பொது மாநாடு
ஏழைகளுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் உதவுதல்
அக்டோபர் 2022 பொது மாநாடு


ஏழைகளுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் உதவுதல்

இயேசு கிறிஸ்துவின் சபை தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் உறுதிபூண்டுள்ளது, அந்த முயற்சியில் மற்றவர்களுடன் ஒத்துழைக்கவும் அது உறுதிபூண்டுள்ளது.

சகோதர சகோதரிகளே, நமது அன்புக்குரிய தலைவர் ரசல் எம். நெல்சன் இந்த கூட்டத்தில் பின்னர் நம்மோடு பேசுவார். என்னை முதல் செய்தியாளராக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையும் அதன் உறுப்பினர்களும் ஏழைகளுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் என்ன கொடுக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியது இன்றைய எனது பொருள். இதேபோல் மற்ற நல்லவர்களால் கொடுக்கப்பட்டதைப்பற்றியும் நான் பேசுவேன். தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது அனைத்து ஆபிரகாமிய மதங்களிலும் மற்றவற்றிலும் உள்ள ஒரு கொள்கை.

சில மாதங்களுக்கு முன்பு, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை முதன்முறையாக உலகளவில் நமது மனிதாபிமானப் பணியின் அளவைப்பற்றி அறிக்கையளித்தது.1 உலகளவில் 188 நாடுகளில் தேவைப்படுபவர்களுக்கான 2021-ம் ஆண்டு நமது செலவுகள் $906 மில்லியன், கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள். கூடுதலாக, நம் உறுப்பினர்கள் அதே காரணத்திற்காக 6 மில்லியன் மணிநேர உழைப்புக்கு முன்வந்தனர்.

அந்த புள்ளிவிவரங்கள், நிச்சயமாக, நாம் கொடுப்பது மற்றும் உதவுவதைப்பற்றிய முழுமை பெறாத அறிக்கை. அழைக்கப்பட்ட பதவிகள் மற்றும் தன்னார்வ உறுப்பினருக்கு உறுப்பினர் சேவை ஆகியவற்றில் நமது உறுப்பினர்கள் தனித்தனியாக வழங்கும் தனிப்பட்ட சேவைகளை அவை சேர்க்காது. நமது 2021 அறிக்கை, நமது சபையுடன் முறையாக இணைக்கப்படாத எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் நமது உறுப்பினர்கள் தனித்தனியாக என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. நான் இவற்றுடன் ஆரம்பிக்கிறேன்.

1831ல், மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபை ஒழுங்கமைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், கர்த்தர் அதன் உறுப்பினர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது பிள்ளைகள் அனைவருக்கும் வழிகாட்ட இந்த வெளிப்பாட்டைக் கொடுத்தார் என நான் நம்புகிறேன்:

“இதோ, சகல காரியங்களிலும் நான் கட்டளையிடவேண்டுமென்பது சரியல்ல; ஏனெனில் சகல காரியங்களிலும் கட்டாயப்படுத்தப்படுகிறவன் ஒரு சோம்பேறியாயிருக்கிறான், ஒரு புத்தியுள்ள வேலைக்காரனாயல்ல. ….

“மெய்யாகவே நான் சொல்லுகிறேன், ஒரு நல்ல காரணத்திற்காக மனுஷர்கள் ஆவலோடு ஈடுபடவேண்டும், தங்களின் சுயவிருப்பத்தில் அநேக காரியங்களைச் செய்து, மிகுந்த நீதியைக் கொண்டு வரவேண்டும்.

“ஏனெனில் அதிகாரம் அவர்களிடத்திலிருக்கிறது, அதனால் அவர்கள் தங்களுக்கே பிரதிநிதிகளாயிருக்கிறார்கள். மனுஷர்கள் எவ்வளவாய் நன்மை செய்கிறார்களோ அவ்வளவாய் அவர்கள் தங்கள் பலனை ஒருபோதும் இழக்கமாட்டார்கள்.”2

38 ஆண்டுகளுக்கும் மேலாக அப்போஸ்தலராக இருந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்முறை வேலையில், இந்த வெளிப்பாடு “ஒரு நல்ல காரணம்” மற்றும் “அதிக நீதியைக் கொண்டுவரும்” என்று விவரிக்கும் வகையான நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பல தாராள முயற்சிகளை நான் கண்டிருக்கிறேன். நமது சொந்த எல்லைகளுக்கு அப்பால், நமது பொது அறிவுக்கு அப்பால், உலகம் முழுவதும் இத்தகைய சேவைக்கான எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இதைப்பற்றி சிந்தித்துப் பார்க்கையில், மார்மன் புஸ்தக தீர்க்கதரிசி பென்யமீன் ராஜாவை நினைத்துப் பார்க்கிறேன், அவனுடைய பிரசங்கம் இந்த நித்திய உண்மையை உள்ளடக்கியது: “உங்கள் உடனுற்றார்களுக்கு நீங்கள் சேவை செய்யும்போது தேவனுக்கே சேவை செய்கிறீர்கள்.”3

நமது சக மனிதர்களுக்கான பல நல்வாழ்வு மற்றும் மனிதாபிமான சேவைகள் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையாலும் அதன் உறுப்பினர்களாகிய நம்மாலும் கற்பிக்கப்படுகின்றன, பயிற்சி செய்யப்படுகின்றன. உதாரணமாக, ஒவ்வொரு மாதமும் முதல் நாள் உபவாசமிருக்கிறோம், நமது சொந்த சபைகளில் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக உண்ணாத உணவுக்கு சமமான பங்கை நாம் வழங்குகிறோம். உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான மற்றும் பிற சேவைகளுக்கு சபை மகத்தான பங்களிப்புகளை செய்கிறது.

நமது சபை நேரடியாகச் செய்த போதிலும், உலகெங்கிலும் உள்ள தேவனின் பிள்ளைகளுக்கான மனிதாபிமான சேவையானது நமது சபையுடன் முறையான தொடர்பு இல்லாத நபர்கள் மற்றும் அமைப்புகளால் மேற்கொள்ளப்படுகிறது. நமது அப்போஸ்தலரில் ஒருவர் குறிப்பிட்டது போல்: “தேவன் தம்முடைய மகத்தான மற்றும் அற்புதமான பணியை நிறைவேற்றுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட மக்களைப் பயன்படுத்துகிறார். எந்தவொரு மக்களுக்கும் இது மிகப் பெரியது, மிகவும் கடினமானது.4 மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் உறுப்பினர்களாகிய நாம் மற்றவர்களின் சேவையைப்பற்றி அதிக விழிப்புணர்வோடிருக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் சபை தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் உறுதிபூண்டுள்ளது, அந்த முயற்சியில் மற்றவர்களுடன் ஒத்துழைக்கவும் அது உறுதிபூண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்திற்கு நாம் சமீபத்தில் ஒரு பெரிய பரிசை வழங்கினோம். பல தசாப்தங்களாக நமது மனிதாபிமானப் பணிகளில், இரண்டு அமைப்புகள் முக்கிய ஒத்துழைப்பாளர்களாக நிற்கின்றன: டஜன் கணக்கான நாடுகளில் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவை ஏஜென்சிகளின் திட்டங்கள் இயற்கை பேரழிவுகள் மற்றும் மோதல்களின் போது தேவனின் பிள்ளைகளுக்கு முக்கியமான நிவாரணத்தை வழங்கியுள்ளன. அதுபோலவே, கத்தோலிக்க நிவாரணச் சேவைகளுடன் நமக்கு நீண்ட கால வரலாறு உள்ளது. இந்த அமைப்புகள் உலகத் தரம் வாய்ந்த நிவாரணங்களைப்பற்றி நமக்கு அதிகம் கற்றுக் கொடுத்துள்ளன.

முஸ்லீம் எய்ட், வாட்டர் பார் பீப்பிள், இஸ்ராஎய்ட் உள்ளிட்ட ஒரு சில பிற அமைப்புகளுடன் பலனளிக்கும் ஒத்துழைப்புகளை நாம் பெற்றுள்ளோம். ஒவ்வொரு மனிதாபிமான அமைப்புக்கும் அதன் சொந்த சிறப்புப் பகுதிகள் இருந்தாலும்,தேவனின் பிள்ளைகளிடையே துன்பத்தைப் போக்குவதற்கான பொதுவான இலக்கை நாம் பகிர்ந்து கொள்கிறோம். இவை அனைத்தும் தேவனின் பிள்ளைகளுக்கான பணியின் ஒரு பகுதியாகும்.

நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து “உலகில் வரும் ஒவ்வொரு மனிதனையும் ஒளிரச் செய்யும் மெய்யான ஒளி” என்று தற்கால வெளிப்பாடு போதிக்கிறது.”5 இதன் விளைவாக, தேவனின் பிள்ளைகள் அனைவரும் தங்களின் அறிவு மற்றும் திறனுக்கு ஏற்றவாறு அவருக்கும் ஒருவருக்கொருவருக்கும் சேவை செய்வதற்கும் அறிவொளி பெற்றுள்ளனர்.

“நன்மை செய்யவும், தேவனை நேசிக்கவும், அவரைச் சேவிக்கவும் உணர்த்தி அழைக்கிற எல்லாம் தேவனால் ஏவப்பட்டவை”6 என மார்மன் புஸ்தகம் போதிக்கிறது

தொடர்கிறது:

“இதோ ஒவ்வொருவனும் தீமையிலிருந்து நன்மையை அறியத்தக்கதாக, அவனவனுக்கு கிறிஸ்துவின் ஆவி கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆதலால் நிதானிக்கிற வழியை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன், ஏனெனில் நன்மையை செய்ய அழைத்து கிறிஸ்துவில் விசுவாசிக்க ஏவும் எதுவும் கிறிஸ்துவினுடைய வல்லமையாலும் ஈவாலும் அனுப்பப்பட்டவை, …

“இப்பொழுதும் என் சகோதரரே, … நீங்கள் நிதானிக்க உதவும் ஒளியாகிய கிறிஸ்துவின் ஒளியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்”.7

உணவு, மருத்துவப் பராமரிப்பு மற்றும் கற்பித்தல் ஆகிய முக்கியப் பகுதிகளில் தேவனின் பிள்ளைகள் மற்ற தேவனின் பிள்ளைகளுக்கு உதவுவதற்கான சில எடுத்துக்காட்டுகள் இங்கே உள்ளன.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சீக்கிய கணவன் மனைவியான கந்தாரிகள், பசித்தவர்களுக்கு உணவளிக்க தனிப்பட்ட முறையில் குறிப்பிடத்தக்க முயற்சியை மேற்கொண்டனர். குருநானக் தர்பார் சீக்கியர் குருத்வாரா மூலம், மதம் அல்லது இனம் பாராமல் ஒவ்வொரு வார இறுதியில் 30,000க்கும் மேற்பட்ட சைவ உணவுகளை அவர்கள் இடத்துக்குள் நுழையும் எவருக்கும் வழங்குகிறார்கள். டாக்டர் கந்தாரி விளக்குகிறார், “அனைவரும் ஒன்று என்று நாங்கள் நம்புகிறோம்; நாம் ஒரே தேவனின் பிள்ளைகள், நாம் மனிதகுலத்திற்கு சேவை செய்ய இங்கு வந்துள்ளோம்.”8

தேவைப்படுபவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் பராமரிப்பு வழங்குவது மற்றொரு உதாரணம். சிகாகோவில், நான் ஒரு சிரிய-அமெரிக்கன் கிரிட்டிகல் கேர் மருத்துவர் டாக்டர். ஜாஹர் சாஹ்லூலைச் சந்தித்தேன். அவர் மெட்குளோபலின் நிறுவனர்களில் ஒருவர், இது சிரியப் போர் போன்ற நெருக்கடிகளில் மற்றவர்களுக்கு உதவுவதற்காக மருத்துவ நிபுணர்களை தங்கள் நேரம், திறன்கள், அறிவு மற்றும் தலைமைத்துவத்துடன் தன்னார்வத் தொண்டு செய்ய ஏற்பாடு செய்கிறது, அங்கு டாக்டர். சஹ்லூல் தனது உயிரைப் பணயம் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்தார். மெட்குளோபல் மற்றும் இதே போன்ற அமைப்புக்கள் (பல பிற்காலபரிசுத்தவான் நிபுணர்கள் உட்பட) உலகெங்கிலும் உள்ள ஏழைகளுக்குத் தேவையான நிவாரணங்களைக் கொண்டுவருவதற்கு தேவன் விசுவாசமுள்ள வல்லுநர்களை ஊக்குவிக்கிறார் என்பதை நிரூபிக்கிறது.9

பல தன்னலமற்ற தேவனின் பிள்ளைகள் உலகெங்கிலும் கற்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நமது மனிதாபிமான முயற்சிகள் மூலம் நமக்குத் தெரிந்த ஒரு நல்ல உதாரணம், பல சந்தர்ப்பங்களில் பல்வேறு மோதல்களில் இருந்து அகதியாக இருந்த திரு.கேப்ரியல் என்ற மனிதரின் செயல்பாடு. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நூறாயிரக்கணக்கான அகதி பிள்ளைகளுக்கு அவர்களின் நம்பிக்கைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் அவர்களின் மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவி தேவை என்பதை அவர் சமீபத்தில் கவனித்தார். அகதி மக்களில் உள்ள மற்ற ஆசிரியர்களை, “மரப் பள்ளிகள்” என்று அவர்கள் அழைத்த இடத்தில் நிர்வகித்தார், அங்கு பிள்ளைகள் ஒரு மரத்தின் நிழலில் பாடங்களுக்காக கூடினர். மற்றவர்கள் ஒழுங்கமைக்கவோ அல்லது வழிநடத்தவோ அவர் காத்திருக்கவில்லை, ஆனால் மன அழுத்தம் நிறைந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆரம்பப் பள்ளி பிள்ளைகளுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்கிய முயற்சிகளை தனிப்பட்ட முறையில் வழிநடத்தினார்.

நிச்சயமாக, இந்த மூன்று எடுத்துக்காட்டுகளும், நல்லவை அல்லது தேவனின் நோக்கம் கொண்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்களால் சொல்லப்பட்ட அல்லது செய்த அனைத்தும் உண்மையாக இருக்கும் என்று அர்த்தமல்ல. பல நிறுவனங்களையும் தனிமனிதர்களையும் பல நன்மைகளைச் செய்ய தேவன் உணர்த்துகிறார் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சபையின் அதிகமான உறுப்பினர்கள் மற்றவர்கள் செய்த நன்மைகளை அங்கீகரித்து அதைச் செய்வதற்கான நேரமும் வழிமுறையும் இருப்பதால் அதை ஆதரிக்க வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது.

சபை ஆதரிக்கும் சேவையின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே உள்ளன, மேலும் நமது உறுப்பினர்கள் மற்றும் பிற நல்ல மனிதர்கள் மற்றும் நிறுவனங்களும் நேரம் மற்றும் பணத்தை தனிப்பட்ட நன்கொடைகள் மூலம் ஆதரிக்கின்றன.

மத சுதந்திரத்துடன் நான் தொடங்குகிறேன். அதை ஆதரிப்பதில் நாம் நமது சொந்த மதநலன்களுக்கு சேவை செய்கிறோம், ஆனால் மற்ற மதங்களின் நலன்களுக்கும் சேவை செய்கிறோம் நமது முதல் தலைவர் ஜோசப் ஸ்மித் போதித்தது போல், “எங்கள் சொந்த மனசாட்சியின் சுயாதீனப்படி சர்வ வல்லமையுள்ள தேவனை ஆராதிக்கும் சிலாக்கியத்தையும் நாங்கள் உரிமை கோருகிறோம், சகல மனுஷருக்கும் அதே சிலாக்கியத்தை அனுமதிக்கிறோம், எவ்விதமாயும், எங்கேயும் அல்லது எதையும் அவர்கள் விரும்புகிறபடி ஆராதிப்பார்களாக.”10

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சபையின் மனிதாபிமான மற்றும் பிற நன்கொடைகளுக்கு நமது உறுப்பினர்களால் தானாக முன்வந்து ஆதரவளிக்கப்படும் பிற எடுத்துக்காட்டுகள், நமது நன்கு அறியப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அழிவுகள் மற்றும் சூறாவளி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளால் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்காக நாம் அதிகம் அறியப்படாத ஆனால் இப்போது வெளியிடப்பட்ட பெரிய நன்கொடைகள்.

நமது உறுப்பினர்கள் தங்கள் தன்னார்வ நன்கொடைகள் மற்றும் முயற்சிகளால் ஆதரிக்கும் பிற தொண்டு நடவடிக்கைகள் பட்டியலிட முடியாத அளவுக்கு உள்ளன, ஆனால் இந்த சிலவற்றைக் குறிப்பிடுவது அவற்றின் பல்வேறு முக்கியத்துவத்தை பரிந்துரைக்கும்: இனவெறி மற்றும் பிற தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடுவது, நோய்களைத் தடுப்பது மற்றும் குணப்படுத்துவது எப்படி, ஊனமுற்றோருக்கு உதவுவது, இசை மற்றும் அருங்காட்சியக அமைப்புகளுக்கு ஆதரவு மற்றும் அனைவருக்கும் தார்மீக மற்றும் உடல் சூழலை மேம்படுத்துதல்.

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அனைத்து மனிதாபிமான முயற்சிகளும் மார்மன் புஸ்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள நீதிமான்களின் முன்மாதிரியைப் பின்பற்ற முயல்கின்றன: “ஆகையால் தங்களுடைய விருத்தியடைந்த நிலையிலும், வஸ்திரமில்லாதவனையும் பட்டினியாயிருப்போனையும், விடாய்த்திருப்போனையும், வியாதியஸ்தனையும், போஷிக்கப்பட்டிராதவனையும், வெறுமையாய் அனுப்பவில்லை, . . முதியோருக்கும், வாலிபருக்கும், அடிமைக்கும் சுயாதீனனுக்கும், புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், சபையைச் சேர்ந்த, சேராதவர்களுக்குமாய் அனைவருக்கும் பட்சபாதமின்றி உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.”11

உலகெங்கிலும் உள்ள ஏழைகளுக்கும் துன்பத்தில் உள்ளவர்களுக்கும் உதவி செய்வதில் தேவனின் பிள்ளைகள் அனைவருக்கும் அவரது ஒளியும் ஆவியும் வழிகாட்டும், இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் சாட்சியமளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.