பொது மாநாடு
இயேசு கிறிஸ்துவே இளைஞர்களின் பெலன்
அக்டோபர் 2022 பொது மாநாடு


இயேசு கிறிஸ்துவே இளைஞர்களின் பெலன்

இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வையுங்கள். அவர் உங்களை நேர்வழியில் நடத்துவார். அவரே உங்கள் பெலன்.

இன்று இந்தச் செய்திக்கு ஆயத்தமாகும் போது, இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் உரையாடுவதற்கான வலுவான தூண்டுதலை நான் உணர்ந்தேன்.

நான் இளமையாக இருந்தவர்களிடம் கூடப்பேசுகிறேன், உண்மையில் அதை இனிமேலும் நினைவில் கொள்ள முடியாதவர்களிடம் கூட.

நமது இளைஞர்களை நேசிக்கும் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பும் அனைவருக்கும் நான் பேசுகிறேன்.

வளர்ந்து வரும் தலைமுறையினருக்கு, விசேஷமாக நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது.

உங்களுக்கு இரட்சகரின் செய்தி

என் அன்பான நண்பர்களே, இரட்சகர் இப்போது இங்கே இருந்தால், அவர் உங்களிடம் என்ன சொல்வார்?

அவர் உங்கள் மீதுள்ள ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் தொடங்குவார் என்று நான் நம்புகிறேன். அவர் அதை வார்த்தைகளால் சொல்லலாம், ஆனால் அது மிகவும் வலுவாக, அவருடைய சமூகத்தில் இருந்து, அது தவறாமல், உங்கள் இதயத்தில் ஆழமாகச் சென்று, உங்கள் முழு ஆத்துமாவையும் நிரப்பி வழிந்தோடும்!

இன்னும், நாம் அனைவரும் பலவீனமானவர்களாகவும் பூரணமற்றவர்களாகவும் இருப்பதால், சில அக்கறைகள் உங்கள் மனதில் தோன்றக்கூடும். நீங்கள் செய்த தவறுகள், சோதனைக்கு அடிபணிந்த நேரங்கள், நீங்கள் விரும்பியபோதும் செய்யாத விஷயங்கள் அல்லது நீங்கள் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும் என்பவைகளை நீங்கள் நினைவுகூரலாம்.

இரட்சகர் அதை உணர்ந்து கொள்வார், மேலும் அவர் வேதத்தில் கூறிய வார்த்தைகளின் மூலம் உங்களுக்கு உறுதியளிப்பார் என்று நான் நம்புகிறேன்:

பயப்படாதீர்கள்.1

“சந்தேகப்படாதே.”2

“திடன்கொள்ளுங்கள்.”3

“உங்கள் இருதயம் கலங்காமலிருப்பதாக.”4

உங்கள் தவறுகளுக்கு அவர் சாக்குபோக்கு சொல்வார் என்று நான் நினைக்கவில்லை. அவர் அவற்றைக் குறைக்க மாட்டார். இல்லை, அவர் உங்களை மனந்திரும்பவும், உங்கள் பாவங்களை விட்டுவிடவும், மாறவும் சொல்வார், அதனால் அவர் உங்களை மன்னிப்பார். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக அந்த பாவங்களை அவர் தம்மீது சுமந்தார் என்பதை அவர் உங்களுக்கு நினைவூட்டுவார். இது நம்முடைய அன்பான பரலோக பிதாவிடமிருந்து நமக்குக் கொடுக்கப்பட்ட மகிழ்ச்சியின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

நீங்கள் ஞானஸ்நானம் பெற்று, ஒவ்வொரு முறையும் நீங்கள் திருவிருந்தில் பங்குகொள்ளும் போதும் புதுப்பிக்கும்போதும் அவருடனான உங்களது உடன்படிக்கைகள், அவருடன் உங்களுக்கு ஒரு சிறப்பான தொடர்பைக் கொடுக்கின்றன என்பதை இயேசு சுட்டிக்காட்டலாம். அவருடைய உதவியால் நீங்கள் எந்தச் சுமையையும் சுமக்க முடியும் என்பதற்காக, இப்படிப்பட்ட இணைப்பால் ஒன்றாக இணைக்கப்படுவதாக வேதங்கள் விவரிக்கின்றன.5

இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அவர் உங்கள் பெலன் என்பதை நீங்கள் பார்க்கவும், உணரவும், அறியவும் விரும்புவார் என்று நான் நம்புகிறேன். அவருடைய உதவியால், நீங்கள் எதைச் சாதிக்க முடியும் என்பதற்கு வரம்புகள் இல்லை. உங்கள் ஆற்றல் வரம்பற்றது என்று. அவர் உங்களைப் பார்க்கும் விதத்தில் நீங்கள் உங்களைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். உலகம் உங்களைப் பார்க்கும் விதத்திலிருந்து இது மிகவும் வித்தியாசமானது.

நீங்கள் சர்வவல்லமையுள்ள தேவனின் மகள் அல்லது மகன் என்று இரட்சகர் நிச்சயமான வகையில் அறிவிப்பார். அன்பு, மகிழ்ச்சி, தூய்மை, பரிசுத்தம், ஒளி, கிருபை மற்றும் சத்தியம் ஆகியவற்றால் நிறைந்த உங்கள் பரலோக பிதா பிரபஞ்சத்தில் மிகவும் மகிமையானவர். ஒரு நாள் நீங்கள் அவரிடம் உள்ள அனைத்தையும் சுதந்தரமாகப் பெற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.6

நீங்கள் பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா உங்களுக்காகப் படைத்த அனைத்தாகவும் ஆகவும், கற்கவும், வளரவும், முன்னேறவும் பூமியில் இருப்பதற்கு இதுவே காரணம்.

இதை சாத்தியமாக்க, இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக அனுப்பினார். மகிழ்ச்சிக்கான அவரது பெரிய திட்டம், அவரது சபை, அவரது ஆசாரியத்துவம், வேதங்கள், அனைத்துக்கும் பின்னால் உள்ள நோக்கம் இதுதான்.

அதுவே உங்கள் இலக்கு. அதுவே உங்கள் எதிர்காலம். அதுவே உங்களுடைய தேர்வு.

சத்தியமும் தேர்வுகளும்

உங்கள் மகிழ்ச்சிக்கான தேவனின் திட்டத்தின் மையம், உங்கள் தேர்வு செய்யும் வல்லமை.7 நிச்சயமாக, உங்கள் பரலோக பிதா நீங்கள் அவருடன் நித்திய மகிழ்ச்சியுடனிருப்பதைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார், அதை அடைய அவர் உங்களுக்கு உதவுவார், ஆனால் அவர் அதை ஒருபோதும் உங்கள் மீது கட்டாயப்படுத்த மாட்டார்.

எனவே அவர் உங்களை தேர்வு செய்ய அனுமதிக்கிறார்: ஒளியா அல்லது இருளா? நல்லதா அல்லது கெட்டதா? மகிழ்ச்சியா அல்லது துன்பமா? நித்திய ஜீவன் அல்லது ஆவிக்குரிய மரணம்?8

இது எளிதான தேர்வு போல் தெரிகிறது, இல்லையா? ஆனால் எப்படியோ, இங்கே பூமியில், அது இருக்க வேண்டியதை விட மிகவும் சிக்கலானதாகத் தெரிகிறது.

பிரச்சனை என்னவென்றால், நாம் எப்போதுமே நாம் விரும்பும் அளவுக்கு விஷயங்களை தெளிவாகப் பார்ப்பதில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் அதை “ஒரு கண்ணாடியில் நிழலாட்டமாக” பார்ப்பதற்கு ஒப்பிட்டான்.9 எது சரி, எது தவறு என்பதில் உலகில் பல குழப்பங்கள் உள்ளன. தீமையை நல்லதாகவும், நல்லதை தீயதாகவும் காட்டுவதற்காக உண்மை திரிக்கப்படுகிறது.10

ஆனால் நீங்கள் சத்தியமான, நித்தியமான, மாறாத சத்தியத்தை உறுதியுடன் தேடும்போது உங்கள் தேர்வுகள் மிகவும் தெளிவாகிறது. ஆம், உங்களுக்கு இன்னும் சோதனைகளும் பாடுகளும் உள்ளன. இன்னும் மோசமான விஷயங்கள் நடக்கின்றன. புதிரான விஷயங்கள். சோகமான விஷயங்கள். ஆனால் நீங்கள் யார், நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள், எப்போது தேவனை நம்புவது போன்றவற்றை நீங்கள் அறியும்போது உங்களால் சமாளிக்க முடியும்.

அப்படியென்றால் உண்மையை எங்கே காண்கிறீர்கள்?

இது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் அடங்கியுள்ளது. மேலும் அந்த சுவிசேஷத்தின் முழுமை இயேசு கிறிஸ்துவின் பிற்காலப் பரிசுத்தவான்களின் சபையில் கற்பிக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்து சொன்னார், “அதற்கு இயேசு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.”11

நீங்கள் செய்ய முக்கியமான தேர்வுகள் இருக்கும்போது, இயேசு கிறிஸ்துவும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷமும் சிறந்த தேர்வாகும். உங்களிடம் கேள்விகள் இருந்தால், இயேசு கிறிஸ்துவும் அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷமும் சிறந்த பதில். நீங்கள் பலவீனமாக உணரும்போது, இயேசு கிறிஸ்து உங்கள் பெலன்.

சோர்வுற்றோருக்கு வல்லமை கொடுக்கிறார்; மேலும் வல்லமையற்றவர்களாக உணருபவர்களுக்கு, அவர் பலத்தை அதிகரிக்கிறார்.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள் அவருடைய பலத்தால் புதுப்பிக்கப்படுவார்கள்.12

இளைஞரின் பெலனுக்காக

வழியைக் கண்டறியவும், கிறிஸ்துவின் கோட்பாட்டை உங்கள் வாழ்க்கையில் வழிகாட்டும் செல்வாக்காக ஏற்படுத்தவும், உங்களுக்கு உதவ, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை ஒரு புதிய ஆதாரத்தை, இளைஞர்களின் பெலனுக்காகவின் திருத்தப்பட்ட பதிப்பை தயாரித்துள்ளது.

படம்
இளைஞர்களின் பெலனுக்கான 2011 பதிப்பு

50 ஆண்டுகளுக்கும் மேலாக, இளைஞர்களின் பெலனுக்காக, பிற்காலப் பரிசுத்தவான் இளைஞர்களின் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. நான் எப்போதும் ஒரு பிரதியை என் சட்டைப் பையில் வைத்திருப்பேன், மேலும் நமது தரங்களைப் பற்றி ஆர்வமுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நமது நாளின் சவால்கள் மற்றும் சோதனைகளைச் சிறப்பாகச் சமாளிக்க இது புதுப்பிக்கப்பட்டு புத்துணர்வூட்டப்பட்டுள்ளது. இளைஞர்களின் பெலனுக்காக புதிய பதிப்பு, 50 வெவ்வேறு மொழிகளிலும், அச்சிடப்பட்டும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் தேர்வுகள் செய்வதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க உதவியாக இருக்கும். தயவு செய்து உங்கள் சொந்தமானதாக பற்றிக்கொண்டு, உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

படம்
இளைஞரின் பெலனுக்காக 2022 பதிப்பு

இளைஞர்களின் பெலனுக்காக என்பதன் இந்தப் புதிய பதிப்பு, தேர்வுகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டி என்ற துணைத்தலைப்பிடப்பட்டுள்ளது.

மிகத் தெளிவாகச் சொல்வதென்றால், தேர்வுகளை செய்வதற்கான சிறந்த வழிகாட்டி இயேசு கிறிஸ்து. இயேசு கிறிஸ்துதான் இளைஞர்களின் பெலன்.

எனவே இளைஞர்களின் பெலனுக்காகவின் நோக்கம் உங்களுக்கு அவரை சுட்டிக்காட்டுவதாகும். அவருடைய மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் நித்திய சத்தியங்களை இது உங்களுக்குக் கற்பிக்கிறது—நீங்கள் யார், அவர் யார், அவருடைய பலத்தால் நீங்கள் என்ன சாதிக்க முடியும் என்பது பற்றிய உண்மைகள். அந்த நித்திய சத்தியங்களின் அடிப்படையில் நீதியான தேர்வுகளை எப்படி செய்வது என்பதை இது உங்களுக்கு போதிக்கிறது.13

இளைஞர்களின் பெலனுக்காக என்ன செய்யாது என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். இது உங்களுக்காக முடிவுகளை எடுக்காது. நீங்கள் எப்போதாவது எதிர்கொள்ளக்கூடிய ஒவ்வொரு தேர்வுக்கும் இது “ஆம்” அல்லது “இல்லை” என்பதை வழங்காது. இளைஞர்களின் பெலனுக்காக உங்கள் தேர்வுகளுக்கான அடித்தளத்தில் கவனம் செலுத்துகிறது. இது ஒவ்வொரு குறிப்பிட்ட நடத்தைக்கும் பதிலாக மதிப்புகள், கொள்கைகள் மற்றும் கோட்பாட்டின் மீது கவனம் செலுத்துகிறது.

கர்த்தர், தன் தீர்க்கதரிசிகள் மூலம், எப்போதும் அந்த திசையில் நம்மை வழிநடத்தி வருகிறார். “வெளிப்பாட்டைப் பெறுவதற்கான [நம்] ஆவிக்குரிய திறனை அதிகரிக்க” அவர் நம்மிடம் மன்றாடுகிறார்.14 “அவருக்குச் செவிகொடுக்க” அவர் நம்மை அழைக்கிறார்.15 உயர்ந்த மற்றும் பரிசுத்தமான வழிகளில் அவரைப் பின்பற்ற அவர் நம்மை அழைக்கிறார்.16 என்னைப் பின்பற்றி் வாருங்களில், ஒவ்வொரு வாரமும் இதே வழியில் கற்றுக்கொள்கிறோம்.

நீங்கள் அணியக்கூடாத ஆடைகள், சொல்லக்கூடாத வார்த்தைகள் மற்றும் நீங்கள் பார்க்கக்கூடாத திரைப்படங்கள் ஆகியவற்றின் நீண்ட பட்டியல்களை வழிகாட்டி உங்களுக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் உலகளாவிய சபையில் அது உண்மையில் உதவியாக இருக்குமா? அத்தகைய அணுகுமுறை உங்களை கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கைக்கு உண்மையிலேயே தயார்படுத்துமா?

ஜோசப் ஸ்மித் சொன்னார், “நான் அவர்களுக்கு சரியான கொள்கைகளை போதிக்கிறேன், அவர்கள் தங்களை ஆளுகை செய்கிறார்கள்.”17

பென்யமின் ராஜா மார்மன் புஸ்தகத்தில் தன் ஜனங்களிடம் சொன்னான், “நீங்கள் பாவம் செய்யக்கூடிய எல்லாவற்றையும் குறித்து உங்களுக்கு நான் சொல்ல இயலாது. ஏனென்றால், நான் அவைகளை எண்ணக்கூடாத அளவுக்கு பல வழிகளும் வகைகளும் இருக்கின்றன.”18

பென்யமின் ராஜா தொடர்ந்து சொன்னான், “ … உங்களின் வாழ்வின் முடிவுபரியந்தமும் நீங்கள் கேள்விப்பட்ட கர்த்தரில் … விசுவாசமாய்த் தரித்திருந்து, தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, உங்கள் எண்ணங்களையும் வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும் உங்களையும் நீங்கள் காத்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் நான் உங்களுக்குச் சொல்லக்கூடும்.”19

படம்
இரட்சகர் இயேசு கிறிஸ்து

விதிகள் இருப்பது தவறா? நிச்சயமாக இல்லை. நம் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் அவை தேவை. ஆனால் இரட்சகரிடம் கவனம் செலுத்தாமல் விதிகளில் மட்டும் கவனம் செலுத்துவது தவறு. ஏன் மற்றும் எப்படி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், பின்னர் உங்கள் தேர்வுகளின் விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர் உங்களை நேர்வழியில் நடத்துவார். அவரே உங்கள் பெலன்.20

உண்மையான கோட்பாட்டின் வல்லமை

ஏனெனில் இளைஞர்களின் பெலனுக்காக இயேசு கிறிஸ்துவின் கோட்பாட்டை தைரியமாக அறிவிக்கிறது. கிறிஸ்துவின் கோட்பாட்டின் அடிப்படையில் தேர்வுகள் செய்ய உங்களை அழைப்பதில் அது தைரியமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து அவருடைய வழியைப் பின்பற்றுபவர்களுக்கு வாக்களிக்கின்ற ஆசீர்வாதங்களை விவரிப்பதில் தைரியமாக இருக்கிறது.21

தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்: “தேவன் [உங்கள் வாழ்க்கையில்] ஜெயங்கொள்ள வேண்டும் என்பதே உங்கள் மிகப்பெரிய விருப்பமாக இருக்கும் போது, … பல முடிவுகள் எளிதாகிவிடும். … பல சிக்கல்கள் இல்லாமல் போகின்றன! உங்களை எப்படி அலங்கரிப்பது என்பது உங்களுக்குத் தெரியும். எதைப் பார்ப்பது, படிப்பது, உங்கள் நேரத்தை எங்கு செலவிடுவது, யாருடன் தொடர்பிலிருப்பது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஆக விரும்பும் … அந்த விதமான நபரை நீங்கள் அறிவீர்கள்.”22

ஒரு உயர்ந்த தரம்

இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு மிக உயர்ந்த தரங்களை வைத்துள்ளார். மேலும் அவருடைய சித்தத்தை ஆர்வத்துடன் தேடுவதற்கும், அவருடைய சத்தியங்களின்படி வாழ்வதற்குமான அழைப்பே சாத்தியமான உயர்ந்த தரம்!

முக்கியமான உலகப்பிரகார மற்றும் ஆவிக்குரிய தேர்வுகள், தனிப்பட்ட விருப்பம் அல்லது வசதியான அல்லது பிரபலமானவற்றின் அடிப்படையில் மட்டும் இருக்கக்கூடாது.23 “உனக்கு விருப்பமானதைச் செய்” என்று கர்த்தர் சொல்லவில்லை.

“தேவன் ஜெயங்கொள்வாராக” என்று அவர் சொல்கிறார்.

அவர் சொல்கிறார், “என் பின்னே வா” என அவர் நம்மை அழைக்கிறார்.24

அவர் கூறுகிறார், “பரிசுத்தமான, உயர்ந்த, முதிர்ந்த விதமாக வாழுங்கள்.”

“என் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்” என்று அவர் கூறுகிறார்.

இயேசு கிறிஸ்து நமக்கு பரிபூரண உதாரணம், அவரைப் பின்பற்ற நம் ஆத்துமாமாவின் முழு ஆற்றலுடனும் பாடுபடுகிறோம்.

என் அன்பான நண்பர்களே, நான் மீண்டும் சொல்கிறேன், இரட்சகர் இன்று இங்கு நின்றிருந்தால், அவர் உங்கள் மீதுள்ள முடிவில்லாத அன்பை, உங்கள் மீதுள்ள முழு நம்பிக்கையை வெளிப்படுத்துவார். உங்களால் இதைச் செய்ய முடியும் என்று அவர் கூறுவார். இயேசு கிறிஸ்து உங்கள் பலமாக இருப்பதால் நீங்கள் ஆனந்தமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க முடியும். நீங்கள் தன்னம்பிக்கை, அமைதி, பாதுகாப்பு, மகிழ்ச்சி மற்றும் இப்போதும் என்றென்றும் சொந்தமானவராக இருப்பதைக் காணலாம், ஏனென்றால் நீங்கள் அனைத்தையும் இயேசு கிறிஸ்துவில், அவருடைய சுவிசேஷத்தில், அவருடைய சபையில் காணலாம்.

இதற்கு நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலன் என்ற முறையில் எனது பரிசுத்த சாட்சியம் அளித்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு ஆழ்ந்த நன்றியுடனும் அன்புடனும் எனது இதயப்பூர்வமான ஆசீர்வாதத்தை அளிக்கிறேன், ஆமென்.

குறிப்புகள்

  1. லூக்கா 5:10; 8:50; 12:7; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 38:15; 50:41; 98:1.

  2. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6:36.

  3. மத்தேயு 14:27; யோவான் 16:33; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 61:36; 68:6; 78:18.

  4. யோவான் 14:1, 27.

  5. மத்தேயு 11:28–30 பார்க்கவும்.

  6. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:38 பார்க்கவும்.

  7. நீங்கள் விரும்பும் முழு விளைவுகளை நீங்கள் பெறும்படிக்கு, உங்கள் விருப்பங்களின் மூலம் உங்கள் விருப்பங்களை தெரிவிக்க அனுமதிக்கும் வகையில் பிதாவின் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறலாம். மூப்பர் டேல் ஜி. ரென்லண்ட் கற்பித்தபடி, “நமது பரலோக பிதாவின் குறிக்கோள், அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்யச் செய்வதல்ல; அவருடைய பிள்ளைகள் சரியானதைச் செய்யத் தேர்ந்தெடுத்து இறுதியில் அவரைப் போல் ஆக வேண்டும் என்பதே.”(“Choose You This Day,” Liahona, Nov. 2018, 104).

  8. 2 நேபி 2:26–27 பார்க்கவும்.

  9. 1 கொரிந்தியர் 13:12.

  10. ஏசாயா 5:20 பார்க்கவும்.

  11. யோவான் 14:6.

  12. ஏசாயா 40:29–31 பார்க்கவும்.

  13. பிற்காலப் பரிசுத்தவான்களாக, நாம் அடிக்கடி என்ன செய்கிறோம் மற்றும் செய்யாமல் இருக்கிறோம், நமது நடத்தைகளால் அறியப்படுகிறோம். இது நல்லதாக இருக்கலாம், ஆனால் நமக்குத் தெரிந்தவை (நம் நடத்தைகளை இயக்கும் உண்மைகள்) மற்றும் நமக்குத் தெரிந்த அவர் (இரட்சகர் மற்றும் அவருக்கான நமது அன்பு எப்படி நம் நடத்தைகளை ஊக்குவிக்கிறது) ஆகியவற்றைப் பற்றி அறியப்படுவது இன்னும் சிறந்தது.

  14. Russell M. Nelson, “Revelation for the Church, Revelation for Our Lives,” Liahona, May 2018, 96.

  15. Russell M. Nelson, “Hear Him,” Liahona, May 2020, 88–92 பார்க்கவும்.

  16. இளைஞர்களின் பெலனுக்காக புதிய வழிகாட்டியின் கொள்கை அடிப்படையிலான அணுகுமுறை, இரட்சகரின் சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட பிற சமீபத்திய முன்முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது, இதில் எனது சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், ஊழியம் செய்தல், வீட்டை மையமாகக் கொண்ட என்னைப் பின்பற்றி வாருங்கள் பாடத்திட்டம், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் திட்டம், இரட்சகரின் வழியில் கற்பித்தல், மற்றும் புதிய பொது கையேடு. தெளிவாக, கர்த்தர் நம்முடைய ஆவிக்குரிய திறனைக் கட்டியெழுப்புகிறார். கடைசி நாட்களில் அவர் தம் உடன்படிக்கையின் ஜனம் மீது அதிக நம்பிக்கையை காட்டுகிறார்.

  17. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 284.

  18. மோசியா 4:29. ஒரு விதத்தில், இயேசுவின் நாளிலிருந்த பரிசேயர்கள் இதைத்தான் செய்ய முயன்றனர். மக்கள் சட்டத்தை மீறுவதைத் தடுக்கும் ஆர்வத்தில், அவர்கள் பரிசுத்த எழுத்துக்களைப் பற்றிய அவர்களின் புரிதலின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான விதிகளைத் தொகுத்தனர். பரிசேயர்கள் தவறு செய்தது என்னவென்றால், தங்கள் விதிகள் தங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நினைத்தார்கள். பின்னர், இரட்சகர் தோன்றியபோது, அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை.

  19. மோசியா 4:30; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டுள்ளது.

  20. இன்று ஒரு கொள்கை அடிப்படையிலான அணுகுமுறை தேவைப்படுவதற்கு மற்றொரு காரணம் கரித்தரின் சபையில் அதிகரித்து வரும் கலாச்சார பன்முகத்தன்மை ஆகும். கொள்கைகள் நித்தியமானவை மற்றும் உலகளாவியவை. குறிப்பிட்ட விதிகள் அல்லது அந்தக் கொள்கைகளின் பயன்பாடுகள் சில இடங்களில் நன்றாக வேலை செய்கின்றன, ஆனால் சில இடங்களில் இல்லை. குறிப்பிட்ட பயன்பாடுகள் காலப்போக்கில் மற்றும் கலாச்சாரங்கள் முழுவதும் வேறுபட்டாலும் கூட, இயேசு கிறிஸ்துவும் அவர் போதித்த நித்திய சத்தியங்களும் நம்மை ஒன்றிணைக்கிறது. எனவே செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை அனைத்தையும் பட்டியலிடுவதில் உள்ள சிக்கல் அது நடைமுறைக்கு மாறானது மற்றும் நீடிக்க முடியாதது மட்டுமல்ல. பிரச்சனை என்னவென்றால், அது நமது பலத்தின் உண்மையான ஆதாரமான நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து நம் கவனத்தைத் திசைதிருப்புகிறது.

  21. பல ஆண்டுகளுக்கு முன்பு, தலைவர் பாய்ட் கே. பாக்கர் இந்த வல்லமைவாய்ந்த வார்த்தைகளைப் பேசினார்: “உண்மையான கோட்பாடு, புரிந்துகொள்ளப்பட்ட, அணுகுமுறைகளையும் நடத்தையையும் மாற்றுகிறது. நடத்தை பற்றிய ஆய்வு நடத்தையை மேம்படுத்துவதை விட சுவிசேஷத்தின் கோட்பாடுகளைப் படிப்பது நடத்தையை விரைவாக மேம்படுத்தும். (“Do Not Fear,” Liahona, May 2004, 79).

    தலைவர் எஸ்றா டாப்ட் பென்சன் இதே போன்ற ஒரு சத்தியத்தைப் போதித்தார்: “கர்த்தர் உள்ளிருந்து வெளியே செயல்படுகிறார். உலகம் வெளியில் இருந்து உள்ளே இயங்குகிறது. … உலகம் மனித நடத்தையை வடிவமைக்கும், ஆனால் கிறிஸ்துவால் மனித இயல்பை மாற்ற முடியும்”(“Born of God,” Ensign, Nov. 1985, 6).

    மார்மன் தீர்க்கதரிசி ஆல்மா தன்னைச் சுற்றியுள்ள உலகில் தீமையைக் கண்டபோது, ​​அவன் தேவனுடைய வார்த்தையின் பக்கம் திரும்பினான், ஏனென்றால் அது “மக்களின் மனதில் பட்டயத்தை விட அல்லது அவர்களுக்கு நடந்த வேறு எதையும் விட வல்லமையான தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று அவன் அறிந்திருந்தான், ஆகையால் ஆல்மா தேவனுடைய வார்த்தையின் நன்மையை முயற்சி செய்வது நல்லது என்று நினைத்தான்” (ஆல்மா 31:5).

  22. Russell M. Nelson, “Let God Prevail,” Liahona, Nov. 2020, 94. ஓய்வு நாளைக் கொண்டாடுவதைப் பற்றி நமக்குக் கற்பித்தபோது, தலைவர் நெல்சன் இந்த அணுகுமுறையை எடுத்துக்காட்டினார்: “என்னுடைய இளமை பருவத்தில், ஓய்வுநாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலைத் தொகுத்த மற்றவர்களின் தொகுப்பை நான் படித்தேன். ஓய்வுநாளில் என்னுடைய நடத்தை மற்றும் எனது அணுகுமுறை எனக்கும் என் பரலோக பிதாவுக்கும் இடையே ஒரு அடையாளமாக இருந்தது என்பதை வேதவசனங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டது பின்னாளில்தான். அந்த புரிதலுடன், எனக்கு இனி செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியல்கள் தேவையில்லை. ஓய்வுநாளுக்கு ஒரு நடவடிக்கை பொருத்தமானதா இல்லையா என்பதை நான் முடிவு செய்ய வேண்டியிருந்தபோது, ‘தேவனுக்கு நான் என்ன அடையாளம் கொடுக்க விரும்புகிறேன்?’ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அந்த கேள்வி ஓய்வு நாள் பற்றிய எனது தேர்வுகளை தெளிவாக்கியது” (“The Sabbath Is a Delight,” Liahona, May 2015, 130).

  23. மூப்பர் டேவிட் ஏ. பெட்னார், “நீதியின் கோட்பாடுகள் … வெவ்வேறு சூழ்நிலைகள், சவால்கள், முடிவுகள் மற்றும் உலக அனுபவங்களை நாம் வழிநடத்தும் போது நித்திய சத்தியத்தின் விலைமதிப்பற்ற கண்ணோட்டத்தை வழங்குவதன் மூலம் நமது தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் சுய-மைய ஆசைகளுக்கு அப்பால் பார்க்க உதவுகின்றன” என்று போதித்தார். (“The Principles of My Gospel,” Liahona, May 2021, 123–24).

  24. லூக்கா 18:22.