆனால், பரலோக பிதாவின் பிரசன்னத்திற்கு நம்மை திரும்ப அழைத்துச் செல்லும் நேரான மற்றும் குறுகிய பாதையில் நாம் நுழையும்போது, இந்தப் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க எப்போதும் ஒரு வழி இருக்கும் என்பதை சத்தியம் பற்றிய அறிவு நமக்குக் கற்பிக்கிறது.(1 கொரிந்தியர் 10:13 பார்க்கவும்); நமது விசுவாசத்தை சந்தேகிப்பதற்கு முன் நமது சந்தேகங்களை சந்தேகிக்கும் வாய்ப்பு எப்போதும் இருக்கும் ( Dieter F. Uchtdorf, “Come, Join with Us,”Liahona, Nov. 2013, 21 பார்க்கவும்); இறுதியாக, நாம் துன்பங்களைச் சந்திக்கும் போது நாம் தனியாக இருக்க மாட்டோம் என்ற உத்தரவாதம் நம்மிடம் உள்ளது, ஏனெனில் தேவன் தம் மக்களை அவர்களின் துன்பங்களுக்கு மத்தியில் சந்திக்கிறார்.(மோசியா 24:14 பார்க்கவும்).

நாம் சத்தியத்தைக் கற்றுக்கொண்டவுடன், கர்த்தர் இன்று இங்கே இருந்தால் என்ன செய்வார் என்பதைச் செய்வதற்கான வாய்ப்பை நமக்குத் தருகிறார். உண்மையாகவே, அவருடைய போதனைகளின் மூலம் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் நமக்குக் காட்டினார்: “எனது ஆவியின் வல்லமையால் நீங்கள் தேவதூதர்களைப்போல, எனது வார்த்தையை அறிவிப்பதில் ஒரு எக்காள சத்தத்தைப் போல உங்கள் குரல்களை உயர்த்தி, எனது நாமத்தில் இருவர் இருவராக என் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துச் செல்லுங்கள்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 42:6). நமது இளமைப் பருவத்தில் ஊழிய சேவைக்கான வாய்ப்பு தனித்தன்மை வாய்ந்தது!

தயவு செய்து இளைஞர்களே, ஊழியக்காரராக கர்த்தருக்குச் சேவை செய்வதற்கான உங்கள் ஆயத்தத்தைத் தள்ளிப் போடாதீர்கள். உங்கள் படிப்பில் சிறிது காலம் குறுக்கிடுவது, உங்கள் காதலியிடம் நீங்கள் மீண்டும் எப்போது டேட்டிங் செய்வோமா என்று எந்த உத்தரவாதமும் இல்லாமல் அவளிடம் விடைபெறுவது, அல்லது சிறந்த வேலையை விட்டு விட்டுச் செல்வது போன்ற ஒரு ஊழியம் செய்வதற்கான முடிவை கடினமானதாக மாற்றும் சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்ளும்போது, இரட்சகரின் உதாரணத்தை நினைவில் கொள்ளுங்கள். அவருடைய ஊழியத்தின் போது, அவர் விமர்சனம், துன்புறுத்தல் மற்றும் இறுதியில் அவரது பாவநிவாரண பலியின் கசப்பான கோப்பை உட்பட சிரமங்களை எதிர்கொண்டார். ஆயினும் எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர் தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்து அவருக்கு மகிமையைச் செலுத்த முயன்றார் . (யோவான் 5:30; 6:38–39; 3 நேபி 11:11; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:18–19 பார்க்கவும்.)

இளம் பெண்களே, நீங்கள் கர்த்தருடைய திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள், நீங்கள் முழு நேர ஊழியக்காரர்களாக சேவை செய்ய ஆயத்தம் செய்யும்போது, அதே சவால்களிலிருந்து நீங்கள் விலக்கு பெற மாட்டீர்கள்.

நீங்கள் வீட்டில் இருப்பதுபோல, 24 அல்லது 18 மாதம், சேவை ஊழியக் களத்தில் கடந்து செல்லும் என்று நான் அவருக்கு ஊழியம் செய்ய தீர்மானிக்கும் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன், ஆனால் இந்த சபையின் தகுதியான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு ஊழியக் களத்தில் காத்திருக்கும் வாய்ப்புகள் தனித்துவமானது. இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய சபையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலாக்கியத்தை புறக்கணிக்க முடியாது. எண்ணற்ற ஜெபங்களில் பங்கேற்பது, பகலில் பலமுறை உங்கள் சாட்சியத்தை பகிர்ந்து வளர்த்துக்கொள்வது, பல மணிநேரம் வேதம் படிப்பது, வீட்டில் இருந்திருந்தால் சந்திக்கவே முடியாதவர்களைச் சந்திப்பது ஆகியவை விவரிக்க முடியாத அனுபவங்கள். சேவை ஊழியங்களில் சேவை செய்ய கர்த்தர் அழைக்கும் இளைஞர்களுக்கும் அதே அளவிலான அனுபவம் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் மிகவும் வரவேற்கப்படுகிறீர்கள் மற்றும் அவசியமானவர். சேவை ஊழியங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டாம், ஏனெனில் சேவை ஊழியங்களும் விவரிக்க முடியாத அனுபவங்களை வழங்குகின்றன. உங்கள் ஆத்துமாவின் மதிப்பு உட்பட, ஆத்துமாக்களின் மதிப்பு தேவனின் பார்வையில் பெரியது (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 18:10).

உங்கள் சேவையிலிருந்து திரும்பியதும், ஒருவேளை உங்கள் காதலி அல்லது காதலன் உங்களுக்காக காத்திருக்காமல் இருக்கலாம், ஆனால் பயனுள்ள தொடர்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் நன்றாகக் கற்றுக்கொண்டிருப்பீர்கள். உங்கள் கல்விப் படிப்புகள், பணியிடத்திற்கு இன்னும் போதுமான அளவு தயார்படுத்துவது பற்றி உங்களுக்குக் கிடைத்த பார்வைகள் மூலம் அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும், மேலும் இறுதியாக, சமாதானத்தின் சுவிசேஷத்தை தைரியமாக அறிவித்து, மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சத்தியத்தைப் பற்றி சாட்சியமளிக்கும் முழு உறுதியையும் நீங்கள் பெறுவீர்கள்.

திருமணமாகி வாழ்வின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களுக்கு, கர்த்தரின் பணியில் நீங்கள் மிகவும் அவசியமானவர்கள். உங்களை ஆயத்தப்படுத்துங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள், உலகப்பிரகார மற்றும் ஆவிக்குரிய சுயசார்பை நாடுங்கள், ஏனென்றால் கர்த்தர் தம் பிள்ளைகளுக்கு என்ன செய்வார் என்பதைச் செய்வதற்கான வாய்ப்புகள் ஒரு வயதினருக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. சமீப வருடங்களில் எனக்கும் என் மனைவிக்கும் கிடைத்த மிக மகிழ்ச்சியான அனுபவங்கள், விசேஷித்த தம்பதிகளுடன், விசேஷமான இடங்களில், மற்றும் மிகவும் விசேஷமான நபர்களுக்குச் சேவை செய்யும் போது கிடைத்தவை.

எனது நிலப்பரப்பியல் பட்டப்படிப்பின் முடிவில் எனக்குக் கிடைத்த அனுபவம், சத்தியத்தைப் பிரகடனப்படுத்தும் போது அதை எப்போதும் பாதுகாப்போம் என்பதையும், சத்தியத்தைப் பாதுகாப்பது ஒரு செயலூக்கமான விஷயம் என்பதையும் எனக்குக் கற்றுக் கொடுத்தது. சத்தியத்தைப் பாதுகாப்பது ஒருபோதும் ஆக்ரோஷமான முறையில் செய்யப்படக்கூடாது, மாறாக, அன்பான பரலோக பிதாவின் பிள்ளைகளின் உலகப்பிரகார மற்றும் ஆவிக்குரிய நலனைப் பற்றி மட்டுமே சிந்தித்து, சத்தியத்தைப் பற்றி நாம் சாட்சியமளிக்கும் மக்களை பகிர்ந்து கொள்ளவும், அழைக்கவும் உண்மையான ஆர்வத்துடன் செய்யப்பட வேண்டும். (மோசியா 2:41 பார்க்கவும்).

அக்டோபர் 2021 பொது மாநாட்டில், நமது அன்புக்குரிய தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம். நெல்சன், சிலர் நினைப்பதற்கு மாறாக, உண்மையாகவே நாம் சரி, தவறு என நாம் அழைப்பதைப்பற்றி போதித்தார். உண்மையில் ஒரு முழுமையான சத்தியம் உள்ளது—நித்திய சத்தியம். (“Pure Truth, Pure Doctrine, and Pure Revelation,” Liahona, Nov. 2021, 6. பார்க்கவும்)

பரிசுத்த வேதம் நமக்கு போதிப்பதாவது, “அவைகள் இருக்கிறபடியே, அவைகள் இருந்தபடியே, அவைகள் வரப்போகிறபடியே சத்தியம் காரியங்களைப்பற்றிய ஞானமாகும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 93:24).

சத்தியத்தைப் பற்றிய அறிவு நம்மை மற்றவர்களை விட சிறந்தவர்களாக ஆக்குவதில்லை, ஆனால் தேவ பிரசன்னத்திற்குத் திரும்புவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அது நமக்குக் கற்பிக்கிறது.

நீங்கள் கிறிஸ்துவில் உறுதியாகவும், தைரியத்துடனும் சத்தியத்தைப் பிரசங்கிப்பது மட்டுமல்லாமல், சத்தியத்தின்படி வாழும்போது, இந்த நாட்களில் நீங்கள் சந்திக்கும் கொந்தளிப்பில் நீங்கள் ஆறுதலையும் அமைதியையும் காண்பீர்கள்.

வாழ்க்கையின் சவால்கள் நம்மை வீழ்த்தலாம், ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தைப் பிரயோகிக்கும்போது, நித்தியத்தின் பெரும் நோக்கத்தில் “[நமது] துன்பங்கள் ஒரு கணத்திற்கு மேல் தாங்காது” என்பதை அறிந்து கொள்ளுங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:7 பார்க்கவும்). தயவு செய்து, உங்களின் கஷ்டங்கள் மற்றும் சவால்களின் முடிவுக்கான காலக்கெடுவை உருவாக்காதீர்கள். பரலோக பிதாவை நம்புங்கள், விட்டுவிடாதீர்கள், ஏனென்றால், நாம் விட்டுவிட்டால், நமது பயணத்தின் முடிவு தேவனுடைய ராஜ்யத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம்.

சத்தியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள், சத்தியத்தின் மூலாதாரங்களிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

  • வேதங்கள் (2 நேபி 32:3 பார்க்கவும்).

  • தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் (ஆமோஸ் 3:7 பார்க்கவும்).

  • பரிசுத்த ஆவி (யோவான் 16:13 பார்க்கவும்).

நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், இது அவருடைய சபை என்பதற்கும் என் சாட்சியைச் சொல்கிறேன். நமக்கு ஒரு ஜீவிக்கும் தீர்க்கதரிசி இருக்கிறார், தைரியமாக சத்தியத்தை அறிவிக்கும்போது நாம் எப்போதும் சுதந்திரமாக உணர்வோம். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.