பொது மாநாடு
தசமபாகம்: பரலோகத்தின் பலகணிகளைத் திறத்தல்
அக்டோபர் 2023 பொது மாநாடு


தசமபாகம்: பரலோகத்தின் பலகணிகளைத் திறத்தல்

பரலோகத்தின் பலகணிகள் பல வழிகளில் திறக்கப்படுகின்றன. கர்த்தருடைய நேரத்தில் நம்பிக்கை வையுங்கள்; ஆசீர்வாதங்கள் எப்போதும் வருகின்றன.

சமீபத்தில் தென் அமெரிக்காவில் இருந்தபோது, வெனிசுவேலாவைச் சேர்ந்த சகோதரர் ரோஜர் பார்ரா என்னுடன் பின்வரும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்:

“2019 ஆம் ஆண்டில் வெனிசுவேலா ஐந்து நாட்களுக்கு மின்தடை ஏற்பட்ட பிரச்சினைகளால் அதிர்ந்தது.

“குழப்பம் மற்றும் அராஜகம் தெருக்களில் ஆட்சி செய்தன, பல பரிதாபமான மக்களுக்கு போதுமான உணவு இல்லை.

“சிலர் உணவு வணிக நிறுவனங்களை சூறையாடத் தொடங்கினர், தங்கள் பாதையில் உள்ள அனைத்தையும் அழித்தார்கள்.

“ஒரு சிறிய பேக்கரியின் உரிமையாளராக, எங்கள் வணிகத்தைப் பற்றி நான் மிகவும் கவலைப்பட்டேன். ஒரு குடும்பமாக, எங்கள் பேக்கரியில் உள்ள அனைத்து உணவையும் தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடிவு செய்தோம்.

“ஒரு இருண்ட இரவில் கலவரங்கள் எல்லா இடங்களிலும் நடந்தன. எனது அன்பு மனைவி மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் மட்டுமே எனது அக்கறை இருந்தது.

“விடியற்காலையில் நான் எங்கள் பேக்கரிக்குச் சென்றேன். துக்ககரமாக, அருகிலுள்ள ஒவ்வொரு உணவு வணிகமும் கொள்ளையர்களால் அழிக்கப்பட்டது, ஆனால் என்னை ஆச்சரியப்படுத்தும் வகையில், எங்கள் பேக்கரி அப்படியே இருந்தது. எதுவும் அழிக்கப்படவில்லை. நான் பணிவுடன் என் பரலோக பிதாவுக்கு நன்றி சொன்னேன்.

“வீட்டிற்கு வந்ததும், தேவனின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் என் குடும்பத்தாரிடம் சொன்னேன்.

“அவர்கள் அனைவரும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தனர்.

“என் மூத்த மகன் ரோஜெலியோ, பன்னிரண்டு வயதுதான், அவன் சொன்னான், ‘அப்பா! நமது கடை ஏன் பாதுகாக்கப்பட்டது என்று எனக்குத் தெரியும். நீங்களும் அம்மாவும் எப்பொழுதும் தசமபாகம் கொடுக்கிறீர்கள்.’”

சகோதரர் பார்ரா முடித்தார்: “மல்கியாவின் வார்த்தைகள் என் மனதில் தோன்றின. ‘பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவன் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை.’ [மல்கியா 3:11]. நாங்கள் மண்டியிட்டு நமது பரலோக பிதாவின் அற்புதத்திற்காக நன்றி தெரிவித்தோம்.”1

படம்
பார்ரா குடும்பம்

இப்போது இதனால் என்னை சோதியுங்கள்

நம்மிடம் உள்ள அனைத்தும், நாம் இருக்கும் நிலை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை. கிறிஸ்துவின் சீடர்களாக, நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் மனமுவந்து பகிர்ந்து கொள்கிறோம்.

கர்த்தர் நமக்குக் கொடுக்கிற எல்லாவற்றிலும், நம்முடைய வரவில் 10 சதவிகிதத்தை பூமியில் அவருக்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் திரும்பக்கொடுக்கும்படி அவர் நம்மைக் கேட்டுக்கொண்டார். நம்முடைய தசமபாகங்களில் நாம் நேர்மையாக இருக்கும்போது, அவர் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார், “வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோ.”2 அவர் நம்மை தீமையிலிருந்து காப்பார் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.3 இந்த வாக்குறுதிகள் மிகவும் நிச்சயமானவை,4 கர்த்தர் அறிவிக்கிறார், “அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்,”5 இச்சொற்றொடர் வேதத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை, ஆனால் மல்கியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரலோகத்தின் பலகணிகள் பல வழிகளில் திறக்கப்படுகின்றன. சில உலகப்பிரகாரமானவை, ஆனால் பல ஆவிக்குரியவை. சில எளிமையானவை மற்றும் கவனிக்காமல் இருப்பது சுலபம். கர்த்தருடைய நேரத்தில் நம்பிக்கை வையுங்கள்; ஆசீர்வாதங்கள் எப்போதும் வரும்.

வாழ்க்கைத் தேவைகளைப் பெற போராடுபவர்களுடன் நாம் வருத்தப்படுகிறோம். உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சபை சமீபத்தில் 54 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியது.6 உங்கள் மாதாந்திர உபவாச காணிக்கைகள் மூலம், நமது நல்ல ஆயர்கள் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோருக்கு தற்காலிகமாக தங்கள் மேசைகளில் உணவு, முதுகில் உடைகள் மற்றும் தலைக்கு மேல் தங்குமிடம் தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள். இவ்வுலகின் வறுமைக்கு ஒரே நிரந்தர தீர்வு இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம்தான்.7

விசுவாசத்தின் காரியம்

மனிதர்களின் ஞானம் மனிதர்களின் விஷயங்களைப் புரிந்துகொள்கிறது, ஆனால் தேவனுடைய விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தான்.8 நமது பணத்தின் அடிப்படையில் உலகம் தசமபாகம் பற்றி பேசுகிறது, ஆனால் தசமபாகம் என்ற பரிசுத்தமான நியாயப்பிமாணம் முக்கியமாக நமது நம்பிக்கை சம்மந்தப்பட்ட விஷயம். நம்முடைய தசமபாகங்களில் நேர்மையாக இருப்பது, நம்முடைய சொந்த அக்கறை மற்றும் ஆர்வத்திற்கு மேலாக, நம் வாழ்வில் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்க விருப்பத்தை காட்டுவதற்கான ஒரு வழியாகும். நீங்கள் கர்த்தரை நம்பினால், பரலோகத்தின் ஆசீர்வாதங்கள் தொடர்ந்துவரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இயேசு சொன்னார் “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.” 9 உயிர்த்தெழுந்த இரட்சகர் மல்கியாவில் காணப்பட்ட தம்முடைய வாக்குத்தத்தங்களை தங்கள் பதிவேட்டில் எழுதும்படி நேபியர்களிடம் கேட்டார்.10 நம் நாளில், தசமபாகம் பற்றிய தெய்வீக நியாயப்பிரமாணத்தை கர்த்தர் மீண்டும் உறுதிப்படுத்தி, அறிவித்தார்: “இது என்னுடைய ஜனங்களின் தசமபாகத்திற்கான ஆரம்பமாயிருக்கும். வருஷந்தோறும் தங்களுடைய சகல வருமானத்திலிருந்தும் பத்தில் ஒரு பாகத்தை [அவர்கள்] கொடுப்பார்களாக, என்றென்றைக்கும் இது அவர்களுக்கு ஒரு நிரந்தர நியாயப்பிரமாணமாயிருக்கும்.”11

தசமபாகம் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதை கர்த்தர் தெளிவாகக் கூறினார், “தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்;”12 அதாவது, தசமபாகங்களை அவரது மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட ராஜ்யமான பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்துவின் சபைக்கு கொண்டு வாருங்கள்.13 இந்த பரிசுத்த தசமபாகங்களைப் பயன்படுத்துவது பிரதான தலைமை, பன்னிரு அப்போஸ்தலர் குழுமம், தலைமை ஆயர், “மற்றும் அவர்களுக்கு என்னுடைய சொந்த குரல்,” ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக்குழுவால் ஜெபத்துடன் பரிசீலிக்கப்படும் என்று அவர் வழிகாட்டினார். 14

கர்த்தரின் பரிசுத்த நிதிகள்

இந்த பரிசுத்தமான நிதிகள் சபையின் தலைவர்களுக்கு சொந்தமானவை அல்ல. அவை கர்த்தருக்கு சொந்தமானவை. அவருடைய வேலையாட்கள் தங்களுடைய உக்கிராணத்துவத்தின் பரிசுத்தத் தன்மையை நன்கு அறிந்திருக்கிறார்கள்.

தலைவர் கார்டன் பி. ஹிங்க்லி இந்த குழந்தைப்பருவ அனுபவத்தை விவரித்தார்: “நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பாவிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன் … சபை நிதியின் செலவு பற்றி. எனது தசமபாகங்களையும் காணிக்கைகளையும் செலுத்துவது தேவன் கொடுத்த என் கடமை என்பதை அவர் எனக்கு நினைவூட்டினார். நான் அவ்வாறு செய்யும்போது, [என் அப்பா சொன்னார்] நான் கொடுப்பது இனி என்னுடையது அல்ல. நான் அதை அர்ப்பணித்த கர்த்தருக்குச் சொந்தமானது.” அவரது தந்தை மேலும் கூறினார்: “சபை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, [கார்டன்]. அவர்கள் கர்த்தருக்குப் பதிலளிக்க வேண்டியவர்கள், அவர்கள் தங்களிடம் கணக்கு வைத்திருக்க வேண்டும்.”15

“கர்த்தருக்குப் பதிலளிக்க வேண்டியவர்” என்பதன் கனத்தை நாம் ஆழமாக உணர்கிறோம்.

உங்கள் தாராளமான தசமபாகம் மற்றும் காணிக்கைகள்

நீங்கள் கர்த்தருக்கு அர்ப்பணித்த தாராளமான தசமபாகம் மற்றும் காணிக்கைகளில் இருந்து, கடந்த ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் தேவைப்படுபவர்களை ஆசீர்வதிக்க பயன்படுத்தப்பட்டது.16

மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் நமது முக்கியமான பொறுப்பில், 71,000 ஊழியக்காரர்கள் 414 ஊழியங்களில் சேவை செய்கிறார்கள்.17 உங்களின் தசமபாகம் மற்றும் காணிக்கைகள் காரணமாக, ஊழியக்காரர்கள், அவர்களது குடும்ப நிதி நிலைமையைப் பொருட்படுத்தாமல், சேவை செய்ய முடிகிறது.

உலகம் முழுவதும் வரலாறு காணாத அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது, 177 ஆலயங்கள் செயல்பாட்டில் உள்ளன, 59 தற்போது கட்டுமானம் அல்லது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன, மேலும் 79 ஆலயங்கள் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் உள்ளன.18 உங்கள் தசமபாகங்கள் ஆலயத்தின் ஆசீர்வாதங்களை கர்த்தர் மட்டுமே எதிர்பார்க்கக்கூடிய இடங்களில் இருக்க அனுமதிக்கின்றன.

195 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஆயிரக்கணக்கான கூடுமிடங்கள் மற்றும் பிற வசதிகளுடன் 30,000 க்கும் மேற்பட்ட சபைகள் உள்ளன.19 உங்களின் விசுவாசமிக்க தசமபாகத்தின் காரணமாக, நீங்கள் அறிந்திராத நீதியுள்ள பரிசுத்தவான்களிடையே, நீங்கள் ஒருபோதும் செல்லாத தொலைதூர இடங்களில் சபை நிறுவப்படுகிறது.

சபை தற்போது ஐந்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி செய்கிறது.20 இவை 145,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சேவை செய்கின்றன. நமது வேதபாட வகுப்புகள் மற்றும் முதிர் வேதபாட வகுப்புகளில் ஒவ்வொரு வாரமும் ஒரு லட்சத்து பத்தாயிரம் வகுப்புகள் கற்பிக்கப்படுகின்றன.21

இந்த ஆசீர்வாதங்களும் இன்னும் பலவும் நேர்மையான தசமபாகம் செலுத்தும் ஒவ்வொரு பொருளாதார சூழ்நிலையிலும் உள்ள இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடமிருந்து பெருமளவில் வருகின்றன.

தசமபாகம் என்ற தெய்வீக நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய வல்லமை, நன்கொடையளிக்கப்பட்ட பணத்தின் அளவைக் கொண்டு அளவிடப்படுவதில்லை, ஏனென்றால் வசதியானவர்கள் மற்றும் ஏழைகள் இருவரும் தங்கள் வருமானத்தில் 10 சதவிகிதம் பங்களிக்க கர்த்தரால் கட்டளையிடப்பட்டுள்ளனர்.22 கர்த்தர் மீது நம்பிக்கை வைப்பதால் வல்லமை கிடைக்கிறது.23

உங்களது தாராளமான தசமபாகங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரின் கூடுதல் சபையின் சேமிப்புக்களை பலப்படுத்தியுள்ளது, நாம் இதுவரை அனுபவித்த எதையும் தாண்டி கர்த்தரின் பணியை முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. அனைத்தும் கர்த்தரால் அறியப்படுகின்றன, காலப்போக்கில், அவருடைய பரிசுத்த நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறுவதைக் காண்போம்.24

ஆசீர்வாதங்கள் பல வழிகளில் வருகின்றன

தசமபாகத்தின் ஆசீர்வாதங்கள் பல வழிகளில் வருகின்றன. 1998 ஆம் ஆண்டில், தொழில்நுட்பத்தில் சிறந்த கண்டுபிடிப்புகளின் சமூகமான சிலிக்கான் ஸ்லோப்ஸ் என்று அழைக்கப்படும் யூட்டா பகுதியில் ஒரு பெரிய சபை கூட்டத்திற்கு அப்போதைய மூப்பர் ஹென்றி பி. ஐரிங்குடன் சென்றேன். அது வளர்ந்து வரும் செழுமையின் காலமாக இருந்தது, மேலும் மூப்பர் ஐரிங் பரிசுத்தவான்களிடம் தங்களிடம் உள்ளதை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது மற்றும் இன்னும் அதிகமாக விரும்புவது பற்றி எச்சரித்தார். அவர்கள் நேர்மையாக தசமபாகம் கொடுக்கும்போது, அதிகமான பொருள்சார் சொத்துக்களுக்கான ஆசை குறைந்துவிடும் என்ற அவருடைய வாக்குறுதியை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இரண்டு ஆண்டுகளில், தொழில்நுட்ப குமிழி வெடித்தது. பலர் தங்கள் வேலைகளை இழந்தனர், மேலும் நிதிநிலை சமாளிப்பில் நிறுவனங்கள் போராடின. தலைவர் ஐரிங்கின் ஆலோசனையைப் பின்பற்றியவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டனர்.

அவருடைய வாக்குறுதி எனக்கு இன்னொரு அனுபவத்தை நினைவூட்டியது. நான் 1990-ல் ஊழியத்தலைவராக பணியாற்றியபோது 12 வயதான சார்லோட் ஹ்லிமியை பிரான்சின் கார்காசோன் அருகே சந்தித்தேன். ஹ்லிமி குடும்பத்தினர் எட்டு குழந்தைகளுடன் ஒரு சிறிய குடியிருப்பில் வாழும் ஒரு விசுவாசமான, எளிமையான குடும்பம். அவர்கள் சுவரில் இரட்சகர் மற்றும் தீர்க்கதரிசியின் படம் வைத்திருந்தார்கள். அவரது கோத்திர பிதா ஆசீர்வாதத்திற்கான நேர்காணலில், நான் சார்லட்டிடம் நேர்மையான தசமபாகம் கொடுக்கிறீர்களா என்று கேட்டேன். அவர் பதிலளித்தார், “ஆம், தலைவர் ஆண்டர்சன். தசமபாகம் செலுத்துவதால் கிடைக்கும் உலகப்பிரகார மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் உள்ளன என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். எப்பொழுதும் தசமபாகத்தை செலுத்தினால், நமக்கு எதுவும் தேவைப்படாது என்று என் அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்தார். தலைவர் ஆண்டர்சன், எங்களுக்கு எதுவும் தேவையில்லை.”

படம்
ஹ்லிமி குடும்பம்.

இப்போது 45 வயதான மற்றும் ஆலயத்தில் முத்திரிக்கப்பட்டிருக்கும் சார்லோட் தனது கதையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு அனுமதி அளித்து இவ்வாறு கூறினார்: “தசமபாகம் பற்றிய எனது சாட்சியம் அந்த நேரத்தில் மிகவும் உண்மையானது, இப்போது அது இன்னும் வலுவாக உள்ளது. இந்த கட்டளைக்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். நான் அதன்படி வாழும்போது, நான் தொடர்ந்து தாராளமாக ஆசீர்வதிக்கப்படுகிறேன்.25

ஒரு நாள், நாம் ஒவ்வொருவரும் நமது பூலோக பயணத்தை முடிப்போம். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, என் மாமியார் மார்த்தா வில்லியம்ஸ் புற்றுநோயால் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவருக்கு அஞ்சலில் ஒரு சிறிய காசோலை வந்தது. அவர் உடனே என் மனைவி கேத்தியிடம் தசமபாகம் கொடுக்க காசோலை கேட்டார். அவளது அம்மா மிகவும் பலவீனமாக இருந்ததால், அவரால் எழுத முடியவில்லை, கேத்தி அவருக்காக காசோலையை எழுத முடியுமா என்று கேட்டார். அவளுடைய அம்மா பதிலளித்தார், “இல்லை கேத்தி. நானே அதைச் செய்ய விரும்புகிறேன்.” பின்னர் அவர் அமைதியாக சொன்னார், “நான் கர்த்தருக்கு முன்பாக சரியாக இருக்க விரும்புகிறேன்.” கேத்தி தன் தாயாருக்காக செய்த கடைசி காரியங்களில் ஒன்று, அவரது தசமபாக உறையை தன் ஆயரிடம் ஒப்படைத்தது.

தேவனின் முக்கிய பணி

என் சகோதர சகோதரிகளே, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபை “இருளில் இல்லை”26 பூமி முழுவதும் குறிப்பிடத்தக்க ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. முன்னோக்கி நம்மை உற்சாகப்படுத்துபவர்களும் உற்சாகப்படுத்தாதவர்களும் இருப்பார்கள். அப்போஸ்தலர்களான பேதுரு மற்றும் யோவானின் அற்புதங்களைக் கண்டு, எருசலேமில் உள்ள சபையை எச்சரித்த ஞானி கமாலியேலின் வார்த்தைகளை நான் நினைத்தேன்:

“இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள், இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்:

“தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்.”27

நீங்களும் நானும் பூமியில் தேவனின் முக்கியமான பணியின் ஒரு பாகமாக இருக்கிறோம். அது வீணாகாது, ஆனால் இரட்சகர் திரும்பி வருவதற்கான வழியை ஆயத்தம் செய்து, உலகம் முழுவதும் நகர்ந்து கொண்டே இருக்கும். தலைவர் ரசல் எம். நெல்சனின் வார்த்தைகளுக்கு நான் சாட்சியளிக்கிறேன்: “வரும் நாட்களில், உலகம் எப்போதும் கண்டிராத இரட்சகரின் வல்லமையின் மிகப் பெரிய வெளிப்பாடுகளை நாம் காண்போம். இப்போதும் அவர் திரும்பும் நேரத்திற்கும் இடையில்… விசுவாசிகளுக்கு எண்ணற்ற சிலாக்கியங்களையும், ஆசீர்வாதங்களையும், அற்புதங்களையும் அளிப்பார்.”28

இதுவே எனது சாட்சியம். இயேசுவே கிறிஸ்து. இது அவருடைய பரிசுத்தப் பணி. அவர் மீண்டும் வருவார். இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.

குறிப்புகள்

  1. ரோஜர் பார்ராவிடமிருந்து, ஆகஸ்ட் 4, 2023 இன் தனிப்பட்ட கடிதப் பரிமாற்றம்.

  2. மல்கியா 3:10.

  3. ஏலமன் 3:11 பார்க்கவும். மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் கூறினார்: “உதாரணமாக, என் வாழ்க்கையில், ‘[என்னிமித்தம்] விழுங்குபவரைக் கடிந்துகொள்வார்’ (மல்கியா 3:11) என்ற தேவனின் வாக்குறுதி நிறைவேறியதை நான் கண்டேன். தீமைக்கு எதிரான பாதுகாப்பின் ஆசீர்வாதம் என் மீதும் என் அன்புக்குரியவர்கள் மீதும் நான் போதுமான அளவு ஒப்புக்கொள்ளும் திறனைத் தாண்டி ஊற்றப்பட்டுள்ளது. ஆனால், தெய்வீகப் பாதுகாப்பு குறைந்த பட்சம், தனித்தனியாகவும் குடும்பமாகவும், தசமபாகம் செலுத்த வேண்டும் என்ற எங்கள் உறுதியின் காரணமாக வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்” (“Like a Watered Garden,” Liahona, Jan. 2002, 38).

  4. கர்த்தர் நமது பேராசையின்படி அல்ல, நமது தேவைக்கேற்ப வானத்தின் பலகணிகளைத் திறப்பார். நாம் பணக்காரர் ஆவதற்கு தசமபாகம் செலுத்துகிறோம் என்றால், தவறான காரணத்திற்காக அதைச் செய்கிறோம். … வழங்குபவருக்கு ஆசீர்வாதம் … எப்போதும் நிதி அல்லது பொருள் பலன் வடிவத்தில் இருக்காது” (Teachings of Gordon B. Hinckley [1997], 657).

  5. மல்கியா 3:10; 3 நேபி 24:10.

  6. See “The Church of Jesus Christ Is Helping Alleviate Global Malnutrition,” Aug. 11, 2023, newsroom.ChurchofJesusChrist.org; see also “How the Church of Jesus Christ and UNICEF Are Keeping Mothers and Children Healthy and Safe,” Aug. 17, 2023, newsroom.ChurchofJesusChrist.org.

  7. “அவர்கள் ஏக சிந்தனையிலும் ஏக உள்ளத்திலுமிருந்ததாலும், நீதியில் வாசம் செய்ததாலும் கர்த்தர் அவனுடைய ஜனங்களை சீயோன் என்றழைத்தார்; அவர்களுக்குள்ளே எளியவன் இல்லாதிருந்தான்.”(மோசே 7:18).

  8. 1 கொரிந்தியர் 2:14 பார்க்கவும். மனிதனின் தர்க்கம் எப்போதும் தேவ ஞானத்துடன் ஒத்துப்போவதில்லை. மல்கியாவின் நாளில், அநேகர் கர்த்தரை விட்டு விலகியிருந்தார்கள். கர்த்தர் தம் உடன்படிக்கை மக்களிடம், “என்னிடம் திரும்பி வாருங்கள், நான் உங்களிடம் திரும்பி வருவேன்” என்று மன்றாடினார். இந்த மென்மையான அழைப்பைத் தொடர்ந்து வருவது நம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான கேள்வி: “ஆனால் நாங்கள் எங்கு திரும்புவோம் என்று நீங்கள் சொன்னீர்கள்?” (மல்கியா 3:7). அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “நான் எதை மாற்ற வேண்டும்? நான் எப்படி உம்மிடம் நெருங்குவது?” தசமபாகத்தின் முக்கியத்துவத்தைக் கற்பிப்பதன் மூலம் கர்த்தர் பதிலளிக்கிறார், வெறுமனே ஒரு நிதிச் சட்டமாக அல்ல, மாறாக நம் இதயங்களின் ஆசைகளை அவரிடம் திருப்புவதற்கான ஒரு உறுதியான வழி.

    இதை நாங்கள் எங்கள் குடும்பத்தில் கடைபிடித்தோம். கேத்தியின் தாய் 22 வயதில் சபையில் சேர்ந்தார். மார்த்தா மற்றும் பெர்னார்ட் வில்லியம்ஸ் ஆகியோர் சிறிது காலத்திற்கு சபையில் கலந்து கொண்டனர், ஆனால் வேறொரு மாநிலத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் ஆர்வம் குறைந்தது. பெர்னார்ட் வெளிநாட்டிற்கு இராணுவப் பணியமர்த்தப்பட்டார், மேலும் மார்த்தா புளோரிடாவிலுள்ள தம்பாவிற்கு வீட்டிற்குச் சென்றார், அங்கு சபைக்கு எதிரான தனது அத்தை மற்றும் மாமாவுடன் வாழ தாராளமான அழைப்பை ஏற்றுக்கொண்டார். மார்த்தா வில்லியம்ஸ் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து, சபைக்குச் செல்லாமல், மிகவும் எளிமையான சூழ்நிலையில் வாழ்ந்தபோது, தனது தசமபாகம் காசோலையை ஆயருக்கு அனுப்பத் தொடங்கினார். பிற்காலத்தில், ஏன் என்று கேட்டபோது, தசமபாகம் மற்றும் தேவனின் ஆசீர்வாதங்களைப் பற்றி ஊழியக்காரர்கள் கற்பித்த சிலவற்றை அவள் நினைவில் வைத்திருப்பதாக அவள் சொன்னாள்: “எங்கள் வாழ்க்கையில் தேவனின் ஆசீர்வாதம் எங்களுக்கு மிகவும் தேவைப்பட்டது, அதனால் நான் ஆயருக்கு எங்கள் தசமபாகம் காசோலையை அனுப்ப ஆரம்பித்தேன்.” மார்த்தா மற்றும் பெர்னார்ட் வில்லியம்ஸ் சபைக்குத் திரும்பினர். அவர்களுடைய மிகப் பெரிய ஆசீர்வாதம்-ஆறு தலைமுறைகள் ஆசீர்வதிக்கப்பட்டது, ஏனென்றால் அவளுக்கு தேவன் நம்பிக்கையும் அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கையுமே அன்றி வேறெதுவும் இல்லாதபோது தசமபாகம் கொடுக்க அவள் முடிவெடுத்தாள்.

  9. மத்தேயு 22:21.

  10. (3 நேபி 24 பார்க்கவும்.)

  11. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 119:3-4. “தசமபாகம் என்பது ஒருவருடைய வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை கர்த்தரின் சபைக்கு நன்கொடையாக அளிப்பதாகும் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 119:3-4ஐப் பார்க்கவும்; அதிகரிப்பு என்பது வருமானம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது). வருமானம் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தசமபாகம் செலுத்த வேண்டும்” (General Handbook: Serving in The Church of Jesus Christ of Latter-day Saints, 34.3.1, Gospel Library).

  12. மல்கியா 3:10.

  13. “இரட்சகர் கற்பித்தபடி, தசமபாகங்களை ‘பண்டக சாலைக்குள்’ கொண்டு வருவதன் மூலம் நாம் தசமபாகம் செலுத்துகிறோம். (மல்கியா 3:10; 3 நேபி 24:10). நமது ஆயர் அல்லது கிளைத் தலைவரிடம் தசமபாகம் செலுத்துவதன் மூலம் இதைச் செய்கிறோம். நமக்குப் பிடித்தமான தொண்டு நிறுவனங்களுக்கு நாம் தசமபாகம் செலுத்துவதில்லை. தொண்டு நிறுவனங்களுக்கு நாம் செய்ய வேண்டிய நன்கொடைகள் நமது சொந்த நிதியில் இருந்து வருகின்றன, கர்த்தரின் களஞ்சியத்தில் செலுத்த வேண்டிய தசமபாகத்திலிருந்து அல்ல. (Dallin H. Oaks, “Tithing,” Ensign, May 1994, 35).

  14. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 120:1.

  15. Gordon B. Hinckley, “Rise to a Larger Vision of the Work,” Ensign, May 1990, 96.

  16. See “The 2022 Report on How the Church of Jesus Christ Cared for Those in Need,” Mar. 22, 2023, newsroom.ChurchofJesusChrist.org.

  17. செப். 14, 2023 அன்று ஊழிய துறையிலிருந்து மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது.

  18. See “Temple List,” ChurchofJesusChrist.org/temples/list.

  19. உறுப்பினர் மற்றும் புள்ளியியல் பதிவேடுகள், ஜூலை 28, 2023 இல் இருந்து மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது.

  20. இதில் ப்ரிகாம் யங் யுனிவர்சிட்டி, ப்ரிகாம் யங் யுனிவர்சிட்டி–ஐடஹோ, ப்ரிகாம் யங் யுனிவர்சிட்டி–ஹவாய், என்சைன் காலேஜ் மற்றும் பிஒய்யு பாத்வே வேர்ல்டுவைடு ஆகியவை அடங்கும்.

  21. ஜூலை 28, 2023 அன்று வேதபாட வகுப்பு மற்றும் வேதபாட முதிர் வகுப்ப்லிருந்து மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது.

  22. General Handbook, 34.3.1 பார்க்கவும்.

  23. தலைவர் டாலின் எச். ஓக்ஸ், கர்த்தர் மீது நம்பிக்கை வைப்பது பற்றிய இந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டார்: “என் விதவைத் தாய் தனது மூன்று குழந்தைகளை [அற்பமான] சம்பளத்தில் ஆதரித்தார். … என் அம்மாவிடம் ஏன் இவ்வளவு சம்பளத்தை தசமபாகமாக கொடுக்கிறார் என்று கேட்டேன். அவளுடைய விளக்கத்தை நான் ஒருபோதும் மறக்கவில்லை: ‘டாலின், தசமபாகம் கொடுக்காமல் இருக்கக்கூடிய சிலர் இருக்கலாம், ஆனால் நம்மால் முடியாது. கர்த்தர் உங்கள் தகப்பனை அழைத்துச் சென்று, குழந்தைகளாகிய உங்களை வளர்க்க என்னை விட்டுச் சென்றார். கர்த்தரின் ஆசீர்வாதம் இல்லாமல் என்னால் அதைச் செய்ய முடியாது, நேர்மையான தசமபாகம் செலுத்தி அந்த ஆசீர்வாதங்களைப் பெறுகிறேன். (“Tithing,” 33).

  24. “உங்களுக்கு வரப்போகும் உபத்திரவம் இருந்தபோதிலும், சபை பரலோகத்திற்குக் கீழே உள்ள மற்ற எல்லா உயிரினங்களுக்கும் மேலாக சுதந்திரமாக நிற்க வேண்டும்” (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 78:14).

  25. சார்லட் ஹ்லிமி மார்ட்டின், ஆகஸ்ட் 30, 2023ல் இருந்து தனிப்பட்ட கடிதப் பரிமாற்றத்திலிருந்து.

  26. கோட்பாடும் உடன்படிக்கைகளும் 1:30.

  27. அப்போஸ்தலர் 5:38–39.

  28. Russell M. Nelson, “Overcome the World and Find Rest,” Liahona, Nov. 2022, 95.